முன்னோக்கு

ஈரான் மீதான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குண்டுவீச்சு: அவப்பேறு பெற்ற நாள்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

4 ஜூலை 2020 சனிக்கிழமை, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் ஒரு B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானம் பறந்து காட்டுகிறது. [AP Photo/Alex Brandon]

22 ஜூன் 2025 அன்று ஒரு அவப்பேறு பெற்ற நாளாகும். ஈரானால் ஆத்திரமூட்டப்படாமலேயே அமெரிக்கா அதன் மீது நடத்திய ஒரு பிரமாண்டமான குண்டுவீச்சில் அமெரிக்கா ஈரான் மீது ஒரு மறைவியக்க விமானத் தாக்குதலை (stealth bombers) மேற்கொண்டுள்ளது. போரில் இதுவரை பயன்படுத்தப்பட்டவற்றிலேயே மிக சக்திவாய்ந்த, பதுங்கு குழிகளை தகர்க்கும் குண்டுகளை வீசி ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த ஆக்கிரமிப்புச் செயல், காசாவில் அமெரிக்க ஆதரவு இஸ்ரேலிய இனப்படுகொலையின் தொடர்ச்சியாகவும் விரிவாக்கமாகவும் இருப்பதோடு, முழு மத்திய கிழக்கையும் போரில் மூழ்கடித்து உலகம் முழுதும் தீ மூட்டிவிட அச்சுறுத்துகின்றது.

“நள்ளிரவு தாக்குதல் நடவடிக்கை” (Operation Midnight Hammer) என்று குறியீட்டுப் பெயரிடப்பட்ட இந்தத் தாக்குதலில், போர் ஜெட் விமானங்கள், எரிபொருள் மீள் நிரப்பு தாங்கிகள் மற்றும் கண்காணிப்பு விமானங்களின் உதவியுடன் குறைந்தபட்சம் எட்டு B-2 ஸ்பிரிட் மறைவியக்க குண்டுவீச்சு விமானங்கள் உட்பட 125 க்கும் மேற்பட்ட விமானங்கள் ஈடுபட்டிருந்தன. இது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய B-2 தாக்குதல் நடவடிக்கையாகும்.

இந்தத் தாக்குதலின் மையப் பகுதி, 13.6 டன் எடையுள்ள பதுங்கு குழியை தகர்க்கும் GBU-57A/B பிரமாண்டமான ஆழ ஊடுருவும் குண்டு (Massive Ordnance Penetrator -MOP) பயன்படுத்தப்பட்டது - இதுவரை பயன்படுத்தப்பட்டவற்றில் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் இதுவாகும். இந்தக் குண்டுகளில் 12, உயர்ந்தளவு செறிவூட்டப்பட்ட ஃபோர்டோ யுரேனியம் செறிவூட்டல் தளத்தின் மீது வீசப்பட்டதோடு மேலும் இரண்டு குண்டுகள் நடான்ஸ் மீது வீசப்பட்டன. இவற்றுடன் 2,900 பவுண்டுகள் எடையுள்ள ஏராளமான டோமாஹாக் ஏவுகணைகள் இரண்டு இடங்கள் மீதும், மற்றும் இஸ்ஃபஹான் ஆராய்ச்சி வளாகத்தின் மீதும் வீசப்பட்டன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சனிக்கிழமை இரவு ஆற்றிய, நான்கு நிமிட கொலைகாரத்தனமான, பொய்யான வசைமாரி உரையில், தனது தாக்குதலை நியாயப்படுத்தினார். அமெரிக்கப் படைகள் மூன்று அணுசக்தி நிலையங்களைத் தாக்கியதாக அறிவித்த அவர், அவை ஈரானால் விடுக்கப்பட்ட 'அணுசக்தி அச்சுறுத்தலை தடுத்து நிறுத்துவதற்கு” அவசியமானதாகக் கருதப்படும் 'அச்சமூட்டி அழித்தொழிக்கும் முயற்சியின்' ஒரு பகுதியாகும் என்று கூறினார்.

உண்மையில், இந்த தளங்கள், அணு பரவல் தடை ஒப்பந்தத்தின் படி உருவாக்கப்பட்ட, சர்வதேச கண்காணிப்புக்கு உட்பட்ட ஈரானின் சிவிலியன் அணுசக்தி திட்டத்தின் ஒரு பகுதியாகும். பல ஆண்டுகளாக, அமெரிக்காவின் சொந்த உளவுத்துறை நிறுவனங்கள், ஈரான் அணு ஆயுத தயாரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்று மதிப்பிட்டு வருகின்றன. ஆனால், புஷ் நிர்வாகம் பரப்பிய, ஈராக்கின் 'பேரழிவு ஆயுதங்கள்' பற்றிய பொய்களின் மரபைப் பின்பற்றும் ட்ரம்ப், மீண்டும் ஆத்திரமூட்டப்படாத போதிலும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அசாதாரணமான ஈவிரக்கமற்ற செயல்களை நியாயப்படுத்துவதற்காக, புனையப்பட்ட அச்சுறுத்தல்களைப் பயன்படுத்தினார்.

