இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
மத்திய பெருந்தோட்ட மாவட்டத்தில் மஸ்கெலியா அருகே உள்ள ஓல்டன் தோட்டத்தைச் சேர்ந்த 26 தொழிலாளர்கள் மீது இலங்கை பொலிசார் ஒரு தொகை குற்றவியல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடித்த பின்னர், பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களுக்கு எதிராக மே 28 அன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் வழக்கு செப்டம்பர் 10 அன்று விசாரிக்கப்படும்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. தோட்ட முகாமையாளர் சத்தியமூர்த்தி சுபாஷ் நாராயணன், உதவி முகாமையாளர் அனுஷன் திருச்செல்வம் ஆகியோரைத் தாக்கும் நோக்கத்துடனான சட்டவிரோத ஒன்று கூடலில் உறுப்பினர்களாக இருந்தமை; கை மற்றும் தடிகளால் அவர்களைத் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியமை; மற்றும் தோட்ட முகாமையாளரின் வீட்டைத் தாக்கி 27,684 ரூபாவுக்கு சேதம் ஏற்படுத்தியமை இந்தக் குற்றச்சாட்டுக்களில் அடங்கும்.
ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீது நாட்டின் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் கடுமையான அபராதம் விதிக்கப்படலாம்.
மருக்கு கண்காணம்கே சாந்தனி, செம்பன் புவனேஸ்வரி, பிரான்சிஸ் தெரசா அம்மா, முனுசாமி யோகசக்தி, கோவிந்தராஜ் சதீஸ்வரி, கணபதிதேவி, மாரிமுத்து தமிழ்ச்செல்வி, ஆண்டிமுத்து விஸ்வகேது, சிவபெருமாள் விக்னேஸ்வரன், பழனி அமிர்தலிங்கம், கந்தையா குமுதன், சிதம்பரம் யோகராஜ், கந்தையா சீதா, தங்கசாமி புஷ்பவல்லி, சந்திரபோஸ் ஸ்வர்ணதேவி, ராமலிங்கம் வினோதினி, ராமச்சந்திரன் கவிதாமணி, பழனியாண்டி செல்வகுமாரி, அனார் பரிமளா தேவி, தொரசாமி திலகவதி, சுப்ரமணியம் செவ்வந்தி, காளேஸ்வரம் பிரியதர்ஷனி, நீலமேகம் பிரியதர்ஷனி, முத்துசாமி வசந்த மலர், பரசுராமன் முத்துமாரி, பலகமலை சிவகுமார் ஆகியோரே குற்றம் சாட்டப்பட்டவர்களாவர்.
2021 பெப்ரவரி இறுதியிலும் மார்ச் தொடக்கத்திலும் கைது செய்யப்பட்ட ஒல்டன் தோட்டத் தொழிலாளர்கள், பொலிஸ் மற்றும் முகாமையாளரின் குற்றச்சாட்டுகளை உறுதியாக மறுத்துள்ளனர். ஓல்டன் தோட்டத்தை நிர்வகிக்கும் ஹொரண பிராந்திய பெருந்தோட்டக் கம்பனியினால், 2021 மார்ச் 22 அன்று இதே பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் திடீரென வேலைநீக்கம் செய்யப்பட்ட 38 ஊழியர்களில் இவர்களும் அடங்குவர்.
தமிழை தங்கள் தாய் மொழியாகப் பேசும் 26 தொழிலாளர்கள் மீதான குற்றப்பத்திரிகைகள் சிங்களத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இது அவர்களின் தாய்மொழியில் அனைத்து உத்தியோகப்பூர்வ அல்லது சட்ட ஆவணங்களையும் வழங்க வேண்டும் என்று கூறும் அவர்களின் அரசியலமைப்பு மற்றும் சட்ட உரிமைகளை மீறுவதாகும்.
