முன்னோக்கு

அமெரிக்காவில் சர்வாதிகாரத்திற்கு எதிரான பாரிய போராட்டங்களும் ட்ரம்பின் சதித் திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கான முன்னோக்கிய பாதையும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

தென்மேற்கு டெட்ராய்டில் “மன்னர்கள் வேண்டாம்” (No Kings) என்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பாளர்கள். [Photo: WSWS]

ஜூன் 14, 2025 என்பது அமெரிக்காவில் அரசியல் நெருக்கடியின் அபிவிருத்தியில் ஒரு முக்கிய புள்ளியாகும். இது 1861-1865 உள்நாட்டுப் போருக்குப் பிறகு மிகப்பெரியதாகும். ட்ரம்ப் நிர்வாகத்தின் வலதுசாரிக் கொள்கைகள் மற்றும் சர்வாதிகார முறைகளுக்கு எதிராக மில்லியன் கணக்கானவர்கள் 2,000 க்கும் மேற்பட்ட இடங்களிலும் 50 மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டம் செய்தாலும், மக்கள் எதிர்ப்பின் இந்த வெளிப்பாட்டிற்கு எதிராக பலத்தை வெளிப்படுத்தும் விதமாக, அமெரிக்க ஜனாதிபதி டாங்கிகள் மற்றும் ஆயிரக்கணக்கான துருப்புக்களை அமெரிக்க தலைநகருக்கு கொண்டு வந்தார்.

ட்ரம்புக்கு எதிரான போராட்டங்களின் அளவு மற்றும் நோக்கம், அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய, ஒரு நாள் ஆர்ப்பாட்டங்களில் ஒன்றாக அவற்றை வகைப்படுத்துகின்றன. ஆர்ப்பாட்டங்களில் மக்களின் மொத்த பங்கேற்பு 5 முதல் 11 மில்லியன் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த உயர்ந்த எண்ணிக்கை அமெரிக்காவின் மொத்த வயதுவந்த மக்கள்தொகையில் சுமார் 4 சதவீதத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது.

போராட்டங்களின் அளவு மிகவும் குறிப்பிடத்தக்கது. மேலும், அவை அமெரிக்க அரசியலின் எந்தவொரு அதிகாரப்பூர்வ நிறுவனங்களாலும் அங்கீகரிக்கப்படவில்லை அல்லது ஊக்குவிக்கப்படவில்லை, மேலும் தொழிற்சங்க எந்திரத்தால் பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டன அல்லது புறக்கணிக்கப்பட்டன.

நியூ யோர்க் நகரம், சிக்காகோ, லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பிற முக்கிய பெருநகரங்களில் நூறாயிரக்கணக்கானவர்கள் அணிவகுத்துச் சென்றனர். மூன்றாம் ஜோர்ஜ் மன்னருக்கு எதிராக முதலாம் அமெரிக்கப் புரட்சியைப் பெற்றெடுத்த பொஸ்டனில், ஒரு மில்லியன் மக்கள் வரை பங்கேற்றனர். மிகப்பெரிய “மன்னர்கள் வேண்டாம்” (No Kings) என்ற அணிவகுப்பு ஒரு பெரிய ஓரினச்சேர்க்கையாளர் அணிவகுப்புடன் இணைந்துகொண்டது. சிறிய நகரங்கள் மற்றும் நகரங்களிலும் குறிப்பிடத்தக்க போராட்டங்கள் நடந்தன. இதில் ட்ரம்பிற்கு பெரிதும் வாக்களித்த பலர் உட்பட, இப்போது ஆயிரக்கணக்கானோர் அவருக்கு எதிராக வீதிகளில் இறங்கினர்.

