முன்னோக்கு

ட்ரம்பின் ஃபோர்ட் பிராக் முழக்கம்: அமெரிக்க மக்களுக்கு எதிரான போர் பிரகடனம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

வடக்கு கரோலினாவின் ஃபோர்ட் பிராக்கில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வருகிறார். செவ்வாய், ஜூன் 10, 2025 [AP Photo/Alex Brandon]

கடந்த செவ்வாய்கிழமை ஃபோர்ட் பிராக்கில் (Fort Bragg) டொனால்ட் ட்ரம்ப் ஆற்றிய உரை, அவரது தனிப்பட்ட கட்டுப்பாட்டின் கீழ் ஒரு இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவுவதற்காக கட்டவிழ்ந்துவரும் சதித்திட்டத்தின் ஒரு பெரிய விரிவாக்கத்தை குறிக்கிறது. அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவத் தளங்களில் ஒன்றில் நிகழ்த்தப்பட்ட ட்ரம்பின் ஒரு மணி நேர பாசிச மற்றும் பொய்யான கூச்சல், அமெரிக்க மக்களுக்கு எதிரான போர் பிரகடனத்தை தவிர வேறில்லை.

“அமெரிக்க இராணுவத்தை சவால் செய்ய முட்டாள்தனமாக இருப்பவர்கள், அசைக்க முடியாத வலிமை, அசைக்க முடியாத மனப்பான்மை மற்றும் தவிர்க்க முடியாத, மிகப்பெரிய சக்தியை எதிர்கொள்கிறார்கள்” என்று ட்ரம்ப் பெருமைபீற்றிக்கொண்டார். “அமெரிக்க மக்களை நீங்கள் அச்சுறுத்தத் துணிந்தால், ஒரு அமெரிக்க சிப்பாய் உங்களைத் துரத்திச் சென்று நசுக்கி, உங்களை மறதிக்கு அனுப்புவார் என்பதை நமது எதிரிகள் மீண்டும் மீண்டும் கற்றுக் கொள்வார்கள்” என்று அவர் கூறினார்.

உலகெங்கிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் பயன்படுத்தப்படும் வன்முறையான ஒடுக்குமுறை கருவி இப்போது உள்நாட்டிலும் பயன்படுத்தப்படும் என்று ட்ரம்ப் அறிவித்தார்: “கலிபோர்னியாவில் நடப்பதுபோல, நம் நாட்டில் படையெடுப்பாலும், மூன்றாம் உலக நாடுகளின் சட்டவிரோத செயல்களாலும், எமது நாடு அழிக்கப்படுவதை வேடிக்கை பார்ப்பதற்காக மட்டுமே பல தலைமுறை இராணுவ வீரர்கள் தொலைதூர கரைகளில் தங்கள் இரத்தத்தை சிந்தவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

லொஸ் ஏஞ்சல்ஸ் போராட்டங்களை “அமைதி, பொது ஒழுங்கு மற்றும் தேசிய இறையாண்மை மீதான ஒரு முழு அளவிலான தாக்குதல்” என்று விவரித்த அவர், இவை “நமது நாட்டின் மீதான ஒரு வெளிநாட்டு படையெடுப்பைத் தொடரும் நோக்கத்துடன்” வெளிநாட்டு கொடிகளை ஏந்திய கலகக்காரர்களால் நடத்தப்பட்டு வருவதாக அறிவித்தார். “ஒரு அமெரிக்க நகரத்தை ஒரு வெளிநாட்டு எதிரி ஆக்கிரமித்து கைப்பற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதுதான் அவர்கள்” என்று அவர் கூறி முடித்தார்.

லொஸ் ஏஞ்சல்ஸை “குழப்பம் மற்றும் ஒழுங்கின்மையின்” ஒரு “குப்பைக் குவியல்” என்று அழைத்த ட்ரம்ப், அதன் குடிமக்களை “விலங்குகள்” என்று வர்ணித்தார்.  பாலஸ்தீனியர்களை பாரிய படுகொலை செய்வதை நியாயப்படுத்த அதே வார்த்தையைப் பயன்படுத்திய இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கெலண்ட்டின் இனப்படுகொலை மொழியை ட்ரம்ப் பயன்படுத்துகிறார். இஸ்ரேலிய இராணுவம் காஸாவிற்கு செய்ததை லொஸ் ஏஞ்சல்ஸுக்கு செய்வது ஒரு அச்சுறுத்தலுக்கான ஒப்பாகும்.

ஒரு ஜனாதிபதியின் இந்தளவிலான பொய்கள் மற்றும் வன்முறை அச்சுறுத்தல்களுக்கு அமெரிக்க அரசியல் வரலாற்றில் எந்த முன்னுதாரணமும் இல்லாத நிலையில், ட்ரம்பின் வசைமாரி “என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை” என்ற விளைவை ஏற்படுத்தக்கூடும். ஆனால், ட்ரம்ப் ஒவ்வொரு வார்த்தையையும் அர்த்தப்படுத்துகிறார். மேலும் அவர் தனது வார்த்தைகளை செயல்களால் ஆதரிக்கிறார்.

