முன்னோக்கு

"நிபந்தனையற்ற சரணடைதலைக்” கோரும் ட்ரம்ப், ஈரான் மீதான தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டுகிறார்

ஜூன் 13, 2025 வெள்ளிக்கிழமை, ஈரானின் வடக்கு தெஹ்ரானில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் ஒரு தீயணைப்பு வீரர் தனது சக ஊழியர்களை அழைக்கிறார். [AP Photo/Vahid Salemi]

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈரானுடன் போருக்குள் உடனடியா விரைந்து கொண்டிருக்கிறது, மத்திய கிழக்கில் அதன் பினாமியான இஸ்ரேலுடன் சேர்ந்து நீண்டகாலமாக அது சதித்திட்டம் தீட்டி வந்துள்ள ஒரு சூறையாடும் மோதலின் நேரடி கட்டுப்பாட்டை ஏற்றுள்ளது. அமெரிக்க ஆதரவு மற்றும் ஊக்கத்துடன், இஸ்ரேல் ஜூன் 12ந் தேதி இரவு ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று அவரது ட்ரூத் சமூக ஊடக தளத்தில் தொடர்ச்சியான போர்வெறி, மாஃபியா பாணியிலான பதிவுகளில், அமெரிக்க இராணுவத்தை நேரடியாக போருக்குள் நுழைய அவர் உத்தரவிட்டிருப்பதாக கிட்டத்தட்ட பகிரங்கமாக அறிவித்தார்.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகளுக்கு இடையே எந்த வேறுபாடும் காட்டாமல், ட்ரம்ப் இவ்வாறு அறிவித்தார், “ஈரான் மீதான வான்வெளியின் மீதான முழுமையான கட்டுப்பாட்டை இப்போது நாம் கொண்டிருக்கிறோம்.” இதைத் தொடர்ந்து ஈரானின் அதியுயர் தலைவரான அயதுல்லா கமேனியை கொலை செய்யப் போவதாக நேரடியாக மிரட்டல் விடுக்கப்பட்டது. “அவர் “எங்கே ஒளிந்திருக்கிறார்” என்பது எங்களுக்குத் துல்லியமாகத் தெரியும்,” என்று ட்ரம்ப் அச்சுறுத்தினார். “நாங்கள் அவரை வெளியே கொண்டுவரப் போவதில்லை (கொல்வதற்கு!), குறைந்தபட்சம் இப்போதைக்கு இல்லை. ஆனால்... எங்கள் பொறுமை குறைந்து வருகிறது.

சுமார் முப்பது நிமிடங்களுக்குப் பின்னர் , ட்ரம்ப் தெஹ்ரானின் “நிபந்தனையற்ற சரணடைதலை” ஊடகத்தில் கோரினார்.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய போர் ஒரு திமிர்த்தனமான குற்றச் செயல் ஆகும். போருக்குள் அமெரிக்க ஏகாதிபத்தியம் நேரடியாக நுழைவது, வரலாற்றுரீதியில் ஒடுக்கப்பட்ட நாடான ஈரான் மக்களுக்கும், அத்துடன் பரந்த மத்திய கிழக்கு மற்றும் உலகிற்கும் பேரழிவுகரமான விளைவுகளைக் கொண்டிருக்கும்.

இது கட்டவிழ்ந்து வரும் அமெரிக்க ஏகாதிபத்திய தலைமையிலான உலகளாவிய போரில் ஒரு பாரிய தீவிரப்பாட்டைக் கொண்டிருக்கிறது. ஈரானை அடிபணியச் செய்வதற்கும் மற்றும் உலகின் பிரதான எண்ணெய் ஏற்றுமதி பிராந்தியம் மற்றும் முக்கிய கடல் வர்த்தக பாதைகள் மீது கட்டுப்பாடற்ற மேலாதிக்கத்தை செலுத்துவதற்குமான அதன் முனைவை வாஷிங்டன் நீண்டகாலமாக சீனாவுடனான போருக்குத் தயாரிப்பு செய்வதற்கு முக்கியமானதாக கருதி வந்துள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஷாவின் முடியாட்சி சர்வாதிகாரத்தை அகற்றிய 1979 ஆண்டு மக்கள் எழுச்சியுடன் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளவில்லை. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய போரின் நோக்கம் “நிபந்தனையற்ற சரணடைதலை” அறிவிப்பதன் மூலமாக, வோல் ஸ்ட்ரீட்டும் வாஷிங்டனும் ஈரானிய மக்கள் மீது நவ-காலனித்துவ மேலாதிக்கத்தை மீண்டும் திணிக்க நோக்கம் கொண்டுள்ளன என்பதை ட்ரம்ப் அவரின் வழக்கமான குண்டர் பாணியில் உச்சரித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்திய நாட்களில், அமெரிக்க இராணுவமானது போர் விமானங்கள், கடற்படைக் கப்பல்கள் மற்றும் பிற போர் தளவாடங்களை அப்பிராந்தியத்தில் அதிகரித்து வருகிறது. அணுஆயுதங்களை ஏந்திச் செல்ல வடிவமைக்கப்பட்ட பி-52 ரக விமானங்கள் இப்போது முன்னோக்கி நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், தெஹ்ரானின் 9 மில்லியன் குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு ட்ரம்ப் விடுத்த அழைப்பு, ஈரானிய மக்கள் அணுகுண்டுகளைக் கொண்டு இலக்கில் வைக்கப்படலாம் என்பதற்கான ஒரு மறைமுகமான அச்சுறுத்தலாக மட்டுமே அர்த்தப்படுத்தப்பட முடியும்.

