முன்னோக்கு

ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவோம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

டெட்ராய்ட் கலைக் கல்லூரிக்கு முன் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று திரண்டுள்ளனர். ஏப்ரல் 5, 2025 [Photo: WSWS]

இந்த அறிக்கை ஜூன் 14 சனிக்கிழமை நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் விநியோகிக்கப்படும். ஜூன் 15 அன்று, உலக சோசலிச வலைத்தளம்ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதியும் அதை எவ்வாறு நிறுத்துவது?” என்பது குறித்தும் ஒரு அவசர இணையவழி கூட்டத்தை நடத்துகிறது. எங்கள் வாசகர்கள் அனைவரும் பதிவு செய்து, இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஜூன் 14 சனிக்கிழமையன்று, அமெரிக்கா எங்கிலும் 2,000 க்கும் அதிகமான இடங்களில் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகிறது. கடந்த ஒரு வார காலமாக இடம்பெற்றுவரும் போராட்டங்களைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்தவர்கள் மீதான ட்ரம்பின் தாக்குதலுக்கும் ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான அவரது நடவடிக்கைகளுக்கும் எதிராக, நாடு முழுவதும் உள்ள நகரங்களில் பெருந்திரளான உழைக்கும் மக்களும் இளைஞர்களும் வீதிகளில் இறங்கி வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும், அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு மட்டுமே ஒப்பிடக்கூடிய, வாழும் நினைவில் முன்னொருபோதும் கண்டிராத ஒரு நெருக்கடியை தொழிலாளர்களும் இளைஞர்களும் இன்று எதிர்கொள்கின்றனர். அப்போது, அடிமைத்தனத்திற்கு எதிரான வாழ்வா சாவா என்ற போராட்டமாக இருந்தது; இன்று, முதலாளித்துவத்திற்கு எதிரான வாழ்வா சாவா என்ற போராட்டமாக உள்ளது.

லொஸ் ஏஞ்சல்ஸில் ஒரு வாரமாக அதிகரித்து வரும் இராணுவப் படையெடுப்பைத் தொடர்ந்து, போராட்டங்கள் இடம்பெறும் அதே நாளில், வாஷிங்டன் டி.சி.யில் ஒரு பாரிய இராணுவ அணிவகுப்பு நடத்தப்படுகிறது. அமெரிக்க இராணுவம் ஸ்தாபிக்கப்பட்டதன் 250 ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடத்தப்படும் இந்த அணிவகுப்பின் நிஜமான நோக்கம், ட்ரம்பின் 79 வது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதும், இராணுவத்தின் மீது அவரின் சவாலுக்கிடமற்ற தனிப்பட்ட கட்டுப்பாட்டை எடுத்துக்காட்டுவதும் ஆகும்.

இந்த அணிவகுப்பானது, ஆயுதப்படைகள் மற்றும் பொலிஸின் கட்டளையின் பேரில் ட்ரம்ப் ஆட்சி செய்கிறார் என்று அனைத்து எதிர்ப்பாளர்களுக்கும் எச்சரிக்கை விடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டக் கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலைகள் ஒழிக்கப்படுகின்றன. அதற்குப் பதிலாக, அவசரகால உத்தரவுகள், இராணுவ அதிகாரம் மற்றும் பாசிச வன்முறை மூலம் அமல்படுத்தப்படும் ஆணையின் மூலம் ஜனாதிபதி ஆட்சியை ட்ரம்ப் நிறுவுகிறார்.

கடந்த வியாழனன்று கலிபோர்னிய செனட்டர் அலெக்ஸ் பாடில்லா மீதான தாக்குதல், அரசியல் மற்றும் உடல் ரீதியான மிரட்டலின் ஒரு பகுதியாகும். உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை செயலாளர் கிறிஸ்டி நோமிடம், பாடில்லா கேள்விகளை எழுப்பியபோது, அவர்மீது வன்முறையை பாவித்து பொலிசார் கைது செய்தனர்.

கடந்த செவ்வாயன்று, ட்ரம்ப் ஃபோர்ட் பிராக்கில் ஒரு வசைபாடல் கண்டன உரையை நிகழ்த்தினார். எதிர்ப்பாளர்களையும் போராட்டக்காரர்களையும் “விலங்குகள்”, அவர்கள் நசுக்கப்பட வேண்டிய “எதிரிகள்” என்று அவர் கண்டனம் செய்தார். பாடில்லா வெளியேற்றப்பட்ட அதே செய்தியாளர் கூட்டத்தில், “நகரத்தை சோசலிஸ்டுகளிடம் இருந்து விடுவிப்பதற்காக” இராணுவம் லொஸ் ஏஞ்சல்ஸில் நிலைகொண்டிருக்கும் என்று நோயெம் அறிவித்தார். இதுதான் நாஜிக்களின் மொழி. ஹிட்லர் ஆட்சிக்கு வந்தபோது, அவரும் இது சோசலிசத்தின் முடிவு என்று அறிவித்தார்.

