தென் இலங்கையில் உள்ள மிச்செலின் தொழிலாளர்கள் சர்வதேச மிச்செலின் ஊழியர்களின் ஆதரவைக் கோருகின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

தோழர்களே!

தென் இலங்கையின் மிதிகமவில் உள்ள மிச்செலின் டயர் தொழிற்சாலையின் ஊழியர்களான நாங்கள், எங்கள் தொழில்கள் மற்றும் வேலை நிலைமைகளைப் பாதுகாக்கும் எங்கள் போராட்டத்தில் உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் கோருகிறோம். எங்கள் தொழிற்சாலையில் சுமார் 1,500 தொழிலாளர்கள் வேலைசெய்கின்ற போதிலும், நாங்கள் ஒரு நிச்சயமற்ற சூழ்நிலையை எதிர்கொள்கிறோம்.

எங்கள் தொழிற்சாலை இந்தியாவின் CEAT நிறுவனத்திற்கு விற்கப்பட்டதை சமீபத்திலேயே அறிந்துகொண்டோம். மிச்செலின் மற்றும் சியட் நிறுவனங்களுக்கு இடையிலான இந்த ஒப்பந்தம் எங்களுக்குத் தெரியாமலேயே மேற்கொள்ளப்பட்டது. மிச்செலின் மிதிகம தொழிற்சாலை மிக விரைவில் சியட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

சியட் நிறுவனத்தின் கீழ் எங்கள் தொழில்கள், ஊதியங்கள், கொடுப்பனவுகள் மற்றும் வேலை நிலைமைகளுக்கு என்ன நடக்கும் என்பது குறித்து பெரும் நிச்சயமற்ற தன்மையே உள்ளது. நாங்கள் அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்களாக இருந்த போதிலும், அது எங்களுடன் கலந்தாலோசிக்காமலும் எங்களுக்குத் தெரியாமலும் இரு நிறுவனங்களுடனும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து தொழிற்சங்கத் தலைமைத்துவம் எங்களுக்குத் அறிவிக்கவில்லை. உண்மையில், மே 26 அன்று கொழும்பில் தொழில் ஆணையரை எங்கள் குழு சந்தித்தபோதே இது குறித்து எங்களுக்குத் தெரியவந்தது.

எங்கள் தொழில்கள், ஊதியங்கள் மற்றும் சேவை நிலைமைகள் சியட் நிறுவனத்தால் பராமரிக்கப்படும் என்று அனைத்து நிறுவன ஊழியர் சங்கம் கூறுகின்ற போதிலும், நிறுவனங்களுடன் இந்த ரகசிய ஒப்பந்தத்தை செய்து கொண்ட தொழிற்சங்கத் தலைவர்களின் கருத்துக்களில் எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என்பதை தொழிற்சங்கம் எங்களிடம் கூறவில்லை அல்லது அதன் நகலை எங்களுக்கு வழங்கவில்லை. வாக்குறுதியளிக்கப்பட்ட 200,000 ரூபாய் (580 யூரோக்கள்) இழப்பீடு போதுமானதாக இல்லை.

எங்கள் உரிமைகளுக்காக எதையும் செய்ய அனைத்து நிறுவன ஊழியர் சங்கம் தயாராக இல்லாததால் எங்கள் உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் ஒரு சுயாதீனமான போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, மே 24 அன்று தொழிற்சாலைக்கு வெளியே நாங்கள் ஒரு ஆர்ப்பாட்டம் செய்தோம்.

பின்வரும் கோரிக்கைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்பியுள்ளதுடன் உங்கள் ஆதரவை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்:

1. மிச்செலினில் உள்ள தொழிலாளர்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும் சியட்டால் பராமரிக்கப்பட வேண்டும்.

2. தொழிற்சாலை சியட்டுக்கு ஒப்படைக்கப்பட்டால், ஒவ்வொரு தொழிலாளிக்கும் 3 மில்லியன் ரூபாய் (8,875 யூரோக்கள்) இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

3. இல்லையென்றால், நிறுவனத்தின் சுயவிருப்பு ஓய்வூதிய விதிமுறைகளின்படி, தொழிலாளர்கள் மிச்செலினுடன் தங்கள் சேவைகளை முடித்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்க வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.