இந்த தாக்குதலின் 'ஆச்சரியமான இராணுவ வெற்றி' பற்றி பெருமை பேசிய டிரம்ப், அதை முழு பிராந்தியத்திற்குமான ஒரு செய்தியாக அனுப்பும் நோக்கத்துடன், 'மத்திய கிழக்கின் கொடுமைக்கார நாடான ஈரான், இப்போது சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும்' என்று அறிவித்தார்.

'மத்திய கிழக்கின் கொடுமைக்காரன்' என்று ஈரானை குறிப்பிடுவது யதார்த்தத்தை தலைகீழாக மாற்றுகிறது. ஒரு நூற்றாண்டின் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாக, அமெரிக்க ஏகாதிபத்தியம் போரில் ஈடுபட்டுள்ளதுடன் ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, லிபியா மற்றும் ஏமன் உட்பட பிராந்தியம் முழுவதும் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, இஸ்ரேலிய அரசாங்கம் தொடர்ச்சியான அமெரிக்க ஆதரவுடன் காசாவில் ஒரு இனப்படுகொலைப் போரை நடத்தி, பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களைக் கொன்று வருகிறது. இது ஒரு பரந்த வெகுஜன படுகொலை பிரச்சாரத்திற்கான ஒரு ஒத்திகை மட்டுமே.

சர்வதேச சட்டத்தை பகிரங்கமாக மீறி, ஆத்திரமூட்டப்படாமலேயே ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது இராணுவத் தாக்குதலைத் தொடங்கிய ட்ரம்ப், இப்போது 'அமைதியை' கோருகிறார்! இதன் மூலம், அவர் கடந்த வாரம் கோரியபடி 'நிபந்தனையற்ற சரணடைதல்' என்பதையே அர்த்தப்படுத்துகிறார் - அதாவது, நாட்டை நேரடி ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு மாற்றுவதாகும். ஞாயிற்றுக்கிழமை, அயதுல்லா கொமேனியை படுகொலை செய்வதாக கடந்த வாரம் அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, ஈரானில் 'ஆட்சி மாற்றத்திற்கு' ட்ரம்ப் வெளிப்படையாக அழைப்பு விடுத்தார்.

அமெரிக்க ஆதரவு பெற்ற ஷா தூக்கியெறியப்பட்டதிலிருந்து '40 ஆண்டுகளாக', 'ஈரான் 'அமெரிக்காவிற்கு சாவு, இஸ்ரேலுக்கு மரணம்' என்று கூறி வருகிறது' என்று அறிவித்த ட்ரம்ப், 'அவர்களின் வெறுப்பின் நேரடி விளைவாக... மத்திய கிழக்கு முழுவதும் லட்சக்கணக்கானோர் மரணித்துள்ளனர்' என்று அறிவித்தார். ட்ரம்ப் இந்தப் படுகொலைகளுக்கு ஈரான் மீது குற்றம் சாட்டிய போதிலும், உண்மையில் முழு சமூகங்களையும் அழித்துள்ள அந்தப் படுகொலைகள், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரின் கீழ் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட அமெரிக்கப் போர்கள் மற்றும் தலையீடுகளின் விளைவே ஆகும். 'இலட்சக் கணக்கான' இறப்புகளுக்கு காரணம் அமெரிக்காவே அன்றி ஈரான் அல்ல.

இந்த தாக்குதல்கள், தொடர்ந்து ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வரும் பாசிச இஸ்ரேலிய அரசாங்கத்துடன் நேரடியாக ஒருங்கிணைக்கப்பட்டன. 'இதற்கு முன்பு எவரும் செயல்படாத அளவுக்கு நாங்கள் ஒரு குழுவாக செயல்பட்டோம்' என ட்ரம்ப் கூறினார். டிரம்பின் கருத்துக்களுக்கு சற்று முன்பு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க வான்வழித் தாக்குதல்களைப் பாராட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டதுடன் ட்ரம்பிற்கு நன்றி தெரிவித்து, இருவரும் 'வலிமை மூலம் அமைதி: முதலில் வலிமை வரும், பின்னர் அமைதி வரும்' என்ற கொள்கையைப் பின்பற்றுவதாக அறிவித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அடிபணிய வைப்பதற்கு முன்னதாக, படுகொலையும் பயங்கரவாதமும் கையாளப்படும்.