அடக்குமுறை இயந்திரம் நாடு முழுவதும் முழு வீச்சில் இயங்கிக் கொண்டிருக்கிறது. சமீபத்திய அட்டூழியத்தில், நெப்ராஸ்காவின் ஒமாஹாவில் உள்ள க்ளென் வேலி உணவு நிறுவனத்தில் கிட்டத்தட்ட 100 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செவ்வாயன்று குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) முகவர்களால் துப்பாக்கி முனையில் அவர்களின் பணியிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, பின்னர் மூடிமறைக்கப்பட்ட பேருந்துகளில் ஏற்றப்பட்டு, அவர்களது குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டனர்.

நீதிமன்ற விசாரணைகளில் புலம்பெயர்ந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். சியாட்டில், சிக்காகோ, பிலடெல்பியா, வடக்கு வேர்ஜினியா மற்றும் நியூ யோர்க்கில் ICE முக்கிய நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சதித்திட்ட நடவடிக்கையின் மைய இடம் தலைநகரில் உள்ளது. ட்ரம்பின் 79 வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கான ஒரு “அணிவகுப்பு” என்ற சாக்குபோக்கில், ஆயிரக் கணக்கான துருப்புகள் மற்றும் போர் விமானங்களுடன் சேர்ந்து, இராணுவ வாகனங்கள் வாஷிங்டன் டிசிக்குள் குவிந்து கொண்டிருக்கின்றன. இந்த பலத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி, அரசியலமைப்பு ஜனநாயகத்தின் சாவு மணியாகவும், நடைமுறை ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவும் நோக்கத்தை கொண்டிருப்பவராகவும் உள்ளது.

கடந்த திங்களன்று, வெள்ளை மாளிகையில் இருந்து பேசிய ட்ரம்ப், “போராட்டத்தில் ஈடுபட விரும்புவோருக்கு, அவர்கள் மிகப் பெரிய படையை எதிர்கொள்ளப் போகிறார்கள்” என்று அச்சுறுத்தினார். அரசியலமைப்பின் முதல் திருத்தத்தை முற்றிலும் அவமதிக்கும் வகையில், “எதிர்ப்பு தெரிவிக்க விரும்பும் மக்கள் நமது நாட்டை வெறுக்கும் மக்கள்” என்றும் அவர் மேலும் கூறினார்.

ட்ரம்பின் நடவடிக்கைகள் மிகவும் அப்பட்டமாகிவிட்டதால், அவை மறுக்கவே முடியாத அளவுக்கு மாறிவிட்டன. கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசோம், ட்ரம்ப் “ஒரு சர்வாதிகாரி போல செயல்படுகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். கலிபோர்னியா மாநில அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கு, ட்ரம்பின் உத்தரவுகள் போஸ் கொமிடாடஸ் சட்டத்தை மீறுவதாகவும், அவர் தேசிய காவல்படை மற்றும் கடற்படையினருக்கு சட்டவிரோத உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகவும் தெளிவான சட்ட வழக்கை முன்வைக்கிறது.

ஆனால், ட்ரம்ப் நிர்வாகம் எதிர்க்க சபதம் செய்துள்ள நீதிமன்றங்களுக்கு மேல்முறையீடு செய்வதற்கு அப்பால், ட்ரம்பின் நடவடிக்கைகளைத் தடுக்க நியூசம் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் எதையும் முன்மொழியவில்லை.

“ட்ரம்பின் தலையீட்டிற்கு முன்பு கலிபோர்னியாவில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றும், இராணுவத்தைப் பயன்படுத்துவது பதட்டங்களை அதிகப்படுத்துகிறது என்றும், அதே நேரத்தில் “வளங்களை அவை உண்மையிலேயே தேவைப்படும் இடத்திலிருந்து திசை திருப்புகிறது” என்றும் நியூசம் புலம்புகிறார். போராட்டக்காரர்களைத் தாக்க நூற்றுக்கணக்கான கூடுதல் பொலிஸ் அதிகாரிகளை அவர் நிறுத்தியுள்ளார், இதன் மூலம் ட்ரம்பின் இராணுவ அணிதிரட்டலின் தவறான முன்மாதிரியை அவர் ஏற்றுக்கொள்கிறார்.

அனைத்திற்கும் மேலாக, ஜனநாயகக் கட்சித் தலைமை, ட்ரம்பின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு, குடியரசுக் கட்சியினரைப் போலவே அவர்கள் பாதுகாக்க ஆர்வமாக உள்ள முழு முதலாளித்துவ ஒழுங்கையும் சீர்குலைக்கும் என்று அஞ்சுகிறது.

