இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஸ்ராலினிஸ்டுகள் தலைமையிலான இந்திய தொழிற்சங்க மையம் (CITU), சாம்சங் இந்தியாவின் தமிழ்நாடு மின்சார உபகரண ஆலையில் உள்ள தொழிலாளர்கள் மீது மற்றொரு விற்றுத்தள்ளும் ஒப்பந்தத்தை ஆணையிட்டு, அல்லது மேலிருந்து வந்த எதேச்சதிகராமான உத்தரவின் மூலம் திணித்துள்ளது.
சாம்சங் தொழிலாளர்களின் போர்க்குணமிக்க உதாரணம், பரந்த தொழிலாளர் எதிர்ப்பை ஊக்குவிப்பதோடு முதலீட்டாளர்களை பீதிக்குள்ளாக்கும் என்ற அச்சத்தில், வறிய மட்ட ஊதியங்கள் மற்றும் கொடூரமான வேலை நிலைமைகளுக்கு எதிரான சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்தை கசப்புடன் எதிர்த்த திமுக தலைமையிலான தமிழ்நாடு மாநில அரசாங்கத்தின் அழுத்தத்தின் கீழேயே இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.
CITU, திமுகவின் நெருங்கிய கூட்டாளியான ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்ந்ததாகும்.
மே 19 அன்று திமுக தொழிலாளர் அமைச்சர் சி.வி. கணேசன் முன்னிலையில் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தில், தொழிலாளர்களின் கிட்டத்தட்ட அனைத்து கோரிக்கைகளும் புறக்கணிக்கப்படுகின்றன. நீண்ட வேலை நேரங்கள் மற்றும் தண்டனை பாணியிலான வேலை துரிதப்படுத்தலுக்கு இது எந்த நிவாரணத்தையும் அளிக்காது. நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்ட 25 போர்க்குணமிக்க தொழிலாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் மீது மேலும் ஒழுங்கு (disciplinary) நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சுறுத்தலும் உள்ளது.
தொடர்ந்து தனது வார்த்தைகளில் இருந்து பின்வாங்கி வரும் சாம்சங் நிர்வாகம், அடுத்த மூன்று ஆண்டுகளில் நிரந்தரத் தொழிலாளர்களின் ஊதியத்தை மாதத்திற்கு 18,000 ரூபாய் (US $210) உயர்த்துவதாக வெளிப்படையாக உறுதியளித்துள்ளது. அதாவது, 2025-26 ஆம் ஆண்டில் 9,000 ($105) ரூபா சம்பளம் உயர்த்தப்படும். 2026-27 மற்றும் 2027-28 ஆம் ஆண்டுகளில் ஆண்டுக்கு 4,500 ($52.50) ரூபா படி மிகுதி அதிகரிப்பு வழங்கப்படும். ஆலையில் அவர்கள் பணிபுரியும் ஆண்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஊழியர்களுக்கு ரூபா 1,000-4,000 ($12 முதல் $48 வரை) வரை மேலும் மாத சம்பள உயர்வு வழங்கப்படும். இருப்பினும், 3 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் வேலை செய்த தொழிலாளர்களுக்கு கூடுதல் உயர்வு எதுவும் கிடைக்காது.
இந்த ஒப்பந்தம் சாம்சங் தொழிலாளர்களை கடுமையாக கட்டுப்படுத்துகிறது. சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் (SIWU) உறுப்பினர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் மட்டுமே 'சட்ட நடைமுறைகளை' பின்பற்ற வேண்டும் என்று CITU அறிவுறுத்தியுள்ளது. அதாவது அவர்கள் சீரழிந்துபோன CITU அதிகாரிகளிடம் மட்டுமே புகார் செய்ய முடியும். தொழிலாளர்கள் உள்ளிருப்பு மற்றும் வேலைநிறுத்தங்கள் போன்ற நேரடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது வெளிப்படையாக தடைசெய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் தலைவர்களை போல் அன்றி, நிறுவன அதிகாரிகளைப் போலவே செயல்படும் CITU நிர்வாகிகள், மாநில தொழிலாளர் சட்டங்களின் கீழ் எந்தவொரு வேலைத்தள போராட்ட நடவடிக்கையும் சட்டவிரோதமானது என்று கூறியுள்ளனர். பிரதானமாக தொழிலாளர்கள் நிறுவனத்தின் ஆத்திரமூட்டல்களுக்கு பதிலளித்தால் அவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளனர்.
