ஈரானுக்கு எதிரான போரை நிறுத்து!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

திங்கட்கிழமை, ஜூன் 16, 2025 அன்று எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம், ஈரானின் தெஹ்ரானில் சனிக்கிழமையன்று (14/06/2025) இஸ்ரேலிய தாக்குதலால் எண்ணெய் சேமிப்பு அமைப்புகள் தாக்கப்பட்டதன் பின்னர், அதிலிருந்து புகை எழுவதைக் காண்பிக்கிறது.  [AP Photo/Vahid Salemi]

அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் இஸ்ரேலியப் பினாமியும் ஈரானுக்கு எதிரான சட்டவிரோதமாக, ஆத்திரமூட்டித் தூண்டப்படாத, ஆக்கிரமிப்புப் போரை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன, அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதல் திறன் கொண்ட B-52 விமானங்கள் மற்றும் விமானம் தாங்கி போர்க் குழுக்கள் உடனடி தாக்குதலைத் தொடங்கத் தயாராகி வருகின்றன.

அமெரிக்காவானது ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீது படையெடுத்து கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்குப் பிறகு, அமெரிக்க ஆளும் வர்க்கம் மீண்டும் ஒரு குற்றகரமான போரைத் தொடங்கத் தயாராகி வருகிறது, இந்த முறை, ஈராக்கை விட மூன்று மடங்கு பெரிய மக்கள்தொகை கொண்ட ஒரு பெரும் நாட்டிற்கு எதிராக தயாராகி வருகிறது.

போரின் மூலம், வருங்கால சர்வாதிகாரி டொனால்ட் ட்ரம்பும், குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி மூலமாக ஆட்சி செய்யும் நிதித் தன்னலக்குழுவும் பின்வருவனவற்றை அடையமுடியும் என்று நம்புகின்றன:

  • அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட ஷாவின் முடியாட்சி-சர்வாதிகாரத்தை ஈரானிய மக்கள் தூக்கியெறிந்த 45 ஆண்டுகளுக்குப் பிறகு, ஈரான் மீது நவ-காலனித்துவ அடிமைத்தனத்தின் தளைகளை மீண்டும் திணித்தல்.
  • உலகின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதிப் பகுதி மற்றும் முக்கிய உலகளாவிய கடல் வர்த்தகப் பாதைகள் மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாடற்ற கட்டுப்பாட்டைப் பாதுகாத்து, வாஷிங்டனின் முக்கிய மூலோபாய எதிரிகளான சீனா மற்றும் ரஷ்யாவுடன் போருக்குத் தயாராகுதல்.
  • கொள்ளையடிப்பதன் மூலம் பொருளாதார நெருக்கடியையும் நிதிச் சரிவையும் தவிர்க்க முயற்சி செய்தல்.
  • ஒரு பெரிய உள்நாட்டு நெருக்கடி மற்றும் பெருகிவரும் சமூக எதிர்ப்பிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புதல்.

இந்தப் பொறுப்பற்ற சூதாட்டத்தின் விளைவுகள் ஈரானிய மக்களுக்கும், மத்திய கிழக்குக்கும், மற்றும் முழு உலகிற்கும் பேரழிவை ஏற்படுத்தும்.

அதன் மிகப்பெரிய ஆயுதமேந்திய குண்டர்கள் சண்டித்தனம், வஞ்சகம் மற்றும் துரோகம் இருந்தபோதிலும், இந்தப் போரின் விளைவானது, ஆப்கானிஸ்தான், ஈராக், வியட்நாம் மற்றும் கொரியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய “தேர்வுப் போர்களை” (“wars of choice”) விடக் குறைந்ததாக இருக்கப்போவதில்லை, அநேகமாக அதிகப் பேரழிவை ஏற்படுத்துவதாக இருக்கும்.

மறுபுறம், அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய மையங்களில் உள்ள அரசியல் நிறுவனங்களானது முழுப் போர் பிரச்சார வழிமுறையில் உள்ளன. ஈரான் ஒரு “பயங்கரவாத நாடு” என்றும் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க மக்களுக்கு “இருத்தலியல்” அச்சுறுத்தல் என்றும் இழிவுபடுத்தப்படுகிறது.

