முன்னோக்கு

ஃபீல்ட்ஸ் என்றழைக்கப்படும் நான்சி வோல்ஃபோர்த் தொடர்பான விவகாரமும், நான்காம் அகிலமும் பாதுகாப்பும் என்ற விசாரணையின் தோற்றமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

நான்சி வோல்ஃபோர்த் [Photo by OPEIU]

மே 20, செவ்வாயன்று, டிசம்பர் 31, 2024 அன்று தனது 79 வயதில் இறந்த நான்சி வோல்ஃபோர்த்தின் (Nancy Wohlforth) வாழ்க்கையை கௌரவிக்கும் வகையில், வாஷிங்டன் டிசி இல் உள்ள AFL-CIO இன் தேசிய தலைமையகத்தின் பிரதான வரவேற்பறையில், வெள்ளை மாளிகைக்கு எதிரே உள்ள தெருவில் ஒரு நினைவுக் கூட்டம் நடத்தப்பட்டது.

அலுவலகம் மற்றும் தொழில்சார் ஊழியர்கள் சர்வதேச தொழிற்சங்கத்தின் (OPEIU) செயலாளர்-பொருளாளர் மற்றும் AFL-CIO தொழிற்சங்கத்தின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் என்றவகையில் வோல்ஃபோர்த் வகித்த பாத்திரத்திற்கு பேச்சாளர்கள் புகழாரம் சூட்டினர்.

இந்தக் கூட்டத்திற்கு அமெரிக்காவின் தகவல் தொடர்பு தொழிலாளர்கள் (CWA) தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவர் லாரி கோஹன் தலைமை தாங்கினார். AFL-CIO இன் தலைவரான லிஸ் ஷூலர் பிரதான புகழுரை வழங்கினார்; இவர் 20 ஆண்டுகளாக வோல்ஃபோர்த்தை நெருக்கமாக அறிந்தவர் மற்றும் அவருடன் நெருக்கமாக வேலை செய்திருந்தார். சேவை ஊழியர்கள் சர்வதேச ஒன்றியத்தின் (SEIU) தலைவர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற மேரி கே ஹென்றியும் அஞ்சலி செலுத்தினார். 2022 ஆம் ஆண்டு வாஷிங்டோனியன் பத்திரிகையில் திருமதி ஹென்றி “வெள்ளை மாளிகையில் மிகவும் செல்வாக்கு மிக்க தொழிற்சங்கக் குரலாக” விவரிக்கப்பட்டார்…”

ஏறத்தாழ முற்றிலும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் மற்றும் நான்சி வோல்ஃபோர்த்தின் நண்பர்கள் அடங்கிய சுமார் 75 பேர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். தொழில்முறை ஊழியர்கள் சர்வதேச சங்கத்திலிருந்து (OPEIU) அல்லது வேறு எந்த தொழிற்சங்கத்தின் ஒரு சாமானிய உறுப்பினர் கூட அந்நிகழ்வில் கலந்து கொள்ளவோ அல்லது பேசவோ கூட இல்லை.

இரண்டு மணி நேர நினைவஞ்சலியின் போது, பேச்சாளர்கள் OPEIU மற்றும் AFL-CIO அதிகாரத்துவத்தில் வோல்ஃபோர்த்தின் பணியையும், ஓரினச்சேர்க்கையாளர் உரிமைகளுக்கான போராட்டத்தில் ஒரு முக்கிய லெஸ்பியனாக அவரது அர்ப்பணிப்பையும் எடுத்துரைத்தனர். 2005 ஆம் ஆண்டில், AFL-CIO இன் தேசியத் தலைமைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட LGBTQ சமூகத்தின் முதல் உறுப்பினராக அவர் இருந்தார்.

குறிப்பிடத்தக்க வகையில், அனைத்து உரைகளிலும், சோசலிச இயக்கத்தால் என்றென்றும் நினைவுகூரப்பட்டு வெறுக்கப்படும் அவரது வாழ்க்கையின் இந்தக் காலகட்டத்தைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை: அதாவது, 1973-1974 இல் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான வேர்க்கர்ஸ் லீக்கை அழிக்க முயற்சித்ததில் அவர் வகித்த மத்திய பாத்திரமாகும்.

“நான்சி ஃபீல்ட்ஸ்” என்ற பெயர் பேச்சாளர்களால் ஒருபோதும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அந்தப் பெயரில்தான் நான்சி வோல்ஃபோர்த் வேர்க்கர்ஸ் லீக்கிற்குள் ஒரு அழிவுகரமான நடவடிக்கையை மேற்கொண்டார். இதன் விளைவாக ஓராண்டு காலத்திற்குள் அந்த அமைப்பானது, அண்ணளவாக பாதி அங்கத்துவ உறுப்பினர்களை இழக்க நேரிட்டது.

ஆரம்பத்தில், தனது முதல் கணவரின் கடைசிப் பெயரான நான்சி ஃப்ராய்டன் என்று அழைக்கப்பட்ட இவர், 1971 இல் வேர்க்கர்ஸ் லீக்கில் இணைந்து கொண்டார். மேலும், கட்சியின் தேசிய அலுவலகத்தில் முழுநேரமாக பிழைதிருத்துபவராக பணியாற்ற தன்னார்வத்துடன் முன்வந்தார். டைம் இதழின் முன்னாள் ஊழியராக அந்த திறனில் அனுபவம் பெற்றதாக அவர் கூறினார். அலுவலக வரவேற்பாளராக பணியாற்றுவது மற்றும் இலக்கிய பட்டியல்களை கண்காணிப்பது ஆகியவை அவரது மற்றய பொறுப்புகளில் அடங்கும். வேர்க்கர்ஸ் லீக்கின் செய்தித்தாளான புல்லட்டினுக்கு அவர் அவ்வப்போது பங்களிக்கும் கட்டுரைகளுக்கு “ஃபீல்ட்ஸ்” என்ற பெயரைப் பயன்படுத்தினார்.

