மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வீதிகளில் இராணுவம் குவிக்கப்படுவது, ட்ரம்ப் நிர்வாகத்தின் நன்கு தயாரிக்கப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதியின் பண்புரீதியிலான தீவிரப்பாட்டைக் குறிக்கிறது. எதிர்ப்பு போராட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் சாக்கில், லொஸ் ஏஞ்சல்ஸின் வீதிகளில் துருப்புக்கள் ரோந்து செல்லும் அதே வேளையில், இந்த நடவடிக்கையின் உண்மையான குவிமையம் வெள்ளை மாளிகையாகும்.
சிலி, பிரேசில், ஆர்ஜென்டினா மற்றும் ஏனைய நாடுகளிலும் 1970 களில் இலத்தீன் அமெரிக்கா எங்கிலும் திணிக்கப்பட்ட கொடூரமான இராணுவ சர்வாதிகாரங்களுக்கும், இதற்கும் வரலாற்று சமாந்தரங்கள் உள்ளன. இந்த நாடுகளில் இருந்த கட்டமைப்பு நிறுவனங்கள் மூலம் ஆட்சி செய்ய முடியாது இருந்த முதலாளித்துவ அரசாங்கங்கள், சமூக நெருக்கடிகளுக்கு பாரிய அடக்குமுறை, காணாமல் ஆக்குதல் மற்றும் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டதன் மூலம் பதிலளித்தன. எவ்வாறெனினும், இதில் சம்பந்தப்பட்டிருப்பது இராணுவம் ஜனாதிபதியை தூக்கிவீசுவது அல்ல, மாறாக பதவியில் இருக்கும் ஜனாதிபதி அரசியலமைப்பை தூக்கியெறிவது பற்றியதாகும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நிலவரப்படி நிலைமை இதுதான்:
- சனிக்கிழமை இரவு, கலிபோர்னியாவின் தேசிய காவல்படையை மத்தியிலுள்ள கூட்டாட்சியின் படையாக்குவதற்கான உத்தரவை ட்ரம்ப் வழங்கினார். இந்த நடவடிக்கையை ஜனநாயகக் கட்சியை சேர்ந்த மாநில ஆளுநர் கவின் நியூசோம் எதிர்த்தார். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, கலிபோர்னியா இராணுவ தேசிய காவல்படையின் மிகப்பெரிய போர்ப் பிரிவான 79வது காலாட்படை பிரிகேட் போர் குழுவில் இருந்து சுமார் 2,000ம் துருப்புக்கள் நகரத்திற்கு அனுப்பப்பட்டனர்.
- அமெரிக்காவின் வடக்கு கட்டளைப் பிரிவு, லொஸ் ஏஞ்சல்ஸில் சுமார் 500 செயலூக்கமான கடற்படையினரை நிலைநிறுத்தத் தயாராக இருப்பதாகக் கூறுகிறது. பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் சமூக ஊடகங்களில் “கேம்ப் பெண்டில்டனில் உள்ள செயலூக்கமான கடற்படையினரை” இப்பகுதிக்கு அனுப்ப அச்சுறுத்தியுள்ளார். 1807 கிளர்ச்சி சட்டத்தைக் கையிலெடுப்பதற்கான திட்டங்களை ட்ரம்ப் மீண்டும் மீண்டும் சமிக்ஞை செய்துள்ளார். இது, இராணுவத்தை நாடெங்கிலும் நிலைநிறுத்தவும் மற்றும் நடைமுறையளவில் இராணுவச் சட்டத்தை ஸ்தாபிக்கவும் ஜனாதிபதிக்கு பரந்த அதிகாரங்களை வழங்குகிறது.
