மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த வியாழக்கிழமை இரவு, இருளின் மறைவின் கீழ், இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக ஒரு பெரிய வான் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டது. ஈரானின் வான் பாதுகாப்பு, அணுசக்தி நிலையங்கள், முக்கிய இராணுவ அதிகாரிகள் மற்றும் கட்டளை மையங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன.
1980 களில் இடம்பெற்ற ஈரான்-ஈராக் போருக்குப் பின்னர், ஈரான் மீது மிகப்பெரியளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், குறைந்தது 78 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆறு அணுசக்தி விஞ்ஞானிகள் மற்றும் 20 உயர்மட்ட இராணுவ அதிகாரிகளை இஸ்ரேல் படுகொலை செய்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் ஈரானிய இராணுவத்தின் தலைமைத் தளபதி மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படைப்பிரிவின் தலைமைத் தளபதி ஆகியோரும் அடங்குவர்.
ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் சட்டவிரோதமான மற்றும் தூண்டுதலற்ற தாக்குதலை உலக சோசலிச வலைத்தளம் சந்தேகத்திற்கு இடமின்றி ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் அப்பட்டமான செயல் என்று கண்டிக்கிறது. அதிகரித்து வரும் கட்டுப்பாடற்ற இஸ்ரேலிய ஆட்சி, — ஏற்கனவே காஸாவில் 2 மில்லியன் மக்களுக்கு எதிராக இனப்படுகொலையைச் செய்து வருகிறது — இப்போது அதன் அளவை விட 10 மடங்கு பெரிய நாட்டோடு வேண்டுமென்றே போரைத் தூண்டிவிட்டு, முழுப் பிராந்தியத்திற்கும் அச்சுறுத்தும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் குற்றஞ்சாட்டிவரும் ஈரானிய அணுசக்தித் திட்டத்திற்கு எதிராக தற்காப்புக்காக செயல்பட்டதாகக் கூறுவது ஒரு அபத்தமானது மற்றும் அப்பட்டமான மோசடியாகும். ஆனால், சர்வதேச சட்டத்தையும் மீறி வாங்கிய அணு ஆயுதங்களை இஸ்ரேல் வைத்திருப்பது நன்கு அறிந்த விடயமாகும்.
இந்த தாக்குதலுக்கு முன்னர், ஈரான் தனது அணுசக்தி திட்டம் குறித்து வெள்ளை மாளிகையுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தது. இந்த தாக்குதலுக்கு முந்தைய நாட்களில், அமெரிக்கா உட்பட ஒவ்வொரு பிரதான ஏகாதிபத்திய அரசாங்கமும் ஈரான் மீதான ஒரு இஸ்ரேலிய தாக்குதலை எதிர்ப்பதாக கூறி அறிக்கைகளை வெளியிட்டு, பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண அழைப்பு விடுத்தன.
அமெரிக்காவின் முன்கூட்டிய தகவல்களுடனும், உடந்தையுடனும் தெஹ்ரான் மீது ஏவுகணைகளை வீச ஆரம்பிப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாகவே, கடந்த ஞாயிறன்று ஈரானுடன் ஒரு புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா அறிவிக்கும் அளவிற்குச் சென்றது. 24 மணி நேரத்திற்குள், ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலை எதிர்ப்பதாக வெள்ளை மாளிகை வெளிப்படையாக அறிவித்ததிலிருந்து, அதைப் பற்றிப் பகிரங்கமாகப் பெருமை பேசத் தொடங்கியது.
கடந்த வெள்ளியன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அமெரிக்காவிற்கு இந்த தாக்குதல்கள் குறித்து 'முன்னறிவிப்பு' கிடைத்ததா என்று கேட்டதற்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 'முன்னறிவிப்பு? அது முன்னறிவிப்பு அல்ல. அது, என்ன நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும்' என்று குறிப்பிட்டார்.