1973 வசந்த காலத்தின் பிற்பகுதி வரையில் வேர்க்கர்ஸ் லீக்கின் தலைமையில் ஃபீல்ட்ஸ் எந்த குறிப்பிடத்தக்க பாத்திரமும் வகிக்கவில்லை, அப்போது அவர் தனது கணவரை விட்டு பிரிந்து வேர்க்கர்ஸ் லீக்கின் தேசிய செயலரான ரிம் வோல்ஃபோர்த் உடன் ஒரு தனிப்பட்ட உறவைத் தொடங்கினார்.

ரிம் வோல்ஃபோர்த், மற்றும் அவரது துணை நான்சி ஃபீல்ட்ஸ் [Photo: WSWS]

இந்த உறவின் அடிப்படையில்தான் வோல்ஃபோர்த், ஃபீல்ட்ஸை கட்சித் தலைமைக்கு உயர்த்தினார். நான்சி ஃபீல்ட்ஸ், வோல்ஃபோர்த்தின் பிரிக்க முடியாத தோழியானார். அவரது கேள்விக்கிடமற்ற ஒப்புதலுடன், தேசிய அமைப்பின் நடவடிக்கைகள் மீதான கட்டுப்பாடு ஃபீல்ட்ஸுக்கு வழங்கப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் நான்சி வோல்ஃபோர்த்தின் கனிவையும் நகைச்சுவையையும் பற்றி உற்சாகமாக பேசினர். ஆனால் இவை 1973-74 ஆம் ஆண்டில் கட்சி உறுப்பினர்களால் கவனிக்கப்பட்ட பண்புகள் அல்ல. கட்சிக் காரியாளர்களுடனான அவரது தொடர்புகள் ஏறக்குறைய கட்டுப்பாடற்ற வாய்மொழி வசவுகளையும், கூச்சல்களுடனும் நடுங்கும் முஷ்டியுடனும் வழங்கப்பட்டன. வோல்ஃபோர்த் கண்மூடித்தனமாக உடன்பட்ட அவரது நடத்தையானது, வேர்க்கர்ஸ் லீக்கின் மீது ஒரு நாசகரமான தாக்கத்தைக் கொண்டிருந்தது, அந்த சமயத்தில் அது பெரும்பாலும் ஒப்பீட்டளவில் அனுபவமற்ற காரியாளர்களைக் கொண்டிருந்தது.

ஃபீல்ட்ஸின் செயல்பாட்டு வழிமுறையானது பின்னர் 1976 இல் எழுதப்பட்ட நான்காம் அகிலமும் ஓடுகாலி வோல்ஃபோர்த்தும் என்ற கட்டுரையில் இவ்வாறு விவரிக்கப்பட்டது:

அவர் எங்கு சென்றாலும், அரசியல் அழிவின் சுவடுகளை ஃபீல்ட்ஸ் விட்டுச் சென்றார். அவர் வோல்ஃபோர்த்தின் பிரிக்க முடியாத பயணத் தோழியாகவும் கைக்கூலிப் பெண்ணாகவும் ஆனார். வேர்க்கர்ஸ் லீக்கில் ஒருபோதும் பார்த்திராத அளவில் ஒரு நாசகார நடவடிக்கைக்காக அவர்கள் நாடெங்கிலும் ஆயிரக்கணக்கான டாலர்களை செலவழித்தனர். அவர்கள் கட்சிக் கிளைகளை மூடினர், உறுப்பினர்களை வெளியேற்றுவதாக அச்சுறுத்தினர், அத்துடன் வேர்க்கர்ஸ் லீக்கில் இருந்து தோழர்களை விரட்டுவதற்கு கொடூரமான கன்னை சூழ்ச்சிகளைப் பயன்படுத்தினர்.

வோல்ஃபோர்த் மற்றும் ஃபீல்ட்ஸின் “தேசிய சுற்றுப்பயணங்கள்” என்றழைக்கப்பட்டவை ஒரு அரசியல் தலையீட்டைக் காட்டிலும் ஒரு தேனிலவின் தன்மையைக் கொண்டிருந்தன.

1974 ஏப்ரலில் வோல்ஃபோர்த், நான்சி ஃபீல்ட்ஸை இலண்டனில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு காங்கிரசுக்கு வேர்க்கர்ஸ் லீக்கின் பிரதிநிதியாக தன்னுடன் வருவதற்கு தேர்ந்தெடுத்தார். இந்த நியமனத்திற்கு அவருக்கு முற்றிலும் எந்த தகுதிகளும் இல்லை என்றபோதிலும் கூட ஃபீல்ட்ஸை தேர்ந்தெடுத்தார். சட்டவிரோதமான நிலைமைகளின் கீழ், தங்கள் அரசியல் பணிகளை மேற்கொண்டு வந்த கிரீஸ், ஸ்பெயின் மற்றும் பெரு ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

விவாதத்தின் போது, இலங்கை பிரதிநிதியும், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பொதுச் செயலாளருமான கீர்த்தி பாலசூரிய, முந்தைய நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கூட்டத்தில் வேர்க்கர்ஸ் லீக்கின் பிரதிநிதி அமைப்பை விட்டு விலகிவிட்டதாக கவலை தெரிவித்தார். வோல்ஃபோர்த், தனது ராஜினாமாவை ஒரு எளிய தனிப்பட்ட விலகல் என்றும், அமைப்புரீதியான பிற வெற்றிகளைப் பெருமையாகக் கூறியும், பாலசூரியாவின் கேள்விகளைத் தவிர்த்துவிட்டார்.