- ட்ரம்ப் நிர்வாகத்தின் பாசிச நிகழ்ச்சி நிரலின் சிற்பியான ஸ்டீபன் மில்லர், தன்னிச்சையான, உள்ளூர்மயமான மற்றும் பெருமளவில் அமைதியான ஆர்ப்பாட்டங்களை “வன்முறையான கிளர்ச்சி” என்று முத்திரை குத்தியுள்ளார். இது, கிளர்ச்சி சட்டத்தைக் கையிலெடுப்பதற்கான தயாரிப்பின் ஒரு தெளிவான அறிகுறியாகும். கடந்த மாதம் தான், மில்லர் அறிவிக்கையில், ஆட்கொணர்வு மனுவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்து நிர்வாகம் “தீவிரமாக பரிசீலித்து வருகிறது” என்று அறிவித்தார். இது, அடிப்படை அரசியலமைப்பில் வழங்கப்பட்ட பாதுகாப்புகளை விளைபயனுள்ள விதத்தில் ரத்து செய்யும் ஒரு நடவடிக்கையாகும்.
- ட்ரம்ப் நிர்வாகம் ஏற்கனவே கட்டவிழ்த்துவரும் மிருகத்தனமான அடக்குமுறை மற்றும் கைதுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு வன்முறை ஒடுக்குமுறையை தயாரித்து வருகிறது. கடந்த சனியன்று NBC செய்தி நிறுவனத்துக்கு கருத்துரைக்கையில், “எல்லைக்கான சிறப்பு அதிகாரி” ரொம் ஹோமன், “இந்த வன்முறையை அடக்கவில்லை என்றால், யாரோ ஒருவர் இறக்கப் போகிறார், அது வாழ்க்கையில் ஒரு உறைய வைக்கும் உண்மை” என்று அறிவித்தார்.
- சர்வதேச சேவை ஊழியர் சங்கத்தின் (SEIU) கலிபோர்னியாவின் தலைவரான டேவிட் ஹூர்டா எதிர்ப்பு போராட்டங்களின் போது, கைது செய்யப்பட்டு, தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். SEIU கலிபோர்னியா மாநிலம் முழுவதும் 700,000ம் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது முழுத் தொழிலாள வர்க்கத்தையும் இலக்கு வைக்கும் பாரிய ஒடுக்குமுறையின் அறிகுறியாகும்.
- ட்ரம்பும் அவரது கூட்டாளிகளும் இன்னும் அதிக வன்முறையான மற்றும் எரிச்சலூட்டும் மொழியைப் பயன்படுத்தி வருகின்றனர். சமூக ஊடகங்களில் ட்ரம்ப், “தீவிர இடது” எதிர்ப்பு போராட்டக்காரர்களை “தூண்டிவிடுபவர்கள் மற்றும் பெரும்பாலும் பணம் பெற்று தொல்லை கொடுப்பவர்கள்” என்றும், அவர்கள் “பொறுத்துக் கொள்ளப்பட மாட்டார்கள்” என்றும் ஒரு பாசிசப் பதிவை வெளியிட்டார். கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசமை “நியூஸ்கம்” என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையின் (ICE) நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு அரசு அதிகாரிகளையும் கைது செய்ய ட்ரம்ப்பின் அதிகாரிகள் அச்சுறுத்தியுள்ளனர்.
நடந்து கொண்டிருப்பது லொஸ் ஏஞ்சல்ஸுடன் நின்றுவிடப் போவதில்லை. நியூ யோர்க் டைம்ஸ் தலையங்கம் ஒன்று, நீதிக்கான பிரென்னென் மையத்தின் சுதந்திரம் மற்றும் தேசிய பாதுகாப்பு திட்டத்தின் மூத்த இயக்குனர் லிசா கொய்டெய்ன் கருத்துக்களை மேற்கோளிடுகிறது. தேசிய பாதுகாப்புப் படையை செயல்படுத்தும் ட்ரம்பின் உத்தரவு, “குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எதிரான போராட்டங்கள் நடக்கும் அல்லது நிகழ வாய்ப்புள்ள நாட்டின் எந்த இடத்திலும், போராட்டக்காரர்கள் முற்றிலும் அமைதியாக இருந்தாலும் கூட, துருப்புகளை நிலைநிறுத்த அங்கீகாரம் அளிக்கிறது” என்று அவர் குறிப்பிட்டார். அதாவது, இது நாடு முழுவதும் இராணுவச் சட்டத்தை கொண்டு வருவதற்கான தயாரிப்பாகும்.