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவும் இந்த தொழிலாளர்கள் வர்க்கப் போரில் பாதிக்கப்பட்டவர்கள் என்று அறிவித்து, அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிடக் கோருகின்றன.
சோசலிச சமத்துவக் கட்சியும் பெருந்தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவும் இந்த கொடூரமான அடக்குமுறையிலிருந்து தங்கள் சக ஊழியர்களைப் பாதுகாக்குமாறு அனைத்து தோட்டத் தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றன. இலங்கை முழுவதும் உள்ள தொழிலாளர்கள் தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளைப் பாதுகாப்பதோடு அனைத்து ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களையும் அவர்களது அனைத்து ஊதியங்களையும் திருப்பிச் செலுத்தி முழுமையாக மீண்டும் வேலையில் அமர்த்த வேண்டும் என்று கோர வேண்டும்.
ஆரம்பத்தில் இருந்தே, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கட்டுப்பாட்டில் உள்ள அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் போன்ற தோட்டத் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் பழிவாங்கப்பட்ட ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக தமது உறுப்பினர்களை அணிதிரட்ட மறுத்துவிட்டன. இப்போது அவை உத்தியோகபூர்வ பொலிஸ் குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக குற்றகரமான மௌனத்தைக் கடைப்பிடித்து, இந்த அடக்குமுறைக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்துகின்றன.
தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் ஆதரவுடன், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்களின் ஆசீர்வாதத்துடன், தோட்டக் கம்பனியாலும் பொலிசாலும் இந்தத் தொழிலாளர்கள் வேட்டையாடப்படுவது ஏன்?
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்க்கைக்கு ஏற்ற ஊதியம், சிறந்த வேலை நிலைமைகள் மற்றும் ஒழுக்கமான வீட்டுவசதி, கல்வி மற்றும் சுகாதார வசதிகளைக் கோரி 150,000 தோட்டத் தொழிலாளர்களால் நடத்தப்பட்ட உறுதியான வேலை நிறுத்தப் போராட்டத்தின் பகுதியாக இருந்ததாலேயே ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் குறிவைக்கப்பட்டனர்.
இது உலக சந்தையில் தொழில்துறையின் போட்டித்தன்மையைக் குறைக்கும் என்று கூறி, தோட்ட நிறுவனங்கள் இதை கடுமையாக எதிர்த்தன. அனைத்து பெரந்தோட்ட முதலாளிகளின் சார்பாகச் செயல்படும் ஹொரண பிராந்திய பெருந்தோட்டக் கம்பனியானது சிறந்த நிலைமைகளுக்காகப் போராடுவதற்கு எதிராகவும் கம்பனியின் அனைத்து கோரிக்கைகளுக்கும் தொழிலாளர்களை அடிபணிய வைப்பதற்காகவும் சகல தோட்டத் தொழிலாளர்களையும் அச்சுறுத்த முயற்சிக்கின்றது.
2021 பெப்ரவரி 2 அன்று ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததுடன், மூன்று நாட்களின் பின்னர், 1,000 ரூபாய் -அதாவது 2021 ஆம் ஆண்டு நாணய மாற்று விகிதத்தின் படி 5 டொலர்- தினசரி ஊதியம் கோரி இலட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய ஒரு தேசிய வேலைநிறுத்தப் போராட்டத்திலும் இணைந்துகொண்டனர்.
