முன்னோக்கு

லொஸ் ஏஞ்சல்ஸுக்கு கடற்படையினரை அனுப்புவதன் மூலம் ட்ரம்ப் சதித்திட்டத்தை தீவிரப்படுத்துகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

மத்தியிலுள்ள கூட்டாட்சி அரசின் குடியேற்ற அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்குப் பின்பு, கலிபோர்னியாவின் காம்ப்டனில் நடந்த போராட்டத்தின் போது சட்ட அமலாக்க படையினர் நிலைகொண்டுள்ளனர். ஜூன் 7, 2025 சனிக்கிழமை [AP Photo/Ethan Swope]

இந்த வார தொடக்கத்தில், அமெரிக்காவில் ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான திட்டமிட்ட சதி வேகமாக கட்டவிழ்ந்து வருகிறது. ஒரு திட்டமிட்ட மற்றும் நடந்து கொண்டிருக்கும் சதியில், டொனால்ட் ட்ரம்ப் முற்றிலும் புதிய வர்க்க ஆட்சியின் கட்டமைப்பை உருவாக்கி வருகிறார்.

லொஸ் ஏஞ்சல்ஸில் இடம்பெற்றுவரும் நிகழ்வுகள் நாடு தழுவிய நடவடிக்கையின் மையப் புள்ளியாக உள்ளன. திங்களன்று, வெள்ளை மாளிகை 700 அமெரிக்க கடற்படையினரை - வரலாற்று ரீதியாக இரக்கமற்ற காலனித்துவ ஒடுக்குமுறையுடன் தொடர்புடைய அமெரிக்க இராணுவத்தின் ஒரு பிரிவை - நாட்டின் இரண்டாவது பெரிய நகரத்திற்கு அனுப்புவதாக அறிவித்தது. இது, கலிபோர்னியாவின் தேசிய காவல்படையை கூட்டாட்சிமயமாக்கவும், கடந்த வாரம் சுற்றி வளைக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுங்க அமலாக்கத் துறையின் (ICE) சிறை உட்பட, கூட்டாட்சி அரச கட்டிடங்களைப் பாதுகாக்கும் சாக்குப்போக்கின் கீழ் 2,000 துருப்புக்களை நிலைநிறுத்தவும், ட்ரம்ப் சனிக்கிழமை இரவு உத்தரவிட்டதைத் தொடர்ந்து வருகிறது.

லொஸ் ஏஞ்சல்ஸுக்கு கிழக்கே 140 மைல்கள் தொலைவில் உள்ள மொஜாவே பாலைவனத்தில் உள்ள ட்வென்டினைன் பாம்ஸ் இராணுவத் தளத்தில் இருந்து கடற்படையினர் நிறுத்தப்படுகிறார்கள். தேசிய காவல்படை துருப்புக்களின் எண்ணிக்கையை 4,000 ஆக இரட்டிப்பாக்கும் திட்டங்களையும் ட்ரம்ப் ஆட்சி அறிவித்துள்ளது.

அமெரிக்க வீதிகளில் இராணுவப் படையைப் பயன்படுத்துவதை இயல்பாக்கும் முயற்சியில், ஒரு பெரிய அதிகரிப்பைக் குறிக்கிறது.