ஜெரி ஹீலி [Photo: WSWS]

ஆயினும், 1974 ஆகஸ்ட் மத்தியில், வேர்க்கர்ஸ் லீக்கை விட்டு விலகியிருந்த நீண்டகால அங்கத்தவர்களில் ஒருவர் பிரிட்டனுக்கு பயணித்து, வேர்க்கர்ஸ் லீக் சந்தித்த பிரம்மாண்டமான இழப்புகளை தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைவர் ஜெரி ஹீலியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். புரட்சிகர அரசியலில் ஒரு பரந்த அனுபவத்தைக் கொண்டிருந்த ஹீலி, சமீபத்திய சர்வதேச மாநாட்டில் முன்னர் அறியப்படாத நான்சி ஃபீல்ட்ஸ் கலந்து கொண்டதைக் கண்டு தொந்தரவுக்கு உள்ளாகியிருந்தார். அனைத்திற்கும் மேலாக, ஃபீல்ட்ஸ் உடனான வோல்ஃபோர்த்தின் உறவு தொடங்கியதையும், கட்சியின் தலைமைக்குள் அவர் துரிதமாக உயர்த்தப்பட்டதையும், வேர்க்கர்ஸ் லீக்கில் ஒரு நாசகரமான அமைப்புரீதியான நெருக்கடி வெடிப்பதற்கும் இடையிலான நிகழ்வை அவர் எடுத்துக்காட்டினார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பிரிவான தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP), வோல்ஃபோர்த்தைத் தொடர்புகொண்டு, வேர்க்கர்ஸ் லீக்கின் நிலை குறித்து விவாதிக்க பிரிட்டனுக்கு பயணிக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டது. லண்டனில் நடந்த அடுத்தடுத்த கலந்துரையாடல்களின் போது, வோல்ஃபோர்த்திடம் நேரடியாக அவருடைய தோழியான நான்சி ஃபீல்ட்ஸ் அமெரிக்காவில் உள்ள பொலிஸ் அல்லது உளவுத்துறை அமைப்புக்களுடன் ஏதேனும் வகையில் தொடர்பு கொண்டிருந்தார் என்பதைக் குறிக்கும் தகவல் ஏதேனும் அவரிடம் உள்ளதா என்று கேட்கப்பட்டார். அப்போது, இதுதான் உண்மை என்று சந்தேகிக்க எந்தக் காரணமும் இல்லை என்று வோல்ஃபோர்த் வலியுறுத்தினார்.

ஹீலியின் விசாரணையில் விசித்திரம் எதுவும் இருக்கவில்லை. 1971 இல், அமெரிக்காவில் சோசலிச இயக்கத்தின் மீது, பாரியளவில் மத்திய புலனாய்வு அமைப்பு (CIA) மற்றும் மத்திய புலனாய்வுப் பணியகத்தின் (FBI) பொலிஸ் முகவர்கள் ஊடுருவியிருப்பதையும் மற்றும் அவர்களால் கண்காணிக்கப்பட்டு வந்ததையும் அம்பலப்படுத்தும் தகவல்கள் வெளிவந்திருந்தன. COINTELPRO என்ற எதிர் புலனாய்வு திட்டம், 1956 இல் அரசாங்கத்தால் நாசகரமானவை என்று கருதப்படும் குழுக்களை “அம்பலப்படுத்த, சீர்குலைக்க, தவறாக வழிநடத்த அல்லது நடுநிலையாக்க” தொடங்கப்பட்டது. அதன் முக்கிய இலக்குகளில் முகவர்கள் மற்றும் தகவல் தருபவர்களால் நிரம்பி வழிந்த சோசலிச தொழிலாளர் கட்சியும் இருந்தது.

அனைத்திற்கும் மேலாக, 1973 இல் கனடாவில் நடைபெற்ற வேர்க்கர்ஸ் லீக்கின் கோடை முகாமில், பிரதான விரிவுரை மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஃபீல்ட்ஸின் அரசியல் நம்பகத்தன்மை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது என்று வோல்ஃபோர்த் உத்தரவாதமளித்த போதிலும், ஹீலி அவரது பின்னணி குறித்து ஒரு விசாரணையைத் தொடங்கினார். வோல்ஃபோர்த் கொடுத்த உத்தரவாதங்களுக்கு நேரடியாக முரண்பட்ட தகவல்கள் வெளிவந்தன. நான்சி ஃபீல்ட்ஸ், மத்திய புலனாய்வு அமைப்பின் உயர் மட்ட பணியாளர்களுடன் மிக நெருக்கமான குடும்ப தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்பதை ஹீலிக்கும், அனைத்துலகக் குழுவிற்கும், வேர்க்கர்ஸ் லீக்கிற்கு வோல்ஃபோர்த் தெரிவிக்கவில்லை.

