மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஈரானுக்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க இராணுவம் மத்திய கிழக்கு நோக்கி போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ட்ரூத் சமூகத் தளத்தில், “ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது... அனைவரும் உடனடியாக தெஹ்ரானைவிட்டு வெளியேற்ற வேண்டும்!” என்று பதிவிட்டிருந்தார்.
இந்தச் செய்தியை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே, கனடாவில் நடந்த G7 உச்சிமாநாட்டிலிருந்து ட்ரம்ப் வாஷிங்டன், டி.சி.க்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர், அமெரிக்க தேசிய பாதுகாப்புப் பணியாளர்களை இராணுவ அல்லது அரசியல் நிலைமை குறித்து ஆராயும் சூழ்நிலை அறையில் சந்திக்க உத்தரவிட்டார்.
வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட், “மத்திய கிழக்கின் நிலைமை காரணமாக இரவு உணவிற்குப் பிறகு, ஜனாதிபதி ட்ரம்ப் இன்று மாலை நாட்டுத் தலைவர்களுடன் புறப்படுவார்” என்று கூறினார்.
முன்னதாக, ட்ரம்ப் செய்தியாளர்களிடம், “நான் இங்கிருந்து புறப்பட்டவுடன், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என்று கூறினார்.
ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அழைப்பு விடுக்கும் கூட்டு G7 அறிக்கையில் கையெழுத்திட ட்ரம்ப் மறுத்துள்ளதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த திங்களன்று, USS நிமிட்ஸ் விமானம் தாங்கி போர்க்கப்பல் தாக்குதல் குழு, பசிபிக் பெருங்கடலை விட்டு வெளியேறி மத்திய கிழக்கு நோக்கி பயணித்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நிமிட்ஸ் என்பது நாசகாரிக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் தாக்குதல் குழுவின் ஒரு பகுதியாகும். மேலும் 60 க்கும் மேற்பட்ட விமானங்களையும் 5,000 க்கும் மேற்பட்ட படையினர்களையும் இது கொண்டுள்ளது.
“அமெரிக்கா தனது விமானப் படையை நீடித்து நிலைநிறுத்தக்கூடிய நடவடிக்கைகளுக்காக பெரிதும் வலுப்படுத்தி வருவதை இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன” என்று ராய்ட்டர்ஸ் கருத்து தெரிவித்துள்ளது.
“இரண்டு டசினுக்கும் மேற்பட்ட அமெரிக்க விமானப்படை டேங்கர்களை திடீரென கிழக்கு நோக்கி அனுப்புவது வழக்கம் போல் இல்லை. இது மூலோபாய தயார் நிலையின் தெளிவான சமிக்ஞையாகும்... இந்த நடவடிக்கை அமெரிக்கா விரைவான தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்கிறது என்பதைக் காட்டுகிறது” என்று டயமி பாதுகாப்பு புலனாய்வுத் துறையைச் சேர்ந்த எரிக் ஷூட்டன் கூறியதாக ராய்ட்டர்ஸ் மேற்கோள் காட்டியது.
கடந்த வியாழக்கிழமையிலிருந்து இஸ்ரேல் ஈரான் மீது இடைவிடாமல் குண்டுகளை வீசி வருகிறது. மேலும், அதன் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை அழித்த பிறகு, ஈரானை விட முழுமையான வான் மேலான்மையை அடைந்ததாகக் கூறுகிறது. அமெரிக்காவால் நயவஞ்சகமாக தொடங்கப்பட்ட அணுசக்தி பேச்சுவார்த்தைகளை, தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இஸ்ரேல், ஒரு மூத்த அணுசக்தி பேச்சுவார்த்தையாளர் உட்பட ஈரானிய உயர்மட்ட இராணுவத் தளபதிகள் மற்றும் பொதுமக்களை படுகொலை செய்தது.
அமெரிக்கா மத்திய கிழக்கில் நூற்றுக்கணக்கான விமானங்கள் மற்றும் டசின் கணக்கான போர்க்கப்பல்களுடன் 40,000 க்கும் மேற்பட்ட துருப்புக்களை நிறுத்தியுள்ளது.
