முன்னோக்கு

எலோன் மஸ்க் மற்றும் ட்ரம்பிற்கு இடையிலான மோதலும் அமெரிக்க அரசியல் நெருக்கடியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

பட்லர் பண்ணை கண்காட்சி பிரச்சார நிகழ்வில் பேசிய பிறகு, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் புறப்படத் தயாராகும் போது, ​​இடதுபுறத்தில் உள்ள குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னர் இருந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைதட்டுகிறார். அக்டோபர் 5, 202 [AP Photo/Alex Brandon]

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் மற்றும் உலகின் மிகப் பெரிய செல்வந்தரும், அவரது முன்னாள் வரவு செலவுத் திட்ட ஆலோசகருமான எலோன் மஸ்க்குக்கும் இடையே வெடித்த ஒரு பகிரங்க மோதலானது, தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் பெருநிறுவன நிதியியல் தன்னலக்குழுவிற்கு எதிரான மக்கள் எதிர்ப்பால் அரசு எந்திரத்திற்குள் ஏற்பட்டுள்ள அசாதாரண அளவிலான நெருக்கடி மோதலைப் பற்றி பேசுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை, ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து எலோன் மஸ்க் அதிகாரப்பூர்வமாக விலகினார். இது, கூட்டாட்சி அரசு ஊழியர்கள் மீதான தாக்குதலுக்கும், முழு அரசு நிறுவனங்களையும் மூடுவதுக்கும் வழிவகுத்த அரசாங்க செயல்திறன் துறைக்கு (DOGE) பொறுப்பாக “சிறப்பு அரசு ஊழியராக” இருந்த அவரது கடைசி நாளாகும். வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடந்த ஒரு விழாவில், எலோன் மஸ்க்கும் ட்ரம்பும் பரஸ்பர வாழ்த்துக்களையும் ஆதரவு வெளிப்பாடுகளையும் பரிமாறிக் கொண்டனர். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, இரண்டு பில்லியனர் குண்டர்களுக்கிடையே ஒரு ஒரு கசப்பான பகை வெடித்தது.

கடந்த வார இறுதியிலும், திங்களன்றும் அளித்த நேர்காணல்களில், கடந்த வாரம் பிரதிநிதிகள் சபையால் நிறைவேற்றப்பட்ட ட்ரம்பின் “பெரிய, அழகான மசோதாவுக்கு” மஸ்க் விரோதமாக குரல் கொடுக்கத் தொடங்கினார். இந்த மசோதா, இந்த ஆண்டின் இறுதியில் காலாவதியாகவுள்ள செல்வந்தர்களுக்கான 2017 வரிக் குறைப்புகளை நீட்டிக்கிறது. நூற்றுக்கணக்கான பில்லியன்களை கொண்டிருக்கும் மஸ்க், வரிக் குறைப்புகளை எதிர்க்கவில்லை என்பது உண்மைதான், இருப்பினும், மசோதாவில் உள்ள அதிகப்படியான “ஆர்வத்தை” அவர் கண்டனம் செய்தார். கடந்த செவ்வாயன்று, டுவிட்டர் X இல் ஒரு கருத்தை வெளியிட்ட அவர், இந்த மசோதாவை “அருவருப்பிலும் அருவருப்பு” என்று கூறி, அதை நிராகரிக்க செனட்டர்களை வலியுறுத்தினார்.

இந்த மோதல், தொழிலாள வர்க்கத்தின் இழப்பில், சமூக நலத் திட்டங்களில் பரந்த வெட்டுக்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து ஆளும் வர்க்கத்திற்குள் உள்ள குறிப்பிடத்தக்க பிளவுகளை எடுத்துக்காட்டுகிறது—இந்த இலக்கில் அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்துக் கன்னைகளும் உடன்பட்டுள்ளன. ஜேபி மோர்கன் சேஸ் தலைமை செயலதிகாரி ஜேமி டைமன், ஊதிப்பெருக்கும் கூட்டாட்சி அரசின் பற்றாக்குறை குறித்தும் மற்றும் “பத்திர சந்தையில் ஒரு விரிசல்” உருவாகி வருவது குறித்தும் எச்சரிக்கை விடுத்தார்.