1974 ஆகஸ்டின் பிற்பகுதியில் வேர்க்கர்ஸ் லீக் தேசியக் குழுவின் கோடைப் பள்ளியின் போது நடந்த ஒரு கூட்டத்தில், ஃபீல்ட்ஸின் பின்னணி குறித்த தகவல்களை அவர் ஏன் மறைத்தார் என்று கேட்கப்பட்டபோது, வோல்ஃபோர்த் தனது குடும்ப உறவுகள் முற்றிலும் தனிப்பட்ட விஷயம் என்றும், அதை முக்கியமானதாக கருதவில்லை என்றும் பதிலளித்தார்.

ஃபீல்ட்ஸின் குடும்பப் பின்னணி குறித்து அவருக்கு என்ன தெரியும் என்பதை வெளியிடத் தவறியதற்கான வோல்ஃபோர்த்தின் பொறுப்பற்ற நியாயப்படுத்தலை வேர்க்கர்ஸ் லீக்கின் தேசியக் குழு நிராகரித்தது. தேசிய செயலாளர் பதவியில் இருந்து வோல்ஃபோர்த்தை தற்காலிகமாக நீக்கவும், நான்சி ஃபீல்ட்ஸின் தனிப்பட்ட பின்னணி குறித்து அனைத்துலகக் குழு (ICFI) விசாரணை நடத்தும் வரையில் அவரை அங்கத்துவத்தில் இருந்து இடைநீக்கம் செய்யவும் அது வாக்களித்தது. நான்சி ஃபீல்ட்ஸ் ஒரு ஏஜென்ட் என்று குற்றம் சாட்டப்படவில்லை. ஆயினும், வோல்ஃபோர்த்தும் ஃபீல்ட்ஸும் சிஐஏ நபர்களுடன் அவரின் குடும்பத் தொடர்பை வெளிப்படுத்தத் தவறியமையானது, வேர்க்கர்ஸ் லீக் மற்றும் அனைத்துலகக் குழுவின் பாதுகாப்பின் மீதான ஒரு படுமோசமான மீறலாக இருந்தது.

வோல்ஃபோர்த்தும் ஃபீல்ட்ஸும் ஆரம்பத்தில் தேசியக் குழு நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் ஒரு மாதத்திற்குப் பின்னர், சர்வதேச ஆணைக்குழு அதன் பணியைத் தொடங்கிக் கொண்டிருந்த சமயத்தில், வோல்ஃபோர்த்தும் ஃபீல்ட்ஸும் வேர்க்கர்ஸ் லீக்கில் இருந்து இராஜினாமா செய்தனர்.

நவம்பர் 9, 1974 அன்று, ஆணையம் தனது அறிக்கையை வெளியிட்டது, அது பின்வருமாறு தெரிவித்தது:

12 வயதிலிருந்து பல்கலைக்கழகக் கல்வியை முடிக்கும் வரை, நான்சி ஃபீல்ட்ஸ் தனது அத்தை மற்றும் மாமா, ஆல்பர்ட் மற்றும் கிக்ஸ் மோரிஸ் ஆகியோரால் வளர்க்கப்பட்டு, கல்வி மற்றும் நிதி ரீதியாக ஆதரிக்கப்பட்டார் என்பதை விசாரணையில் கண்டறியப்பட்டது. ஆல்பர்ட் மோரிஸ் வாஷிங்டனில் உள்ள CIA இன் IBM கணினி நடவடிக்கையின் தலைவராகவும், IBM இல் ஒரு பெரிய பங்குதாரராகவும் உள்ளார். அவர் CIA இன் முன்னோடியான OSS இன் உறுப்பினராகவும், போலந்தில் ஏகாதிபத்தியத்தின் முகவராகவும் பணியாற்றினார். 1960 களில், மைனேயில் உள்ள அவர்களின் வீட்டிற்கு அடிக்கடி விருந்தினராக வந்தவர், CIA இன் முன்னாள் இயக்குநரும், இப்போது ஈரானில் அமெரிக்க தூதராக இருக்கும் ரிச்சர்ட் ஹெல்ம்ஸ் ஆவார்.

இணைய அபிவிருத்திக்கு பல தசாப்தங்களுக்கு முன்னரே மட்டுப்படுத்தப்பட்ட ஆதாரவளங்களுடன் செயல்பட்டு வந்த இந்த ஆணையம், நான்சி ஃபீல்ட்ஸ் ஒரு முகவராக இருந்தார் என்பதற்கு எந்த தகவலையும் காணவில்லை. எவ்வாறிருந்த போதிலும், தொழிலாளர்கள் மற்றும் சோசலிச இயக்கத்தின் நீண்டகால மரபுகளுக்கு ஏற்ப, ஆல்பேர்ட் மோரிஸுடன் ஃபீல்ட்ஸ் கொண்டிருந்த உறவை கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்த வோல்ஃபோர்த்தும் ஃபீல்ட்ஸும் கடமைப்பட்டிருந்தனர் என்ற உண்மையை இது மாற்றிவிடவில்லை. அதன் பாதுகாப்பு சமரசம் செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்த உறவை விசாரிக்க கட்சிக்கு உரிமை உண்டு.

வேர்க்கர்ஸ் லீக்கில் இருந்து இராஜினாமா செய்து, விசாரணைக் கமிஷனுடன் ஒத்துழைக்க மறுத்த பின்னர், வோல்ஃபோர்த், அப்போதும் ஃபீல்ட்ஸை அவர் பக்கத்தில் வைத்திருந்து, சோசலிச தொழிலாளர் கட்சியில் (SWP) சேர்ந்துகொண்டார். சோசலிச தொழிலாளர் கட்சியில் ஃபீல்ட்ஸின் தங்கியிருப்பும், அத்துடன் வோல்ஃபோர்த் உடனான அவரது உறவும், நீண்டகாலம் நீடிக்கவில்லை.

