இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
என் பெயர் வில் லெஹ்மன். நான் பென்சில்வேனியாவின் மெக்குங்கியில் உள்ள மெக் றக்ஸ் நிறுவனத்தில் ஒரு வாகன தொழிலாளி ஆவேன். இந்த சர்வதேச கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களின் புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
அமெரிக்காவில் தொழிலாளர்கள் கடுமையான உண்மைகளை எதிர்கொள்கின்றனர். செல்வ சமத்துவமின்மை எல்லா நேரத்திலும் உச்சத்தில் உள்ளது. வாழ்க்கைச் செலவு கட்டுப்பாட்டை மீறி உயர்ந்துள்ளது. தொழிற்சாலைகள், களஞ்சியங்கள், மருத்துவமனைகள், பாடசாலைகள், துறைமுகங்கள் மற்றும் தபால் மற்றும் பொதியிடல் மையங்களில் சமீபத்திய ஆண்டுகளில் சுரண்டல் மட்டுமே அதிகரித்துள்ளது.
இது ஜனநாயக கட்சி மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்களின் கீழ் பல தசாப்தங்களாக இடம்பெற்று வரும் ஒரு செயல்முறையாகும். ஜனநாயகக் கட்சியினருக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்த பின்னர், வருங்கால ஃப்யூரர் ட்ரம்ப் இப்போது மீண்டும் வெள்ளை மாளிகையில் இருக்கிறார். ட்ரம்ப் பொருளாதார நிலைமையை மாற்றுவார் என்று சிலர் கொண்டிருந்த நம்பிக்கைகள் கணிசமாக மங்கிவிட்டதாக கருத்துக் கணிப்புகள் குறிப்பிடுகின்றன. ட்ரம்பின் வர்த்தகப் போர் அமெரிக்காவில் தொழிலாளர்களுக்கான பொருளாதாரக் கண்ணோட்டத்தை மோசமாக்கியுள்ளது.
ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத் தலைவர் ஷான் ஃபைன் பல மாதங்களை ட்ரம்புடன் நட்புறவு கொள்ளவும் அவரது தேசியவாத சுங்க வரிகளை அங்கீகரிக்கவும் செலவிட்டார். அமெரிக்காவில் ஒரு தொழிற்சங்கத் தலைவர் தேசியவாதத்தின் முட்டுச்சந்தை ஊக்குவிப்பது ஒன்றும் புதிதல்ல. பல தசாப்தங்களாக, தொழிற்சங்கங்கள் ஒரு தொழிலையும் காப்பாற்றாமல் தேசியவாத்தத்தை ஊக்குவித்து வந்துள்ளன. தேசியவாதம் தொழிலாளர்களுக்கு ஒரு விஷம் ஆகும். அது தொழில்களை அழிப்பதற்கும், தொழிலாளர்கள் மத்தியில் பிளவுகளுக்கும், ஆழமான சுரண்டலுக்கும் மட்டுமே வழிவகுத்தது.
தொழிலாளியை தொழிலாளிக்கு எதிராக நிறுத்துகின்ற தேசியவாதம், உண்மையான வர்க்கப் போரில் இருந்து, அதாவது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக கூட்டுத்தாபன பெருந்தனவந்த குழு முன்னெடுக்கும் போரிலிருந்து, தொழிலாள வர்க்கத்தின் கவனத்தை திசைதிருப்புகிறது. பல ஆண்டுகளாக, பெருநிறுவனங்களின் செல்ல நாய்களாக இருந்துகொண்டு, தங்கள் சொந்த சலுகை படைத்த நிலைமையைப் பாதுகாத்துக்கொள்வதற்காக, உலகெங்கிலும் உள்ள தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், தொழிலாளர்கள் 'போட்டித்தன்மையுடன் இருக்க' குறைவானதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி, பயத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்கள் அமுல்படுத்தும் ஒவ்வொரு விற்றுத்தள்ளும் ஒப்பந்தத்திலும், அவர்கள் கோரும் ஒவ்வொரு சலுகையிலும் தொழிலாள வர்க்கத்தை காட்டிக்கொடுப்பதுடன் ஒவ்வொரு முறையும் ஏனைய நாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு எதிராக எங்களைத் தூண்டி விடுகிறார்கள்.