ஆனால் பல தசாப்தங்களாகப் பொய்கள் மற்றும் குற்றச்செயல்களை நடத்திய பிறகு— அதாவது ஈராக் “பேரழிவு ஆயுதங்கள்” வைத்திருப்பதாக மழைபோல் பொழிந்த குற்றச்சாட்டுகள், மருத்துவமனைகள் மீது குண்டுவீசும் இஸ்ரேலுக்காக எழுந்த முடிவில்லா மன்னிப்புகள், உணவுக்காக வரிசையில் நிற்கும் மக்களையும் கொல்வதோடு, காஸாவில் பாலஸ்தீனியர்களை அழித்து வெளியேற்றும் இயக்கத்தை நடத்தும் இஸ்ரேலின் அராஜகத்துக்கு துணை நிற்கும் அணுகுமுறைகள் என —இவைகள் அனைத்திற்கும் பிறகும், இப்போது யார் இதை நம்ப முடியும்?

இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பென்டகனின் ஈராக் மீதான “அதிர்ச்சி மற்றும் பிரமிப்பு” (“shock and awe”) படையெடுப்பின் போது, ​​உலக சோசலிச வலைத்தளத் தலைவர் டேவிட் நோர்த் இவ்வாறு எழுதினார், “தொடங்கியிருக்கும் மோதலின் ஆரம்ப கட்டங்களின் விளைவு எதுவாக இருந்தாலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் பேரழிவை சந்திக்க நேரிடும். அது உலகை வெல்ல முடியாது. மத்திய கிழக்கின் மக்கள் மீது காலனித்துவ தளைகளை மீண்டும் திணிக்க முடியாது.”

அமெரிக்க ஏகாதிபத்தியமானது ஈரானின் 90 மில்லியன் (9 கோடி) மக்களுக்கு எதிராக மட்டுமல்ல, முழு உலகிற்கும் எதிராகப் போரை நடத்தப் போகிறது. வெள்ளிக்கிழமை, மில்லியன் கணக்கான மக்கள் ஈரான் மற்றும் மத்திய கிழக்கின் பிற நாடுகளின் வீதிகளில் இறங்கி சட்டவிரோத அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

காஸா மீதான இனப்படுகொலைத் தாக்குதலானது இஸ்ரேலை உலகின் மிகவும் வெறுக்கத்தக்க நாடாக மாற்றியுள்ளதால், ட்ரம்ப் நிர்வாகம் இஸ்ரேலுடன் கூட்டணியில் ஒரு ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்கத் தயாராகி வருவதை உலகம் முழுவதும் மக்கள் புரிந்துகொள்கிறார்கள்.

அமெரிக்காவில், ட்ரம்பிற்கு எதிராக ஒரு வெகுஜன இயக்கம் வளர்ந்து வருகிறது, ஜூன் 14 அன்று நடந்த எமக்கு “அரசன் வேண்டாம்” போராட்டங்களில் 10-15 மில்லியன் மக்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும், வாஷிங்டன் போஸ்ட் கருத்துக் கணிப்பு, ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா ஈடுபடுவதை கிட்டத்தட்ட இரண்டுக்கு ஒன்று என்ற வித்தியாசத்தில் எதிர்க்கின்றனர் என்று கண்டறிந்துள்ளது.

மரபுவழி மார்க்சிஸ்டுகள் விளக்கியது போல, தொழிலாள வர்க்கம், எந்தவொரு போரையும் பற்றிய அதன் அணுகுமுறையை, அதில் உள்ள சமூக நலன்களை ஆராய்வதன் மூலமே மதிப்பீடு செய்ய வேண்டும் என்கிறது.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் ஒரு ஏகாதிபத்தியப் போர் ஆகும். இது வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட ஒரு நாட்டின் மீது நடத்தப்படுகிறது. அதன் அரசியல் வரலாற்றில் ஆதிக்கம் செலுத்தும் காரணி, முதலில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்தும் பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடமிருந்தும் விடுதலைக்கான நூற்றாண்டு காலப் போராட்டமாகும்.

மேலும், இந்தப் போரானது பல தசாப்தங்களாக நீடிக்கும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை இப்போது ஆதரிக்கும் அதே அரசாங்கங்கள், அமைப்புகள் மற்றும் ஊடகங்கள், ஏகாதிபத்திய சக்திகளால் தூண்டப்பட்டு, உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் அடிப்படையில் நியாயப்படுத்தப்பட்ட ரஷ்யாவிற்கு எதிரான போரை ஆதரிப்பதில் மிகவும் கடுமையாக இருந்தன.