அமெரிக்க வீதிகளில் துருப்புக்களை குவிப்பதை இயல்பாக்குவதற்கான முயற்சியில், செயலில் உள்ள கடற்படையினரின் பணியமர்த்தல் ஒரு பெரிய அதிகரிப்பைக் குறிக்கிறது. இது 1878ம் ஆண்டு Posse Comitatus சட்டத்தை நேரடியாக மீறுவதாகும். இந்தச் சட்டம், உள்நாட்டில் சட்ட ஒழுங்கைப் பராமரிக்க இராணுவத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்கிறது. லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பிற நகரங்களில் நடந்துவரும் போராட்டங்களை ஒரு “கிளர்ச்சி” என்று ட்ரம்ப் அதிகாரிகள் பலமுறையும் அபத்தமாகவும் குறிப்பிட்டுவரும் நிலையில், அவர்கள் இதுவரை 1807 ஆம் ஆண்டு கிளர்ச்சிச் சட்டத்தை செயல்படுத்துவதைத் தவிர்த்து வருகின்றனர். அதற்கு பதிலாக, அமெரிக்காவிற்குள் துருப்புகளை நிலைநிறுத்துவதற்கு ஜனாதிபதிக்கு உள்ளார்ந்த அதிகாரம் இருப்பதாக அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தேசிய காவல்படையை கூட்டாட்சிமயமாக்கும் ட்ரம்பின் சனிக்கிழமை பிரகடனம், லொஸ் ஏஞ்சல்ஸ் அல்லது கலிபோர்னியா குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. அதற்கு பதிலாக, பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்தை “மாநிலங்களின் ஆளுநர்களுடன்” கலந்தாலோசிக்குமாறு அது அறிவுறுத்துகிறது. மேலும் தேவைப்பட்டால் அவருக்கு, கூட்டாட்சியின் சொத்துக்களைப் பாதுகாக்க “போதுமான எண்ணிக்கையிலும், அவரது விருப்பப்படியும், ஆயுதப் படைகளின் வேறு எந்த பிரிவுகளையும்” நிலைநிறுத்த அவருக்கு அதிகாரம் அளிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாட்டின் எந்த இடத்திலும் வரம்பற்ற எண்ணிக்கையிலான துருப்புக்களை எப்போதும் குவிக்கலாம்.

கடந்த திங்களன்று பிரசுரிக்கப்பட்ட நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரை ஒன்று, வலதுசாரி அமெரிக்க தொழில் நிறுவனத்தைச் சேர்ந்த கோரி ஷேக்கை மேற்கோள் காட்டி, “அமெரிக்க இராணுவத்தால் உள்நாட்டு சட்ட அமலாக்கத்தின் மீதான கட்டுப்பாடுகளை மீறுவது சாத்தியம் என்ற புதிய சட்டக் கோட்பாட்டை ட்ரம்ப் நிர்வாகம் சோதித்து வருகிறது” என்று குறிப்பிட்டார்.

நேற்று, அமெரிக்க இராணுவத்தின் 250 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கருத்துக்களை வழங்க ட்ரம்ப் வட கரோலினாவில் உள்ள பாரிய இராணுவத் தளமான ஃபோர்ட் பிராக்கிற்கு சென்றுள்ளார். கடந்த ஜனவரியில் ஆட்சிக்கு திரும்பிய பின்னர் ட்ரம்ப் இந்த தளத்திற்கு வருகை தருவது இதுவே முதல் தடவையாகும். அவருடன் சதித்திட்ட நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதுக்கு உதவிபுரிந்துவரும், அவரது நிர்வாகத்தில் இருக்கும் பாசிச நபர்களில் ஒருவரான பீட் ஹெக்செத்தும் இருப்பார்.

இந்த ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வுகள், ஜூன் 14, வருகின்ற சனிக்கிழமை, வாஷிங்டன் டிசி வீதிகளில் ஒரு பாரிய இராணுவ அணிதிரட்டலுடன் உச்சத்தை அடையும். அப்போது நூற்றுக்கணக்கான டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களின் ஆதரவுடன் 7,000 க்கும் அதிகமான துருப்புகள், ட்ரம்பின் 79 வது பிறந்தநாளுடன் பொருந்திய ஒரு அணிவகுப்பில் பங்கெடுக்க உள்ளனர். ரயிலில் கொண்டு வரப்பட்ட டாங்கிகளின் ஒரு தொடரணி ஏற்கனவே நாட்டின் தலைநகருக்கு வரத் தொடங்கிவிட்டது.