உண்மையில், 'பேச்சுவார்த்தைகள்' என்று அழைக்கப்படுவது ஒரு துரோக நாடகமாகும். இது, ஈரானின் இராணுவத் தலைவர்களை அவர்களின் வீடுகளில் வைத்தே கொல்லும் வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டது. வியாழக்கிழமை இரவு இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டவர்களில் ஈரானிய அணுசக்தி பேச்சுவார்த்தையாளரான அலி ஷம்கானியும் ஒருவராவார்.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி, வெள்ளிக்கிழமை ஆக்சியோஸ் செய்தி நிறுவனம், 'ட்ரம்பும் அவரது உதவியாளர்களும் இஸ்ரேலிய தாக்குதலை பொதுவில் எதிர்ப்பதாக மட்டுமே கூறி நடித்து வருவதாகவும், தனிப்பட்ட முறையில் அவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை ஆனால், எங்களுக்கு தெளிவான அமெரிக்க பச்சைக்கொடி காட்டப்பட்டிருந்தது என்றும் ஒருவர் கூறினார். மேலும், எந்தவொரு தாக்குதலும் உடனடியாக நிகழமாட்டாது என்பதை ஈரானை நம்ப வைப்பதும், இஸ்ரேலின் இலக்கிலுள்ள பட்டியலில் உள்ள ஈரானியர்கள் புதிய இடங்களுக்குச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்வதும் இதன் நோக்கமாகும் என்று அவர்கள் கூறுகிறார்கள்' என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
உண்மையில், ஈரான் தனது தலைமையின் கணிசமான பகுதியைக் கொல்ல அனுமதித்தது என்பது —அமெரிக்க பத்திரிகைகள் வெளிப்படையாக இஸ்ரேலிய தாக்குதலைப்பற்றி தந்தி மூலம் அனுப்பியபோதும், ஏவுகணைத் தாக்குதல்களால் பாதிக்கப்படக்கூடிய பொதுமக்கள் குடியிருப்புகளில் அவர்கள் தங்கியிருந்தனர்— ஈரானிய ஆட்சியின் மூலோபாய திவால்நிலையை பேரழிவு தரும் வகையில் அம்பலப்படுத்துகிறது. ட்ரம்ப் நிர்வாகத்தின் நல்லெண்ணத்தில் ஈரானிய ஆட்சி மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தது. ஜனவரி 2020 இல், ஜெனரல் சுலைமானியின் கொலைக்கு ட்ரம்ப் ஒப்புதல் அளித்தது உட்பட நடந்த அனைத்தையும் புறக்கணித்து மறந்துவிட்ட ஈரானியத் தலைவர்கள், பேச்சுவார்த்தைகள் நிலுவையில் இருக்கும்போது அமெரிக்கா இஸ்ரேலைக் கட்டுப்படுத்தும் என்று உறுதியாக நம்பினர். ஒரு குழந்தை அந்நியரிடமிருந்து மிட்டாய் எடுப்பது போல, அவர்கள் ஒரு எளிய தந்திரத்தில் விழுந்தனர்.
ஆனால், ஈரானிய ஆட்சியின் வியக்கத்தக்க அப்பாவித்தனத்திற்குப் பின்னால் அரசியல் இருக்கிறது. தனது சொந்த தொழிலாள வர்க்கத்தால் பீதியடைந்துள்ள ஈரானிய முதலாளித்துவ உயரடுக்கு, ஈரானின் அழிவு மற்றும் அடிபணியலுக்கு தங்கள் முழு உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி, ஏகாதிபத்திய சக்திகளுடன் ஒரு உடன்பாட்டை காணுவதற்கு தீவிரமாக நாடி வருகிறது.
காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையின் சில அம்சங்கள் குறித்து ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் சமீபத்தில் விமர்சித்த போதிலும், ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல் அவர்களின் உண்மையான நிலைப்பாட்டை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த திட்டமிடப்பட்ட தாக்குதல் குறித்து சான்ஸ்லர் மெர்ஸிடம் நெதன்யாகு தெரிவித்ததாக ஜேர்மன் அரசாங்கம் அறிவித்தது. பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் அரசாங்கங்கள் இரண்டுமே இஸ்ரேலின் 'தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் உரிமையை' உறுதிப்படுத்தி அறிக்கைகளை வெளியிட்டதுடன், ஈரானின் பதிலடித் தாக்குதல்களையும் கண்டித்தன.