1964 ஆம் ஆண்டு வெளியான மே மாதத்தில் ஏழு நாட்கள் என்ற திரைப்படம், அமெரிக்க அரசாங்கத்தைக் கைப்பற்ற ஒரு இராணுவ-அரசியல் சதிக்குழுவின் சதியை சித்தரிக்கிறது. மாற்றப்பட வேண்டியதை மாற்றுவதற்கான இதேபோன்ற செயல்முறை தற்போது நடந்து வருகிறது.
ஜூன் 7 ஆம் தேதி லொஸ் ஏஞ்சல்ஸுக்கு தேசிய காவல்படையை அனுப்பியதைத் தொடர்ந்து, ஏழு நாட்களுக்குப் பிறகு வாஷிங்டன் டிசி இல் ஒரு பிரமாண்டமான இராணுவ நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி ஜூன் 14 ஆம் தேதி ட்ரம்பின் பிறந்த நாளன்று திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்விற்கு, 6,600 க்கும் மேற்பட்ட துருப்புக்கள், 150 இராணுவ வாகனங்கள் மற்றும் 50 ஹெலிகாப்டர்கள் தலைநகருக்கு கொண்டு வரப்பட உள்ளன.
இந்தப் படைகள் நிலைகொண்டவுடன் நாட்டின் தலைநகரை விட்டு படைகள் வெளியேறிவிடும் என்று நம்புவது ஆபத்தான அப்பாவித்தனமாகும். பகிரங்கமாக ஆட்சிக்கவிழ்ப்பு சதியை நடத்தி வரும் ஒரு ஜனாதிபதியால் அரசாங்க இருக்கையில் ஒரு இராணுவமயமாக்கப்பட்ட அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஞாயிறன்று, லொஸ் ஏஞ்சல்ஸுக்குள் துருப்புகள் நுழைந்தபோது, ட்ரம்ப் மேரிலாந்தில் உள்ள கேம்ப் டேவிட்டுக்கு பின்வாங்கினார். இது “அதிபர்களின் பின்வாங்கல்” என்று விவரிக்கப்பட்டது. மூடிய கதவுகளுக்குப் பின்னால், இப்பொழுது ஒரு பாதுகாப்பான கட்டளைத் தளமாக செயல்படும் ஒரு இடத்தில் இருந்துகொண்டு, அவர் தனது உயர்மட்ட லெப்டினன்ட்களுடன் ஆலோசனை நடத்தி வருவதோடு, தனது தாக்குதலின் அடுத்த கட்டங்களை தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறார்.
இப்போது கட்டவிழ்ந்து வரும் நிகழ்வுகள் நீண்டகால திட்டங்களை நிறைவேற்றுகின்றன. ஜோர்ஜ் ஃபுளோய்ட்டை பொலிஸ் படுகொலை செய்ததைத் தொடர்ந்து நாடெங்கிலும் வெடித்த பாரிய போராட்டங்களுக்கு விடையிறுப்பாக ட்ரம்ப் முன்னதாக ஜூலை 2020 இல் உள்நாட்டில் இராணுவத்தை நிலைநிறுத்த முனைந்தார். அந்த நேரத்தில், கிளர்ச்சி சட்டத்தை கையிலெடுப்பதற்கான அவரது அழுத்தம் இராணுவ ஸ்தாபகத்திற்குள்ளேயே எதிர்ப்பை சந்தித்தது. அப்போதைய முப்படைகளின் தலைமைத் தளபதியான ஜெனரல் மார்க் மில்லே, ட்ரம்பின் திட்டங்களில் இருந்து இராணுவத்தை தூர விலக்கி வைத்தார். பாதுகாப்புச் செயலர் மார்க் எஸ்பரும் இதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தார்.
இந்த அனுபவத்தில் இருந்து ட்ரம்ப் படிப்பினைகளை பெற்றுள்ளார். தன்னுடைய சர்வாதிகார நோக்கங்களுக்கு எதிரான எந்த உள் எதிர்ப்பையும் அகற்றிவிட தீர்மானகரமாக இருக்கும் அவர், தன்னுடைய நிர்வாகத்தின் மிக வெளிப்படையான பாசிச பிரமுகர்களில் ஒருவரான பீட் ஹெக்சேத்தை பாதுகாப்பு மந்திரி பதவிக்கு உயர்த்தியுள்ளார். ஹெக்சேத் இப்பொழுது ஆயுதப் படைகள் வெளிநாட்டு எதிரிகளுக்கு எதிராக அல்லாமல், அமெரிக்க மக்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு தயாராக இருக்கும் ஒரு தருணத்தில், அவற்றின் மீது அதிகாரம் செலுத்துகிறார்.