ட்ரம்பின் நடவடிக்கைகள் அனைத்தும் அப்பட்டமாகவும் வெளிப்படையாகவும் சட்டவிரோதமானவை. வியாழனன்று, கலிபோர்னியாவில் ஒரு கூட்டாட்சி நீதிபதி லொஸ் ஏஞ்சல்ஸுக்கு தேசிய காவல்படையை அனுப்புவதைத் தடுத்து ஒரு தீர்ப்பை வெளியிட்டார். அந்த தீர்ப்பில், “[ட்ரம்பின்] நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை – இவை, அவரது சட்டப்பூர்வ அதிகாரத்தின் வரம்பையும், அமெரிக்க அரசியலமைப்பின் பத்தாவது திருத்த சட்டத்தையும் மீறியுள்ளன. வியாழக்கிழமை இரவு, இந்த உத்தரவுக்கு ஒரு தற்காலிக தடை விதித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், ஜூன் 17 அன்று விசாரணையை தள்ளிப்போட்டது.

இதுபோன்ற முடிவுகள், அவை ட்ரம்ப்பிற்கு எதிராகச் சென்றாலும் கூட, ஏற்கனவே நீதிமன்றத் தீர்ப்புகளை மீறிய ட்ரம்ப் நிர்வாகத்தைத் தடுத்து நிறுத்தும் என்ற மாயையில் யாரும் இருக்கக்கூடாது. இந்த வார தொடக்கத்தில், ட்ரம்பின் பாசிச பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், வெள்ளை மாளிகைக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பை, அது பின்பற்றுமா என்பதைக் கூற மறுத்துவிட்டார்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வன்முறையை பெருமளவில் கட்டவிழ்த்துவிடுவதே இதன் நோக்கமாகும். ட்ரம்பின் இராணுவ அணிவகுப்புக்கு முன்னதாக, இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக நூற்றுக்கணக்கான இராணுவ தாக்குதல்களை நடத்தியுள்ளது. காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலை இப்போது மத்திய கிழக்கு எங்கிலும் ஒரு முழு அளவிலான போராக விரிவடைந்து வருகிறது.

இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்பவர்களைப் பொறுத்த வரையில், முன்னோக்கு குறித்த இன்றியமையாத கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன: இது எவ்வாறு தடுத்து நிறுத்தப்படும்? ட்ரம்பின் ஆட்சிக் கவிழ்ப்பை எவ்வாறு தோற்கடிக்க முடியும்?

கடந்த வார நிகழ்வுகள், ஜனநாயகக் கட்சியால் எந்த குறிப்பிடத்தக்க எதிர்ப்பும் ஒழுங்கமைக்கப்பட மாட்டாது என்ற விடயத்தை முற்றிலும் தெளிவுபடுத்தி உள்ளன. ட்ரம்ப் வன்முறை மற்றும் உள்நாட்டு போர் மொழியில் பேசுகின்ற அதேவேளையில், ஜனநாயகக் கட்சியினர் வழக்குகள் மற்றும் கண்ணீர் நிறைந்த புலம்பல்களைக் கொண்டு பதிலளிக்கின்றனர்.

ட்ரம்பின் “அத்துமீறல்கள்” மீது வெற்றுத்தனமான விமர்சனங்களை வழங்கும் அதே வேளையில், ஜனநாயகக் கட்சியினர் அவரது சொல்லாடல்களை எதிரொலித்து எதிர்ப்பை அடக்குவதில் உதவி வருகின்றனர். கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசோம் லொஸ் ஏஞ்சல்ஸில் பாரிய கைதுகளை மேற்கொள்வதுக்கு 800 மாநில பொலிசாரை நிலைநிறுத்தியுள்ளார். அதேவேளையில் மேயர் கரேன் பாஸ், எதிர்ப்பு போராட்டங்களை ஒடுக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நகர பொலிஸ் துறையை அணிதிரட்டியுள்ளார். “ஒடுக்குமுறையைக் கையாள்வோம்” என்ற செய்தி தெளிவாக உள்ளது.