முக்கியமான விஷயம் என்னவென்றால், கடந்த மாதம், அமெரிக்கா ஈரானைத் தாக்கும் தூரத்திற்குள் பெரிய பதுங்கு குழிகளை தகர்த்தெறியும் வெடிகுண்டுகளை எடுத்துச் செல்லக்கூடிய B-52 குண்டுவீச்சு விமானங்களை நிறுத்தியது.
கடந்த திங்களன்று இஸ்ரேலிய குண்டுகளும் ஏவுகணைகளும் ஈரானில் பரந்த அளவிலான இலக்குகளைத் தாக்கின. இதில் தெஹ்ரானில் உள்ள ஈரானிய செய்தி நிறுவனமான ISNA வின் செய்தியாளர்கள் நேரடி ஒளிபரப்பில் இருந்தபோது, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரானில் 224 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 1,481 பேர் காயமடைந்துள்ளனர். எவ்வாறிருப்பினும், இந்த புள்ளிவிவரங்கள் பரந்த அளவில் ஒரு குறிப்பிடத்தக்க குறைமதிப்பீடாக பார்க்கப்படுகின்றன.
ட்ரம்பின் பதிவைத் தொடர்ந்து, பரவலான எரிபொருள் பற்றாக்குறை இருந்தபோதிலும் மக்கள் வெளியேற விரைந்ததால் தெஹ்ரானில் தெருக்கள் நெரிசலில் சிக்கின.
கடந்த திங்களன்று, ஈரானின் ஃபோர்டோவில் உள்ள நிலத்தடி ஆழத்திலுள்ள யுரேனியம் செறிவூட்டல் ஆலையைத் தாக்குவதற்கு, அமெரிக்க நிலவறைகளை தகர்க்கும் குண்டுகளைப் பயன்படுத்துவதற்கான மேம்பட்ட திட்டமிடல் குறித்து நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
“கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க இராணுவம் வெள்ளை மாளிகையின் நெருக்கமான கண்காணிப்பின் கீழ், இந்த நடவடிக்கையை மேம்படுத்தியுள்ளது. இந்தப் பயிற்சிகள் ஒரு குண்டுடன் பிரச்சனையைத் தீர்க்காது என்ற முடிவுக்கு இட்டுச் சென்றன. ஃபோர்டோ மீதான எந்தவொரு தாக்குதலும் அலை அலையாக இடம்பெற வேண்டும். B-2 விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஒரே துளையில் குண்டுகளை வீச வேண்டும். மேலும், இந்த நடவடிக்கையை ஒரு அமெரிக்க விமானியும் அவரது குழுவினரும் செயல்படுத்த வேண்டும்” என்று டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
திங்களன்று, முன்னாள் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட், CNN க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில், ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். “இந்த வேலையை, இஸ்ரேலும், அமெரிக்காவும் செய்ய வேண்டும்” என்று கூறிய அவர், அமெரிக்காவிற்கு “மத்திய கிழக்கை மாற்றவும் உலகை செல்வாக்கு செலுத்தவும் விருப்பம் உள்ளது” என்று கூறினார்.
ஈரானுக்கு எதிரான போருக்கு நீண்டகாலமாக வக்காலத்து வாங்கி வரும் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் கடந்த வாரயிறுதியில் கூறுகையில், “இராஜாங்க நடவடிக்கைகள் வெற்றிபெறவில்லை என்றால், இந்த நடவடிக்கை முடிந்ததும், ஈரானில் அவர்களின் அணுசக்தி திட்டம் தொடர்பாக எதுவும் மிச்சமில்லை என்பதை உறுதிப்படுத்த ஜனாதிபதி ட்ரம்பை முழுமையாக ஈடுபடுமாறு வலியுறுத்த இருப்பதாக” தெரிவித்தார். “இஸ்ரேலுடன் பறப்பதாக இருந்தால், இஸ்ரேலுடன் பறந்து செல்லுங்கள்” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் படுகொலையை ஆதரிப்பதாகக் கூறிய இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு ஒரு நேர்காணலில், “இது மோதலை அதிகரிக்காது, ஆனால் அதை முடிவுக்குக் கொண்டுவரும்” என்றார்.
