மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ரஷ்யாவுடன் போருக்குத் தயாராகும் வகையில் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் பரந்த அளவில் மீள்ஆயுதபாணியாக வேண்டும் என்று, நேட்டோவின் பொதுச் செயலாளர் மார்க் ரூட் (Mark Rutte), பிரிட்டனின் முன்னணி வெளியுறவுக் கொள்கை சிந்தனைக் குழுவினரிடம், சாத்தம் மாளிகையில் திங்களன்று தெரிவித்தார்.
ஒரு கேள்வி பதில் அமர்வின் போது, டெலிகிராஃப் ஆசிரியர் டேனியல் ஷெரிடன், “[இந்த வார செலவின மதிப்பாய்வில்] நீங்கள் அவசியம் என்று நினைக்கும் பாதுகாப்பு செலவினங்களை ஈடுகட்ட அதிபர் வரிகளை உயர்த்துவதை நாம் பார்க்க வேண்டுமா?” என்று கேட்டார்.
இதற்கு ரூட், “நாடுகள் வரிகளை எவ்வாறு செலுத்துகின்றன என்பதை முடிவு செய்வது என் வேலையல்ல,” ஆனால் நீங்கள் இதைச் செய்யாவிட்டால், “3.5 சதவீத முக்கிய பாதுகாப்பு செலவினம் உட்பட இராணுவச் செலவு 5 சதவீதமாக அதிகரிக்கவில்லை என்றால், நீங்கள் இன்னும் தேசிய சுகாதார சேவையையோ அல்லது ஏனைய நாடுகளில் அவர்களின் சுகாதார அமைப்புகள், ஓய்வூதிய முறையையோ வைத்திருக்கலாம், ஆனால் நீங்கள் ரஷ்ய மொழியைப் பேசக் கற்றுக்கொள்வது நல்லது” என்று அப்பட்டமாக பதிலளித்தார்.
2024-2025 ஆம் ஆண்டிற்கான தேசிய சுகாதார சேவைக்கான (NHS) இங்கிலாந்தின் பட்ஜெட் 192 பில்லியன் பவுண்டுகள் ஆகும். இது, ஓய்வூதியங்களுக்காக ஒட்டுமொத்த சமூகப் பாதுகாப்பு செலவினங்களில் சுமார் 55 சதவீதம் ஆகும். மேலும் 2025-26 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 175 பில்லியன் பவுண்டுகள் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போருக்கு நிதியளிக்க, இந்த செலவுகள் இப்போது பிரதமர் ஸ்டார்மரும் அனைத்து வகையான அரசாங்கங்களும் அழிக்க முயற்சிக்கும் ஒரு ஆடம்பரமாகக் கருதப்படுகிறது.
கடந்த வாரம், தொழிற்கட்சி அரசாங்கம் வெளியிட்ட மூலோபாய பாதுகாப்பு மதிப்பாய்வு (SDR) அறிக்கையைத் தொடர்ந்து ரூட் லண்டனில் பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மரை சந்திக்க இருந்தார். அவர் பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலியுடன் ஒரு முக்கிய ஆயுத தொழிற்சாலையான ஷெஃபீல்ட் ஃபோர்ஜ்மாஸ்டர்ஸைப் பார்வையிட்டார். இந்த தொழிற்சாலை, அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான உதிரிப்பாகங்களை உருவாக்கி வருவதுடன், AUKUS [ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா] நாடுகளின் இராணுவ கூட்டணி திட்டத்தின் கீழ் 200 மில்லியன் பவுண்டுகள் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது.
நெதர்லாந்தின் ஹேக்கில் ஜூன் 24-25 தேதிகளில் நடைபெறும் நேட்டோவின் உச்சிமாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள இராணுவச் செலவினங்களில் ஏற்படும் பாரிய அதிகரிப்பைப் பற்றிப் பேச, ரூட் தனது சாத்தம் ஹவுஸ் உரையையும் கேள்வி பதில் அமர்வையும் பயன்படுத்திக் கொண்டார். ரூட், ட்ரம்ப் நிர்வாகத்தின் வலியுறுத்தலின் பேரில், நேட்டோ அங்கத்துவத்திற்கான ஒரு நிபந்தனையாக குறைந்தபட்ச இராணுவச் செலவுகளை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்திற்கு உயர்த்த கோரி வருகிறார். இவற்றில், 3.5 சதவீதம் முழுமையான இராணுவச் செலவினங்களும், 1.5 சதவீதம் “பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான முதலீடுகள், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை திறனை உருவாக்குவதும்” அடங்கும்.