பெருநிறுவன அமெரிக்க ஊடகங்கள், தெஹ்ரானின் “உடனடி அச்சுறுத்தல்” என்ற பொய்களை மீண்டும் மீண்டும் கூறி வருகின்றன, இது ஒன்றன்பின் ஒன்றாக அமெரிக்க தலைமையிலான குற்றகரமான போரை நியாயப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

வாஷிங்டன் மற்றும் பிற பிரதான ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவால் உறுதியளிக்கப்பட்டுள்ள இஸ்ரேல், அணுசக்தி வசதிகள், ஏவுகணை பாதுகாப்புகள் மற்றும் கட்டளை கட்டமைப்புகளுக்கு மேலாக எரிசக்தி உள்கட்டுமானம், தேசிய ஒளிபரப்பு நிலையம், மருத்துவமனைகள் மற்றும் சாதாரண குடிமக்கள் ஆகியவற்றையும் இலக்கு வைத்து ஏற்கனவே போரை விரிவுபடுத்தியுள்ளது.

அதே நேரத்தில், சியோனிச ஆட்சி காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களை இனச்சுத்திகரிப்பு செய்து படுகொலை செய்வதற்கான அதன் உந்துதலைத் தீவிரப்படுத்தி வருகிறது.

ஈரான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல் “மிகச் சிறந்தது” என்றும் அதற்கான திட்டமிடலில் அவர் இருந்ததாகவும் அறிவித்த அவரது வெள்ளிக்கிழமை பதிவுகளில் தொடங்கி, ட்ரம்பின் அறிக்கைகள், ஆரம்பத்தில் இருந்தே அந்தப் போர் அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு நடவடிக்கையாக இருந்தது என்பதை எடுத்துக்காட்டியுள்ளன.

அணுசக்தி மோதலுக்கு ஒரு அமைதியான தீர்வு காண்பதற்காக அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகளுக்கு இடையே கடந்த ஞாயிறன்று ஓமானில் ஆறாவது சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்ற வெள்ளை மாளிகையின் வாதமானது, ஈரானின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களை ஒரு மரணப் பொறியில் சிக்க வைக்க வடிவமைக்கப்பட்ட ஒரு சூழ்ச்சியாகும்.

ட்ரம்ப் வழிநடத்துகின்ற அதேவேளையில், ஏனைய ஏகாதிபத்திய சக்திகளின் தலைவர்கள் ஈரான் மீதான இஸ்ரேலின் குற்றகரமான தாக்குதலை ஆதரித்து வருகின்றனர். செவ்வாயன்று G7 உச்சிமாநாட்டிற்கு இடையே பேசிய ஜேர்மனிய சான்ஸ்லர் பிரெட்ரிக் மெர்ஸ் ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு நன்றி தெரிவித்து, இஸ்ரேல் “நம்மனைவருக்காகவும் அழுக்கு வேலையைச் செய்கிறது” என்று கூறினார்.

திங்களன்று மாலை வெளியிடப்பட்ட “இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான சமீபத்திய அபிவிருத்திகள் குறித்த ஜி7 தலைவர்களின் அறிக்கை,” ஈரானை ஆக்கிரமிப்பாளராக சித்தரிப்பதுடன், போரைத் தீவிரப்படுத்துவதற்கு பச்சைக்கொடி காட்டுகிறது. “இஸ்ரேலுக்கு தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு” என்பதை அது உறுதிப்படுத்துவதோடு, “இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக” ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுக்கு சூளுரைப்பதுடன், “பிராந்திய ஸ்திரமின்மை மற்றும் பயங்கரவாதத்தின் பிரதான ஆதாரமாக” ஈரானைக் கண்டனம் செய்கிறது.