ட்ரம்ப் மக்களின் கோபம் மற்றும் சீற்றத்தின் நெருப்பில் எண்ணெய் ஊற்றி வருகிறார். ட்ரம்ப் உரை நிகழ்த்திய அதேநாளில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் வெளிப்படுத்தப்பட்ட பாரிய எதிர்ப்பு ஏற்கனவே நாடெங்கிலும் வடிவம் எடுக்கத் தொடங்கி உள்ளது.

https://twitter.com/WSWS_Updates?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1932634565756981524%7Ctwgr%5E160166a3306c710462b30b34967f467e31323163%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.wsws.org%2Fen%2Farticles%2F2025%2F06%2F11%2Fzojf-j11.html

பல்லாயிரக்கணக்கான மக்கள் சிக்காகோ தெருக்களுக்கு வந்து ஆர்ப்பரித்தனர்; நியூ யோர்க், போஸ்டன் இன்னும் பிற நகரங்களில் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அத்துடன் லொஸ் ஏஞ்சல்ஸில் நடந்து கொண்டிருந்த எதிர்ப்புக்களும் தொடர்ந்து நடைபெற்றன.

எவ்வாறாயினும், தேவைப்படுவது ஒரு திசையும் மூலோபாயமும் ஆகும். தொழிலாள வர்க்கம் அதன் மகத்தான தொழில்துறை மற்றும் பொருளாதார சக்தியைப் பயன்படுத்த வேண்டும். ட்ரம்பின் ஆட்சிக் கவிழ்ப்பை நிறுத்த முழு தொழிலாள வர்க்கத்தின் பொது வேலைநிறுத்தத்தைத் தயாரிப்பதை நோக்கி போராட்டங்கள் இயக்கப்பட வேண்டும்.

அனைத்து இராணுவப் படைகளும் உடனடியாகக் வெளியேற்றப்பட வேண்டும், அமெரிக்க நகரங்களில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெற வேண்டும், அனைத்து புலம்பெயர்வு மக்கள் மீதான சோதனைகளையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும், மற்றும் ICE கெஸ்டபோவை கலைக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோர வேண்டும்.

ட்ரம்பின் சதித் திட்டத்திற்கு எதிரான தாக்குதல், தேசியம், இனம், பாலினம் மற்றும் ஏனைய அத்தனை பிளவுகளையும் கடந்து தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளையும் ஐக்கியப்படுத்த வேண்டும். புலம்பெயர்ந்தவர்களுக்கும் உள்நாட்டில் பிறந்தவர்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் காட்டப்படக் கூடாது. அமெரிக்கா என்பது புலம்பெயர்ந்தோரின் ஒரு நாடாகும். மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அமெரிக்க தொழிலாளர் தொகுப்பில் மிகப்பெரிய மற்றும் இன்றியமையாத பகுதியாக உள்ளனர். அவர்களின் பாதுகாப்பு, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் இலட்சியமாக மாற வேண்டும்.

இந்தப் போராட்டம் சர்வதேசரீதியானதாக இருக்க வேண்டும். அமெரிக்காவில் நடக்கும் சம்பவங்கள் தொழிலாளர்களின் உரிமைகள் மீதான பரந்த உலகந்தழுவிய தாக்குதலின் ஒரு பகுதியாகும். தொழிலாள வர்க்கத்தின் மீதான ஓர் உலகளாவிய தாக்குதலுக்கான ட்ரம்பின் சமிக்ஞைக்கு விடையிறுப்பாக உலகெங்கிலும் நல்லிணக்க நடவடிக்கைகள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.

முன்முயற்சி கீழிருந்து வர வேண்டும். அரசு மற்றும் ஆளும் வர்க்கத்தின் இரு கட்சிகளுடனும் முழுமையாக இணைக்கப்பட்ட AFL-CIO தொழிற்சங்க எந்திரம் முடங்கிப் போய் உடந்தையாக உள்ளது. தொழிலாளர்களை அணிதிரட்ட இது எதுவும் செய்யவில்லை. ஆனால், தொழிலாளர்கள் செயல்பட வேண்டும். அவர்களின் சக-தொழிலாளர்களின் பாதுகாப்பை ஒழுங்கமைக்கவும் மற்றும் ஒரு சக்திவாய்ந்த எதிர்-தாக்குதலைத் தொடங்கவும் தங்கள் தொழிற்சங்கங்களின் வளங்கள் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் கோர வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சியும் மற்றும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியும் (IWA-RFC), தொழில்துறை, தொழிற்சாலை மற்றும் பணியிடத்தின் ஒவ்வொரு துறையிலும் உள்ள தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தொழிற்சங்க எந்திரத்திலிருந்து சுயாதீனமாக, சாமானிய தொழிலாளர் குழுக்களை ஒழுங்கமைக்க அழைப்பு விடுக்கின்றனர். ஜனநாயக உரிமைகள் மீதான இந்த பாரிய தாக்குதலுக்கு எதிராக ஒவ்வொரு ஆலையும், அலுவலகம் மற்றும் சுற்றுப்புறமும் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பின் மையமாக மாற வேண்டும்.

Loading