வோல்ஃபோர்த் உடனான அவரது குறுகியகால திருமணம் 1978 ஆம் ஆண்டின் முற்பகுதியில் திறம்பட முடிவுக்கு வந்தது. வோல்ஃபோர்த்தின் பெயரை அவருடன் தக்க வைத்துக் கொண்டாலும், அவர் ஒரு லெஸ்பியனாக வெளியே வந்தார் மற்றும் 1981 ஆம் ஆண்டில் அவரது துணையாக பெண்ணுடன் நீண்டகால உறவில் நுழைந்தார். இதனால்தான், சில ஆண்டுகளுக்கு முன்பு, தொழிலாளர் லீக்கின் தேசிய செயலாளருடனான உறவை இவ்வளவு கடுமையான உறுதியுடன் தொடர அவர் கொண்டிருந்த உந்துதல்கள் குறித்து கேள்விகளை எழும்புகின்றன. இந்தக் கேள்விகள் இல்லாவிட்டால் அவரது பாலியல் விருப்பங்களின் தன்மை குறித்த கருத்தானது தகுதியற்றதாக இருந்திருக்கும்.

1978 ஆம் ஆண்டில், OPEIU உடன் தனது வாழ்க்கையைத் தொடங்கிய நான்சி வோல்ஃபோர்த், ஒரு விண்மீன் போன்ற வளர்ச்சியை அனுபவித்தார். நிச்சயமாக, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் அவரது செயற்பாடுகள் அவரது தொழில் வளர்ச்சிக்கு எந்தத் தடையாகவும் இருக்கவில்லை.

அவர் 1983 இல் தனது உள்ளூர் அலுவலகத்தில் முழுநேர ஊதியம் பெறும் அதிகாரியாக ஆனார், இறுதியில் தேசிய தொழிற்சங்கத்தின் செயலாளர்-பொருளாளர் பதவிக்கு உயர்ந்தார். OPEIU அதிகாரத்துவ அதிகாரியாக அவரது தொழில் வாழ்க்கையின் உச்சத்தில், அவர் கால் மில்லியன் டாலர்கள் ஆண்டு வருமானத்தை பெற்று அனுபவித்தார்.

நான்சி வோல்ஃபோர்த் (நடுவில்) லிஸ் ஷுலருடன் (வலது) [Photo by Pride At Work]

ரிம் வோல்ஃபோர்த்தைப் பொறுத்த வரையில், ட்ரொட்ஸ்கிசத்தின் மீதான சோசலிச தொழிலாளர் கட்சியின் காட்டிக்கொடுப்புக்கும் அதன் பிரதான தலைவரான ஜோசப் ஹான்சனின் போலித்தனமான பாத்திரத்திற்கும் எதிராக 1960 முதல் 1974 வரையில் அவர் நடத்திய 14 ஆண்டுகால போராட்டம் ஒரே இரவில் மறக்கடிக்கப்பட்டது.

1974 ஜூனில் வோல்ஃபோர்த், ஜோசப் ஹான்சனின் ட்ரொட்ஸ்கிச-விரோத அரசியலை அம்பலப்படுத்தி ஒரு நீண்ட அம்பலப்படுத்தலை எழுதியிருந்தார். அது புல்லட்டின் பத்திரிகையில் “ஒரு வயதான பொய்யர் தனது சரக்குகளை விற்கிறார்” என்ற தலைப்பில் வெளியானது. ஆனால் 1975 பிப்ரவரி-மார்ச்சில், அவர் ஜெரி ஹீலி மற்றும் அனைத்துலகக் குழு மீதான ஒரு நீண்ட கண்டனத்தை ஹான்சன் ஆசிரியராக இருந்த பப்லோவாத இதழான இன்டர்கான்டினென்டல் பிரஸ் (Intercontinental Press) இல் வெளியிட்டார். கட்சி பாதுகாப்பு மீறல் குறித்த ஹீலியின் அக்கறையை அவர் “பைத்தியக்காரத்தனம்” என்று குணாம்சப்படுத்தினார்.

அனைத்துலகக் குழுவின் மீதான வோல்ஃபோர்த்தின் தாக்குதலைத் தொடர்ந்து, ஹான்சன் இன்டர்கான்டினென்டல் பிரஸ் இன் மார்ச் 24, 1975 பதிப்பில் “ஹீலியின் இயங்கியலின் இரகசியம்” என்ற தலைப்பில் ஒரு வக்கிரமான வசைமாரியை எழுதி வெளியிட்டார். அனைத்துலகக் குழுவின் பாதுகாப்பை மீறுவதற்கு அதன் பதிலிறுப்பை சிடுமூஞ்சித்தனமாக கேலி செய்த ஹான்சன் பின்வருமாறு எழுதினார்:

ஹீலியின் நடிப்பை வோல்ஃபோர்த் “பைத்தியக்காரத்தனம்” என்று விவரிக்கிறார். “சித்தப்பிரமை” போன்ற ஒரு நவீன வார்த்தையைப் பயன்படுத்துவது விரும்பத்தக்கதாக இருக்கும், ஒருவேளை இன்னும் துல்லியமாக இருக்கும் அல்லவா?

