நேட்டோ சக்திகள் உலகப் போருக்குத் தயாராகின்றன: 1945 க்குப் பிறகு மிகப்பெரிய இராணுவத்தை கட்டியெழுப்புவதற்கு பாதுகாப்பு அமைச்சர்கள் உடன்பட்டுள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில், நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் (இடது) நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தை தொடக்கி வைக்கிறார். வியாழன், ஜூன் 5, 2025. [AP Photo/Virginia Mayo]

கடந்த புதனன்று புரூசெல்ஸில் நடந்த நேட்டோவின் கூட்டத்தில், அதன் 32 உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள், கூட்டணியின் வரலாற்றிலேயே மிகப்பெரிய இராணுவத்தை கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை அமைத்தனர். இந்தத் திட்டம் ஹேக்கில் (ஜூன் 24-25) சில வாரங்களில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட உள்ளது. ரஷ்யாவுடனான நேரடி இராணுவ மோதலுக்கும், உலகளாவிய போரின் நாசகரமான விரிவாக்கத்திற்குமான தயாரிப்புகளில் இந்த உச்சிமாநாடு ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது.

ரஷ்ய விமானநிலையங்கள் மீது, குறிப்பாக அந்நாட்டிற்குள், சமீபத்தில் பெரிய அளவிலான உக்ரேனிய ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த உச்சிமாநாடு இடம்பெற்றுள்ளது. பெரும்பாலும் நேட்டோவுடன் திட்டமிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட இந்தத் தாக்குதல்கள், விரிவடைந்துவரும் போரில் மேலும் ஒரு படியைக் குறிக்கின்றன. பிரஸ்ஸல்ஸில் எடுக்கப்பட்ட முடிவுகள், ரஷ்யாவிற்கு எதிரான நேரடிப் போருக்கு, நேட்டோவின் இராணுவத் திறனை பெருமளவில் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்துள்ளதைப் போல, இது அணுஆயுத வல்லரசுகளுக்கு இடையிலான பகிரங்கமான போரை நோக்கி இட்டுச் செல்வதுடன், மனித நாகரிகத்தின் அழிவுக்கான அச்சுறுத்தலை தவிர வேறெதையும் கொண்டிருக்கவில்லை. (ரஷ்யாவின் விமான நிலையங்களை தாக்குவதன் மூலம் நேட்டோ அணுஆயுத பேரழிவுக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது )

நேட்டோவின் போர் தயார்நிலையை பாரியளவில் விரிவாக்கும் நோக்கில், ஒரு விரிவான அச்சுறுத்தல் மதிப்பீட்டின் அடிப்படையில், அடுத்த பத்தாண்டுகளுக்கான ஒரு புதிய இராணுவத் “திறன் இலக்குகளை” ஏற்பதே இக்கூட்டத்தின் முக்கிய முடிவாக இருந்தது. நேட்டோவின் பொதுச் செயலாளர் மார்க் ருட்டின் கருத்துப்படி, நேட்டோ கூட்டணி ஒரு “வலுவான, நியாயமான மற்றும் மிகவும் கொடிய கூட்டணியாக” மாறுவதற்கு ஒரு “பெரும் பாய்ச்சலை முன்னோக்கி எடுத்து வருகிறது.”

பெரிய இராணுவ சூழ்ச்சி அமைப்புகள், வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்புகள், நீண்ட தூர ஆயுதங்கள் மற்றும் தளவாட உள்கட்டமைப்பு ஆகியவற்றை கட்டியெழுப்புவது இந்த நோக்கங்களில் அடங்கும். இந்த இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு இராணுவ செலவுகள் அவசியப்படும் என்பதை ரூட்டே தெளிவுபடுத்தினார். “நமக்கு கணிசமானளவுக்கு அதிக பாதுகாப்புச் செலவுகள் தேவைப்படும். அதுதான் எல்லாவற்றுக்கும் அடிப்படையாக உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