ஆர்ப்பாட்டங்களின் “மன்னர்கள் வேண்டாம்” என்ற கருத்துரு பங்கேற்பாளர்களிடையே பரவலாக எதிரொலித்தது. அவர்களில் பலர் அமெரிக்க புரட்சியைக் குறிப்பிட்டும், அரியணையில் அமர்ந்து ஒரு அரை-முடியாட்சி சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான ட்ரம்பின் முனைவைக் கண்டித்தும் கையால் தயாரிக்கப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

ஆரப்பாட்டங்களில் இரண்டு பெருநிறுவன கட்சிகள் மீதும் பரந்த விரோத மனோநிலை இருந்தது. ட்ரம்பும் குடியரசுக் கட்சியினரும் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அவர்களின் கொடூரமான தாக்குதல்களுக்காக வெறுப்புக்கு உள்ளாகினர். அதேவேளையில் ஜனநாயகக் கட்சியினர் எந்தவொரு தீவிர எதிர்ப்பையும் முன்னெடுக்க மறுத்ததற்காகவும் காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு அவர்களின் உற்சாகமான ஆதரவுக்காகவும் வெறுக்கப்பட்டனர்.

ஆர்ப்பாட்டங்களின் அளவு ஜனநாயகக் கட்சி மற்றும் அரசியல் ஸ்தாபனத்திற்குள் தீவிர பதட்டத்திற்கு ஒரு காரணமாக இருந்தது. செய்தி ஊடகங்கள் கிட்டத்தட்ட இந்த நிகழ்வை இருட்டடிப்பு செய்தது. நியூ யோர்க் டைம்ஸ் அதன் அச்சுப்பதிப்பின் முதல் பக்கத்தில் ஒரு கட்டுரையை வெளியிட்ட அதேவேளை, ஆர்ப்பாட்டங்கள் குறித்த எந்தவொரு குறிப்பையும் அவை நடந்த 24 மணி நேரத்திற்குள் நீக்கி, ஒட்டுமொத்த செய்தி ஊடகங்களுக்கும் தொனியை அமைத்துக் கொடுத்தது.

கட்சியின் “இடது” பிரிவு என்றழைக்கப்படுவது உட்பட முக்கிய ஜனநாயகக் கட்சியினர் இந்த போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெர்மான்ட்டின் ஸ்டோவில் வெறும் 500 பேர் மட்டுமே கலந்து கொண்ட பேரணியில் செனட்டர் பேர்னி சாண்டர்ஸ் உரையாற்றினார். இவர், முடிந்தவரை குறைந்த வருகை கொண்ட இடத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பது தெளிவாகிறது. அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளின் (DSA) ஒரு அங்கத்தவரான பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்ட்டெஸ், ஜூன் 24 அன்று நியூ யோர்க் நகர மேயர் பதவிக்கான ஜனநாயகக் கட்சி முதனிலைத் தேர்தலில் போட்டியிடும் சக DSA அங்கத்தவர் ஜோஹ்ரான் மம்தானிக்காக, நிதி திரட்டும் நிகழ்ச்சியில் சனிக்கிழமை செலவிட்டார்.

ஆர்ப்பாட்டத்துக்கு பெருந்திரளான மக்கள் திரண்டு வந்த நிலையில், அதே நாளில் வாஷிங்டன் டி.சி.யில் நடத்தப்பட்ட ட்ரம்பின் இராணுவ அணிவகுப்பு ஒரு பரிதாபகரமான தோல்வியாக இருந்தது. 6,000 சிப்பாய்கள், நூற்றுக்கணக்கான டாங்கிகள், கவச வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், அத்துடன் ஆயுதத் தொழில்துறை மற்றும் பெருநிறுவனங்களின் பெரும் நிதியுதவிகள் அணிதிரட்டப்பட்ட போதிலும், இந்த நிகழ்வு அமெரிக்க மக்களை அச்சுறுத்துவதில் தோல்வியடைந்தது.

20,000 க்கும் குறைவான மக்கள் மட்டுமே கலந்து கொண்டதாக மதிப்பிடப்பட்ட இந்த சிறிய எண்ணிக்கையும், உற்சாகமின்மையும், ட்ரம்ப் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதையும், பரந்த பெரும்பான்மை மக்களிடையே அவர் தூண்டிவிடும் பரவலான வெறுப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டியது.