பாரிய இராணுவ அணிவகுப்புடன் ட்ரம்பின் தனிப்பட்ட பிறந்தநாள் கொண்டாட்டமும் ஒரே நேரத்தில் நடக்க இருப்பது தற்செயலான விடயமல்ல. ட்ரம்ப் அமெரிக்க இராணுவத்திற்குள்ளாக ஒரு ஃபியூரர் கொள்கைக்கு (நாஜித் தலைவர் - Führer) நிகரான ஒன்றை ஸ்தாபிக்க முனைந்து வருகிறார்: அரசியலமைப்பிலோ அல்லது படைத்துறைசாரா சிவிலியன் மேற்பார்வையிலோ அல்ல, மாறாக அவருக்கு தனிப்பட்ட விசுவாசத்தில் வேரூன்றிய ஒரு கட்டளை அமைப்பை நிறுவ முயல்கிறார். இந்தக் கட்டமைப்பில், இராணுவம் அவரது இராணுவமாக முன்வைக்கப்படுகிறது. நாஜி ஜேர்மனியில், இராணுவ அதிகாரிகள் ஜேர்மன் அரசுக்கு அல்ல, மாறாக நேரடியாக அடால்ஃப் ஹிட்லருக்கு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டியிருந்தது.

அமெரிக்காவில் ஒரு புதிய அரசியல் கட்டமைப்பு நிறுவப்பட்டு வருகிறது. அதில் மத்தியிலுள்ள கூட்டாட்சி அரசாங்கம் எந்தவிதமான சட்டபூர்வ கட்டுப்பாடுகளுக்கும் அப்பாற்பட்டு செயல்பட்டு வருவதுடன், முன்னெப்போதும் இல்லாத வகையில் வெட்கமின்றி சட்டவிரோத மற்றும் அரசியலமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசியல் அலுவலகங்கள், நீதிமன்றங்கள், சட்ட நிறுவனங்கள், ஊடகங்கள் அல்லது தெருப் போராட்டங்களின் போது, இந்த நடவடிக்கைகளை விமர்சிப்பவர்கள் அல்லது எதிர்ப்பவர்கள் முதலாளித்துவ அரசின் அடக்குமுறை சக்தியை எதிர்கொள்வார்கள்.

700,000ம் பேரை, பெரும்பாலும் இலத்தீன் மற்றும் புலம்பெயர்ந்த சேவை மற்றும் பொதுத்துறை தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு தொழிற்சங்கமான SEIU வின் கலிபோர்னியா தலைவர் டேவிட் ஹூர்டா கைது செய்யப்பட்டமை, கட்டவிழ்ந்து வரும் ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் அடிப்படை வர்க்க மற்றும் பாசிச குணாம்சத்தை வெளிப்படுத்துகிறது. கடந்த வார இறுதியில் ஹுர்டா சிறையில் அடைக்கப்பட்டு, 50,000ம் டாலர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டார். குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறையினரின் (ICE) ஒரு வாகனத்தை தடுக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அவர் எதிர்கொண்டார். இது வெறுமனே புலம்பெயர்ந்தோர் அல்லது போராட்டக்காரர்கள் மீதான ஒரு ஒடுக்குமுறை அல்ல, மாறாக ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளை அழித்தொழிப்பதற்கான ஒரு உந்துதலாகும்.

ஒரு முக்கிய தொழிற்சங்க அதிகாரி மீதான இந்த நேரடித் தாக்குதல் இருந்தபோதிலும், SEIU அல்லது AFL-CIO ஆகிய தொழிற்சங்கங்கள் ஹூர்ட்டாவை விடுவிக்கவும், அவர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் கைவிடக் கோரியும், வேலைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. AFL-CIO இன் ஒரே அதிகாரப்பூர்வ பதில், அதன் 14 மில்லியன் உறுப்பினர்கள் காங்கிரசுக்கு கடிதங்கள் எழுதுமாறு பரிதாபகரமான முறையில் வேண்டுகோளை விடுப்பதாகும். தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள் தங்களில் ஒருவரைப் பாதுகாக்க எதுவும் செய்யாவிட்டால், ட்ரம்பின் போலீஸ் மற்றும் இராணுவத் தாக்குதலுக்கு அவர்கள் பலியாகி வந்தால், சாதாரண தொழிலாளர்களால் அவர்களிடம் இருந்து எதனை எதிர்பார்க்க முடியும்?