மார்ச் 29 வரை தங்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்த ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள், பெப்ரவரி 17 அன்று முகாமையாளரின் வீட்டிற்கு வெளியே சக தொழிலாளர்களைத் துன்புறுத்துவதை நிறுத்தக் கோரி ஒரு ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர். இந்த சம்பவமே தொழிலாளர்கள் முகாமையாளரையும் அவரது உதவியாளரையும் தாக்கியதாகவும், வீட்டை சேதப்படுத்தியதாகவும் பொய்யாகக் குற்றம் சாட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
போராட்டத்தில் பங்கேற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளர்களை பொலிசார் உடனடியாக வேட்டையாடத் தொடங்கினர். உள்ளூர் இ.தொ.கா. அதிகாரிகள், சில தொழிலாளர்களின் பெயர்களை பொலிசாருக்குக் கொடுத்ததுடன், சிலரை பொலிசில் சரணடையச் சொன்னதாக ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வேலைநீக்கம் செய்யப்பட்ட 38 தொழிலாளர்களில் 13 பேரால், தங்களை மீண்டும் ஊதியத்துடன் வேலைக்கமர்த்த வேண்டும் என்று கோரி, ஹொரண பெருந்தோட்டக் கம்பனி மீது ஹட்டன் தொழில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சம்பந்தமான பிரதிபலிப்பில், கம்பனியின் பழிவாங்கலின் கொடூரத் தன்மை வெளிப்பட்டது.
இந்த ஆண்டு ஜனவரியில், புகார் அளித்தவர்களுக்கு எதிராகவே வழக்கை திருப்பிய நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்தார். ஹொரண பெருந்தோட்டக் கம்பனிக்கு ஆதரவாக தனது தீர்ப்பை வழங்கிய அவர், நிறுவனத்தின் சட்டச் செலவுகளை ஈடுகட்ட 13 தொழிலாளர்களும் தலா 7,500 ரூபாய் செலுத்த வேண்டுமென உத்தரவிட்டார்.
இந்த முன்னெப்போதும் இல்லாத தீர்ப்பு, இ.தொ.கா. அதிகாரிகளால் சவால் செய்யப்படவில்லை. இ.தொ.கா. இந்த தீர்ப்புக்கு எதிராக எந்த மேல்முறையீடும் செய்யவில்லை. வேலை நீக்கம் செய்யப்பட்ட 17 தொழிலாளர்கள் தங்களை மீண்டும் வேலையில் அமர்த்தக் கோரி தாக்கல் செய்த தனி வழக்கின் தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளது.
ஜே.வி.பி./தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம் உழைக்கும் மக்களுக்கு பல்வேறு சமூக சலுகைகளை வழங்குவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்தாலும், அது சர்வதேச நாணய நிதியத்தின் சமூக சிக்கனத் தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுவது போலவே, ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறையும் தொடர்கிறது. இந்த சிக்கனத் தாக்குதல்களில், தனியாரால் நிர்வகிக்கப்படும் பெருந்தோட்டத் தொழில் மற்றும் ஏனைய பிரதான தொழில்துறைகளை மறுசீரமைப்பதும் அடங்கும்.
தோட்டக் கம்பனிகள் 'வருமானப்-பங்கீடு திட்டங்களை' அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளன. இதன் கீழ் ஒரு குறிப்பிட்ட அளவு தேயிலை செடிகள் தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்படும். அவற்றை குடும்ப உதவியுடன் பராமரித்து அறுவடையை கம்பனிக்கே விற்க வேண்டும். வருமானத்தில் ஒரு சிறிய பகுதியை கம்பனி தொழிலாளர்களுக்கு கொடுக்கும்.
இந்த, ஆகவும் மோசமான சுரண்டல் முறையானது பாரம்பரிய கூலி முறையை மாற்றி, ஓய்வூதியங்கள் மற்றும் ஏனைய அடிப்படை உரிமைகளை ரத்து செய்வதோடு தொழிலாளர்களை நவீன கால குத்தகை விவசாயிகளாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மறுசீரமைப்பில், இலாபமற்ற தோட்டங்களை விவசாய மற்றும் தோட்டக்கலை (பயிர் வளர்க்கும்) திட்டங்களாக மாற்றுவதும் அடங்கும்.
ஜனாதிபதி திசாநாயக்க, பெப்ரவரி 17 ஆற்றிய வரவு-செலவுத் திட்ட உரையில் தனது அரசாங்கம் தினசரி கூலியை 1,700 ரூபாயாக அதிகரிப்பது குறித்து நிறுவனங்களுடன் பேசுவதாக அறிவித்த போதிலும், தோட்டத் தொழிலாளர்களுக்கு எதுவும் மாறவில்லை.