இந்தக் கோரிக்கைகளை நாங்கள் அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்திடம் சமர்ப்பித்த போதிலும், அவர்கள் அவற்றை கடுமையாக நிராகரித்து, 200,000 ரூபாய்க்கு (585 யூரோக்கள்) எங்களை அற்ப விலைக்கு விற்கும் அவர்களின் திட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினர்.

மிச்செலின் வலைத்தளம் நிறுவனம் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்யும் என்று கூறுகிறது. கடந்த ஆண்டு லாபம் 3.4 பில்லியன் யூரோக்கள் என்றும் அது கூறுகிறது. எங்கள் கோரிக்கையானது நிறுவனம் கடந்த ஆண்டு ஈட்டிய லாபத்தில் 0.39 சதவீதம் மட்டுமே ஆகும். எங்கள் கோரிக்கையின் நியாயமான தன்மையை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

2 ஜூன் 2025 அன்று மூன்று ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதைப் பற்றி சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர் பாணி விஜேசிறிவர்தனே மிச்செலின் தொழிலாளர்களுடன் பேசிய போது [Photo: WSWS]

எங்கள் சுயாதீன பிரச்சாரத்தை அடக்கும் முயற்சியில், இலங்கையில் மிச்செலின் நிர்வாகம் எங்கள் மூன்று தொழிலாளர் தோழர்களான சம்பத் கருணாசேன, சிரங்கிவி செனவிரட்ன மற்றும் பிரியங்கா திமுத்து குமார ஆகியோரை எந்த விசாரணையும் இல்லாமல் திடீரென வேலை நீக்கம் செய்துள்ளது.

எனவே நாங்கள் மற்றொரு கோரிக்கையைச் சேர்த்துள்ளோம்:

4. வேலை நீக்கம் செய்யப்பட்ட மூன்று மிச்செலின் தொழிலாளர்களை உடனடியாக மீண்டும் வேலையில் அமர்த்த வேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் அனைத்திற்கும் மேலாக வர்க்கப் போராட்டத்தின் பாதையை எடுக்க நாங்கள் முடிவு செய்துள்துடன், எங்கள் சகோதர சகோதரிகளான உங்களின் ஆதரவை மிச்செலின் தொழிலாளர்களான எங்களுக்கு வழங்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறோம்.

எங்களை அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்த தொழிற்சங்கத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை, எனவே போராட்டத்தை எங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள ஒரு சுயாதீனமான நடவடிக்கைக் குழுவை நாங்கள் உருவாக்கியுள்ளோம். உங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்காக, தொழிற்சங்க அதிகாரத்துவங்களிலிருந்து சுயாதீனமாக, உங்கள் தொழிற்சாலைகளில் இதேபோன்ற குழுக்களை அமைக்குமாறு நாங்கள் உங்களை வலியுறுத்துகிறோம்.

நாம் இப்போது அறிந்தபடி, மிச்செலின் 2017 ஆம் ஆண்டு தொடங்கி ஐரோப்பாவில் பல தொழிற்சாலைகளை மூடியுள்ளதோடு ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்துள்ளது. அதிக லாபத்திற்காக நிறுவனத்தின் மறுசீரமைப்பு உந்துதலின் கீழ், இப்போது நாம் அனைவரும் எங்கள் தொழில்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் மீது இதேபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்கிறோம். அதனால்தான் இந்த தாக்குதல்களை முறியடிக்க ஒரு கூட்டுப் போராட்டத்தை உருவாக்குவது அவசியமாக உள்ளது.

ஐரோப்பாவிலும், சர்வதேச அளவிலும் ஏனைய மிச்செலின் தொழிலாளர்கள் நடத்தும் அனைத்து போராட்டங்களுக்கும் எங்கள் முழு ஆதரவை நாங்கள் அறிவிப்பதுடன் எங்கள் போராட்டத்தை ஒத்துழைப்புடனும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்வோம் என்று நம்புகிறோம்.

நன்றி,

மிச்செலின் ஊழியர்கள், மிதிகம

Loading