ட்ரம்ப் மற்றும் அவரது உள்வட்டமும் —ஹெக்செத், வெள்ளை மாளிகை பணியாளர்களின் துணைத் தலைவர் ஸ்டீபன் மில்லர், DHS செயலர் கிறிஸ்டி நொயெம், அட்டார்னி ஜெனரல் பாம் போண்டி மற்றும் FBI இயக்குனர் காஷ் பட்டேல்— ஒரு பாசிச இராணுவ ஆட்சிக்குழுவை உருவாக்கி வருகின்றனர்.

ஆனால், அமெரிக்காவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஜனநாயகக் கட்சியோ அல்லது பெருநிறுவன ஊடகங்களோ பகிரங்கமாக எடுத்துரைக்கப் போவதில்லை. இது ஒரு சதித்திட்டம். ஆனால், கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் போன்ற முக்கிய ஜனநாயகக் கட்சியினரை, அவரது எதிர்ப்புக்காக கைது செய்ய ட்ரம்ப் அழைப்பு விடுத்தாலும் கூட, அவர்கள் அதன் பெயரை உச்சரிக்கத் துணியவில்லை.

பில்லியனர் ஜெஃப் பெஸோஸுக்கு சொந்தமான வாஷிங்டன் போஸ்ட், பெருநிறுவன செல்வந்த தன்னலக்குழுவின் மேலாதிக்கப் பிரிவுகளின் பதிலை வழங்கியது. கடந்த திங்களன்று வெளிவந்த ஒரு தலையங்கத்தில், போஸ்ட் ட்ரம்பின் நடவடிக்கைகளை ஒரு சதித்திட்டம் என்று அடையாளம் காண மறுத்தது. அதற்கு பதிலாக, பதட்டங்கள் தீவிரமடைந்ததற்காக “இரு தரப்பினரையும்” குற்றஞ்சாட்டியது. ட்ரம்ப் கடற்படையினரைப் பயன்படுத்துவதை லேசாக விமர்சிக்கும் அதேவேளையில், அந்த தலையங்கம் “ஒழுங்கை மீட்டெடுக்க” கூட்டாட்சியானது, துருப்புக்களை பயன்படுத்துவதை நியாயப்படுத்துகிறது, அமெரிக்க நகரங்களுக்குள் துருப்புகளை அனுப்புவதற்கான ஜனாதிபதியின் சட்டபூர்வ அதிகாரத்தைப் பாதுகாக்கிறது மேலும் “கட்டுக்கடங்காத போராட்டக்காரர்கள் வெளியேறும் பாதையை எடுக்க வலியுறுத்துகிறது.”

தீவிரப்படுத்தலுக்கான ஒரு இடைவிடாத தர்க்கம் இப்போது செயல்படுகிறது. ட்ரம்ப் எவ்வளவு தூரம் செல்கிறாரோ, அந்தளவுக்கு அவர் தனது ஜனாதிபதி பதவியையும் - தனது சொந்த அரசியல் உயிர்வாழ்வையும் - இந்த நடவடிக்கையின் வெற்றியிலும் பணயம் வைக்கிறார்.

இந்த சூழ்நிலையில், ட்ரம்பின் சதித்திட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க ஜனநாயகக் கட்சி, நீதிமன்றங்கள் அல்லது தொழிற்சங்க அதிகாரத்துவத்தைச் சார்ந்திருப்பது என்பது மிகவும் வெட்கக்கேடான மற்றும் திவாலான கொள்கையாக இருக்கும்.

காங்கிரஸிற்குள், ட்ரம்பை நீக்குவதற்கான எந்த கோரிக்கையும் இல்லை. ஜனநாயகக் கட்சி எதுவும் செய்யவில்லை. ஜனநாயகக் கட்சியினர் அனைவரும் தனிப்பட்ட முறையில் அறிந்ததை பகிரங்கமாக கூட ஒருபோதும் கூற மாட்டார்கள்: லொஸ் ஏஞ்சல்ஸ் சம்பவங்கள் ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதை நோக்கிய ஒரு பெரிய அடியைக் குறிக்கின்றன. அவர்களின் அழைப்புகள் தொழிலாள வர்க்கத்தை நோக்கி அல்ல, மாறாக காங்கிரஸின் குடியரசுக் கட்சி அங்கத்தவர்களை —ஏன் ட்ரம்ப் நிர்வாகத்திற்குள்ளேயே கூட உள்ள அதிகாரிகளை நோக்கியும்கூட— திருப்பி விடப்படுகின்றன.