சுங்க வரிகளுக்கு நாம் பணம் செலுத்த நிர்ப்பந்திக்கப்படுவதால், அவை சர்வதேச அளவில் தொழிலாளர்களை வறுமையில் தள்ளும். அவை, ஏற்கனவே நான் வேலை செய்யும் தொழிற்சாலை மற்றும் பிற மெக் றக்ஸ் தொழிற்சாலைகள் மற்றும் வழங்குனர்கள் உட்பட, அமெரிக்க வாகனத் துறையில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலையில், சர்வதேச அளவில் வேலை நீக்கங்களுக்கு வழிவகுக்கும். கார்களின் விலை அதிகரிக்கும் நிலையில், அதன் விளைவாக சந்தையில் கேள்வி இல்லாததால் உற்பத்தி குறையும் நிலையில், அவை சர்வதேச அளவில் வேலை நீக்கங்களுக்கு வழிவகுக்கும்.
மிகவும் முக்கியமாக, வர்த்தகப் போரானது துப்பாக்கிப் போருக்கு வழிவகுக்கிறது என்பதை வரலாறு காட்டுகிறது. உலகப் போரை நடத்துவதற்கு, குறிப்பாக சீனாவை இலக்கு வைத்த போருக்கு, போதுமான இராணுவ உற்பத்தியை முன்னெடுக்க அமெரிக்காவிற்கு நிதி வசதியை ஏற்படுத்துவதே சுங்க வரிகளின் உண்மையான நோக்கம் ஆகும். இது ட்ரம்புடன் தொடங்கவில்லை, மாறாக ஏற்கனவே பைடனின் கீழ் நடந்து கொண்டிருந்தது. நான் வேலை செய்யும் தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்கள், 2021 இல் பைடனின் வருகையை நினைவு கூர வேண்டும். அப்போது அவர் சீனாவுடன் நாங்கள் ஒரு போட்டியில் இருக்கிறோம் என்று அறிவித்தார். அவர் தனது உள்கட்டமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட சிப் வகைகளின் தேவை பற்றி பேசினார். அவர்கள் இந்த சிப் வகைகளை சீனாவிற்கு எதிரான போருக்காக இராணுவ உற்பத்தியில் பயன்படுத்த விரும்புகிறார்களே அன்றி, அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக அல்ல.
ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் நம்மைப் பிரித்து, அதே வர்க்க நலன்களைப் பகிர்ந்து கொள்ளும் மகத்தான சக்திவாய்ந்த சீன தொழிலாள வர்க்கத்தில் உள்ள நமது வர்க்க கூட்டாளிகளுடன் போட்டியிட நிர்ப்பந்திக்க முயற்சிக்கின்றனர். அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களைப் போலவே, சீனத் தொழிலாளர்களும் சமீபத்திய வேலைநிறுத்தங்களின் மூலம் போராடுவதற்கான பெரும் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர். வரவிருக்கும் போராட்டங்களில் நாம் வெற்றிபெற வேண்டுமானால், எந்த நாட்டிலும் உள்ள நமது சக ஊழியர்களிடமிருந்து நாம் பிரிக்கப்பட கூடாது. தேசிய எல்லைகளை கடந்து ஒற்றுமையின் பிணைப்புகளை உருவாக்க வேண்டும்.
மேலும், சீனாவுடனான போரானது அதை எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு கொடூரமான, இரத்தக்களரி பேரழிவை ஏற்படுத்தும். இரண்டாம் உலகப் போரின் விளைவாக 80 மில்லியனுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அனைத்து பெரிய வல்லரசுகளும் அணுகுண்டுகளை வைத்திருக்கும் நிலையில், ஒரு மூன்றாம் உலகப் போர் மனிதகுலத்தின் அழிவுக்கு வழிவகுக்கும்.
தேசியவாதத்தை ஊக்குவிக்கும் அதே ஆளும் வர்க்கம் அமெரிக்காவில் குடியேறிய தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களைத் தாக்குகிறது. இந்தத் தாக்குதல்கள் கடந்தகால புரட்சிகரப் போராட்டங்கள் மூலம் வென்றெடுக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளை அழிப்பதை நோக்கமாகக் கொண்டவை ஆகும். அமெரிக்கா, குடியேறியவர்களின் நாடு ஆகும். பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் தங்கள் மூலங்களைக் கொண்டுள்ளனர். தொழிலாளர்களைப் பிளவுபடுத்தவும், பரந்த தாக்குதல்களுக்கு வழிவகுக்கவும், ஆளும் வர்க்கம் பொருளாதார நெருக்கடிக்காக புலம்பெயர்ந்தோரை பலிகடாக்களாக ஆக்குகிறது - ட்ரம்ப் இப்போது 'உள்நாட்டில் வளர்ந்தோர்' என்று அழைக்கும் அமெரிக்க பூர்வீகத் தொழிலாளர்களும் பலிகடாக்கள் ஆக்கப்படுவதோடு எல் சால்வடாரில் உள்ள வதை முகாம்களுக்கு அனுப்புவதாக அச்சுறுத்துப்படுகின்றனர்.