அந்த வார்த்தை பொருந்துமானால், சிஐஏ முகவர்கள், பொலிஸ் முகவர்கள் மற்றும் அவரது வாழ்க்கைக்கு எதிரான சதித்திட்டங்கள், அத்துடன் அவரது சீற்றங்கள், “அதீத எதிர்வினைகள்” மற்றும் இயங்கியலின் விசித்திரமான பதிப்பு குறித்த ஹீலியின் ஆவேசங்களுக்கான உண்மையான விளக்கத்தை, அவரது அரசியல், மெய்யியல் வழிமுறை, அல்லது கனன் அல்லது பப்லோ போன்ற மாதிரிகளில் தேட முடியாது, மாறாக மனநல மருத்துவர்களால் நன்கு புரிந்து கொள்ளப்பட்ட ஒரு மனதின் செயல்பாடுகளில் தேட வேண்டும்.

வோல்ஃபோர்த்தின் பொறுப்பற்ற நடத்தையை ஹான்சன் பாதுகாத்ததை கோட்பாடற்ற கன்னைவாதத்தின் ஒரு எடுத்துக்காட்டு என்று சாதாரணமாக உதறித் தள்ளிவிட முடியாது. ஹான்சனின் சொந்த அமைப்பான சோசலிச தொழிலாளர் கட்சியில் பாரியளவில் அரசு ஊடுருவல் முதல் பக்க செய்தியாக இருந்த ஒரு சமயத்தில், சிஐஏ முகவர் ஆல்பேர்ட் மோரிஸ் உடனான ஃபீல்ட்ஸின் தொடர்பை வோல்ஃபோர்த் மறைத்ததை ஹான்சன் நியாயப்படுத்திக் கொண்டிருந்தார். இன்னும் தீவிரமானது என்னவென்றால், ஹான்சனின் சொந்த அரசியல் அனுபவம், ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் ஒரு முகவர் ஊடுருவியதன் பின்விளைவுகளுக்கு, மிகவும் துன்பகரமான விதத்தில், அவரை அம்பலப்படுத்தியிருந்தது.

1937 இல் இருந்து 1940 வரையில், ஹான்சன் மெக்சிகோவின் கோயோகானில் ட்ரொட்ஸ்கியின் செயலாளர்களில் ஒருவராக சேவையாற்றியிருந்தார். 1940 ஆகஸ்டு 20 அன்று ஸ்டாலினிச இரகசிய பொலிஸான ஜிபியு (GPU) இன் முகவரான ரமோன் மெர்க்கடேரை ட்ரொட்ஸ்கியின் வீட்டுக்குள் அனுமதித்த பாதுகாவலர் அவர்தான். அந்தக் கொடூரமான நாளின் பிற்பகலில் ட்ரொட்ஸ்கியின் படுகொலையை ஹான்சன் நேரில் கண்டார். அனைத்திற்கும் மேலாக, நான்காம் அகிலத்தின் தலைமையில் விதைக்கப்பட்ட ஸ்டாலினிச முகவரான மார்க் ஸ்பொரோவ்ஸ்கி வழங்கிய தகவல்களைப் பயன்படுத்திய ஜிபியு, 1937-38 இல் முன்னணி ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மீது தொடர்ச்சியான படுகொலைகளை நடத்தியது குறித்து ஹான்சன் முற்றிலும் பரிச்சயமானவராக இருந்தார்.

1975 ஏப்ரலில் வெளியிடப்பட்ட ஹான்சனுக்கு அதன் ஆரம்ப பதிலில், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் குழுவானது, “தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு புரட்சிகர காரியாளர்களை உருவாக்குவதில் பாதுகாப்பு பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது ஒரு மைய அரசியல் பிரச்சினையாகக் கருதப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியது. இருப்பினும், இது பீதிக்கு வழிவகுக்கக்கூடாது, ஏனெனில் “பீதியின் செல்வாக்கின் கீழ் பொலிஸ் ஊடுருவலை முறியடிக்க கட்சியானது தனது அணிகளை முறையாக ஒழுங்கமைக்க முடியாது”. மாறாக, பாதுகாப்பு பிரச்சினைகளின் அரசியல் முக்கியத்துவத்தை கட்சி உறுப்பினர்கள் புரிந்து கொள்வது அவசியமாகும். இந்த முடிவை நோக்கி, WRP இன் தலைமை பின்வருமாறு எழுதியது:

ட்ரொட்ஸ்கிச வரலாற்றில் இன்றியமையாத பக்கங்களை மீண்டும் திறக்க ஹான்சனின் கட்டுரை நமக்கு உதவுகிறது. இந்த வரலாற்றை, விரும்பத்தகாத அல்லது சங்கடமான வடிகட்டப்படாமல் அனைத்தையும் முன்வைக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், ஏனென்றால் கடந்த காலத்தில், எங்கள் இயக்கம் அதன் அணிகளில் பாதுகாப்பு பயிற்சியை புறக்கணித்தபோது மற்றும் ஏளனம் செய்தபோது ஒரு பயங்கரமான விலையைக் கொடுத்தது. இந்தப் பக்கங்களைத்தான் ஹான்சன் ஒடுக்க விரும்புகிறார். …

திருத்தல்வாதிகளின் அலறல்களுக்கும் கூச்சல்களுக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மிரட்டப்படப் போவதில்லை. அவர்கள் முகத்தில் நீல நிறமாக இருக்கும் வரை அவர்கள் எங்களை “குறுங்குழுவாதிகள்” மற்றும் “சித்தப்பிரமைவாதிகள்” என்று அழைக்கலாம். இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலமாக, அவர்கள் உண்மையில் கோட்பாடுகளுக்கான அனைத்துலகக் குழுவின் போராட்டத்தையும், நமது அணிகளில் ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பு மீதான அதன் கவனத்தையும் தாக்குகின்றனர். ஹான்சனின் சர்வதேச வலையமைப்புகளில் பொதுவாக இருப்பதைப் போல, நடுத்தர வர்க்க சுரண்டலாளர்கள் மற்றும் சாகசக்காரர்களுக்கான ஒரு நேர்மையற்ற அமைப்பைக் கட்டியெழுப்புவது எங்கள் நோக்கமல்ல. இந்தப் பாதை CIA மற்றும் பொலிஸ் ஊடுருவலுக்கான ஒரு திறந்த அழைப்பாகும். ஏனெனில், பொலிஸ் ஏஜென்டுகள் மிகவும் சாதாரணமாக செயல்படுவது இந்த கூறுகளில் மிகவும் துல்லியமாக உள்ளது.