ஆளுநர் நியூசோம், அவரது பங்கிற்கு, லொஸ் ஏஞ்சல்ஸ் வீதிகளில் இன்னும் 800 போலிஸை நிலைநிறுத்த சூளுரைப்பதன் மூலமாக, அவரை தனிப்பட்ட முறையில் கைது செய்வதற்கான ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு பதிலளித்துள்ளார். அங்கு அவர்கள், தற்போது எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு எதிரான கலகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்பொழுது கட்டவிழ்ந்து வரும் தாக்குதல், ஆளும் தன்னலக்குழு அதன் நலன்களை செயல்படுத்த விரும்பும் பொறிமுறையாகும். அமெரிக்காவில் பரந்த மற்றும் முன்னெப்போதிலும் பார்க்க அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மை மட்டங்கள் ஜனநாயக ஆட்சி வடிவங்களுடன் ஒருபோதும் பொருந்திப் போகாது என்பதைக் காட்டுகின்றன. புலம்பெயர்ந்தோர் இத்தாக்குதலின் முதல் இலக்காக இருந்தாலும், இத்தாக்குதல் முழுத் தொழிலாள வர்க்கத்தையும் இலக்கு வைத்துள்ளது.

கட்டவிழ்ந்து வரும் ட்ரம்பின் சதித்திட்டத்துக்கு நாடெங்கிலும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. ஆனால், இதுவரையில், அது தன்னெழுச்சியாகவும், அரசியல் அமைப்பாக்கப்படாமலும் உள்ளது. இந்நிலை மாற வேண்டும்.

மக்கள்தொகையின் பரந்த பெரும்பான்மையினரான தொழிலாள வர்க்கம் அதைத் தடுக்கும் சக்தியைக் கொண்டுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியக் குழு மற்றும் உலக சோசலிச வலைத்தளத்தின் ஆசிரியர் குழுவின் அறிக்கை நேற்று விளக்கியது போல, “ஒரு பொது வேலைநிறுத்தத்தின் அவசியம் முன்பிலும் பார்க்க மேலும் தெளிவாகி வருகிறது—ஆனால் அத்தகைய நடவடிக்கை தன்னிச்சையாக வெளிப்படாது. அது தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக, போராடும் அமைப்புகளைக் கட்டியெழுப்புவதன் மூலமாக தயாரிப்பு செய்யப்பட்டு வழிநடத்தப்பட வேண்டும்”.

லொஸ் ஏஞ்சல்ஸில் ட்ரம்பின் நடவடிக்கைகள் ஏற்கனவே நாடெங்கிலும் எதிர்ப்பு போராட்ட நடவடிக்கைகளைத் தூண்டியுள்ளதுடன், பத்து மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களிடையே பரந்த கோபத்தையும் தூண்டியுள்ளது. இப்போது தேவைப்படுவது என்னவென்றால், வளர்ந்து வரும் இந்த வெகுஜன உணர்வுகளுக்கு ஒரு ஸ்தூலமான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட வடிவத்தைக் கொடுப்பதாகும்.

சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் விடுத்த அழைப்பை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்: முன்முயற்சி கீழிருந்து வர வேண்டும்! பாரிய எதிர்ப்பிற்கான அடித்தளத்தை தயார் செய்ய ஒவ்வொரு தொழிற்சாலையிலும், வேலையிடத்திலும் மற்றும் அண்டை அயலிலும் சாமானிய தொழிலாளர் குழுக்களை ஸ்தாபிக்க வேண்டும். கூட்டு நடவடிக்கையை ஒழுங்கமைக்கவும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சக்திவாய்ந்த எதிர்த்தாக்குதலைக் கட்டியெழுப்பவும் நாடெங்கிலும் உள்ள ஆலைகள், பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் அவசர கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

Loading