2024 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, ட்ரம்ப் “முதல் நாளில்” ஒரு சர்வாதிகாரியாக செயல்படுவேன் என்று அறிவித்தார். மேலும் அவர் வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய தருணத்திலிருந்து இந்த உறுதிமொழியை செயல்படுத்த நகர்ந்துள்ளார். பதவியேற்ற முதல் நாளில், ட்ரம்ப் ஒரு “தேசிய அவசரகால நிலையை” அறிவித்ததுடன், கிளர்ச்சி சட்டத்தை செயல்படுத்தலாமா என்பது குறித்த பரிந்துரைகள் உட்பட தொடர்ச்சியான நிர்வாக உத்தரவுகளைத் தயாரிக்குமாறு அவர் ஆலோசகர்களுக்கு உத்தரவிட்டார். அதற்குப் பின்னர் அவர் எல் சல்வடோரில் உள்ள பாரிய சிறை வளாகத்திற்கு ஏராளமானவர்களை நாடுகடத்துவதற்கு 1798 இன் அன்னிய எதிரிகள் சட்டத்தை கையிலெடுத்தார்.
எப்போதும் போல, ட்ரம்ப் ஜனநாயகக் கட்சியின் உடந்தை மற்றும் பொறுப்பற்ற தன்மையை கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார். லொஸ் ஏஞ்சல்ஸில் இராணுவத்தை குவித்ததிற்கு விடையிறுப்பாக, ஜனநாயகக் கட்சி ஆளுநர்களின் ஒரு குழு கோழைத்தனமான மற்றும் பற்களற்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ட்ரம்பின் நடவடிக்கைகளை ஒரு “எச்சரிக்கையளிக்கும் அதிகார துஷ்பிரயோகம்” என்றும், அமெரிக்க கடற்படையினரை அமெரிக்க நகர்ப்புற சுற்றுப்புறங்களுக்கு அனுப்புவது நமது இராணுவத்தின் பணியை சமரசம் செய்து “பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கும்” என்றும் எச்சரித்தது.
ஒரு போலீஸ் சர்வாதிகாரம் திணிக்கப்படுவதை நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஜனநாயகக் கட்சி ஆளுனர்கள் ஏதனையும் கூறவில்லை. அதற்கு பதிலாக, ஒடுக்குமுறையில் ஏற்கனவே செயலூக்கத்துடன் பங்கெடுத்து வரும் உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகள் “அவர்களின் வேலைகளைச் செய்ய” அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அனைத்திற்கும் மேலாக அடிமட்டத்திலிருந்து ஒரு சக்திவாய்ந்த சமூக இயக்கம் எழுவதைக் கண்டு பீதியடைந்துள்ள ஜனநாயகக் கட்சியினர், ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை நிறுத்த முனையவில்லை, மாறாக மக்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த முனைகின்றனர்.
வெர்மாண்ட் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ் குடியரசுக் கட்சி அதிகாரிகளுக்கு அழைப்புவிடுத்து இதற்கு விடையிறுத்துள்ளார். “பெரும்பாலும், இந்த நாட்டின் எதிர்காலம், அவையிலும் செனட்டிலும் உள்ள ஒரு சிறிய எண்ணிக்கையிலான குடியரசுக் கட்சியினரை நம்பியே உள்ளது என்று நான் கூறுவேன். அவர்கள் புத்திசாலிகள் மற்றும் அரசியலமைப்பின் அர்த்தத்தைப் புரிந்துகொள்கிறார்கள்,” என்று அவர் ஞாயிற்றுக்கிழமை CNN இற்கு கூறினார். இந்த சுற்றிவளைப்பு சோதனைகளில் இலக்கு வைக்கப்பட்ட புலம்பெயர்ந்தவர்களை பாதுகாப்பதை சாண்டர்ஸ் வெளிப்படையாகவே தவிர்த்தார் என்பதோடு, இதற்கு பாரிய எதிர்ப்பை அணித்திரட்டுவது குறித்து வாய் திறக்கவில்லை.
