முன்னோக்கு

ஈரானுக்கு எதிரான ட்ரம்பின் அச்சுறுத்தல்களும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் குற்றமாக்கலும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஈரானின் வடக்கு தெஹ்ரானில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகம் மீது குண்டுவீச்சு நடந்த இடத்தில் ஒரு தீயணைப்பு படைவீரர் தனது சக ஊழியர்களை உதவிக்கு அழைக்கிறார். ஜூன் 13, 2025 வெள்ளிக்கிழமை [AP Photo/Vahid Salemi]

கடந்த புதனன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிராக ஒரு சட்டவிரோத மற்றும் ஆத்திரமூட்டலற்ற அமெரிக்க போரைத் தொடங்குவதற்கான அச்சுறுத்தல்களை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். “நான் அதைச் செய்யலாம், நான் அதைச் செய்யாமலும் விடலாம். ஆனால், நான் என்ன செய்யப் போகிறேன் என்பது யாருக்கும் தெரியாது” என்று ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், ஈரானிய அரசாங்கம் “நிபந்தனையற்ற முறையில் சரணடைய வேண்டும்” என்ற தனது அழைப்புகளை மீண்டும் வலியுறுத்தினார். “ஒரு நொடி முன்னதாகவே இறுதி முடிவை எடுக்க விரும்புகிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.

ஒரு நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு உயர்த்தப்பட்ட ஒரு மாஃபியா தலைவரின் வார்த்தைகள் இவை. “அதிகாரத்துக்கு வந்த முதல் நாளிலிருந்தே ஒரு சர்வாதிகாரியைப் போல” ஆட்சி செய்யப்போவதாக சூளுரைத்திருந்த ட்ரம்ப், சர்வதேச சட்டத்தையோ அல்லது அமெரிக்க அரசியலமைப்பையோ அங்கீகரிக்கவில்லை. மேலும் “ஒரு நொடிக்கு முன்னரே” எடுக்கப்பட்ட முடிவுகளின் பேரழிவுகரமான விளைவுகளை உலகம் முகங்கொடுத்து வருகின்ற நிலையில், எவரையும், எங்கும், எந்த நேரத்திலும் கொல்லும் உரிமையை அவர் வலியுறுத்துகிறார்.

ஆறு நாட்களாக, இஸ்ரேல் ட்ரம்பின் ஒப்புதலுடன், அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தி, ஈரான் மீது இடைவிடாத தாக்குதலை நடத்தி வருகிறது. இது எரிசக்தி உள்கட்டமைப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், காவல் நிலையங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தலைவர்களை குறிவைத்து தாக்கி வருகிறது. ஈரானுக்கு எதிரான இஸ்ரேலிய குண்டுவீச்சு தாக்குதலானது, காஸாவில் பாலஸ்தீனியர்கள் மீது நடந்து வரும் இனப்படுகொலை உட்பட, ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் அடிபணியச் செய்ய நடந்து வரும் அமெரிக்க-இஸ்ரேலிய போரின் பாகமாக உள்ளது.

இப்போது, ட்ரம்ப், அமெரிக்க மற்றும் சர்வதேச சட்டம் இரண்டையும் காலடியில் போட்டு மிதித்து, ஈரானுக்கு எதிரான ஒரு போரில் அமெரிக்காவை நேரடியாக ஈடுபடுத்த அச்சுறுத்தி வருகிறார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச சட்ட தரங்களின் ஒரு தொகுப்பான நூரெம்பேர்க் கோட்பாடுகள், அமைதிக்கு எதிரான குற்றங்களை “ஆக்கிரமிப்பு போரைத் திட்டமிடுதல், தயாரித்தல், தொடங்குதல் அல்லது நடத்துதல்” என்று வரையறுக்கின்றன. ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் துல்லியமாக இந்த வரையறையைக் கொண்டிருக்கின்றன.

ஈரான் அமெரிக்காவை தாக்கவில்லை, அல்லது அமெரிக்காவை அச்சுறுத்தும் எந்த வழிகளோ ​​அதனிடம் இல்லை. ஈரான் மீதான தாக்குதல் என்பது ஒரு “முன்கூட்டிய போராக” இருக்கும் என்ற கூற்றுக்கள் அபத்தமானவை. மாறாக, புஷ் நிர்வாகத்தின் 2003 ஈராக் மீதான படையெடுப்பைப் போலவே, இது மற்றொரு சட்டவிரோத மற்றும் குற்றவியல் ஆக்கிரமிப்புப் போராகும்.