'ஈரானுக்கு அமைதி ஏற்படும், அல்லது துன்பம் ஏற்படும். ... நினைவில் கொள்ளுங்கள், பல இலக்குகள் மீதமுள்ளன' என்று ட்ரம்ப் மேலும் வன்முறை அச்சுறுத்தலுடன் முடித்தார். இந்த அழிப்பு பிரச்சாரத்தின் தர்க்கரீதியான அடுத்த படி, தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதாகும் – இந்த தேர்வானது “எப்போதும் மேசை மீதே இருப்பதாக” ட்ரம்ப் நிர்வாகம் மீண்டும் மீண்டும் அறிவித்து வந்துள்ளது.

சனிக்கிழமை தாக்குதல், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சிவப்பு கோடுகள் கிடையாது, அது எதிலும் நிற்காது என்பதை தெளிவுபடுத்துகிறது. அதன் குற்றத்திற்கு வரம்புகள் இல்லை. நாஜி ஆட்சிக்குப் பிறகு எந்த அரசாங்கமும் இவ்வளவு வெளிப்படையாகவும் அப்பட்டமாகவும் சர்வதேச சட்டத்தை மீறியதில்லை.

ஈரான் மீதான குண்டுவீச்சு அதிகரித்து வரும் உலகளாவிய போரின் மையக் கூறு ஆகும். இது ஒரு புதிய உலகப் போரின் அபாயத்தை எச்சரிப்பது பற்றிய விடயம் அல்ல - அது ஏற்கனவே தொடங்கிவிட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியமானது அதன் ஆழமடைந்து வரும் உள்நாட்டு சமூக மற்றும் அரசியல் நெருக்கடியை இராணுவ ஆக்கிரமிப்பு மூலம் தீர்க்க முயல்கிறது. ஈரானை குறிவைத்துள்ள ஏகாதிபத்தியப் போரின் தர்க்கம், தவிர்க்க முடியாமல் சீனாவுடன் மோதலுக்கு வழிவகுக்கிறது. ஈரானில் ஆட்சி மாற்றமானது எண்ணெய், எரிவாயு நிறைந்த மற்றும் முக்கியமான வர்த்தக பாதைகள் அமைந்துள்ள பகுதிகளான பாரசீக வளைகுடா, கஸ்பியன் கடல் மற்றும் பரந்த யூரேசிய நிலப்பரப்பு மீது சவாலற்ற கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த தாக்குதல்களை 'ஆச்சரியமூட்டும் இராணுவ வெற்றி' என்று ட்ரம்ப் பாராட்டிக்கொண்ட போதிலும், உண்மையில், அவர் ஒரு பேரழிவு தரும் மற்றும் முற்றிலும் ஈவிரக்கமற்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளார். வெள்ளை மாளிகையும் பென்டகனும் எத்தகைய குறுகிய கால கணிப்பீடுகளைச் செய்தாலும், அவர்கள் இப்போது தொடங்கியுள்ள போரின் விளைவுகளை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது. காற்றை விதைத்துள்ள அவர்கள், சூறாவளியை அறுவடை செய்வார்கள். 2003 இல் தொடங்கப்பட்ட ஈராக்கிற்கு எதிரான போரைப் போலவே, அமெரிக்க ஏகாதிபத்தியம் பேரழிவை சந்திக்க நேரிடும், ஆனால் மிகப் பெரிய அளவில்.

ஈரான், அதே போல் அதன் நெருங்கிய நட்பு நாடுகளான ரஷ்யா மற்றும் சீனாவும் எவ்வாறு பிரதிபலிக்கும் என்பது இன்னமும் தெரியவரவில்லை. உலகின் எண்ணெய் விநியோகத்தில் குறிப்பிடத்தக்க பங்கு கடந்து செல்லும் மூலோபாய ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கு ஈரானின் பாராளுமன்றம் நகர்ந்துள்ளது - இது உலகில் உள்ள எரிசக்தி சந்தைகளை கொந்தளிப்பில் ஆழ்த்துவதுடன் பூகோள பொருளாதார மந்தநிலையைத் தூண்டும். பல ஆண்டுகளாக, பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுப்பது, நேரடி மோதலைத் தவிர்த்துக்கொள்வது போன்றவை மூலம் வெளிப்பட்ட ஈரானிய முதலாளித்துவ அரசாங்கத்தின் செயலற்ற தன்மை, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு தைரியத்தை அளித்துள்ளது.

ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவின் உடனடி பிரதிபலிப்பு எதுவாக இருந்தாலும், தீர்க்கமான பிரச்சினை சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் எதிர்வினையாகும். சனிக்கிழமை தாக்குதலின் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் பாரதூரமான தாக்கம் உலகம் முழுவதும் உள்ள பில்லியன் கணக்கான மக்களின் நனவில் இருக்கும். இந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புச் செயல் ஏற்கனவே அனைத்து சமூக ஊடக தளங்களிலும், ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா முழுவதும் நடந்த ஆரம்ப போராட்டங்கள் மூலமாகவும் வெகுஜன சீற்றத்தைத் தூண்டி வருகிறது.

காசாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு எதிரான உலகளாவிய எதிர்ப்பு தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் விரிவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்தே ஈரான் மீதான போர் வெடித்துள்ளது. இது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் முற்றிலும் குற்றவியல் தன்மையை எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி அம்பலப்படுத்துகிறது. அமெரிக்காவை அனைத்து சட்டக் கட்டுப்பாடுகளையும் மீறி செயல்படும் ஒரு குற்றவியல் அரசாங்கமாக மேலும் மேலும் உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான தொழிலாளர்கள் காண்கின்றனர். அமெரிக்க ஏகாதிபத்தியமானது 'சுதந்திரம்' அல்லது 'ஜனநாயகத்தை' பாதுகாக்கிறது என்ற கட்டுக்கதை கடந்த காலத்துக்கு மட்டுமே உரியதாகிவிட்டது.

போரானது அமெரிக்கா, ஐரோப்பா முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் ஏற்கனவே பொங்கி எழும் சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகளில் எண்ணெய் வார்க்கும். இது நிதி தன்னலக்குழுக்களுக்காக தன்னலக்குழுவால் ஆளப்படும் ஒரு ஆட்சியின் நடவடிக்கையாகும். வெளிநாடுகளில் குண்டுவீச்சு மற்றும் கொலைகளைச் செய்து வரும் நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகளை அகற்றி ஒரு அரசியல் சர்வாதிகாரத்தை நிறுவுகிறது. எதிர்க்கட்சி என்று அழைக்கப்படும் ஜனநாயகக் கட்சியானது செயலற்றும் உடந்தையாகவும் இருக்கின்றது -அதாவுது தொழிலாள வர்க்கத்தின் மீதான அதன் பீதியால் செயலற்றும், ஏகாதிபத்தியத்தின் நோக்கங்களில் உடந்தையாகவும் உள்ளது.

வெகுஜன எதிர்ப்பு தலைதூக்கி வருகிறது. ஈரான் மீது குண்டுவீச்சு நடத்தப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் மில்லியன் கணக்கானவர்கள் பங்கேற்றனர். பிரச்சினை, எதிர்ப்பு இருக்கிறதா இல்லையா என்பது அல்ல, மாறாக அதை எவ்வாறு ஒரு அரசியல் முன்னோக்குடன் ஒழுங்கமைத்து, வழிநடத்தி, ஆயுதபாணியாக்க முடியும் என்பதுதான். குண்டுவீச்சால் தூண்டப்பட்ட பிரமாண்டமான கோபத்தையும் வெறுப்பையும் தொழிலாள வர்க்கத்தின் நனவான அரசியல் இயக்கமாக மாற்றி, போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தை முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடன் இணைக்க வேண்டும்.

தொழிலாள வர்க்கம் என்பது ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தை நிறுத்துவதற்காக அணிதிரட்டப்பட வேண்டிய சமூக சக்தியாகும். ஈரானுக்கு எதிராக நடத்தப்படும் குற்றவியல் போர், ஒரு பிறள்வு அல்ல, மாறாக முழு முதலாளித்துவ அமைப்பின் விளைவாகும். அனைத்து தேசிய எல்லைகளிலும் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த உலகளாவிய போராட்டத்தின் மூலம் அதை நிறுத்த வேண்டும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளும் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், முழு ஏகாதிபத்திய போர் இயந்திரத்தையும் தகர்க்கவும் அழைப்பு விடுக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் போராட்டங்கள், வெளிநடப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை ஏற்பாடு செய்யுமாறு தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

ஏகாதிபத்தியமானது உலகை காட்டுமிராண்டித்தனம் மற்றும் குற்றச் செயல்களில் மூழ்கடித்து வருகிறது. இது ஒரு திவாலான அமைப்பை சீர்திருத்துவது பற்றிய விஷயம் அல்ல, மாறாக அதிகாரத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் நனவான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டத்தின் மூலம் அதைத் தூக்கியெறிவதாகும். போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கான மாற்றீடு சோசலிசம் ஆகும். இந்த இயக்கத்தை முன்னோக்கி வழிநடத்த ஒரு புதிய புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவதும், அனைத்து மனிதகுலத்தினதும் நலன்களுக்காக பொருளாதாரத்தின் மீது தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டை -அதாவது சோசலிசத்தை ஒரு புதிய சமூக ஒழுங்கிற்கான வழிகாட்டும் கொள்கையாக ஆக்குவதும் அவசியமாகும்.

Loading