ஹான்சன் பாதுகாப்பு கேள்வியை மறைக்க விரும்புகிறார்: அதாவது நமது இயக்கத்தைப் பயிற்றுவிப்பதிலும் கட்டியெழுப்புவதிலும் நாம் அதை உயர்த்த விரும்புகிறோம். அதனால் தான் வோல்ஃபோர்த்திற்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்பட்டது மற்றும் தேவை ஏற்பட்டால் எதிர்காலத்தில் ஏன் அதேபோன்ற நடவடிக்கைகள் மீண்டும் எடுக்கப்படும் என்பதற்கான பின்னணியை விளக்க ட்ரொட்ஸ்கிச வரலாற்றின் பக்கங்களை மீண்டும் திறப்பது அவசியம் என்று நாங்கள் உணர்கிறோம்.

அறிக்கையின் முடிவிலுள்ள அறிவிப்பில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

பாதுகாப்பு குறித்தும் நான்காம் அகிலம் குறித்தும் மற்றும் ஹான்சன் போன்ற தனிநபர்களின் பாத்திரம் குறித்தும் ஒரு முழுமையான விசாரணைக்கு ஆதார வளங்களை வழங்க ஒரு சிறப்பு நிதியம் தொடங்கப்பட வேண்டும் என்று அனைத்துலகக் குழு ஆறாவது உலக காங்கிரசுக்குப் பரிந்துரை செய்கிறது.

ஒரு மாதத்திற்குப் பின்னர், அனைத்துலகக் குழுவின் ஆறாவது காங்கிரஸ் மே 19 முதல் மே 25 வரை கூடியது. சோவியத் ஸ்டாலினிச அதிகாரத்துவம் மற்றும் ஏகாதிபத்திய அரசுகளின் முகவர்கள் நான்காம் அகிலத்திற்குள் ஊடுருவியது குறித்தும், ஆகஸ்ட் 1940 இல் அதன் நிறுவனர் படுகொலையில் உச்சக்கட்டத்தை அடைந்த நான்காம் அகிலத்திற்கு எதிரான சதி குறித்தும் விசாரணையைத் தொடங்க ஜெரி ஹீலி அறிமுகப்படுத்திய ஒரு தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது.

பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலத்தின் விசாரணையாளர்களால் அம்பலப்படுத்தப்பட்ட ட்ரொட்ஸ்கியின் படுகொலையில் ஈடுபட்ட ஸ்டாலினிச முகவர்கள். மேல் இடமிருந்து கடிகார திசையில்: மார்க் ஸ்பொரோவ்ஸ்கி; சில்வியா காலன்; சோப்லெவிசியஸ் சகோதரர்கள், ஜாக் மற்றும் ராபர்ட்; தோமஸ் எல் பிளாக்; சில்வியா அகலோஃப்; ராபர்ட் ஷெல்டன் ஹார்ட் .

அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, ட்ரொட்ஸ்கியின் படுகொலை பற்றி நான்காம் அகிலத்தில் அவரது கொலைக்குப் பிந்தைய நாட்களில் பரவலாகப் பேசப்பட்டதை விட அதிகமாகவே அறியப்படவில்லை. இதுதான் உத்தியோகபூர்வ விவரிப்பாக இருந்தது: அதாவது ஜிபியு இன் கொலையாளி ஒருவர், கொயோகானில் இருந்த ட்ரொட்ஸ்கியின் வீட்டுக்குள் நுழைவதற்காக, சில்வியா அகலோஃப் என்ற பெயருடைய ஒரு இளம் மற்றும் சந்தேகத்திற்கிடமற்ற ட்ரொட்ஸ்கிஸ்டுடன் ஒரு உறவை ஏற்படுத்திக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் வெளிவந்த புதிய தகவல்கள் —அதாவது கொலையாளியின் உண்மையான பெயர், ரமோன் மெர்கேடர் மற்றும் நான்காம் அகிலத்திற்குள் செயல்படும் ஸ்டாலினிச முகவர்களின் வலையமைப்பு குறித்ததாகும் — மெக்சிகோவில் ட்ரொட்ஸ்கியின் பாதுகாப்பிற்கு முக்கியமாகப் பொறுப்பேற்றிருந்த சோசலிச தொழிலாளர் கட்சி மேற்கொண்ட எந்தவொரு முயற்சிகளுடனும் தொடர்பில்லாத விசாரணைகளால் அம்பலப்படுத்தப்பட்டன. ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்ட சூழ்நிலைகள் குறித்த எந்தவொரு சுயாதீனமான விசாரணையையும் மேற்கொள்ளாமல் சோசலிச தொழிலாளர் கட்சி கைவிட்டதோடு மட்டுமல்லாமல், அனைத்து உள்நோக்கங்களுக்காகவும் 1950 கள் மற்றும் 1960 களின் முற்பகுதியில் பகிரங்கமான தகவல்களை அது புறக்கணித்து நசுக்க முயன்றது.