உண்மையில், 2014 இல் வேல்ஸில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில் ஒப்புக் கொள்ளப்பட்ட, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிடுவதற்கான அளவுகோல் காலாவதியாகி விட்டது. ரஷ்யாவின் ஆயுத உற்பத்தி மற்றும் பரந்த உலகளாவிய பாதுகாப்பு சூழலுக்கு முன்னால், “2 சதவீதம் போதாது” என்று ரூட்டே வெளிப்படையாகக் கூறினார். மேலும், நேட்டோ நிர்ணயித்துள்ள புதிய இலக்கு இப்பொழுது 5 சதவீதமாக உள்ளது. பிரஸ்ஸல்ஸில், ஒப்புக்கொள்ளப்பட்ட இராணுவத் திறன்கள் மற்றும் இலக்குகளை அடைவதற்கு மட்டுமே 3.5 சதவிகிதம் செலவிடப்பட வேண்டும் என்று ரூட்டே விளக்கினார்.

அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்:

“ஒரு டாங்கி ஒரு பாலத்தைக் கடக்க முடியாவிட்டால், போர் வெடிக்கும்போது நமது சமூகங்கள் ஒட்டுமொத்த சமூகத்தின் அணுகுமுறைக்காகவும் தயாராக இல்லை என்றால், பாதுகாப்பு தொழில்துறை தளத்தை நாம் உண்மையில் உருவாக்க முடியாவிட்டால், 3.5 சதவீதம் சிறந்தது. ஆனால், நீங்கள் உண்மையில் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது... உங்கள் முக்கிய பாதுகாப்பிற்காக நீங்கள் சுமார் 3.5 சதவீதத்தை செலவிட்டிருந்தால், நீங்கள் குறைந்தபட்சம்..., பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 5 சதவீதத்தை செலவழிக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

சில ஐரோப்பிய சக்திகள் –தொழிலாள வர்க்கத்தின் பரந்த தாக்கங்கள் மற்றும் பிரமாண்டமான எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு– புதிய இலக்குகளுக்கான தங்கள் உறுதிப்பாடு குறித்து மௌனமாக இருக்க விரும்பினாலும், ஜேர்மன் ஏகாதிபத்தியம் இவற்றை ஏற்றுக்கொள்வதில் குறிப்பாக ஆக்ரோஷமாக உள்ளது. ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி போரிஸ் பிஸ்டோரியஸ் (சமூக ஜனநாயக கட்சி) புதிய இலக்குகளை வரவேற்றதுடன், ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரமான ஜேர்மனி அவற்றை அடைவதில் ஒரு மத்திய பாத்திரத்தை ஏற்கும் என்று குறிப்பிட்டார். ஜேர்மனி பாரம்பரியமாக நேட்டோவின் இராணுவச் சுமையில் இரண்டாவது பெரிய பங்கை எடுத்துக் கொள்கிறது. மேலும், அது இந்தப் பாத்திரத்தை கணிசமாக விரிவுபடுத்த விரும்புகிறது. ஜேர்மன் இராணுவமானது, அதன் அனைத்து இராணுவ டிவிஷன்கள் மற்றும் படைப்பிரிவுகளையும் முழுமையாக ஆயுதபாணியாக்கும் என்றும், விமானப்படை மற்றும் கடற்படையில் பாரியளவில் முதலீடு செய்யும் என்றும் பிஸ்டோரியஸ் அறிவித்தார். அவர் இதை ஒரு தலைமுறைக்கான “மகத்தான முயற்சி” (Kraftakt) என்று விவரித்தார்.

ஜேர்மனியின் திட்டமிடப்பட்ட போர் வரவு-செலவு திட்டக்கணக்கானது, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அதன் வரலாற்றில் எல்லாவற்றையும் மிகச் சிறியதாக்கி, மிக உயர்ந்ததாக உள்ளது. 2022 இல் இருந்து 100 பில்லியன் யூரோக்கள் “சிறப்பு நிதி” மற்றும் இந்தாண்டு கூடுதலாக 1 ட்ரில்லியன் யூரோக்கள் நிதி ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், வருடாந்திர பாதுகாப்பு வரவு-செலவு திட்டக்கணக்கு அதிகரித்து வருகிறது. முன்னணி அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இராணுவச் செலவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்து சதவீதமாக உயர்த்த அழைப்பு விடுக்கையில், ஆளும் வர்க்கம் பகிரங்கமாக முழுமையான போருக்கு தயாரிப்பு செய்து வருகிறது. ஜேர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்து சதவீதம் என்பது, ஆண்டுக்கு சுமார் 225 பில்லியன் யூரோவாக உள்ளது.