ஜனநாயகக் கட்சியின் கோழைத்தனம் “இடது” ஜனநாயகக் கட்சியாளரான எலிசபெத் வாரன் ஆல் சுருக்கமாக எடுத்துக்காட்டப்பட்டது, ட்ரம்ப் கட்டவிழ்த்துள்ள ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு மத்தியில், கடன் உச்சவரம்பை ஒழிப்பதற்கான ட்ரம்பினது திட்டத்துடன் தனது உடன்பாட்டை அறிவிக்க நியூ யோர்க் டைம்ஸ் பதிப்பைப் பயன்படுத்தினார். இது, “எனக்கு பாசிசம் பிடிக்காது, ஆனால் முசோலினி ரயில்களை சரியான நேரத்தில் ஓடச் செய்தார்,” என்று கூறுவதற்கு ஒப்பானதாகும்.

பேர்ணி சாண்டர்ஸ் மீண்டும் ஒரு அரசியல் பாதுகாப்பு அரணாக, அவருக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரத்தை வகித்து வருகிறார். தன்னலக்குழுவை வாய்வீச்சு ரீதியாக கண்டித்தல், முதலாளித்துவ ஜனநாயகக் கட்சிக்கு அடிமைத்தனமான ஆதரவு மற்றும் குடியரசுக் கட்சியினரிடமிருந்து சிறந்த நடத்தைக்கான முட்டாள்தனமான பயனற்ற அழைப்புகள் ஆகியவற்றை அவர் ஒருங்கிணைக்கிறார். அரசியல் சிடுமூஞ்சித்தனம் மற்றும் சந்தர்ப்பவாதத்தின் அப்பட்டமான வெளிப்பாடாக, சாண்டர்ஸ் கூறுகையில், எல்லையை மூடுவதிலும் புலம்பெயர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்துவதிலும் ட்ரம்ப் அவரே “சரியாக செய்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

எப்பொழுதும் போலவே, ஜனநாயகக் கட்சியினரின் பதில் கோழைத்தனம், பொறுப்பற்ற தன்மை மற்றும் அப்பட்டமான ஏமாற்றுத்தனம் ஆகியவற்றின் ஒரு கலவையால் குணாம்சப்படுத்தப்படுகிறது. எவ்வாறிருப்பினும், இதன் அடித்தளத்தில் அரசியல் நலன்களும் வர்க்க பரிசீலனைகளும் உள்ளன.  ஜனநாயகக் கட்சியும், குடியரசுக் கட்சிக்கு சற்றும் குறையாத வகையில், பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக் குழுக்களின் கட்சியாகும். ட்ரம்ப் உடனான அதன் அதன் முக்கிய கருத்து வேறுபாடுகள் வெளியுறவுக் கொள்கை தொடர்பான பிரச்சினைகள் பற்றியதாகும்.

ட்ரம்புக்கு எதிரான பாரிய எதிர்ப்பு சமூக சமத்துவமின்மை, முதலாளித்துவம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்புக்கு எதிரான ஒரு பரந்த இயக்கமாக அபிவிருத்தி காணக்கூடும் என்று ஜனநாயகக் கட்சியினர் பீதியடைந்துள்ளனர்.

தன்னலக் குழுக்கான அரசு

ஜனநாயகக் கட்சியினர் தற்போதைய நெருக்கடி அரசியல் விதிமுறைகளிலிருந்து தற்காலிகமாக திசைதிருப்பப்படுவதைத் தவிர வேறில்லை என்றும், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் வெறுமனே ட்ரம்பின் ஆளுமையில் இருந்து ஊற்றெடுக்கும் “அத்துமீறல்கள்” மட்டுமே என்றும் பாசாங்கு செய்ய முயல்கின்றனர். அரசு வன்முறை மறுசீரமைப்பு என்பது நிரந்தர அரசியல் சர்வாதிகாரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது என்று அவர்கள் ஒருபோதும் கூறமாட்டார்கள்.

ட்ரம்ப் நிர்வாகம் நிதிய தன்னலக்குழுவின், நிதிய தன்னலக்குழுவிற்காக செயல்படுகின்ற அரசாங்கமாகும்.