1945 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய இராணுவக் குவிப்பு கடந்த வாரம் நேட்டோ சக்திகளால் பரவலாக அங்கீகரிக்கப்பட்டது. இருப்பினும் குறிப்பாக ஐக்கிய இராச்சியம் மற்றும் ஸ்பெயின், காலக்கெடுவை பூர்த்தி செய்வதற்கான உறுதியான உறுதிமொழிகளைச் செய்வதை தாமதப்படுத்தின.
பிரிட்டன் உட்பட பெரும்பாலான நேட்டோ நாடுகளைப் பொறுத்த வரையில், அடுத்த தசாப்தத்திற்குள் தற்போதைய இராணுவ செலவுகளை இரட்டிப்பாக்குவது அவசியமாகும். இது 1930 களுக்குப் பின்னர், முன்னெப்போதும் இல்லாத வகையில் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மீதான ஒரு போரை அவசியமாக்கும். பிரிட்டனின் ஸ்டார்மர் அரசாங்கம் தற்போது இராணுவத்திற்கு 2.3 சதவீதத்தை செலவிடுகிறது. மேலும் மூலோபாய பாதுகாப்பு மதிப்பாய்வு அறிக்கையில் உறுதிப்பாடுகள் இருந்தபோதிலும், 2027-28 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7 சதவீதத்தையும், அடுத்த பாராளுமன்றத்தின் போது (2034 இல் முடிவடையும்) குறிப்பிடப்படாத கட்டத்தில் 3 சதவீதத்தையும் எட்டுவதற்கு ஸ்டார்மர் அரசாங்கம் இன்னும் முறையாக உறுதிபூண்டுள்ளது.
பிரான்சுடன் சேர்ந்து, கண்டத்திலுள்ள இரண்டு அணுஆயுத வல்லரசுகளில் பிரிட்டனும் ஒன்றாகும். எனவே ஸ்டார்மரின் இந்த அதிகரிப்புக்கான உறுதிப்பாடு ரூட்டின் திட்டத்திற்கு முக்கியமாகும். டவுனிங் தெருவின் வெள்ளை அறையில் அவரது கலந்துரையாடல்கள் குறித்து கேள்வி பதில் நிகழ்ச்சியில் வினவிய போது, நேட்டோ சக்திகளிடையே 5 சதவீத முன்மொழிவு மீது “கிட்டத்தட்ட கருத்தொற்றுமை” இருப்பதாக மட்டுமே ரூட் தெரிவித்தார். மேலும் அவர் தனது உரையில், “ஹேக் உச்சிமாநாட்டில், நேச நாட்டுத் தலைவர்கள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிட ஒப்புக்கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். இது நேட்டோ அளவிலான உறுதிப்பாடாகவும், கூட்டணிக்கு ஒரு திருப்புமுனையாகவும் இருக்கும்” என்று தெரிவித்தார்.
ஸ்டார்மரின் மூலோபாய பாதுகாப்பு மதிப்பாய்வை “இது பிரிட்டனின் ஆயுதப் படைகளை வலுப்படுத்தி நவீனமயமாக்கும் மற்றும் நேட்டோவின் கூட்டுப் பாதுகாப்பை மேம்படுத்தும்” என்று ரூட் பாராட்டினார். அர்ப்பணிப்புக்கு ஒரு விலை உண்டு. எதிர்காலத்தில் இங்கிலாந்து அரசாங்கம் பாதுகாப்புக்காக கணிசமான தொகையை அதிகமாக செலவிடுவதை நான் வரவேற்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.