எப்பொழுதும் போல், அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கை அதிர்ச்சியூட்டும் பாசாங்குத்தனத்தால் குணாம்சப்படுத்தப்படுகிறது. பல ஆண்டுகளாக, அமெரிக்க ஊடகங்கள் உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை “தூண்டுதலற்ற, சட்டவிரோத மற்றும் நியாயமற்ற போர்” என்று வகைப்படுத்தி வந்துள்ளன. ஆனால், ஈரானைத் தாக்குவதற்கான ட்ரம்பின் திட்டங்களை விவரிக்கையில், இந்த அடைமொழிகள் அனைத்தும் அமெரிக்க ஊடகங்களால் திடீரென கைவிடப்படுகின்றன. இந்தத் திட்டங்கள், ஈரான் ஓர் அணுஆயுதத்தைப் பெற்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இரண்டையும் அச்சுறுத்துவதை தடுக்கும் நோக்கம் கொண்டதால், இது ஒரு “நியாயமான போர்” என்று அமெரிக்க ஊடக பிரச்சார எந்திரத்தால் திரிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த புதனன்று வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் ஆவேசத்துடன், ஈரானிய தலைவர்களிடம் வாய்ச் சவடாலுடன், “இத்தனை மரணங்கள் மற்றும் அழிவுகளுக்கு முன்னதாக நீங்கள் ஏன் என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை? ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை?” என்று கேட்டார்.

என்ன ஒரு அபத்தமான மோசடி. ஈரான் மீது இஸ்ரேலிய ஏவுகணைகள் மழையாகப் பொழியத் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் ட்ரம்ப் ஒரு புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை அறிவித்தார். இந்த பேச்சுவார்த்தைகள், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் வார்த்தைகளில், “ஒரு திடீர் இஸ்ரேலிய தாக்குதலுக்கு சரியான மூடிமறைப்பாக இருந்தன.” அனைத்திற்கும் மேலாக, இஸ்ரேல் மேற்கொண்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் ஒரு உயர் அணுசக்தி பேச்சுவார்த்தையாளரான அலி ஷம்கானி கொல்லப்பட்டார். இவர் ட்ரம்ப் மிகவும் தீவிரமாகத் தொடர்ந்ததாகக் கூறப்படும் பேச்சுவார்த்தைகளில், தீவிர பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க அரசியலமைப்பின் பிரிவு 1, பிரிவு 8 இன் கீழ், போரை அறிவிக்கும் அதிகாரம் முற்றிலும் காங்கிரஸிடம் உள்ளது, ஜனாதிபதிக்கு அல்ல. அமெரிக்காவில் ஜனநாயக அரசாங்க வடிவங்கள் செயல்பட்டிருந்தால், ஈரானுக்கு எதிராக ஒரு போரைத் தொடங்குவதற்கான ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் காங்கிரஸ் விசாரணைகளையும் பதவிநீக்க குற்றவிசாரணை நடவடிக்கைகளையும் தூண்டும். ஆனால், ட்ரம்பின் குற்றகரமான ஆக்ரோஷ போருக்கு மௌனமான ஒப்புதல் அல்லது முற்றுமுதலான ஆதரவே அரசியல் ஸ்தாபகத்தின் விடையிறுப்பாக இருந்து வருகிறது.

ஜனநாயகக் கட்சியிடம் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. ஆடம் ஸ்கிஃப் மற்றும் சக் ஷ்யூமர் போன்ற நபர்கள் உட்பட அதன் தலைமை, காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் இருகட்சி மூடிமறைப்பை வழங்கியுள்ளதுடன், இப்பொழுது பகிரங்கமாக ஈரானுக்கு எதிரான போருக்கான ஆதரவை அடையாளத்தை காட்டுகிறது.

ஞாயிறன்று ஒரு நேர்காணலில், ஜனநாயகக் கட்சி செனட்டர் ஆடம் ஸ்கிஃப் ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஒப்புதல் கொடுத்து, “எனவே நான் இந்த நடவடிக்கைகளை ஆதரிக்கிறேன். இஸ்ரேல் தன்னைத்தானே தற்காத்துக் கொள்ள உதவும் நிர்வாகத்தின் நடவடிக்கைகளை நான் ஆதரிக்கிறேன்” என்று கூறினார்.