வெள்ளை மாளிகை அருகே ஒரு சிறப்பு மேடையிலிருந்து ட்ரம்ப் உரையாற்றினார். ஜனவரி 6, 2021 அன்று, காங்கிரஸ் கட்டிடமான கேபிடோலை தாக்க ட்ரம்ப் அவரது பாசிச குண்டர்களை அணிதிரட்டிய இடத்தில் இருந்து ஒரு சில நூறு கஜ தூரத்தில் இந்த மேடை இருந்தது. கூட்டம் மிகவும் குறைவாக இருந்ததால், அமெரிக்க ஜனாதிபதியின் எதிர்மறையான பிம்பத்தை அறிந்திருந்த அவர், எட்டு நிமிடங்கள் மட்டுமே பேசி அமர்ந்தார்.

சனிக்கிழமையன்று தீவிர வலதுசாரி சக்திகளால் நடத்தப்பட்ட தொடர்ச்சியான வன்முறைத் தாக்குதல்களில் பாசிச ஜனாதிபதிக்கான உண்மையான அடித்தளம் வெளிப்பட்டது.

மினசோட்டாவில், கருக்கலைப்பு எதிர்ப்பு வெறியர் ஒருவர், ஒரு மாநில சட்டமன்ற பெண் உறுப்பினரையும் அவரது கணவரையும் படுகொலை செய்தார். அதே நேரத்தில் மற்றொரு சட்டமன்ற உறுப்பினரையும் அவரது மனைவியையும் சுட்டுக் கொன்றார். வேர்ஜினியாவின் கல்பெப்பரில், சார்லோட்டஸ்வில்லில் 2017 நவ-நாஜிக்களின் தாக்குதலைத் தூண்டும் வகையில், ஒரு ஓட்டுநர் போராட்டக்காரர்களின் ஒரு குழு மீது அவரது காரை மோதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லொஸ் ஏஞ்சல்ஸில், புலம்பெயர்வு மற்றும் குடியேற்ற அமலாக்கத்துறையினரின் (ICE) சோதனைகள் பாரிய சீற்றத்தைத் தூண்டிய இடத்தில், “மன்னர்கள் வேண்டாம்” ஆர்ப்பாட்டங்கள், ட்ரம்ப்பால் நிறுத்தப்பட்ட தேசிய காவலர் மற்றும் கடற்படை பிரிவுகளால் சுற்றி வளைக்கப்பட்டன. ஆனால் பிற்பகலில், ஜனநாயகக் கட்சியின் மேயர் கரேன் பாஸின் கீழ் போலீசார் கூட்டாட்சி கட்டிடத்திற்கு வெளியே போராட்டக்காரர்களை ஸ்டன் கையெறி குண்டுகள், ரப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் தாக்கினர். அதில் குறைந்தது ஆறு பேர் காயமடைந்தனர் மற்றும் டசின் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

போராட்டங்களுக்கு ட்ரம்பின் உடனடி பதில், ட்ரூத் சமூகத் தளத்தில் ஒரு பாசிச வசைபாடலை வெளியிட்டதாகும். அதில், “வரலாற்றில் மிகப்பெரிய அளவில் சட்டவிரோத வெளிநாட்டினரை நாடு கடத்தும் நடவடிக்கையை” மேற்கொள்ள ICE-க்கு உத்தரவிட்டதாகும். புலம்பெயர்வு மற்றும் குடியேற்ற அமலாக்கத்துறை முகமைகள் “குற்றங்கள் நிறைந்த மற்றும் கொலைகார உள் நகரங்கள்” மீது கவனம் செலுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்த அவர், “வேலையை செய்து முடி!” என்ற பகிரங்க அழைப்பையும் விடுத்தார். இந்த அறிக்கை புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு போர்ப் பிரகடனம் என்பதோடு, சர்வாதிகாரத்தை நோக்கிய ட்ரம்பின் முனைவை நடைமுறைப்படுத்த அரசின் ஒடுக்குமுறை எந்திரத்திற்கு ஒரு நேரடி விண்ணப்பமும் ஆகும்.