தொழிலாளர்களின் சார்பாக சிஐடியு தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஏ. சௌந்தரராஜன் மற்றும் சிஐடியு மாநிலச் செயலாளர் இ. முத்துக்குமார் ஆகியோர் கையெழுத்திட்டுள்ள இந்த ஒப்பந்தம் குறித்து, தொழிலாளர்களிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை.
கடந்த செப்டம்பர்-அக்டோபர் மாதங்களிலும், மீண்டும் பெப்ரவரி-மார்ச் மாதங்களிலும் இரண்டு முறை வாரக்கணக்கான வேலைநிறுத்தங்களை நடத்தி, நிர்வாகத்தால் அரசு ஆதரவுடன் நடத்தப்பட்ட கடுமையான துன்புறுத்தல் பிரச்சாரத்தைத் தாங்கிக் கொண்ட போதிலும், தொழிலாளர்கள் ஒப்பந்தம் தொடர்பாக வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை.
2024 ஜூன்/ஜூலயில் தொழிலாளர்கள் தங்கள் சொந்த முயற்சியால் உருவாக்கிய SIWU-வின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய மாநில CITU தலைவர்கள், தாங்கள் பேச்சுவார்த்தை நடத்திய ஊதிய ஒப்பந்தம் குறித்து ஊழியர்களுக்கு முறையாகத் தெரிவிக்கக் கூடத் தவறிவிட்டனர்.
அதை அவர்களுக்கு விநியோகிப்பதற்கு பதிலாக, முத்துக்குமார் அதன் சிதைந்த படம் ஒன்றை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் மாநில பிரிவின் எக்ஸ் கணக்கில் பதிவிட்டார்.
தென் கொரியாவை தளமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனத்தின் நிர்வாகத்திற்கும் CITU க்கும் இடையே கடந்த மாதம் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக நடந்து வரும் போராட்டம் முழுவதும் ஸ்ராலினிச தொழிலாளர் கூட்டமைப்பின் உயர் அதிகாரிகள் செயல்பட்ட எதேச்சதிகாரமான விதத்துடன் முற்றிலும் ஒத்துப்போகிறது.
ஆலையில் உள்ள 1,800 நிரந்தரத் தொழிலாளர்களில் சுமார் 500 பேர் ஒரு மாத காலமாக நடத்தி வந்த வேலைநிறுத்தத்தை திடீரென நிறுத்தியதன் பின்னரே, அரச அதிகாரத்தின் மூலம் அவர்கள் ஒரு விற்றுத்தள்ளும் ஒப்பந்தத்தை திணித்தனர். SIWU இன் பல தொழிலாளர் தலைவர்களை நிர்வாகம் இடைநீக்கம் செய்ததைத் தொடர்ந்தே பெப்ரவரி 5 அன்று இந்த வேலை நிறுத்தம் உள்ளிருப்பு வேலைநிறுத்தமாக தன்னிச்சையாக வெடித்தது. தொடர்ச்சியான நிர்வாக துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாகவும் மற்றும் ஆலையின் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் போராட்டத்திற்கு CITU எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாகவும், ஐந்து மாதங்களில் சாம்சங்கிற்கு எதிரான இரண்டாவது வேலைநிறுத்தத்தின் போது பல தொழிற்சங்க ஆதரவாளர்கள் தொடர்ந்து பணியாற்றினர்.
ஸ்ரீபெரும்புதூர்-காஞ்சிபுரம் தொழில்துறை பகுதி முழுவதும் சாம்சங் வேலைநிறுத்தக்காரர்களுக்கு ஆதரவாக ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு தொழிலாளர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வந்த நிலையிலேயே, இந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் ஆகியவை தமிழ்நாட்டின் தலைநகரம் மற்றும் இந்தியாவின் ஐந்தாவது பெரிய நகரமான சென்னையின் புறநகர்களாகும்.
சிபிஎம்மின் ஆங்கில வார இதழான பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் ஒரு கட்டுரை, சாம்சங் தமிழ்நாடு ஆலையில் உள்ள கொடூரமான வேலை நிலைமைகள் குறித்து வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது - சிஐடியு ஊக்குவித்த ஒப்பந்தம் அவற்றில் எதையும் தணிக்கப் போவதில்லை.