வரவிருக்கும் உச்சிமாநாடு ஒரு “சிறந்த நேட்டோவை” உருவாக்கும். அது, “வலுவான, நியாயமான மற்றும் மிகவும் கொடியதாக இருக்கும். இதன் மூலம் நாம் தொடர்ந்து எமது மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், எமது எதிரிகளை தூரத்தில் வைத்திருக்கவும் முடியும். ரஷ்யா காரணமாக, ஐரோப்பாவில் மீண்டும் போர் தொடங்கியுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
“சீனா, வட கொரியா மற்றும் ஈரானுடன் ரஷ்யா கைகோர்த்துள்ளது, அவர்கள் தங்கள் இராணுவங்களையும் அவர்களின் திறன்களையும் விரிவுபடுத்துகிறார்கள் என்பதால் நேட்டோ கடுமையான உலகளாவிய போட்டியை எதிர்கொண்டுள்ளது”.
“ஐந்து சதவீதம் என்பது வானத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு எண்ணிக்கை அல்ல, ஆனால் உறுதியான உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது. எமது கூட்டுப் பாதுகாப்பில் எமக்கு ஒரு திட்டவட்டமான பெரிய பாய்ச்சல் தேவை. உண்மை என்னவென்றால், எமது பாதுகாப்புத் திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்த எமக்கு அதிக படைகளும் திறன்களும் இருக்க வேண்டும்” என்று ரூட் குறிப்பிட்டார்.
“உக்ரேன் போர் முடிந்தாலும் ஆபத்து மறையாது என்பதால், ரஷ்யாவை எதிர்கொண்டு தோற்கடிக்க வேண்டியிருக்கிறது. பாதுகாப்பு செலவினங்கள் மீதான எங்கள் முடிவுகள் நேட்டோவின் போர் திட்டங்கள் மற்றும் தகைமை இலக்குகளால் உந்தப்படுகின்றன,” என்றார்.
“ஐந்து ஆண்டுகளுக்குள் நேட்டோவுக்கு எதிராக இராணுவ பலத்தைப் பயன்படுத்த ரஷ்யா தயாராக இருக்க முடியும்” என்பதால், ஒவ்வொரு நாடும் ஒரு போர் நிலைப்பாட்டிற்கு நகர்வது, அதன் இருத்தலியல் சார்ந்ததாக இருக்கிறது. மேலும், “உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் தூண்டுதலற்ற போர்” என்று அவர் கண்டனம் செய்தார். 2022 இல் உக்ரேன் மீதான படையெடுப்புக்கு இட்டுச் சென்ற ரஷ்யாவின் எல்லைகள்வரை நேட்டோவின் விரிவாக்கம் குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.
ரஷ்யாவை தோற்கடிக்க, “துல்லியமான விவரங்கள் வகைப்படுத்தப்பட்ட ஒரு ஒரு மீள்ஆயுதமயமாக்கல் அவசியப்படும். ஆனால், அதற்கு வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பில் 400 சதவீதம் அதிகரிப்பு, ஆயிரக்கணக்கான கவச வாகனங்கள் மற்றும் டாங்கிகள் மற்றும் மில்லியன் கணக்கான பீரங்கிக் குண்டுகள் அவசியப்படுவதாக” ரூட் தொடர்ந்து கூறினார். நேட்டோ சக்திகள் “அதிக போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களில் முதலீடு செய்யும்... ஒரு உதாரணம் மட்டும் சொல்ல வேண்டுமென்றால், அமெரிக்காவின் நட்பு நாடுகள் மொத்தம் குறைந்தது 700 F-35 போர் விமானங்களை வாங்கும்”. இந்த விமானங்கள் அமெரிக்க பாதுகாப்பு உற்பத்தியாளர் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன, ஒவ்வொன்றும் 82.5 மில்லியன் டாலர் முதல் 109 மில்லியன் டாலர் வரை செலவாகும்.
ரஷ்யாவுடனான மோதலுக்கு விரிவான “சமூக தயாரிப்பு” தேவை என்று ரூட் கூறினார். “போர் ஏற்பட்டால் இராணுவத்தின் நடவடிக்கைகளைத் தடுக்காமல் இருந்தாலும் சரி, செயலில் இருந்தாலும் சரி, அல்லது குறைந்தபட்சம் அவர்களின் பங்கு என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முழு சமூகத்திற்கும் அவர்களின் முயற்சிகளுக்காக...” நோர்வே மற்றும் சமீபத்திய நேட்டோ உறுப்பினர்களான பின்லாந்து மற்றும் ஸ்வீடனை அவர் பாராட்டினார்.