என்ன ஒரு பொய்! ஏகாதிபத்திய உதவியுடன் சட்டவிரோதமாக அணு ஆயுதங்களை பெற்றுக் கொண்டது இஸ்ரேல்தான், ஈரான் அல்ல; சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) எந்த மற்றும் அனைத்து அணுசக்தி அமைப்பும் அதன் அணுசக்தி திட்டத்தை மேற்பார்வையிட மறுக்கிறது அல்லது அணுவாயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் விதிகளுக்கு கட்டுப்பட மறுக்கிறது.

ஈரானின் பொருளாதாரத்தை நொருக்குவதற்கும் ஆட்சி மாற்றத்தைத் துரிதப்படுத்துவதற்குமான நோக்கத்துடன், ட்ரம்ப் ஒருதரப்பாக தெஹ்ரான் மீது மிகப் பெரிய, உலகளவில் தடைமுறைபடுத்தக்கூடிய பொருளாதாரத் தடைகளைத் திணித்ததன் மூலம், 2018 இல் ஐ.நா. ஆதரவிலான ஈரான் அணுசக்தி உடன்படிக்கையை வாஷிங்டன் தான் இரத்து செய்தது. மேற்கத்தைய உளவுத்துறை அமைப்புக்கள் பலமுறையும் ஈரான் அணுவாயுதங்களை தொடர்கிறது என்பதற்கு சான்றுகள் ஏதும் இல்லை என்று ஒப்புக் கொண்டுள்ளன அவ்வாறு செய்தாலும் கூட, தெஹ்ரான் அத்தகைய ஆயுதத்தை தயாரிப்பதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.

ஏகாதிபத்திய சக்திகளின் குற்றமும் வன்முறையும் அவர்களின் அவநம்பிக்கையான நெருக்கடியில் வேரூன்றியுள்ளன.

ஈரான் மீதான தாக்குதலின் ஆரம்ப விளைவு எதுவாக இருந்தாலும், அது இறுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அதன் சியோனிச நட்பு நாடுகளுக்கும் பேரழிவைத்தான் கொடுக்கும்.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான வாஷிங்டனின் படையெடுப்புகள் தோல்வியில் முடிவடைந்தன. இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர், அமெரிக்க முதலாளித்துவம் ஆழ்ந்த கடன் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, பெருகும் சமூக மோதலால் சூழப்பட்டுள்ளது, ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதன் மூலமாக பாரிய தொழிலாள வர்க்க எதிர்ப்பை முன்கூட்டியே நசுக்க முயன்று வரும் ஒரு குற்றகரமான தன்னலக்குழுவால் தலைமை தாங்கப்படுகிறது.

ஈரான் 90 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையையும் ஒரு பெரிய, போர்க்குணமிக்க தொழிலாள வர்க்கத்தையும் கொண்ட ஒரு சிக்கல் வாய்ந்த நாடாகும். ஏகாதிபத்திய தாக்குதல் ஈரானிலும், மத்திய கிழக்கு எங்கிலும், மற்றும் உலகெங்கிலும் பெருந்திரளான மக்களை தீவிரமயப்படுத்தும்.

ஏகாதிபத்தியத்திற்கும் எழுச்சி பெற்றுவரும் மூன்றாம் உலக போருக்கும் எதிரான போராட்டத்திற்கு ஒரு சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டத்தால் உயிரூட்டப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்வது அவசியமாகும்.

விரிவடைந்து வரும் மத்திய கிழக்கு போர் சந்தேகத்திற்கு இடமின்றி அதிக ஆச்சரியங்களையும் அதிர்ச்சிகளையும் உருவாக்கும். ஆனால் ஈரானின் முதலாளித்துவ தேசியவாத ஆட்சி ஆரம்ப தாக்குதலால் தடுமாறியுள்ளது என்பதில் கேள்விக்கு இடமில்லை.