அது கூறுவதன் படி, 'ஒவ்வொரு தயாரிப்பையும் முடிக்க தொழிலாளர்கள் குறுகிய கால நேரமாக 10-15 வினாடிகள் மட்டுமே கொண்டுள்ளனதுடன் பெரும்பாலும் நான்கு முதல் ஐந்து மணிநேரத் தொடர்ச்சியாக வேலை செய்கிறார்கள். ஒருங்கூட்டு வரியில் சில பணிகள் நான்கு வினாடிகளுக்குள் முடிக்கப்பட வேண்டும். அதிகாரப்பூர்வ இடைவேளை நேரம் 10 நிமிடங்கள் என்றாலும், தொழிலாளர்கள் ஒரு நிமிடம் முன்னதாகவே திரும்பி வர வேண்டும். இடைவேளை தொடங்கிய ஒரு நிமிடத்திற்குப் பிறகே வெளியேறலாம் என்பதால், அவர்கள் எட்டு நிமிடங்கள் மட்டுமே இடைவேளை பெறுகிறார்கள்'. (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது)
அறிக்கைகளின்படி, இந்த மாதம் முதல், ஆலையில் வேலை நாள் ஏற்கனவே கடினமான 11.5 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக நீட்டிக்கப்படும், (11.5 மணிநேர வேலை மற்றும் 30 நிமிட ஊதியம் இல்லாத இடைவேளை.)
வலதுசாரி, தமிழ் பேரினவாத திமுக அரசாங்கத்தின் ஆதரவு தனக்கு இருப்பதாக நம்பும் சாம்சங், தொழிலாளர் விரோத ஆத்திரமூட்டல்களை ஒன்றன்பின் ஒன்றாக அதிகரித்து வருகிறது. நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு கைப்பொம்மை சங்கமான சாம்சங் ஊழியர் நல கூட்டமைப்பில் (SEWF) சேருமாறு மேலாளர்கள் தொழிலாளர்களை ஊக்குவிக்க மேற்கொள்ளும் முயற்சியில் 'மறு பயிற்சி' அமர்வுகளுக்கு செல்ல அவர்களை கட்டாயப்படுத்துவதும், போர்க்குணமிக்க தொழிலாளர்களை மற்ற கடினமான வேலைகளுக்கு மாற்றுவதும் இதில் அடங்கும்.
ஏப்ரல் மாதத்தில், SEWF-ஐ தங்கள் 'பிரதிநிதியாக' ஏற்றுக்கொண்ட சுமார் 500 தொழிலாளர்களுக்கு, அந்த கைக்கூலி அமைப்புடன் 'பேச்சுவார்த்தை' நடத்திய ஒப்பந்தத்தின் கீழ், சம்பள உயர்வு வழங்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்தது. SIWU-வில் உறுப்பினர்களாக இருந்து வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் பங்கேற்ற 1,300 நிரந்தர தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு மறுக்கப்பட்டது.
தொழிலாளர்களிடையே வெடிக்கும் கோபத்தை அறிந்திருந்தும், முந்தைய இரண்டு வேலைநிறுத்தங்களை நாசப்படுத்தியதால், அதன் அனைத்து நம்பகத்தன்மையையும் இழந்து வருவதாக அஞ்சி, CITU வின் முத்துக்குமார், SIWU தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கோரியும், இடைநீக்கம் செய்யப்பட்ட 25 SIWU உறுப்பினர்களை உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்தக் கோரியும் சாம்சங் நிர்வாகத்திற்கு 14 நாள் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டார். இருப்பினும், ஏப்ரல் 16 வேலைநிறுத்த காலக்கெடுவில் CITU எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இது வெறும் ஏமாற்றமாக மாறியது.
மே 13 முதல், சுமார் 900 தொழிலாளர்கள் தொடர்ச்சியான போராட்டங்களைத் தொடங்கி, ஊதிய உயர்வு மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட 25 தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கான கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தினர். இந்தப் போராட்டங்களின் ஒரு பகுதியாக, மே 14 அன்று காஞ்சிபுரத்தில் சாம்சங் தொழிலாளர்களுக்கான ஒரு கூட்டத்தை CITU திட்டமிட்டது. இருப்பினும், காஞ்சிபுரத்தில் உள்ள பொலிசார், அத்தகைய கூட்டம் இந்தத் தொழில்துறைப் பகுதியில் உள்ள மற்ற தொழிலாளர்களை ஈர்க்கும் ஒரு காந்தமாக மாறக்கூடும் என்ற அச்சத்தில், பேரணிக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.
இந்தச் சூழலில்தான் மே 19 அன்று CITU சாம்சங்குடன் 'சம்பள ஒப்பந்தத்தை' எட்டியது.