சீனச் சந்தைகள் மற்றும் வினியோக சங்கிலிகளை பெரிதும் சார்ந்துள்ள மஸ்க், அவரது சொந்த வணிக நலன்கள் மற்றும் அமெரிக்க முதலாளித்துவத்தின் பரந்த உலகளாவிய நலன்கள் இரண்டையும் அச்சுறுத்தும் ட்ரம்பின் சுங்கவரி விதிப்பு கொள்கையை கண்டனம் செய்தார். தங்கத்தின் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலரின் பலவீனமான நிலை, வோல் ஸ்ட்ரீட்டிற்கும் உலக நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மைக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் முன்னேற்றங்கள் ஆகியவற்றை நிதி விமர்சகர்கள் குறிப்பாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆளும் வர்க்கத்திற்குள் நடக்கும் மோதல்கள், சம்பந்தப்பட்ட தனிநபர்களின் ஊழல் நிறைந்த தனிப்பட்ட நலன்களுடன் குறுக்கிடுகின்றன. எலோன் மஸ்க்கின் வணிக சாம்ராஜ்யத்திற்கு எதிரான பழிவாங்கலை மேற்கொள்ளப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார். இதில் “பில்லியன் கணக்கான” டாலர்கள் கூட்டாட்சி அரசின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதும் அடங்கும். டெஸ்லாவின் பங்கு வியாழக்கிழமை 14 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தது. சந்தை மதிப்பில் 152 பில்லியன் டாலரை இது அழித்தது. மேலும், மஸ்க்கிற்கு தனிப்பட்ட முறையில் 20 பில்லியன் டாலர்கள் இழப்பையும் இது ஏற்படுத்தியது.

கடந்த சனிக்கிழமையன்று, நாசாவின் தலைவராக மஸ்க்கின் வாடிக்கையாளரும், அவரது நெருங்கிய நண்பருமான பில்லியனர் ஜாரெட் ஐசக்மேனின் நியமனத்தை ட்ரம்ப் திரும்பப் பெற்றார். எலோன் மஸ்க்கின் இலாபகரமான - ஆனால் தொழில்நுட்ப ரீதியாக சவாலான - ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் முக்கிய கூட்டாளியாகக் கருதப்படும் ஐசக்மேன், மஸ்க்கின் தேர்வாக இருந்தார். இந்த நிறுவனம் முழுக்க முழுக்க கூட்டாட்சி ஒப்பந்தங்களை நம்பியுள்ளது.

பைடென் நிர்வாகத்தின் கீழ் தொடங்கப்பட்ட மஸ்க்கின் வணிக நடைமுறைகள் குறித்த விசாரணைகளை அரசாங்கம் மீண்டும் தொடங்கலாம் என்று இரண்டு ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் கூறியதாக ரோலிங் ஸ்டோன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விசாரணைகள், ட்ரம்ப்பின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மஸ்க் 275 மில்லியன் டாலர்களை செலுத்துவதற்கும் தேர்தலுக்கு முந்தைய இறுதி மாதங்களில், அதில் நேரில் சேருவதற்கும் முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

ட்ரூத் சமூக வலைத்தளத்தில் ட்ரம்ப்பின் மற்றொரு பதிவில், “எலோன் தனது விருப்பப்படி இருந்தார், நான் அவரை வெளியேறச் சொன்னேன், வேறு யாரும் விரும்பாத மின்சார வாகனங்களை அனைவரும் வாங்கும்படி கட்டாயப்படுத்திய, அவரது EV ஆணையை நான் எடுத்துக்கொண்டேன், (நான் பல மாதங்களாக அதைச் செய்யப் போகிறேன் என்று அவருக்குத் தெரியும்!), அவர் பைத்தியமாகிவிட்டார்!” என்று குறிப்பிட்டார்.

ட்ரம்பின் கருத்துக்களுக்கு பதிலளித்த மஸ்க், “இது உண்மையில் பெரிய குண்டை வீசுவதற்கான நேரம்: @realDonaldTrump எப்ஸ்டீன் கோப்புகளில் இருக்கிறார். அதுதான் அவை பகிரங்கப்படுத்தப்படாததற்கான உண்மையான காரணம்” என்று குறிப்பிட்டார்.

இந்த அறிக்கை - சந்தேகத்திற்கு இடமின்றி உண்மை - ஆகஸ்ட் 2019 இல் மன்ஹாட்டன் சிறையில் இறந்து கிடந்த பல மில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீனின் குற்றவியல் பாலியல் கடத்தலைக் குறிக்கிறது. ஆகஸ்ட் 2019 இல், மன்ஹாட்டன் சிறைச்சாலையில் இறந்து கிடந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன், தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். ஆனால், இதை யாரும் நம்பவில்லை. எப்ஸ்டீன் தனது வாடிக்கையாளர்களாக இருந்த பில்லியனர்களுக்கு இளம் பெண்களை வழங்குபவராக தனது முத்திரையைப் பதித்த காலம் முழுவதும் ட்ரம்பும் எப்ஸ்டீனும் நீண்டகாலமாக நட்புறவைக் கொண்டிருந்தனர்.