இந்த இராணுவமயமாக்கல் தொழிலாள வர்க்கத்திற்கு ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும். யார் இந்தப் பணத்தை செலுத்துவார்கள் என்பதில் பிஸ்டோரியஸ் எந்த சந்தேகத்தையும் விட்டு வைக்கவில்லை. பொது வானொலியில், “நலன்புரி உதவிகள் மற்றும் கல்வியின் மூலம் இந்த நாட்டை பாதுகாக்க முடியாது” என்று அவர் சிடுமூஞ்சித்தனமாக அறிவித்தார். சமூக மற்றும் சுற்றுச்சூழல் நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை அரசாங்கம் ஏற்கனவே ஆயுதங்களுக்கு திருப்பி வருகிறது. எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய ஒன்றியம், எஞ்சியிருக்கும் கோவிட் மீட்பு நிதிகளை பாதுகாப்பு செலவினங்களுக்காக ஒதுக்கியுள்ளது. முதலில் காலநிலை மற்றும் டிஜிட்டல் முதலீட்டிற்காக திட்டமிடப்பட்ட வரவு செலவுத் திட்டங்களையும் அது வெட்டிக் குறைத்துள்ளது.

நேட்டோவின் மூலோபாயம் ரஷ்யாவை மட்டும் இலக்கில் வைக்கவில்லை. ரூட்டே வெளிப்படையாக அதிகரித்து வரும் “எதிரிகளின்” அணியை சுட்டிக்காட்டினார்: “சீனா, வட கொரியா, ஈரான் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பாருங்கள்...” இந்தப் போர் உந்துதல் உலகளாவிய அளவில் உள்ளது. நேட்டோவின் அறிவிக்கப்பட்ட நோக்கம் அதன் படைகள் இப்போது மட்டுமல்ல, “மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில்” எந்தவொரு அச்சுறுத்தலுக்கு எதிராகவும் போரிட முடியும் என்பதை உறுதிப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

இதனால் தான் நேட்டோ, ஐரோப்பா உட்பட தொழில்துறை ஆயுத உற்பத்தியை பாரியளவில் அதிகரித்து வருவதுடன், “கூடுதல் மாற்றங்களுக்கும்” புதிய உற்பத்தி ஆலைகளுக்கும் அழைப்பு விடுத்து வருகிறது. நேட்டோ பாதுகாப்பு திட்டமிடல் செயல்முறை இப்போது இராணுவ கட்டமைப்பை பொருளாதார மறுசீரமைப்புடன் வெளிப்படையாக இணைக்கிறது. ஜேர்மனியில் ஒரு புதிய முதலீட்டு சட்டம் கொள்முதலை விரைவுபடுத்தும் மற்றும் தொழில்துறை திறனை விரிவுபடுத்தும். அரசாங்கம் ஜேர்மன் இராணுவத்தின் அணிகளை துரிதமாக உயர்த்துவதற்காக, சுவீடனை மாதிரியாகக் கொண்ட ஒரு புதிய கட்டாய இராணுவ சேவை-பாணியிலான “தன்னார்வ இராணுவ சேவையையும்” அறிமுகப்படுத்தி வருகிறது.

“பாதுகாப்பு” மற்றும் “எமது வாழ்க்கை முறையைப் பாதுகாத்தல்” என்ற பொய்களுக்குப் பின்னால் ஒரு ஈவிரக்கமற்ற ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல் உள்ளது. ஜேர்மன் முதலாளித்துவம் நாஜி ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் இராணுவப் பலத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக அது உணர்ந்திருந்த கடைசி கட்டுப்பாடுகளையும் தூக்கியெறியவும், ஐரோப்பாவின் மேலாதிக்க இராணுவ சக்தியாக மீண்டும் எழவும் உக்ரேனிய போரைப் பயன்படுத்தி வருகிறது. 2023 இலையுதிர் காலத்தில், பிஸ்டோரியஸ் ஜேர்மனி “போருக்கு தயாராக” வேண்டும் என்று கூறினார். கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் தலைவர் பிரெடெரிக் மெர்ஸ் சான்சிலராக அவரது முதல் நாடாளுமன்ற உரையில் இதையே எதிரொலித்தார். “ஜேர்மன் இராணுவம் ஐரோப்பாவில் மிக பலமான மரபுவழி இராணுவமாக மாறும்” என்று அவர் அறிவித்தார்.