ஈரான் மீதான தாக்குதல், அக்டோபர் 7, 2023 சம்பவங்களை தொடர்ந்து தீவிரமடைந்த, ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் ஒரு 'புதிய மத்திய கிழக்கை' உருவாக்குவதற்கான நீண்டகால அமெரிக்க-இஸ்ரேலிய முனைவின் நேரடி விளைவாகும். ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்களின் கீழ், பல தசாப்தங்களாக அமெரிக்காவிடம் இருந்து இஸ்ரேல் பெற்று வந்துள்ள அளப்பரிய அரசியல், இராணுவ மற்றும் உளவுத்துறை ஆதரவால் இது சாத்தியமானது.
பென்டகனும் இஸ்ரேலிய இராணுவமும், நீண்டகாலமாகவே ஈரான் மற்றும் அதன் அணுசக்தி திட்டத்தின் மீது ஒரு தாக்குதலை நீண்டகாலமாக திட்டமிட்டு போர்த் திட்டம் தீட்டி வருகின்றன - இந்த தாக்குதலை ட்ரம்ப் பலமுறை அங்கீகரிப்பதாக சூளுரைத்து வந்துள்ளார்.
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியான ஷா முகமது ரெசா பஹ்லவியின் சர்வாதிகாரத்தை தூக்கியெறிந்த 1979 ஈரானிய புரட்சியின் விளைவை அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. 1980கள் முழுவதும் ஈரானுக்கு எதிரான அதன் கொடூரமான போரில் வாஷிங்டன் ஈராக்கை ஆதரித்தது.
1990-91 இல் போர் தொடுத்து 2003 இல் படையெடுத்து ஈராக் மீது திரும்பிய போதும் கூட, தெஹ்ரானில் அமெரிக்காவுடன் இணைந்த ஒரு ஆட்சியை நிறுவுவது அதன் மத்திய நோக்கமாக இருந்தது.
இன்று, ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியாவுடன் ஈரானும் அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு ஒரு பெரிய தடையாக உள்ளது. இதை என்ன விலை கொடுத்தாவது ஒழிக்க வாஷிங்டன் தீர்மானகரமாக உள்ளது.
இந்தத் தாக்குதலின் இறுதி இலக்கு, மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய மேலாதிக்கமாகும். மத்திய கிழக்கு உலகின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி பிராந்தியமாகும். மேலும், பாரசீக வளைகுடா உட்பட முக்கியமான வர்த்தக பாதைகள் மற்றும் மூலோபாய வழித்தடங்களுக்கான தாயகமாகும். ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் முக்கிய கூட்டாளியான ஈரானை அடிபணிய வைப்பதன் மூலமாக, அமெரிக்கா அதன் பிரதான மூலோபாய போட்டியாளர்களுடன் நேரடி மோதலுக்கான தயாரிப்பில், அதன் உலகளாவிய நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஏகாதிபத்தியப் போர்கள் எதிர்பாராத மற்றும் பேரழிவுகரமான விளைவுகளுக்கு இட்டுச் செல்கின்றன என்பதை வரலாறு காட்டியுள்ளது. ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பு ஒரு பிராந்திய பேரழிவை கட்டவிழ்த்துவிட்டதைப் போல, ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலும் அதே போல் கட்டவிழ்த்துவிடப்படும். மத்திய கிழக்கின் மக்கள் தங்கள் நாடுகள் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கான போர்க் களங்களாக மாற்றப்படும்போது செயலற்ற நிலையில் இருக்க மாட்டார்கள்.
சர்வதேச தொழிலாள வர்க்கம் ஏகாதிபத்திய போருக்கும் அதை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் எதிராக ஒரு நனவான இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமாக இதற்கு பதிலளிக்க வேண்டும்.
உலக சோசலிச வலைத் தளம், ஏகாதிபத்திய வன்முறை மற்றும் அடிமைத்தனத்தில் இருந்து ஈரானை பாதுகாக்க அழைப்பு விடுக்கிறது. ஆனால், இதை எந்த முதலாளித்துவ அரசாங்கத்தின் ஆதரவின் மூலமும் அடைய முடியாது. இதற்கு ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், அனைத்து இன, நிற மற்றும் மத பிளவுகளுக்கும் எதிராக, மத்திய கிழக்கு மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டல் அவசியமாகும்.