எனவே, எலோன் மஸ்க்கின் பதிவு ட்ரம்பிற்கு கடுமையான அச்சுறுத்தலையும், அமெரிக்க தன்னலக்குழுவிற்குள் இடம்பெறும் அரசியல் போரின் வியத்தகு அதிகரிப்பையும் குறிக்கிறது. டுவிட்டர் X இல் மற்றொரு கருத்தை பதிவிட்ட மஸ்க், “இந்த இடுகையை எதிர்காலத்திற்காகக் குறிக்கவும். உண்மை வெளிவரும்” என்று மேலும் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த வியாழக்கிழமை பிற்பகுதியில், ட்ரம்ப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸை நியமிக்க வேண்டும் என்று பரிந்துரைத்த X பயனர்களை மஸ்க் பாராட்டினார். மேலும் ட்ரம்பின் சுங்கவரி விதிப்புகள் “இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் பொருளாதார மந்தநிலையை ஏற்படுத்தும்” என்று அவர் எச்சரித்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவியாளர் ஸ்டீவ் பானன், ஸ்பேஸ்எக்ஸ் அமெரிக்க இராணுவத்திற்கான முக்கிய செயல்பாடுகளை மேற்கொள்வதால், அதன் கட்டுப்பாட்டைக் கைப்பற்றவும், மஸ்க்கை அவரது சொந்த நாடான தென்னாப்பிரிக்காவிற்கு நாடு கடத்தவும் ட்ரம்புக்கு அழைப்பு விடுத்தார். அதற்கு பதிலளித்த எலோன் மஸ்க், “பானன் மிகவும் மந்த நிலையில் இருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.

அரசுக்குள் மூர்க்கமான மோதல்கள் வெடித்துள்ள நிலையில், ட்ரம்புக்கும் மஸ்க்கிற்கும் இடையிலான பகை, 1934 ஆம் ஆண்டு நாஜிக் கட்சிக்குள் நூற்றுக்கணக்கான அரசியல் எதிரிகளைக் கொன்றதன் மூலம் ஹிட்லர் தனது சர்வாதிகாரத்தை பலப்படுத்திய இரத்தக்களரியான நீண்ட கத்திகளின் இரவை, மிக முக்கியமாக பழுப்பு நிறச் சட்டை அணிந்த துணை ராணுவ அமைப்பின் தலைவரான எர்ன்ஸ்ட் ரோம் மற்றும் கிரிகோர் ஸ்ட்ராஸரை படுகொலை செய்ததை நினைவுபடுத்துகிறது.

ஒட்டுமொத்தமாக குற்றவியலான, நாற்றம்கண்ட மற்றும் கலாச்சார சீரழிவு ஆகியவற்றில் உழன்றுவரும் ஒரு தன்னலக்குழுவின் சித்திரத்தை ஒருவர் இங்கே காணலாம். இரண்டாவது ட்ரம்ப் நிர்வாகத்தின் முதல் மாதங்களில் அரசியல் அதிகாரத்தின் உச்சத்திற்கு கொண்டு வரப்பட்ட மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆவார். கடந்த இலையுதிர்கால தேர்தல் பிரச்சாரத்தின் போது மஸ்க் கெட்டமைன், எக்ஸ்டசி, சைகடெலிக் காளான்கள் மற்றும் பிற போதை மருந்துகளை அடிக்கடி பயன்படுத்துபவர் என்றும், DOGE இன் தலைவராக அவரது நடத்தை இந்தப் போக்கு தொடர்வதைக் குறிக்கிறது என்றும் நியூயார்க் டைம்ஸ் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது.