ஆனால், அமெரிக்காவில் ஜனநாயக வடிவங்களின் முறிவு ஒரே இரவில் எழுந்துவிடவில்லை என்பதை புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும். இராணுவ-தொழில்துறை கூட்டின் அதிகாரத்தின் தாக்கங்கள் குறித்து ஐசனோவர் எச்சரித்து 65 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் கடந்து விட்டன. அமெரிக்க ஜனாதிபதி நிக்சனின் முதல் பெரிய அரசியல் சூழ்ச்சியை வாட்டர்கேட் நெருக்கடி அம்பலப்படுத்தி அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலம் கடந்துவிட்டது. புஷ் எதிர் கோர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 5-4 தீர்ப்பின் மூலம் ஜனாதிபதி தேர்தல் திருடப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.

செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களைத் தொடர்ந்து வந்த “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்பது, தேசபக்தி சட்டம், உள்நாட்டு பாதுகாப்புத் துறை, குவாண்டநாமோ வளைகுடா, சிஐஏ சித்திரவதை, உள்நாட்டு உளவுபார்ப்பு மற்றும் உரிய விசாரணையின்றி ஆளில்லா விமானப் படுகொலை ஆகியவை உட்பட, ஜனநாயக உரிமைகள் திட்டமிட்டு அழிக்கப்படுவதை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டது.

இந்த அபிவிருத்திகள் ஒன்றுக்கொன்று தொடர்புடைய மூன்று காரணங்களுடன் பிணைந்துள்ளன: 1) அமெரிக்க முதலாளித்துவத்தின் நீண்ட-கால வீழ்ச்சி, 2) உலகெங்கிலும் இராணுவ வன்முறை மூலமாக இந்த வீழ்ச்சியை மாற்றுவதற்கான முயற்சிகள், 3) சமூக சமத்துவமின்மையின் அதீத வளர்ச்சி, இது அமெரிக்க வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத மட்டங்களை எட்டியுள்ளது.

இந்த நிலைமைகளிலிருந்து, அரசியல் தேர்வு செயல்முறை மூலம், ஒரு மோசடிக்காரரும், ஏமாற்றுக்காரருமான ட்ரம்ப், ஜனாதிபதி பதவிக்கு உயர்ந்துள்ளார். இவருடைய இரண்டாம் பதவிக்காலம் தன்னலக்குழுவின் ஆட்சியின் திட்டவட்டமான தர்க்கத்துடன் ஒத்துப்போகிறது.

காஸாவில் இனப்படுகொலையை எதிர்த்துப் போராடும் மாணவர்கள் மீதான பொலிஸ் ஒடுக்குமுறை, கைது செய்தல் மற்றும் தடுத்து வைத்தல்; விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் மீதான தாக்குதல்கள்; மற்றும் கலாச்சாரம், கல்வி மற்றும் பொது உரையாடலை சர்வாதிகாரத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சிகள் ஆகியவற்றைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்தோர் மீதான மிருகத்தனமான தாக்குதல்கள் மற்றும் பெருமளவிலான நாடுகடத்தல்கள் அலை வீசி வருகின்றன.

அடிப்படை இலக்கு தொழிலாள வர்க்கமாகும். முதலாளித்துவ உயரடுக்கின் செல்வத்தையும் அதிகாரத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அனைத்தும் - பொதுக் கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் பணியிட விதிமுறைகள், சமூகப் பாதுகாப்பு, மருத்துவக் காப்பீடு, மருத்துவ உதவி - தகர்க்கப்பட வேண்டும். முதலாளித்துவ செல்வந்தர்களுக்கு பாரிய வரி விலக்குகளுக்கான வாக்குறுதிகளால் நிரம்பிய ட்ரம்பின் “மிகப்பெரும் அழகிய வரவு-செலவு திட்டக்கணக்கு”, காட்டுமிராண்டித்தனமான சிக்கன நடவடிக்கைகள் மூலமாகவும் மற்றும் சமூக பாதுகாப்பு வலையமைப்பில் எஞ்சியிருப்பவற்றை அழிப்பதன் மூலமாகவும் அவற்றுக்கு நிதியளிக்க முனைகிறது.

அமெரிக்காவிற்குள் சர்வாதிகாரத்தை நோக்கிய திருப்பம் என்பது வெளிநாடுகள் மீதான ஏகாதிபத்திய வன்முறையின் வெடிப்பில் இருந்து பிரிக்க முடியாததாகும். மத்திய கிழக்கில் போர் விரிவாக்கம் என்பது அதிகரித்து வரும் உலகளாவிய மோதலின் ஒரு பகுதியாகும். ட்ரம்ப் நிர்வாகம் சீனாவின் மீது தனது பார்வையை செலுத்துகிறது. ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரை தீவிரப்படுத்திய மற்றும் காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலைக்கு முழு ஆதரவை வழங்கிய பைடென் நிர்வாகத்தின் முன்வரலாற்றை ட்ரம்ப் கட்டமைத்து வருகிறார்.

இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் இந்த அரசியல் யதார்த்தத்தில் இருந்து முடிவுகளை எடுக்க வேண்டும். சர்வாதிகாரத்தின் தோற்றுவாயான முதலாளித்துவ அமைப்புமுறையை அடையாளம் கண்டு அதை எதிர்த்துப் போராடாமல் சர்வாதிகாரத்தை நோக்கிய முனைவை நிறுத்துவது சாத்தியமில்லை.

ட்ரம்பின் சதித்திட்டத்தை எதிர்த்துப் போராட சோசலிச சமத்துவக் கட்சி பின்வரும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கிறது:

முதலாவதாக, ட்ரம்புக்கு எதிரான போராட்டம் தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றியிருக்க வேண்டும். ட்ரம்ப் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதற்கு விஞ்ஞானிகள், தொழில் வல்லுனர்கள், மாணவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்திற்குள் உள்ள பரந்த கூறுபாடுகள் மத்தியில் சமூகம் முழுவதிலும் மிகப்பெரும் எதிர்ப்பு நிலவுகிறது. ட்ரம்புக்கு எதிரான இயக்கத்தை வழிநடத்தக்கூடிய மற்றும் வழிகாட்ட வேண்டிய சமூக சக்தி தொழிலாள வர்க்கமாகும்.

ஒரு பொது வேலைநிறுத்தத்தில் ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் மகத்தான பலத்தை அணித்திரட்ட வேண்டும். உற்பத்தி செயல்பாட்டில் வேரூன்றிய தொழிலாளர்களின் சக்தியைப் பயன்படுத்தி உற்பத்தியை நிறுத்த வேண்டும்.

இதற்கு AFL-CIO தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருந்து சுயாதீனமான தொழிலாளர்களின் ஒழுங்கமைப்பு அவசியமாகும். ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதியையும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான மிருகத்தனமான தாக்குதலையும் அது நடக்கவே இல்லை என்பதே போல் AFL-CIO தொழிற்சங்க அதிகாரத்துவம் கருதி வருகிறது. தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டு வருகின்ற நிலையிலும், ஒவ்வொரு திருப்பத்திலும் ஜனநாயக உரிமைகள் துடைத்தெறியப்பட்டு வருகின்ற நிலையிலும், பெருநிறுவனங்கள் மற்றும் அரசுடன் பிணைந்துள்ள தொழிற்சங்க எந்திரம் செயலற்ற நிலையில் உள்ளது.

ஒவ்வொரு தொழிற்சாலை, பணியிடம் மற்றும் சுற்றுப்புறத்திலும் சாமானிய தொழிலாளர் குழுக்களை அமைக்க சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. இதன் மூலம் சர்வாதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பின் மையங்களாக மாறி, புலம்பெயர்ந்தோர் மற்றும் பூர்வீகவாசிகள் என அனைத்துப் பின்னணியிலிருந்தும் அனைத்து தொழிலாளர்களையும் ஒன்றிணைக்க வேண்டும்.

இரண்டாவதாக, ஜனநாயக உரிமைகள் மீதான ட்ரம்பின் தாக்குதலுக்கு எதிரான பாரிய வெகுஜன எதிர்ப்பு, தெளிவான மற்றும் அவசர கோரிக்கைகளுடன் இணைக்கப்பட வேண்டும்: அமெரிக்க நகரங்களில் இருந்து அனைத்து துருப்புகளையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்; குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) கலைக்கப்பட வேண்டும், மற்றும் அனைத்து புலம்பெயர்ந்தோர் மீதான சோதனைகளையும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்; துணை இராணுவப் பிரிவுகளைக் கலைக்க வேண்டும் மற்றும் சர்வாதிகாரத்தை சாத்தியமாக்கும் நிர்வாக உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும்; மற்றும் அரசியலமைப்பை கவிழ்க்கும் சதியில் சம்பந்தப்பட்ட அனைவரையும் அகற்றி, அவர்கள் மீது வழக்குத் தொடுக்க வேண்டும்.