ட்ரொட்ஸ்கிக்கு எதிரான சதி தொடர்பான தகவல்களை சோசலிச தொழிலாளர் கட்சி மறைத்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது, சோசலிச தொழிலாளர் கட்சியின் மத்திய தலைமைக்குள் முகவர்களின் ஊடுருவலை ஆதாரங்கள் சுட்டிக்காட்டி அம்பலப்படுத்த அச்சுறுத்தின. இரண்டாவதாக, இன்னும் குறிப்பிடத்தக்க வகையில், ஒரு அரசியல் நிலைப்பாட்டில் இருந்து, ஸ்டாலினிசத்தின் எதிர்ப்புரட்சிகர பாத்திரம் அம்பலப்படுத்தப்பட்டமையானது, ஸ்டாலினிச அமைப்புகளுடன் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பப்லோவாத அமைப்புகளின் முயற்சிகளுக்கு இடையூறாக அமைந்தது.

அமெரிக்க தேசிய ஆவணக் காப்பகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த இரகசிய கோப்புகளை அணுகுவதற்கான அணுகலைப் பெற்ற நான்காம் அகிலத்தின் பாதுகாப்பும் விசாரணைக் குழு, ஹான்சனை ஜிபியு இன் ஒரு முகவராகவும் FBI க்கு தகவல் அளிப்பவராகவும் குற்றஞ்சாட்டியது. 1938 முதல் 1947 வரையில் ஜேம்ஸ் பி. கனனின் அந்தரங்கச் செயலாளராக இருந்த சில்வியா கோல்ட்வெல், சோசலிச தொழிலாளர் கட்சியின் தேசிய அலுவலகத்தில் இருந்து ஜிபியு க்கு ஏராளமான தகவல்களை வழங்கிய ஒரு ஸ்டாலினிச முகவராக இருந்தார் என்பதை நீண்டகாலமாக முத்திரையிடப்பட்ட பெரு நடுவர் மன்ற எழுத்துப்படிகள் உட்பட ஏனைய ஆவணங்களும் தீர்மானகரமாக இதனை நிரூபித்தன.

அனைத்துலகக் குழுவால் நடத்தப்பட்ட விசாரணையானது, சோசலிச தொழிலாளர் கட்சி மற்றும் சர்வதேச பப்லோவாத இயக்கத்தில் இருந்த அதன் ஒத்துழைப்பாளர்களின் வெறித்தனமான கண்டனங்களைச் சந்தித்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் வெளிக்கொணரப்பட்ட ஆவணங்கள் எந்தளவுக்கு கண்டனத்திற்குரியதாக இருந்ததோ, அந்தளவுக்கு பப்லோவாதிகளின் கண்டனங்கள் கட்டுப்பாடற்றவையாக இருந்தன.

நான்காம் அகிலத்தின் பாதுகாப்புக் குழுவின் விசாரணையானது, ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு எதிரான ஸ்டாலினிச மற்றும் ஏகாதிபத்திய சதித்திட்டங்கள் பற்றிய அறிவை பெரிதும் விரிவுபடுத்தியது. ட்ரொட்ஸ்கியின் குடும்பத்திற்குள் மெர்க்கடேருக்கு ஊடுருவ உதவிய பெண்மணியான சில்வியா அகலோஃப் ஒரு ஜிபியு முகவராக இருந்தார் என்பதை அனைத்து நியாயமான சந்தேகங்களுக்கும் அப்பால் ஸ்தாபிக்கும் தகவல்களை அதன் மிக சமீபத்திய ஆராய்ச்சி அம்பலப்படுத்தியுள்ள நிலையில், அதன் விசாரணைப் பணி பல தசாப்தங்களாக தொடர்ந்து வந்துள்ளது.

விசாரணை தொடங்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், பாதுகாப்பும் நான்காம் அகிலமும் தீவிரமான சமகாலத்திய பொருத்தத்தைக் கொண்டுள்ளது. ஏகாதிபத்திய எதிர்ப்புரட்சி தீவிரமடைவதற்கு மத்தியில், முதலாளித்துவ அரசும் அதன் முகமைகளும் தொழிலாள வர்க்கத்திற்கும் மற்றும் சோசலிச இயக்கத்தில் அதன் மிகவும் அரசியல் நனவான முன்னணிப் படைக்கும் எதிரான நடவடிக்கைகள் 1930களில் பயன்படுத்தியதை விஞ்சும் அளவிற்கு ஈவிரக்கமற்ற வன்முறையை பிரயோகிக்கும். அனைத்து ஏகாதிபத்திய சக்திகளின் முழு ஆதரவுடன், இஸ்ரேலிய அரசால் நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலை, ஆளும் உயரடுக்குகள் எந்தக் குற்றத்தையும் செய்வதிலிருந்து பின்வாங்காது என்பதை நிரூபிக்கிறது.

ஆகஸ்ட் 20, 2025 லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்ட 85 வது ஆண்டு நினைவேந்தலைக் குறிக்கும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இந்த நினைவேந்தலை சர்வதேச கூட்டங்களுடன் நினைவு கூறும். இந்தக் கூட்டங்களில் பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலம் குறித்த அனைத்துலகக் குழுவின் வரலாற்று விசாரணையின் கண்டுபிடிப்புகள் மற்றும் சமகால அரசியல் முக்கியத்துவத்துவம் மதிப்பாய்வு செய்யப்படும்.

Loading