அதிதீவிர வலதுசாரிகளால் நீண்டகாலமாக அறிவுறுத்தப்பட்டு வந்த இந்தக் கொள்கை, இப்போது ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்தின் உத்தியோகபூர்வ வேலைத்திட்டமாக உள்ளது. கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியின் ஜோஹான் வாடெஃபுல் மற்றும் AfD கட்சியின் அரசியல்வாதிகள் நீண்டகாலமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்து சதவீதத்தை பாதுகாப்புக்காக கோரி வருகின்றனர். இப்போது, இது, கிறிஸ்தவ ஜனநாய ஒன்றியம் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி தலைமையிலான அமைச்சகங்களால் ஆதரிக்கப்படும் அரசாங்கக் கொள்கையாக மாறியுள்ளது.

போரை நோக்கிய ஜேர்மன் அரசாங்கத்தின் பைத்தியக்காரத்தனமான அணிவகுப்பை அனைத்து பிரதான கட்சிகளும் நடைமுறையளவில் ஆதரிக்கின்றன. ஒருகாலத்தில் அமைதிவாதிகள் என்று தங்களைத் தாங்களே பிரகடனப்படுத்திக் கொண்ட பசுமைக் கட்சியினர், ரஷ்யாவுக்கு எதிராக ஜேர்மன் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டதை பகிரங்கமாக பாராட்டி, இராணுவவாதத்தின் ஆர்வமிக்க ஆலோசகர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இடது கட்சி சமீபத்திய நடவடிக்கைகள் சிலவற்றை விமர்சிக்கிறது. ஆனால், அரசாங்கத்தின் போர் நிகழ்ச்சி நிரலை இருட்டடிப்பு செய்வதற்கும் பாதுகாப்பதற்கும், அதே நேரத்தில் பரந்த மக்கள் எதிர்ப்பை கட்டுப்படுத்துவதற்கும் மட்டுமே முயல்கிறது. ஆயினும் அது ஜேர்மன் நாடாளுமன்றத்தில் 1 ட்ரில்லியன் யூரோ போர் கடன்களுக்கு ஆதரவாக வாக்களித்தது. பின்னர் ஜேர்மன் நாடாளுமன்றத்தில் சான்சிலராக மெர்ஸ் விரைவாக தேர்ந்தெடுக்கப்படுவதைப் பாதுகாப்பதில் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்தது.

இராணுவத் தாக்குதலின் விளைவுகள் பேரழிவுகரமானதாக இருக்கும். ஆளும் வர்க்கம் ஐரோப்பாவில் போர் தொடுப்பது மட்டுமல்ல, மாறாக உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது போர் தொடுக்கும் என்பதையே மீள்ஆயுதமயமாக்கல் திட்டநிரல் அர்த்தப்படுத்துகிறது. முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களுக்கு முன்னதாக இடம்பெற்றது போலவே, ஜேர்மனியிலும் ஐரோப்பா முழுவதிலும் உள்ள ஆளும் வர்க்கங்களும் ஒட்டுமொத்த நேட்டோ கூட்டணியும் போர் மற்றும் சர்வாதிகாரத்திற்குத் தயாராகி வருவதன் மூலம் உள் நெருக்கடிகள் மற்றும் சர்வதேச முரண்பாடுகளுக்கு பதிலளிக்கின்றன.

தொழிலாளர்களும் இளைஞர்களும் அவசியமான முடிவுகளை எடுக்க வேண்டும். போரை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராக, ஐரோப்பா முழுவதும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலின் மூலம் மட்டுமே, நேட்டோவின் போர்க் கொள்கையை நிறுத்த முடியும். ஒரு பொதுவான சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் ஒரு சோசலிச போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே இன்றுள்ள அவசர பணியாகும்.

Loading