ஈரான் மீதான அமெரிக்க குண்டுவீச்சை ஆதரிப்பதற்கான கதவைத் திறந்த ஸ்கிஃப், “அவர்கள் நம்மைத் தாக்குவதன் மூலம் விடையிறுக்க வேண்டும் என்றால், பின்னர் நம்மை தற்காத்துக் கொள்வதன் மூலமாக நாம் விடையிறுக்க வேண்டும். அதன்பின் ஃபோர்டோ [யுரேனிய செறிவூட்டல் சுத்திகரிப்பு ஆலை] அல்லது வேறெங்கிலும் சாத்தியமான தாக்குதல்களுக்கு ஈரான் தன்னைத் திறந்து விடும் என்று நான் நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

பல தசாப்தங்களாக, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஷாவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து ஈரானை அமெரிக்க மேலாதிக்கத்தில் இருந்து துண்டித்த 1979 ஈரானிய புரட்சியின் பின்விளைவுகளை தலைகீழாக மாற்ற முனைந்து வந்துள்ளது. “பயங்கரவாதத்தின் மீதான போர்” தொடக்கத்தில் புஷ் நிர்வாகத்தின் முழக்கம் “சிறுவர்கள் பாக்தாத்திற்கு செல்லுங்கள், உண்மையான மனிதர்கள் தெஹ்ரானுக்கு செல்லுங்கள்” என்பதாக இருந்தது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியம் தயாரிக்கும் போர் 2001 ஆப்கானிஸ்தான் படையெடுப்பு அல்லது 2003 ஈராக் படையெடுப்பு ஆகியவற்றில் இருந்து வேறுவிதமாக செல்லும் என்று நம்புவதற்கு காரணம் ஏதும் இல்லை. இந்த படையெடுப்பு ஆரம்ப இராணுவ வெற்றிகளைச் சந்தித்தது, ஆனால் விரைவில் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளுக்கு மக்களின் எதிர்ப்பை அடக்க முடியாமல் புதைகுழிகளாக மாறியது. 2003 ஆம் ஆண்டில் ஒரு விமானம் தாங்கிக் கப்பலில் “பணி நிறைவேற்றப்பட்டதாக” புஷ்ஷின் இழிவான அறிவிப்பு இருந்தபோதிலும், “பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்” கீழ் தொடங்கப்பட்ட போர்கள் என்றென்றும் இரத்தக்களரி பேரழிவுகளாக நினைவுகூரப்படும்.

ஈரானுக்கு எதிரான ஒரு போர் வித்தியாசமாக இருக்கும் என்று ட்ரம்ப் நம்புவதற்கு என்ன காரணம்? உண்மையில், அமெரிக்கத் துருப்புக்கள் அங்கு நிலைநிறுத்தப்பட்டால், ஆயிரக்கணக்கானோர் மடிவார்கள்.

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் அச்சுறுத்தல் என்பது பலத்தின் செயல் அல்ல, மாறாக விரக்தியின் செயலாகும். அமெரிக்க முதலாளித்துவம், பெருகிவரும் மக்கள் எதிர்ப்பு, சுழலும் கடன் நெருக்கடி மற்றும் உலக அரங்கில் வீழ்ச்சியடைந்துவரும் அதன் போட்டித்தன்மை ஆகியவற்றை எதிர்கொண்டுள்ள நிலையில், அதன் முன்பினும் அதிகரித்து வரும் மற்றும் எங்கும் பரவியுள்ள நெருக்கடிக்கு உலகளாவிய போரை மட்டுமே தீர்வாக காண்கிறது. உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர், மத்திய கிழக்கு எங்கிலும் இஸ்ரேலின் தாக்குதல், மற்றும் சீனாவை இலக்கில் வைத்து பசிபிக்கில் மேற்கொண்டுவரும் இராணுவக் குவிப்பு ஆகியவை தனிமைப்படுத்தப்பட்ட மோதல்கள் அல்ல, மாறாக ஒருங்கிணைந்த மற்றும் தீவிரப்படுத்தப்பட்டு வரும் உலகளாவிய போராகும்.

இந்தப் போர்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடிக்கு எந்த தீர்வையும் வழங்குவதற்குப் பதிலாக, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் முதலாளித்துவத்திற்கு எதிரான அரசியல் எதிர்ப்பை தீவிரப்படுத்த மட்டுமே செய்யும். கடந்த வார இறுதியில், மக்களின் பரந்த பிரிவுகளின் தீவிரமயமாக்கல் அதிகரித்து வருவதற்கு சான்றாக, மில்லியன் கணக்கான மக்கள் அமெரிக்காவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நகரத்திலும் ஒரு சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான ட்ரம்பின் முயற்சிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் பொருளாதார உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கத்தை ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்துடன் இணைப்பதே இன்றியமையாத பணியாகும். இதற்கு சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் இணைந்த கட்சிகளும் கட்டியெழுப்ப போராடிக் கொண்டிருக்கிற தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர தலைமைக்கான போராட்டம் அவசியமாகும்.

Loading