மூன்றாவதாக, சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம் அவசியமாக ஒரு சர்வதேசப் போராட்டமாகும். ஒவ்வொரு பிரதான முதலாளித்துவ நாட்டிலும் உள்ள ஆளும் உயரடுக்குகள் வலதிற்கு நகர்ந்து, தொழிலாள வர்க்கத்தின் மீதான அவற்றின் தாக்குதலை தீவிரப்படுத்தி, ஜனநாயக உரிமைகள் மீது போர் தொடுத்து வருகின்றன. அமெரிக்காவில் சர்வாதிகாரம் ஸ்தாபிக்கப்படுவது எல்லா இடங்களிலும் ஜனநாயக உரிமைகளுக்கு சாவுமணி அடிக்கும் என்பதை ஒவ்வொரு தொழிலாளியும் அறிவார். இந்த நெருக்கடி உலகந்தழுவியது, இதற்கான பதில் உலகந்தழுவியதாக இருக்க வேண்டும்.

நான்காவதாக, முதலாளித்துவத்திற்கு எதிரான மற்றும் சோசலிசத்திற்கான ஒரு போராட்டத்திற்கு வெளியே, பாசிசத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் எதிரான போராட்டம் இருக்க முடியாது. செல்வந்த தன்னலக்குழுக்களின் செல்வவளம் பறிமுதல் செய்யப்பட வேண்டும், பிரம்மாண்டமான பெருநிறுவனங்களும் வங்கிகளும் தொழிலாள வர்க்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பொது பயன்பாடுகளாக மாற்றப்பட வேண்டும். ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு என்பது சமூக சமத்துவத்தில் வேரூன்றிய ஒரு சமூகத்தை நிறுவுவதற்கான அடிப்படையாக சமூக, பொருளாதார வாழ்வின் மீது ஜனநாயகக் கட்டுப்பாட்டை நிறுவுவதுடன் இணைக்கப்பட வேண்டும்.

ட்ரம்பும் அவரது எடுபிடிகளும் சோசலிசத்தைக் கண்டனம் செய்கிறார்கள் என்றால், அவர்களே அடிப்படைப் பிரச்சினையை உணர்ந்திருப்பதால் தான் அதற்குக் காரணமாகும். அவர்கள் சர்வாதிகாரத்திற்கு மாறுவதன் மூலம், தொழிலாள வர்க்கம் மற்றும் சோசலிசத்திற்கு எதிராக முதலாளித்துவத்தைப் பாதுகாக்கிறார்கள்.

சமூக உறவுகளில் நடந்து வருகின்ற பரந்த அரசியல் மாற்றங்களுக்கு மூலோபாயத்தில் ஓர் ஆழ்ந்த மாற்றம் அவசியப்படுகிறது. இனம் மற்றும் பாலின அடையாளத்தின் அடிப்படையில், உயர் நடுத்தர வர்க்கத்தின் அரசியலை அடிப்படையாகக் கொண்ட “இடது” அரசியலுக்கு கடந்து வந்தவை, ஒருபோதும் ஒரு முன்னோக்கிய பாதையை வழங்க மாட்டார்கள், நிச்சயமாக இப்போதும் அவர்களால் வழங்கவும் முடியாது.

சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்திற்கு, ட்ரொட்ஸ்கிச இயக்கம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டம் மற்றும் வரலாற்றில் உருவடிவம் பெற்றுள்ள, மார்க்சிசத்தின் புரட்சிகர, சர்வதேசியவாத பாரம்பரியங்களில் வேரூன்றிய உண்மையான சோசலிசத்தின் புத்துயிரூட்டல் அவசியமாகும். இந்த அடித்தளத்தின் மீது மட்டுமே தொழிலாள வர்க்கம் அது முகங்கொடுக்கும் பாரிய அபாயங்களை எதிர்கொள்வதற்கு அவசியமான தலைமையைக் கட்டியெழுப்ப முடியும்.

ட்ரம்ப் நிர்வாகம், அதன் அனைத்து நடவடிக்கைகளிலும், முதலாளித்துவத்தின் வரலாற்று திவால்நிலையை நிரூபிக்கிறது. மனிதகுலம் மீண்டும் அடிப்படை மாற்றுகளை எதிர்கொள்கிறது: அது, சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா என்பது பற்றிய கேள்வியாகும்.

ஜூன் 15 அன்று, உலக சோசலிச வலைத் தளம் “ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதியும் அதை எவ்வாறு நிறுத்துவது?“ என்ற தலைப்பில் இணையவழி கூட்டத்தை நடத்துகிறது. எங்கள் வாசகர்கள் அனைவரும் பதிவு செய்து இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். சோசலிச சமத்துவக் கட்சியில் சேர கீழே உள்ள படிவத்தை நிரப்பவும்.

Loading