இன்னும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள 25 தொழிலாளர்கள் குறித்து ஒரு நிருபர் கேட்டபோது, திமுக தொழிலாளர் துறை அமைச்சர்தான் பதிலளித்தார், அங்கிருந்த CITU அதிகாரிகள் பதிலளிக்கவில்லை. இந்த ஒப்பந்தம் கண்டிப்பாக ஊதிய உயர்வுகளுக்கு மட்டுமே என்றும், இடைநீக்கம் செய்யப்பட்ட 25 தொழிலாளர்களின் கதி எதிர்காலத்தில் குறிப்பிடப்படாத நேரத்தில் தீர்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஸ்ராலினிச சிஐடியு, திமுக அரசாங்கத்தின் துணைவராகச் செயல்படுவது ஆச்சரியமல்ல. சிஐடியுவின் அரசியல் தாய் கட்சியான சிபிஎம், திமுகவுடன் நெருக்கமாக கூட்டணி வைத்துள்ளதுடன் மாநில மற்றும் தேசிய தேர்தல்களில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான தேர்தல் கூட்டணிகளில் பங்கேற்ப்பதோடு அதன் தேர்தல் பிரச்சாரங்களை ஆதரிக்க மாநில ஆளும் கட்சியிடமிருந்து பெருமளவில் நிதியைப் பெறுகிறது. இன்னும் அடிப்படையில், 'வணிக நட்பு' மாநிலம் என்ற தமிழ்நாட்டின் நற்பெயரைப் பாதுகாக்க 'தொழில்துறை அமைதி' பராமரிக்கப்பட வேண்டும் என்பதில் ஸ்ராலினிச சிபிஎம் மற்றும் சிஐடியு உடன்படுகின்றன.
இந்தக் கசப்பான அனுபவத்திலிருந்து சாம்சங் தொழிலாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் CITUவில் இருந்து தீர்க்கமாக விலகிக்கொண்டு, ஒரு சுயாதீனமான தொழிலாளர் நடவடிக்கைக் குழுவை நிறுவுவதன் மூலம் தங்கள் போராட்டத்தைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவர வேண்டும். மேலும், CITU-விடமிருந்து SIWU-வின் கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்ற வேண்டும். அத்தகைய குழு நிரந்தர, ஒப்பந்த, தற்காலிக தொழிலாளர்களை ஒன்றிணைத்து, இந்தியாவிலும் உலகளவிலும் உள்ள சாம்சங் தொழிலாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும். சாம்சங் தொழிலாளர்கள் ஸ்ரீபெரும்புதூர்-காஞ்சிபுரம் தொழில்துறை பகுதி முழுவதும் மற்றும் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் உள்ள தங்கள் சகோதர சகோதரி தொழிலாளர்களை அணுகி, தங்கள் முதலாளிகளுக்கு எதிராக ஐக்கியத்தை உருவாக்கவும், சிக்கன நடவடிக்கை, தனியார்மயமாக்கல், ஒப்பந்தத் தொழிலாளர், வகுப்புவாத சர்வாதிகாரம் மற்றும் போர் வெறிக்கு எதிராக ஒரு தொழிலாள வர்க்க எதிர் தாக்குதலை கட்டியெழுப்பவும் வேண்டும்.
வர்க்கப் போராட்டம் மற்றும் சோசலிச சர்வதேசவாதத்தில் வேரூன்றிய அத்தகைய இயக்கம் மட்டுமே, சாம்சங் போன்ற நாடுகடந்த நிறுவனங்களின் கொடூரமான சுரண்டலை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.
மேலும் படிக்க
- சாம்சங் இந்தியா வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர ஸ்ராலினிஸ்டுகள் தலைமையிலான CITU விடுத்துள்ள உத்தரவுகள், இடைநீக்கம் செய்யப்பட்ட 23 தொழிலாளர்களை பரிதாப நிலைக்குத் தள்ளியுள்ளன
- இந்திய சாம்சங் தொழிலாளர்கள் பல்தேசிய இராட்சதனின் எதேச்சதிகார இடைநீக்க பிரச்சாரத்துக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்கின்றனர்
- சாம்சங் தொழிலாளர்களுக்கான முன்னோக்கிய பாதை
- சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் தமது 37 நாள் வேலைநிறுத்தத்தை CITU காட்டிக்கொடுத்தது பற்றி பேசுகின்றனர்