திங்களன்று ஒரு தனி அறிக்கையில், இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச், ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்காவின் முழு ஆதரவையும் மீண்டும் வலியுறுத்தி, “ட்ரம்ப் எங்களை நிறுத்துமாறு கூறவில்லை” என்று கூறினார்.
கார்டியன் பேட்டி கண்ட ஒரு மருத்துவரின் வார்த்தைகளில், ஈரானின் தெஹ்ரானில் உள்ள இமாம் கொமெய்னி மருத்துவமனை “இரத்தக் குளமாக” மாற்றப்பட்டுள்ளது. “குழப்பம் மற்றும் துக்கமடைந்த குடும்ப உறுப்பினர்களின் அலறல்களால் நாங்கள் மூழ்கிவிட்டோம். உயிருக்கு ஆபத்தான காயங்களுடனும், சிறிய காயங்களுடனும் மற்றும் இறந்த உடல்களுடனும் கூட டசின் கணக்கானவர்கள் இங்கு கொண்டு வரப்பட்டனர்” என்று அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “நான் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் முதியவர்களைக் கண்டேன். தாய்மார்கள் இரத்தம் தோய்ந்து, தங்கள் குழந்தைகளுடன் குண்டு சிதறல்களால் காயமடைந்து ஓடிக்கொண்டிருந்தனர். எங்களுக்கு சாப்பிடவோ குடிக்கவோ நேரமில்லை. இன்று காலைக்குப் பிறகு, மேலும் பல உடல்கள் உள்ளே வரக்கூடும் என்று நான் அஞ்சுகிறேன்” என்றார்.
கடந்த திங்களன்று பிரசுரிக்கப்பட்ட ஒரு அறிக்கையில், மேரிலாந்தின் கேம்ப் டேவிட்டில் இராணுவத் தளபதிகளை ட்ரம்ப் சந்தித்த போது, இஸ்ரேலிய திட்டங்கள் குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டதாக NBC செய்திகள் தெரிவித்தன. திங்களன்று, ட்ரம்ப் மற்றும் நெதன்யாகுக்கு இடையிலான ஒரு கலந்துரையாடலில் ஒரு முக்கியமான திருப்புமுனை ஏற்பட்டது, அதில் “இஸ்ரேல் தாக்கப் போகிறது என்று ட்ரம்ப் உறுதியாக நம்பினார். மேலும் இந்த தாக்குதலை ஆதரிக்க கூடுதல் திறன்களைப் பயன்படுத்தத் தொடங்கினார்” என்று NBC தெரிவித்தது.
மேலும், “கடந்த திங்களன்று இந்த உரையாடலுக்குப் பின்னர் உடனடியாக, தெஹ்ரானில் இருந்து ஒரு எதிர்த் தாக்குதல் ஏற்பட்டால் இஸ்ரேலைப் பாதுகாக்க உதவும் வகையில், ஒரு கடற்படை நாசகாரி கப்பலை அனுப்புமாறு பென்டகன் ஐரோப்பிய கட்டளை மையத்துக்கு உத்தரவிட்டது. மேலும் இரண்டு கப்பல்கள் ஏற்கனவே அங்குள்ள ஒரு விமானம் தாங்கி கப்பலில் உள்ள தாக்குதல் குழுவுடன் இணைந்து கொள்ள உள்ளது” என்று NBC தெரிவித்தது.
இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு முந்தைய நாட்களில், அமெரிக்கா மத்திய கிழக்கிற்கு ஆயுதங்களை திசைதிருப்பத் தொடங்கியது. உக்ரேனிய பிரதம மந்திரி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, கடந்த வாரம் ஆரம்பத்தில் உக்ரேனுக்குச் செல்லவிருந்த 20,000 அமெரிக்க ட்ரோன் எதிர்ப்பு ஏவுகணைகள் மத்திய கிழக்கிற்கு திருப்பி விடப்பட்டதாக கூறினார்.