ட்ரம்பின் சொந்த ஸ்திரத்தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது. வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட ஒரு அட்டவணையில், ட்ரம்ப் தனது நிர்வாகத்தின் முதல் 132 நாட்களில், ட்ரூத் சமூக வலைத்தளத்தில் 2,262 முறை பதிவிட்டதாகவும், அதில், ஒரே நாளில் 138 தனித்தனி பதிவுகள் இருந்ததாகவும் கண்டறிந்தது. கடந்த வார இறுதியில், ஜோ பைடென் 2020 இல் தூக்கிலிடப்பட்டு, தொடர்ச்சியான ரோபோக்களால் அவர் மாற்றப்பட்டதாகக் கூறும் ஒரு வினோதமான சதிக் கோட்பாட்டை ட்ரம்ப் மறு ட்வீட் செய்தார். ஊழலைப் பொறுத்தவரை, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் பகுப்பாய்வின்படி, முக்கியமாக ட்ரம்பினது ஆதரவாளர்களுக்கு சந்தைப்படுத்தப்பட்ட கிரிப்டோகரன்சி நடவடிக்கைகள் மூலம், தேர்தலுக்குப் பிறகு அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு 1.2 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.

ட்ரம்ப்-மஸ்க் நிர்வாகத்தின் குற்றகரத்தன்மையும், ஊழலும் ஒட்டுமொத்தமாக அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் சீரழிவின் மிகவும் அருவருப்பான வெளிப்பாடு மட்டுமே ஆகும்.

அமெரிக்காவில் கட்டவிழ்ந்து வரும் அரசியல் நெருக்கடியானது, தன்னலக்குழுவின், தன்னலக்குழுவிற்கான ஒரு அரசாங்கமாக இருந்துவரும் ட்ரம்ப் நிர்வாகத்தின் தன்மையை மட்டுமல்ல, பெயரளவில் இருந்துவரும் எதிர்ப்புக்களையும் அம்பலப்படுத்துகிறது. எதேச்சாதிகார ஆட்சியை நோக்கிய இடைவிடாத முனைவை எதிர்க்க ஜனநாயகக் கட்சி ஒன்றும் செய்யவில்லை. ட்ரம்பிற்கு எதிரான சீற்றங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்கையில், ஜனநாயகக் கட்சியினர், ட்ரம்ப் சர்வ வல்லமையுள்ளவர் என்றும் தாங்கள் சக்தியற்றவர்கள் என்றும் கூறி, தமது இயலாமையைப் போலியாகக் காட்டுகிறார்கள்.

ஐக்கிய வாகன தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷான் ஃபெயின் உட்பட தொழிற்சங்க எந்திரத்தின் சில பிரிவுகள், ட்ரம்பின் பொருளாதார தேசியவாதத்தை தழுவி, “அமெரிக்காவின் பொருட்களை வாங்குக” என்ற வாய்வீச்சு தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதாக முன்வைக்கின்றனர். பெயரளவில் சுதந்திரமாக இருப்பதாக தன்னைக் காட்டிக்கொள்ளும் பேர்னி சாண்டர்ஸ், புலம்பெயர்ந்தவர்கள் மீதான ட்ரம்பின் தாக்குதலை ஆதரித்துள்ளார். மேலும், இந்த வாரம், ட்ரம்பின் வரி மசோதா மீதான மஸ்க்கின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதமாக, “மஸ்க் சொல்வது சரிதான்” என்று சாண்டர்ஸ் பதிலளித்தார்.

ஆளும் உயரடுக்கின் போட்டிப் பிரிவுகளுக்கு இடையிலான இந்த மோதலில் தொழிலாள வர்க்கம் எந்தப் பக்கத்தையும் எடுத்துக்கொள்ள முடியாது. இருப்பினும், ஆளும் வர்க்கத்திற்குள் ஏற்பட்டுள்ள அரசியல் முறிவு, தொழிலாள வர்க்கம் அதன் சொந்த நலன்கள் மற்றும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சுயாதீனமாக தலையிடுவதற்கான கதவைத் திறந்துள்ளது.

புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்களுக்கு மக்களின் எதிர்வினை, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புத் தொழில்துறையில் வேலைநிறுத்தங்கள் ஆகியவற்றுடன், எதிர்ப்புக்கான அறிகுறிகள் அதிகரித்து வருவதால், இந்த நெருக்கடி பகிரங்கமாக வெடித்து வருகிறது. உத்தியோகபூர்வ அரசியல் அமைப்புமுறையின் வீழ்ச்சி, ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் சமூகக் கோபம் ஆகியவை, கீழிருந்து ஒரு பாரிய வெகுஜன இயக்கத்திற்கான நிலைமைகளை உருவாக்கி வருகின்றன. இந்த இயக்கத்திற்கு திசையையும் முன்னோக்கையும் வழங்கும் திறன் கொண்ட ஒரு நனவான தலைமையை கட்டியெழுப்புவது அவசியமாகும்.

Loading