ஊடகங்களின் பல்வேறு தலையங்கங்கள் ட்ரம்ப் தேசிய காவல்படையை நிலைநிறுத்தியதற்கும் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அவர் இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கும் கவலை அல்லது எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளன. ஆனால், அவர்களில் ஒருவர்கூட அமெரிக்காவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படையாகக் கூறத் தயாராக இல்லை: அதன் தாக்கங்கள் உச்சரிக்கப்படவில்லை, ஏனெனில் அவ்வாறு செய்வதற்கு அரசியலமைப்பு ஆட்சியின் வீழ்ச்சி மற்றும் புரட்சிகர எதிர்ப்பின் அவசியம் குறித்து முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.
நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இரண்டு ஜனநாயக புரட்சிகளின் வரலாற்றைக் கொண்ட, 330 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஒரு நாடு, பில்லியனிய செல்வந்த தன்னலக்குழுக்களின் நலன்களுக்காக செயல்படும் அரசியல் குண்டர்களின் ஒரு ஆளும் கும்பலால் மிரட்டப்படவோ அல்லது அடிபணிய வைக்கவோ அனுமதிக்க கூடாது. துருப்புகள் நிலைநிறுத்தப்படுவது, புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுவது மீதான சீற்றம் பரவி வருகிறது. ஆனால், மையக் கேள்வி எதிர்ப்பு இருக்குமா என்பது அல்ல. மாறாக, இந்த எதிர்ப்பு எவ்வாறு ஒழுங்கமைக்கப்படும், எந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஒழுங்கமைக்கப்படும் என்பதுதான் மையத்திலுள்ள கேள்வியாகும்.
ட்ரம்ப் நிர்வாகம் ஆட்சிக்கு வந்த நான்கரை மாதங்களில், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் அதிகரித்து வரும் போருக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது. காஸா இனப்படுகொலையை எதிர்த்ததற்காக மாணவர்கள் கைது செய்யப்பட்டு பழிவாங்கப்பட்ட பல்கலைக்கழக வளாகங்கள் மீதான அரசு தாக்குதலுக்கு எதிராக பாரிய கோபம் அதிகரித்து வருகிறது.
இங்கு தீர்க்கமான சக்தி தொழிலாள வர்க்கமாகும் —ஏனைய அனைத்தும் அதையே சார்ந்துள்ளது. முதலாளித்துவ வர்க்கம் அடக்குமுறை மற்றும் வன்முறையைத் தவிர வேறு எந்தப் பாதையையும் முன்னோக்கிப் பார்க்கவில்லை. முதலாளித்துவ வர்க்கத்தின் இந்த நடவடிக்கைகள் வலிமை அல்லது நம்பிக்கையிலிருந்து உருவாகவில்லை, மாறாக பயத்திலிருந்து - அவர்களால் கட்டுப்படுத்த முடியாத கீழிருந்து வரும் ஒரு பாரிய வெகுஜன இயக்கத்தின் பயத்திலிருந்து - உருவாகின்றன, தொழிற்சாலைகள், பணியிடங்கள் மற்றும் பொருளாதார வாழ்க்கையின் அத்தியாவசிய உள்கட்டமைப்பில் வேரூன்றிய ஒரு சக்தி தொழிலாள வர்க்கமாகும்.
பொலிஸ் மற்றும் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) உடனான தனிமைப்படுத்தப்பட்ட மோதல்களின் பொறிக்குள் விழுவதற்கு எதிராக, நாங்கள் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் எச்சரிக்கிறோம். இவை சாதாரணமாக ட்ரம்ப் நிர்வாகத்தின் கைகளில் மட்டுமே விளையாடும். ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் சீற்றமடைந்த மாணவர்களின் போராட்டங்கள் எவ்வளவு துணிச்சலானதாக இருந்தாலும், ட்ரம்ப் நிர்வாகத்துடன் கணக்குத் தீர்ப்பதற்கு தொழிலாள வர்க்கத்தின் தொழில்துறை மற்றும் அரசியல்ரீதியிலான அணிதிரட்டல்கள் அவசியமாகும்.
சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும், கட்டவிழ்ந்து வரும் ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு தீர்க்கமான, கூட்டு நடவடிக்கை மூலம் பதிலளிக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றன. ஒவ்வொரு தொழிற்சாலையும், பணியிடமும் மற்றும் அண்டை அயல்பகுதிகளும் ஜனநாயக உரிமைகள் மீதான இந்த பாரிய தாக்குதலுக்கு எதிராக ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பின் மையமாக மாற வேண்டும்.
ஒரு பொது வேலைநிறுத்தத்தின் அவசியம் முன்னெப்போதிலும் பார்க்க இன்னும் தெளிவாகி வருகிறது—ஆனால் அத்தகைய நடவடிக்கை தன்னிச்சையாக வெளிப்படப் போவதில்லை. அது தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக, போராடும் அமைப்புகளைக் கட்டியெழுப்புவதன் மூலம் தயாரிக்கப்பட்டு வழிநடத்தப்பட வேண்டும். ஜனநாயக உரிமைகள் மீதான இந்தத் தாக்குதலை தார்மீக முறையீடுகள், சட்ட சூழ்ச்சிகள் அல்லது ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களை நம்பியிருப்பதன் மூலம் நிறுத்த முடியாது, அவற்றில் பல அமைதியாகவோ அல்லது வெளிப்படையாகவோ ட்ரம்பின் தேசியவாத வேலைத்திட்டத்துடன் அணிசேர்ந்துள்ளன
இதற்கான முன்முயற்சி கீழிருந்து வர வேண்டும். பாரிய எதிர்ப்பிற்கான அடித்தளத்தை தயார் செய்ய ஒவ்வொரு தொழிற்சாலையிலும், வேலையிடத்திலும் மற்றும் அண்டை அயலிலும் சாமானிய தொழிலாளர் குழுக்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டும். நாடெங்கிலுமான ஆலைகள், பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் அவசர கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய, இன்றியமையாத பகுதியாக உள்ளனர், மேலும் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு பரந்த தாக்குதலின் முன்னணியில் உள்ளது. ஒரு சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான ட்ரம்பின் நகர்வு, பெருநிறுவன- நிதியியல் தன்னலக்குழுவின் ஆட்சிக்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் நசுக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
அமெரிக்க ஜனநாயகம் அதன் மரண ஓலத்தில் உள்ளது. ட்ரம்ப் அவராகவே செயல்படவில்லை, மாறாக பாசிசம் மற்றும் போரை நோக்கி பாய்ந்து வரும் ஒரு நிதியியல் செல்வந்த தன்னலக்குழுவினரின் பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறார். “இயல்புநிலைக்கு” திரும்புவது சாத்தியமில்லை. அரசியல் சூழ்நிலை இரண்டு திசைகளில் ஒன்றில் மட்டுமே நகர முடியும்: அது, ஒன்றில் சர்வாதிகாரம் அல்லது புரட்சி.
இந்த அறிக்கை நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளும் ஒவ்வொரு தொழிலாளர், மாணவர் மற்றும் இளைஞராலும் வாசிக்கப்பட வேண்டும், விவாதிக்கப்பட வேண்டும் மற்றும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதை சமூக ஊடகங்களில் பகிரவும். தொழிற்சாலைகள், பணியிடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் சுற்றுப்புறங்களில் இதைப் பரப்புங்கள். கூட்டங்களை ஒழுங்கமைக்கவும் சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்கவும், இந்த அறிக்கையை ஒரு அடிப்படையாக பயன்படுத்துங்கள். நீங்கள் இந்த அறிக்கையுடன் உடன்பட்டு இந்தப் போராட்டத்தில் ஈடுபட விரும்பினால், சோசலிச சமத்துவக் கட்சியைத் தொடர்பு கொள்ள கீழே உள்ள படிவத்தை நிரப்புங்கள்.