முந்தைய அரசாங்கங்களும் இதேபோன்ற வெற்று வாக்குறுதிகளை கொடுத்துள்ளன. இந்த ஊதியத் திட்டத்தை, உழைப்புச் செலவு அதிகரிப்பை காரணங் காட்டி கம்பனிகள் மீண்டும் மீண்டும் மறுத்து வருகின்றன. 2022 முதல் வாழ்க்கைச் செலவு சுட்டெண் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ள போதிலும், நிரந்தரத் தொழிலாளர்களுக்கு இப்போது தினசரி ஊதியம் 1,350 ரூபா மட்டுமே வழங்கப்படுகிறது.
அரசாங்கம் மற்றும் தோட்டத் தொழிற்சங்கங்களதும் ஆதரவுடன் 26 ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களை சிறையில் அடைக்க ஹொரண பெருந்தோட்டக் கம்பனி மேற்கொண்டுள்ள முயற்சிகள், தோட்டத் தொழிலாளர்கள் மீது மட்டுமல்ல, முழு தொழிலாள வர்க்கத்தின் மீதுமான ஒரு கடுமையான தாக்குதலாகும். இது தோற்கடிக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு தோட்டத்திலும், அனைத்து தொழிற்சங்க அதிகாரத்துவங்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, தொழிலாளர்களால் ஜனநாயக ரீதியாகக் கட்டுப்படுத்தப்படும் சுயாதீன அமைப்புகளாக தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்புமாறு நாங்கள் தொழிலாளர்களை வலியுறுத்துகிறோம். இந்த நடவடிக்கைக் குழுக்கள், பெரிய வணிகங்கள், முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் இலாப அமைப்பையும் எதிர்க்கின்ற, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச அளவில் தங்கள் போராட்டங்களை ஒன்றிணைக்கும் நோக்கில், தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
26 ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான அரச பழிவாங்கலை முடிவுக்குக் கொண்டுவரப் போராடுவதற்காக ஒரு பிரச்சாரம் தொடங்கப்பட வேண்டும். இது பின்வரும் கோரிக்கைகளுடன் இணைக்கப்பட வேண்டும்:
- ஒரு கண்ணியமான வாழ்க்கையை வாழக்கூடிய, வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப அதிகரிக்கின்ற மாதச் சம்பளம் வேண்டும்!
- உயர்தர வீட்டுவசதி, பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகள் வேண்டும்!
- சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகள் வேண்டாம்!
ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான சட்ட நடவடிக்கைகளும் அரச அடக்குமுறைகளும், பெருந்தோட்ட நிறுவனங்களை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது. இது, அனைத்து இலங்கை தொழிலாளர்களும் சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காக முன்னெடுக்கும் போராட்டத்தின் பாகமாகவும், திசாநாயக்க அரசாங்கம் கட்டவிழ்த்துவிடும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக முன்னெடுக்க வேண்டிய பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க
- இலங்கையில் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் நான்கு வருடங்களாக தொடர்ந்து அடக்குமுறைக்கு முகங்கொடுக்கின்றனர்
- இலங்கை அரசாங்கமும், கம்பனிகளும் தொழிற்சங்கங்களும் தோட்டத் தொழிலாளர்கள் மீது வறிய மட்டத்திலான சம்பளத்தை திணிப்பதற்கு சதி செய்கின்றன
- இலங்கை: நிர்வாகமும் தொழிற்சங்கமும் பொலிசும் சோ.ச.க./தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவின் பாதுகாப்பு பிரச்சாரத்தை நிறுத்த முயற்சிக்கின்றன
- இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான சோடிக்கப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறு! வேலை நீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் நிபந்தனையின்றி மீண்டும் வேலையில் அமர்த்து!