இதற்குக் காரணம், அமெரிக்கா கொடுத்துள்ள இஸ்ரேலிய இராணுவம் கூடுதலான சுடுதிறன் மற்றும் தொழில்நுட்ப நுண்ணறிவு கொண்டிருப்பது அல்ல. மாறாக அது ஈரானிய ஆட்சியின் வர்க்கத் தன்மையில் வேர்களைக் கொண்டுள்ளது. ஈரானிய முதலாளித்துவ வர்க்கம் தொழிலாள வர்க்கத்தின் மீது மரண அச்சத்தில் வாழ்கிறது — எல்லாவற்றிற்கும் மேலாக 1979 புரட்சிக்குப் பிந்தைய காலத்தில் ஈரானின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட அத்தனை சமூக விட்டுக்கொடுப்புகளையும் அது திட்டமிட்டு திரும்பப் பெற்றுள்ளது.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு கூட்டுப் போராட்டத்திற்காக, இஸ்ரேலிய தொழிலாள வர்க்கம் உட்பட மத்திய கிழக்கின் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் —இன அல்லது மத வேறுபாடின்றி — ஒரு வர்க்க அழைப்பை விடுக்க இயல்பாகவே திறனற்ற ஈரானிய ஆட்சி, இடைவிடாத அமெரிக்க அழுத்தத்திற்கு முகம்கொடுக்கும் விதத்தில் தந்திரோபாயங்களை கையாள முனைந்து, மீண்டும் மீண்டும் வாஷிங்டனுடன் ஒரு சமரசத்தை நாடி வருகிறது. தன்னிச்சையாக ஆயுதக் களைவைக் குறைத்து ட்ரம்புடன் ஓர் உடன்படிக்கை செய்துகொள்ள முடியும் என்ற அதன் பிரமையில் —மூல அணுசக்தி உடன்படிக்கையை முறித்த மற்றும் ஈரானை நிர்மூலமாக்க பல சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தியுள்ள அதே ட்ரம்ப்— வாஷிங்டன் மற்றும் டெல் அவிவ் அதற்காக ஏற்படுத்திய பொறிக்குள் அது நுழைந்துள்ளது.

ஈரான் மீதான இஸ்ரேலின் சட்டவிரோத தாக்குதலுக்கும், அதில் ட்ரம்பின் பாத்திரத்திற்கும் ஜனநாயகக் கட்சி அதன் ஆதரவை அறிவித்துள்ளது.

ஞாயிறன்று என்பிசி (NBC) க்கு அளித்த ஒரு நேர்காணலில், ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர் ஆடம் ஷிஃப் (Adam Schiff) ஈரான் மீதான தாக்குதலை ஆமோதித்தார், “ஆகவே நான் அந்த நடவடிக்கைகளை ஆதரிக்கிறேன். இஸ்ரேல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள உதவும் நிர்வாகத்தின் நடவடிக்கைகளை நான் ஆதரிக்கிறேன்.” அமெரிக்க தளங்களுக்கு எதிராக ஈரான் பதிலடி கொடுக்குமானால், “ஃபோர்டோ [யுரேனிய செறிவூட்டல் சுத்திகரிப்பு ஆலை] அல்லது வேறெங்கிலும் சாத்தியமான தாக்குதல்களுக்கு ஈரான் தன்னைத் திறந்து விடும்” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

ஈரான் மீதான தாக்குதல் குறித்து சர்வதேச போலி-இடதுகள் மௌனமாக உள்ளன. ஜனநாயக உரிமைகள் மீதான ட்ரம்பின் தாக்குதலுக்கு எதிராக வாரயிறுதியில் பேரணிகளில் உரையாற்றிய காங்கிரஸ் உறுப்பினர் ரஷிதா த்லைப் (Rashida Tlaib), ஈரான் மீது நடந்து வரும் குண்டுவீச்சு குறித்து குறிப்பிடவும் கூட இல்லை. கிரீஸ் மீது ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்க உதவிய முன்னாள் கிரேக்க நிதி மந்திரி யானிஸ் வருஃபாகிஸ் (Yanis Varoufakis), திங்களன்று ஒரு எக்ஸ் பதிவில் இவ்வாறு எழுதினார், “ ஈரானுடனான போரைப் புறக்கணிக்கவும். ஈரானியர்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள முடியும்.”

தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரமாக அணிதிரட்டுவதே ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்திற்கான ஒரே முற்போக்கான பதிலாகும். ஏகாதிபத்தியத்தை உலகப் போருக்கு உந்தித் தள்ளும் அதே அமைப்புமுறைரீதியான முதலாளித்துவ நெருக்கடிதான் தொழிலாள வர்க்கத்தை பாரிய சமூகப் போராட்டங்களுக்குள் தள்ளுகிறது. வார இறுதியில், ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூகத் திட்டங்கள் மீதான ட்ரம்பின் தாக்குதலுக்கு எதிராக மில்லியன் கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர்.

தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம், ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்துடன் ஐக்கியப்படுத்தப்பட வேண்டும். எவ்வாறிருப்பினும், அத்தகையதொரு இயக்கத்தின் அபிவிருத்தியானது, அது ஒரு சோசலிச வேலைத்திட்டம் மற்றும் ஒரு புரட்சிகரத் தலைமையை ஆயுதபாணியாக்குவதிலேயே தங்கியுள்ளது. உலக சோசலிச வலைத் தளம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அவற்றுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளும் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ளன.

Loading