அமெரிக்கத் தொழிலாளர்கள், ஒருவர் மீதான தாக்குதலை, அனைவருக்கும் எதிரான தாக்குதலாகக் கருதும் நமது மரபுகளுடன் மீண்டும் இணைய வேண்டும். நமது புலம்பெயர்ந்த சகோதர சகோதரிகளுக்காக நாம் போராட வேண்டும். அத்துடன், யார் எங்கு பிறந்தாலும், நமது ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதல்களை அனுமதிப்பதன் மூலம் வரவிருக்கும் போராட்டத்தை எம்மால் வெல்ல முடியாது என்பதை நாம் உணர வேண்டும்.
அமெரிக்காவில் புரட்சியின் வரலாற்றால் நாம் வழிநடத்தப்பட வேண்டும். நிலப்பிரபுத்துவ முடியாட்சியின் கீழ் பழைய வழியில் விஷயங்கள் தொடர முடியாது என்பதை ஸ்தாபக தந்தைகள் உணர்ந்தபோது, அவர்கள் உலகம் முழுவதும் புரட்சிகளைத் தூண்டிய ஒரு புரட்சியைத் முன்னெடுத்தனர். லிங்கன் கூறியவாறு 87 ஆண்டுகளின் பின்னர், இரண்டாவது புரட்சி, அதாவது உள்நாட்டுப் போர் நடந்தமை, அடிமைத்தனத்தை ஒழிக்க வழிவகுத்தது.
இப்போது, பெரும்பாலான அமெரிக்க தொழிலாளர்கள் நாம் பழைய வழியில் வாழ முடியாது என்பதை உணர்ந்துள்ளனர். இதற்கான சான்றுகள் சமீபத்திய ஆண்டுகளில் 90 சதவீத அதிக அளவிலான வேலைநிறுத்த ஆதரவு வாக்குகளில் காணப்படுகின்றன. பெப்ரவரியில், இந்தியானாவில் உள்ள ரோல்ஸ் ராய்ஸில் உள்ள தொழிலாளர்கள் 99.5 சதவீதம் பேர் வேலைநிறுத்தம் செய்ய வாக்களித்தனர். அவர்களில் 100 பேரில் ஒரு தொழிலாளி கூட போராட்டத்திற்கு எதிராக இல்லை.
ஆனால் போராடுவதற்கான விருப்பத்தை விட, விஷயங்கள், அவை இருக்கும் வழியில் தொடர முடியாது என்பதை உணருவதை விட நமக்கு அதிகமானது தேவைப்படுகிறது. நமக்குத் தேவை நமது வர்க்க நலன்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் முன்னோக்கு ஆகும். அந்த அரசியல் முன்னோக்கைக் கொண்டவர்கள், தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியை கட்டியெழுப்புவதன் மூலம் இந்தப் போராட்டத்தை வழிநடத்த முன்வர வேண்டும். தற்போதுள்ள அதிகார அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுப்பது பயனற்றது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் கட்டுப்படுத்தும் ஒரு இயக்கம் நமக்குத் தேவை. முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக, தேசியவாத பிளவுகளுக்கு எதிராக மற்றும் போருக்கு எதிராக அது நமது வர்க்க நலன்களுக்கான போராட்டத்தை முன்னேற்றுகிறது.
இந்தப் போராட்டத்தின் அவசியத்திற்காக நமது சக ஊழியர்களிடையே நாம் உடன்பாட்டைக் காண்டாலும், நாம் அதற்கு தலைமை தாங்க வேண்டும். நாம் செயல்படத் தவறினால் மனிதகுலத்தின் எதிர்காலத்தை நாம் பணயம் வைக்கிறோம், மேலும் நாம் பெற வேண்டிய அனைத்தும் நாம் வழிநடத்த வேண்டிய போராட்டங்களிலேயே உள்ளன. தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியில் சேர்ந்து இந்தப் போராட்டத்தை வழிநடத்த உதவுங்கள். நன்றி.
மேலும் படிக்க
- மே தினம் 2025: பாசிசம் மற்றும் போருக்கு எதிராக சோசலிசம்
- ட்ரம்பின் சர்வாதிகாரமும் உலகளாவிய போரும் சோசலிசத்திற்கான போராட்டமும்
- நாசிசத்திற்கு எதிரான சோவியத்தின் வெற்றியும் இன்று ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும்
- தெற்காசியாவில் நெருக்கடியும் சோசலிசத்திற்கான போராட்டமும்
- உலக சோசலிச வலைத் தளமும் போர், இனப்படுகொலை, பாசிசம் மற்றும் பெரும் பொய்க்கு எதிரான போராட்டமும்