கடந்த 35 ஆண்டுகளில், அமெரிக்க ஏகாதிபத்தியம் 20 ஆம் நூற்றாண்டின் காலனித்துவ எதிர்ப்பு மற்றும் சமூகப் புரட்சிகளின் அலையின் விளைவுகளை மாற்றியமைக்கவும், தொடர்ந்து விரிவடைந்து வரும் இராணுவவாதம் மற்றும் ஆக்கிரமிப்பு மூலம் அதன் பூகோளரீதியான மேலாதிக்கத்தின் அரிப்பை எதிர்கொள்ளவும் முயன்றுள்ளது.

உலக சோசலிச வலைத் தளம் , நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதனுடைய பகுதிகளான சோசலிச சமத்துவக் கட்சிகள் ஆகியவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அதன் இஸ்ரேலியப் பினாமியையும் தோற்கடிக்க சந்தேகத்திற்கு இடமின்றி போராடுகின்றன.

ஈரான் ஒரு முதலாளித்துவ நாடு, பிற்போக்குத்தனமான முதலாளித்துவ தேசியவாத ஆட்சியால் அது வழிநடத்தப்படுகிறது. 1979 புரட்சியின் அடிப்படையில் அதிகாரத்திற்கு வந்த அதன் மிகப்பெரிய அச்சமாக இருந்தது தொழிலாள வர்க்கம்தான். கடந்த இரண்டு தசாப்தங்களாக அதிகரித்து வரும் அமெரிக்க அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட ஈரானிய முதலாளித்துவம், ஷாவை தூக்கியெறிந்த மக்கள் போராட்ட வெடிப்பிற்கு உடனடியாகப் பின்னர் வழங்கப்பட்ட சமூக சலுகைகளில் எஞ்சியிருப்பதை அகற்றுவதற்கான உந்துதலுடன், வாஷிங்டனுடன் இணக்கத்தை அடைய மீண்டும் மீண்டும் முயற்சிகளை ஏற்படுத்தியிருந்தது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவானது ஈரானில் உள்ள முதலாளித்துவ அரசாங்கத்தை எதிர்க்கிறது. ஆனால், வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட நாடான ஈரான், ஏகாதிபத்திய சக்திகளின் கூட்டணியால் அடிபணிந்து அழிக்கப்படும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்ற உண்மையால், உடனடிப் போருக்கான அதன் அணுகுமுறை தீர்மானிக்கப்படுகிறது. ஏகாதிபத்திய தாக்குதலுக்கு ஈரானிய எதிர்ப்பு முற்றிலும் நியாயபூர்வமானது மற்றும் அரசியல் ரீதியாக முற்போக்கானதும் ஆகும்.

ஈரானிய அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான குணாம்சத்தை அடிப்படையாகக் கொண்டு, ஈரான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையை மறுப்பதற்கு வாதிடுபவர்கள், ஏகாதிபத்திய போர் உந்துதலுக்கு “இடது” மறைப்பை வழங்குபவர்கள்.

1937 ஆம் ஆண்டு லியோன் ட்ரொட்ஸ்கி எழுதியது போல, அதாவது ஜப்பானிய ஏகாதிபத்தியம் சீனாவிற்கு எதிராக தனது வெற்றிப் போரைத் தொடங்கிய சிறிது காலத்திலேயே, ஒரு ஒடுக்கப்பட்ட நாடு ஏகாதிபத்திய தாக்குதலுக்கு உள்ளாகும்போது, ​​அதன் அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான குணாம்சத்தைப் பொருட்படுத்தாமல் அதைப் பாதுகாப்பதே சோசலிஸ்டுகளின் கடமையாகும். 1925-27 ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியை நெரித்து, பல்லாயிரக்கணக்கான புரட்சிகர எண்ணம் கொண்ட தொழிலாளர்களைக் கொன்ற சியாங் கை-ஷேக் மற்றும் முதலாளித்துவ தேசியவாத கோமின்டாங் ஆகியோரால் அப்போது வழிநடத்தப்பட்ட சீனாவைப் பாதுகாக்க மறுத்தவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ட்ரொட்ஸ்கி இவ்வாறு விளக்கினார்:

சீனா ஒரு அரைக்காலனித்துவ நாடு, ஜப்பான் நம் கண் முன்னே, அதை ஒரு காலனித்துவ நாடாக மாற்றுகிறது. ஜப்பானின் போராட்டமானது ஏகாதிபத்திய மற்றும் பிற்போக்குத்தனமானது. சீனாவின் போராட்டமானது விடுதலைக்கானது மற்றும் முற்போக்கானது. …