ஜூன் 14 அன்று மில்லியன் கணக்கான மக்கள் முக்கியமான அரசியல் அனுபவங்களைப் பெற்றனர். ட்ரம்ப் சர்வ வல்லமை படைத்தவர், பரவலாக மக்கள் செல்வாக்கைப் பெற்றவர், அவரை தோற்கடிக்கப்பது ஒருபுறம் இருக்க, எதிர்க்கப்பட முடியாதவர் என்று ஜனநாயகக் கட்சி, பெருநிறுவன ஊடகங்கள் மற்றும் தொழிற்சங்கங்களால் பரப்பப்பட்ட வாதங்களுக்கு, இந்த ஆர்ப்பாட்டங்கள் ஒரு புறநிலை பிரதிபலிப்பாக இருந்தன. பேரணிகள் பற்றிய எந்தவொரு அறிக்கையையும் அல்லது பகுப்பாய்வையும் ஊடகங்கள் விரைவாக கைவிட்டாலும், உழைக்கும் மக்களும் இளைஞர்களும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் உண்மையிலேயே அர்ப்பணிப்புடன் உள்ள அனைவரும், இந்த நாளின் படிப்பினைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

இந்த ஆர்ப்பாட்டங்கள் ட்ரம்ப் நிர்வாகத்தை மட்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கவில்லை, மாறாக குடியரசுக் கட்சியைப் போலவே ஆளும் தன்னலக்குழுக்களின் ஒரு கன்னையாகவும், பெயரளவிலான எதிர்க்கட்சியாகவும் இருந்துவரும் ஜனநாயகக் கட்சியையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜனநாயகக் கட்சியினரும் DSA போன்ற போலி-இடதுகளில் உள்ள அவர்களின் அரசியல் அனுதாபிகளும் அவநம்பிக்கையையும் ஊக்கமின்மையையும் பரப்புகின்றனர். ஏனென்றால், அவர்கள் ட்ரம்பின் பாசிச தாக்குதல்களைக் காட்டிலும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கம் வெடிப்பதைக் கண்டு மிகவும் பீதியடைந்துள்ளனர்.

போராட்டத்தில் அணிவகுத்துச் சென்ற மில்லியன் கணக்கான மக்கள், தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்த அடையாள அடிப்படையிலான முழக்கங்களையோ அல்லது இனம், பாலினம் மற்றும் பாலியல் நோக்குநிலையைப் பயன்படுத்துவதையோ ஏற்கவில்லை. தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளில் ஒன்றான புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பு உட்பட, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பரந்த கோரிக்கைகளை அவர்கள் முன்னெடுத்து வந்தனர்.

ட்ரம்ப்பின் சதித்திட்டம் ஒரு நாள் நிகழ்வு அல்ல. மாறாக, அமெரிக்க ஜனநாயகத்தின் நீடித்த சீரழிவின் உச்சக்கட்டமாகும். வாட்டர்கேட் ஊழலில் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சனின் சதி மற்றும் நிர்வாக அதிகாரத்தின் மீதான அரசியலமைப்பு கட்டுப்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்தவுடன், அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அரை நூற்றாண்டு ஆகிறது. அப்போதும் கூட, நிக்சன் பதவி நீக்க அச்சுறுத்தலின் பேரில் மட்டுமே ராஜினாமா செய்தார்.

நிக்சன் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அபிவிருத்தியில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஆகஸ்ட் 1971 இல் டாலர்-தங்க மாற்று விகிதத்தின் சரிவால் நிரூபிக்கப்பட்டபடி, அமெரிக்கா உலகப் பொருளாதாரத்தில் அதன் மேலாதிக்க நிலையை இழந்து கொண்டிருந்தது. மேலும், தெற்கு வியட்நாமில் அமெரிக்காவின் கைப்பாவை ஆட்சியின் அவமானகரமான வீழ்ச்சியில் அதன் மோசமான இராணுவ தோல்வியையும் சந்தித்தது.

ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சியும் அதன் உலக அந்தஸ்தின் அரிப்பும் மாற்றவியலாதவையாக உள்ளன. அமெரிக்க ஆளும் உயரடுக்கு ரஷ்யா, ஈரான், சீனா அல்லது ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள முன்னாள் அமெரிக்க கூட்டாளிகளுக்கு எதிராக இயக்கப்படும் ஏகாதிபத்தியப் போரைத் தவிர வேறு வழியைக் காணவில்லை. ட்ரம்ப் அவரது வரிவிதிப்புப் போரைத் தொடங்கியதில் எடுத்துக்காட்டியதைப் போல, உலகின் ஒவ்வொரு நாடும் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு இலக்காகும்.

இத்தகைய கொள்கைகளை ஜனநாயக முறையில் செயல்படுத்தப்பட முடியாது. அமெரிக்க மக்களின் பரந்த பெரும்பான்மையினர் போரை எதிர்க்கின்றனர் என்பதோடு, ட்ரம்ப் எத்தனை அணிவகுப்புகளை நடத்தினாலும் அதற்காக அவர்கள் தியாகம் செய்ய மாட்டார்கள். முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கம் விலை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில், முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் ஆளும் வர்க்கம் இரண்டாலும் ஆதரிக்கப்படும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக அவர்கள் போராடுவார்கள்.

ட்ரம்பின் சதித்திட்டத்தின் வீச்சு, அரை நூற்றாண்டுக்கு முன்னர் நிக்சன் முயற்சித்ததைக் காட்டிலும் மிகவும் அதிகமாக உள்ளது. ஆனால் எந்த ஜனநாயகக் கட்சியினரும் ட்ரம்பை பதவியில் இருந்து நீக்கக் கோரவில்லை. இந்த நிர்வாகத்தின் பாசிசக் கொள்கைகளுக்கு எதிரான பாரிய எதிர்ப்பிலிருந்து இந்தக் கோரிக்கை தவிர்க்க முடியாமல் எழுகிறது. ட்ரம்ப்-வான்ஸ் அரசாங்கத்தை வெளியேற்றுவதற்கான ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான கோரிக்கையை முன்னெடுத்து, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நிலைமையை மாற்றுவதற்கு ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்ப தொழிலாள வர்க்கம் இந்த பாரிய வெகுஜன இயக்கத்திற்கு தலைமை தாங்க வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி, “ட்ரம்பின் சதித்திட்டம் மற்றும் அதை எவ்வாறு நிறுத்துவது” என்ற தலைப்பில், சர்வாதிகாரத்தை நோக்கிய முனைவை எதிர்ப்பதற்கான ஒரு முன்னோக்கை விரிவுபடுத்தி ஒரு கூட்டத்தை நடத்தியது. கடந்த சனிக்கிழமை பாரிய அணிதிரட்டலின் படிப்பினைகளைச் சுருக்கமாகக் கூறி, சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவர் டேவிட் நோர்த் பின்வருமாறு கூறினார்:

உலக அளவில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியுடன் பொருந்தாத ஒரு சமூக ஒழுங்கின் சீர்குலைவை நாம் காண்கிறோம். நாம் ஒரு புரட்சிகர காலகட்டத்தில் இருக்கிறோம். ஆனால், சமூக நனவு சமூக இருப்புக்குப் பின்னால் பின்தங்கியுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் சமூக நனவை அவர்கள் எதிர்கொள்ளும் சமூக யதார்த்தத்துடன் இணைக்க நாங்கள் போராடி வருகிறோம்.

ட்ரம்பின் கொள்கைகளின் முக்கியத்துவத்தை பூசிமெழுகுவதற்கு பெருநிறுவன ஊடகங்களின் இடைவிடாத முயற்சிகளைக் கவனத்தில் கொண்டு டேவிட் நோர்த், “பாசிசம் இயல்பாக்கப்பட்டு வருகிறது. சோசலிசத்திற்கான போராட்டத்தை இயல்பாக்குவதே நமது பணியாகும்” என்று கூறினார்.

Loading