ரூட்டின் சத்தாம் மாளிகை சந்திப்பிலிருந்து இருந்து ஒரு பிரதான முடிவு வந்தது: இராணுவ மீள்ஆயுதமயமாக்கல் மற்றும் போருக்கு செலவிட ஆளும் வர்க்கம் உடனடியாக தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை முடுக்கிவிட வேண்டும் என்பதாகும்.
“தற்போது ஒரு ஜனநாயக அரசாங்கமாக இருக்கும் அரசாங்கத்தை நடத்துபவர்கள், பாதுகாப்புக்காக இவ்வளவு பணம் திடீரென ஏன் தேவைப்படுகிறது என்பதை தங்கள் வாக்காளர்களுக்கு எப்படி விளக்குவது?” என்று சாத்தம் மாளிகையின் இயக்குநரும் தலைமை நிர்வாகியுமான பிரான்வென் மேடாக்ஸ், ரூட்டேவிடம் கேட்டார்.
“பேர்லின் சுவர் இடிக்கப்பட்ட பிறகு... ரஷ்யர்களுடன் சேர்ந்து ஒருவித இனிமையான, அமைதியான வாழ்க்கை நமக்குக் கிடைக்கும்” என்ற கருத்து போய்விட்டது என்று ரூட்டே பதிலளித்தார்.
புட்டின், “ஒரு முழுமையான போர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார், நேட்டோவும் அதையே செய்ய வேண்டும், இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும். நேட்டோவின் [கூட்டு] பொருளாதாரம் ரஷ்யாவை விட 25 மடங்கு பெரியது. இது 50 டிரில்லியன் டாலர்களாகும், ரஷ்ய பொருளாதாரம் 2 டிரில்லியன் டாலர்களாகும். அந்த 2 டிரில்லியன் டாலர்கள் பொருளாதாரம் நேட்டோ முழுவதும் தற்போது உற்பத்தி செய்வதை விட நான்கு மடங்கு அதிக வெடிமருந்துகளை உற்பத்தி செய்கிறது” என்று ரூட் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “நீங்கள் எந்த தளபதியிடமும் கேட்கலாம், அவர் உங்களிடம் கூறுவார், ஆம், ஆளில்லா விமானங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு, இன்னபிற, ஆனால் மார்க், ஒவ்வொரு போரின் மையமும் எப்போதும் வெடிமருந்து கையிருப்புகளில் இருந்து தொடங்கும்... ஏவுகணைகளுக்கு எதிராக நம்மை பாதுகாத்துக் கொள்ள நமக்கு ஐந்து மடங்கு அதிகமான ஆயுத அமைப்புகள் தேவை மற்றும் பொதுவாக வான் பாதுகாப்பு தேவை, இது 400 சதவீத அதிகரிப்பு ஆகும். இது மிகப்பெரிய முதலீடு. நாங்கள் கையாளக்கூடிய நில அமைப்புகள், எங்களிடம் போதுமானதாக இல்லை. இங்கிலாந்து, ஜேர்மனி, ஐரோப்பா முழுவதும், எங்களிடம் போதுமானதாக இல்லை. எங்கள் கட்டளை மற்றும் கட்டுப்பாடு எங்கள் நீண்ட தூர ஆயுதங்களை மையப்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.
ஐரோப்பிய நேட்டோ சக்திகளால் “பாதுகாப்பு தொழில்துறை தளத்தை” கட்டியெழுப்புவதும், பொது கருவூலங்களை சூறையாடுவதும் மட்டுமே மீள்ஆயுதமயமாக்கலுக்கான ஒரே சாத்தியமான பாதையாக இருக்கிறது. ஸ்டார்மரின் தொழிற்கட்சி அரசாங்கம் வெளியிட்ட மூலோபாய பாதுகாப்பு மதிப்பாய்வு (SDR) ஒரு படி முன்னேறி, “அதிக விலை கொண்ட வழக்கமான உபகரணங்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்” என்று கூறுகிறது.