ஜப்பானும் சீனாவும் ஒரே வரலாற்று தளத்தில் இல்லை. ஜப்பானின் வெற்றி சீனாவின் அடிமைத்தனத்தையும், அதன் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் முடிவையும், ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் பயங்கரமான பலத்தையும் குறிக்கும். சீனாவின் வெற்றியானது, அதற்கு மாறாக, ஜப்பானில் சமூகப் புரட்சியையும், சீனாவில் வர்க்கப் போராட்டத்தின் சுதந்திர வளர்ச்சியையும், அதாவது வெளிப்புற ஒடுக்குமுறையால் தடையின்றி இருப்பதையும் குறிக்கும்.

ஈரானிலும் உலக அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கம் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலை எதிர்க்க வேண்டும், ஆனால் அவர்கள் அதை தங்கள் சொந்த வர்க்கப் போராட்ட வழிமுறைகள் மூலம் செய்ய வேண்டும். இதன் அர்த்தமானது, ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டத்தையும் தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான எப்போதும் விரிவடையும் தாக்குதலையும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கும் உலகளாவிய தொழிலாள வர்க்க எதிர்த்தாக்குதலை அபிவிருத்தி செய்வதாகும்.

பாரம்பரிய இராணுவ அடிப்படையில், அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல் நடத்துபவர்கள் அழிவு சக்தியின் மாபெரும் ஆதிக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் புரட்சிகள் மற்றும் காலனித்துவப் போர்களின் வரலாறு மீண்டும் மீண்டும் காட்டியுள்ளபடி, இராணுவ வலிமையானது, குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், ஒரு காரணியாக மட்டுமே உள்ளது.

ஏகாதிபத்தியத்தின் மைய பலவீனமானது மத்திய கிழக்கு முழுவதும், ஆசியா மற்றும் ஆபிரிக்கா முழுவதும் காணப்படும் பரந்த மற்றும் விரைவாக வளர்ந்து வரும் சமூக எதிர்ப்பின் திறனிலும், ஏகாதிபத்திய மையப்பகுதிகளுக்குள் தொழிலாள வர்க்கத்தின் பெருகிவரும் போராட்டங்களிலும் உள்ளது.

இந்த சமூக சக்திதான் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கும் உலகளாவிய போரின் தீவிரத்திற்கும் எதிரான தீர்க்கமான எதிர்ப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, மேலும் இது ஒழுங்கமைக்கப்பட்டு இயக்கப்பட வேண்டும். முதலாளித்துவத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும், அவர்களின் அரசு எந்திரங்களுக்கும், அரசியல் முகவர்களுக்கும் எதிரான சமரசமற்ற எதிர்ப்பின் மூலம் மட்டுமே இந்தப் பணியை நிறைவேற்ற முடியும்.

அமெரிக்காவில், ஜனநாயகக் கட்சியின் அனைத்துப் பிரிவுகளும் அதன் தலைமை ஊடகக் குரலான நியூயார்க் டைம்ஸும் , அரசியலமைப்பை முறையாக மீறி, ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவ முயல்வதாக அவர்களே ஒப்புக்கொள்ளும் ஒரு ஜனாதிபதியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு போரை ஆதரிக்கின்றன.

ட்ரம்ப் இரண்டு முனைகளில் போரை நடத்துகிறார்: அதாவது வெளிநாட்டில் ஈரானுக்கு எதிராகவும், உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும் நடத்துகிறார். இவைகள் ஒரே செயல்முறையின் இரண்டு பக்கங்கள் ஆகும். ஈரானுடனான ஒரு போர் தவிர்க்க முடியாமல் அரசியல் அடக்குமுறை மற்றும் சமூக சிக்கன நடவடிக்கைகளின் அதிகரிப்புடன் சேர்ந்து செல்லும். போர் வரவு-செலவுத் திட்டமானது ஏற்கனவே $1 டிரில்லியனைத் (1000 பில்லியன்) தாண்டியுள்ளதால், தொழிலாள வர்க்கம் அதற்கான செலவைச் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும்.

அமெரிக்காவிற்குள் ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான ட்ரம்பின் அரசியலமைப்பு விரோத முயற்சியும், ஈரானுக்கு எதிராக சட்டவிரோதப் போரைத் தொடங்குவதும் ஒரு குற்றகரமான அரசாங்கத்தின் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கூறுகளாகும். இந்தக் கூறுகளின் தொடர்பு அமெரிக்காவையும் உலகையும் ஒரு பேரழிவால் அச்சுறுத்துகிறது. ஆட்சி மாற்றத்திற்கான அவசரத் தேவை உள்ள எதாவதொரு நாடு என்றால், அது அமெரிக்காவாகத்தான் இருக்க முடியும்.

ஐரோப்பாவிலும் இதே அடிப்படை இயக்கவியல் வெளிப்படுகிறது. ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கும் ஈரானின் வெளியுறவு அமைச்சருக்கும் இடையே வெள்ளிக்கிழமை வியன்னாவில் நடைபெற்ற விவாதங்கள், தெஹ்ரானை சரணடைய கட்டாயப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட ஒரு போலித்தனத்தைத் தவிர வேறில்லை. ட்ரம்பின் போரை நோக்கிய உந்துதல் குறித்து அவர்கள் குரல் கொடுக்கும் எந்தவொரு ஆட்சேபனையும் அவர்களின் சொந்த ஏகாதிபத்திய நலன்கள் குறித்த கவலைகளிலிருந்து மட்டுமே உருவாகின்றன: அதாவது ட்ரம்ப் மற்றும் நெதன்யாகுவால் பற்றவைக்கப்பட்ட தீயினால் அவர்களும் எரியக்கூடும்; மத்திய கிழக்கில் ஒரு முழு அளவிலான போர் அமெரிக்க இராணுவ வளங்களை உக்ரேனிலிருந்து திருப்பிவிடக்கூடும்; மேலும் ஏகாதிபத்திய வெற்றி மற்றும் கொள்ளையிடும் வளங்களிலிருந்து வாஷிங்டனால் அவர்கள் துண்டிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.

சீன மற்றும் ரஷ்ய முதலாளித்துவ ஆட்சிகள், மிகவும் நடைமுறைவாத, குறுகிய கால கணக்கீடுகளை அடிப்படையாகக் கொண்டு, ட்ரம்ப் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சில இணக்கங்களை அடைய முடியும் என்ற நம்பிக்கையில் ஒட்டிக்கொண்டிருக்கின்றன, ஈரான் மீதான தாக்குதலை எதிர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஈரானிய ஆட்சியைப் பொறுத்தவரை, போருக்கு முன்னும் பின்னும் அதன் நடத்தையானது, தேசிய முதலாளித்துவம் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடத் தகுதியற்றது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ட்ரம்ப் “நிபந்தனையற்ற சரணடைதலை” கோரிய பிறகும் கூட, அது வருங்கால பாசிச சர்வாதிகாரிக்கு முறையீடு செய்வதில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது, அதே நேரத்தில் ஐரோப்பிய ஏகாதிபத்திய குண்டர்கள் அதன் சார்பாக தலையிட வேண்டும் என்று கெஞ்சுகிறது.

முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரைப் போலவே, இந்தப் போரும் முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகளிலிருந்து எழுகிறது: அதாவது பூகோளரீதியாக ஒருங்கிணைந்த பொருளாதாரத்திற்கும் காலாவதியான தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாடு, மற்றும் உற்பத்தி சாதனங்களின் தனியார் உடைமைக்கும் நவீன பொருளாதார வாழ்க்கையின் சமூகத் தன்மைக்கும் இடையிலான முரண்பாடு ஆகும்.

ஈரானுக்கு எதிராக நேரடிப் போரைத் தொடங்குவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் திட்டங்களுக்கு வெகுஜன எதிர்ப்பை நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவும் அதனுடைய பகுதிகளான சோசலிச சமத்துவக் கட்சிகளும் அழைப்புவிடுக்கின்றன. இந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புத் தாக்குதலை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் மற்றும் வெளிநடப்புகளுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தால் ஆயுதபாணியாக்கப்பட்ட சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே ஏகாதிபத்தியப் போருக்கும் அதை அபிவிருத்தி செய்யும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும். போருக்கு எதிரான போராட்டமானது தொழிலாளர் அதிகாரத்திற்கான போராட்டத்துடனும் பூகோளரீதியான பொருளாதார வாழ்க்கையை சோசலிச மறுஒழுங்கமைப்பதுடனும் இணைக்கப்பட வேண்டும் என்று நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு (ICFI) வலியுறுத்துகிறது.