முன்னோக்கு

சீனாவிற்கு எதிரான "உடனடி" போருக்கு ஆசிய நட்பு நாடுகள் தயாராக வேண்டும் என்று அமெரிக்கா கோருகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

கடந்த வாரயிறுதியில் வருடாந்திர, உயர்மட்ட ஷாங்ரி-லா பேச்சுவார்த்தையில் உரையாற்றிய அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத், இந்தோ-பசிபிக் முழுவதிலும் உள்ள இராணுவ நட்பு நாடுகள் மற்றும் பங்காளிகளுக்கு, “உங்கள் இராணுவக் கட்டமைப்பை வியத்தகு முறையில் அதிகரித்து, சீனாவுடனான மோதலுக்கான ஒரு போர் நிலைப்பாட்டில் உங்களை இருத்திக் கொள்ளுங்கள்” என்ற கருத்தை முன்வைத்தார்.

“கம்யூனிச சீனாவின் ஆக்கிரமிப்பை” கண்டித்த ஹெக்சேத், அது “ஆசியாவில் ஒரு மேலாதிக்க சக்தியாக” மாற முயன்று வருவதாக அறிவித்தார். குறிப்பாக தாய்வான் மீது கவனம் செலுத்திய அவர், தீவை ஆக்கிரமிக்கும் எந்தவொரு சீன முயற்சியும் “இந்தோ-பசிபிக் மற்றும் உலகிற்கு பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று எச்சரித்தார். “அதை மறைக்க எந்த காரணமும் இல்லை. சீனா முன்வைக்கும் அச்சுறுத்தல் உண்மையானது. அது உடனடியாக நிகழலாம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற 22வது ஷாங்க்ரி-லா உரையாடல் உச்சிமாநாட்டில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தனது உரையை நிகழ்த்துகிறார், சனிக்கிழமை, மே 31, 2025 [AP Photo/Anupam Nath]

அமைதியின் ஆதரவாளர்களாக தங்களைக் காட்டிக் கொள்வதன் மூலம், ஹெக்செத்தும் ட்ரம்ப் நிர்வாகமும் யதார்த்தத்தை தலைகீழாக மாற்றுகிறார்கள். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மீண்டும் மீண்டும் நடப்பது போல, ஏகாதிபத்தியம் “சமாதானம்” என்ற போர்வையில் போருக்குச் சென்று, “தடுப்பு” என்ற போர்வையில் ஒரு பாரிய ஆயுதப் போட்டியில் ஈடுபட்டுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியம்தான் மூன்று தசாப்தங்களாக சட்டவிரோத படையெடுப்புகளையும் போர்களையும் நடத்தி அதன் உலகளாவிய மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான அவநம்பிக்கையான முயற்சியில் ஈடுபட்டுள்ளதே ஒழிய சீனா அல்ல. உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அதன் போரைத் தீவிரப்படுத்தி, காஸாவில் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான போரை முழுமையாக ஆதரித்து வருகின்ற நிலையில், உள்நாட்டில் தீர்க்க முடியாத பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளால் சூழப்பட்டுள்ள பாசிச ட்ரம்ப் நிர்வாகம், அமெரிக்க மேலாதிக்கத்திற்கான பிரதான அச்சுறுத்தலாக கருதும் சீனாவுடனான மோதலுக்குள் தலைகீழாக மூழ்கி வருகிறது.

“ஜனாதிபதி ட்ரம்ப் ‘அமெரிக்கா முதலில்’ என்பதை உலக அரங்கில் பிரயோகிப்பதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்” என்று ஹெக்சேத் அறிவித்தார். இதன் அர்த்தம் விரைவில் தெளிவாகி வருகிறது. ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கிலான போர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் அல்ல. மாறாக, அதற்கும் அப்பால், ஆசியாவிலான வாஷிங்டனின் போர்த் திட்டங்களுடன் அவை ஒருங்கிணைந்து, அணுஆயுத சக்திகள் சம்பந்தப்பட்ட ஓர் உலகளாவிய மோதலாக மாறி வருகின்றன.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு முற்றிலும் அடிபணிந்த ஒரு உலகம் என்ற தற்பெருமை கற்பனையை யதார்த்தமாக்குவதே ட்ரம்ப் முயன்று வரும் ஒரே “சமாதானம்” ஆகும். இதுதான் “அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்குவோம்” என்ற அவரது மேலோங்கிய சுலோகத்தின் உள்ளடக்கமாக உள்ளது. இது, நாஜிக்களின் பாடலான “ஜேர்மனி, எல்லாவற்றிற்கும் மேலாக ஜேர்மனி, உலகில் உள்ள எல்லாவற்றிற்கும் மேலாக ஜேர்மனி”, என்றதைத் தவிர வேறெதையும் நினைவுக்குக் கொண்டு வரவில்லை.

ட்ரம்ப் நிர்வாகம் இராணுவ செலவினங்களை அதிகரிக்கவும், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரை துரிதப்படுத்துவதில் அதிக பங்கை எடுக்கவும் ஏற்கனவே ஐரோப்பாவில் உள்ள அதன் நேட்டோ நட்பு நாடுகளுக்கு கடுமையாக அழுத்தம் கொடுத்து வருகிறது. ரஷ்யாவிற்குள் ஆழமாக சென்று மூலோபாய குண்டுவீச்சு விமானங்களை அழித்த சமீபத்திய இராணுவத் தாக்குதல், பென்டகன் மற்றும் நேட்டோ தலைமையகத்தின் தீவிர ஈடுபாடு இல்லாமல் நடந்திருக்க முடியாது.

“நமது நட்பு நாடுகள் [ஐரோப்பாவில்] சுமையைப் பகிர்ந்து கொண்டாலும், நமது முன்னுரிமை செயல்பாட்டு அரங்கான இந்தோ-பசிபிக் பகுதியில் நாம் அதிக கவனம் செலுத்த முடியும்” என்று ஹெக்ஸெத் சிங்கப்பூரில் கூடியிருந்த அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களிடம் கூறினார். “[ஆசியாவில்] நமது நட்பு நாடுகளும் கூட்டாளிகளும் தங்கள் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், மேலும் அதனை வலியுறுத்துகிறோம்,” என்று கூறிய அவர், இந்த நிலைப்பாட்டிற்கு இணங்காத எந்தவொரு நாட்டுடனும் அங்கே “அசௌகரியமான மற்றும் கடுமையான பேச்சுவார்த்தைகள்” இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்தினார்.

சீனாவுக்கு எதிரான ட்ரம்ப் நிர்வாகத்தின் போர் உந்துதல் எங்கிருந்தோ தோன்றியதல்ல. ஒபாமா நிர்வாகம்தான் அப்பிராந்தியத்தில் சீனாவின் இராஜதந்திர செல்வாக்கை கீழறுக்கவும், அதன் பொருளாதாரத்திற்கு குழிபறிக்கவும், மற்றும் போருக்கு தயாரிப்பு செய்யவும் நோக்கம் கொண்ட “ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பை” தொடக்கி வைத்தது. 2020 வாக்கில், அமெரிக்காவின் கடற்படை மற்றும் விமானப்படை சக்தியில் 60 சதவீதத்தை இந்தோ-பசிபிக்கில் நிலைநிறுத்தும் ஒபாமாவின் இலக்கு நீண்டகாலமாக எட்டப்பட்டு விட்டது.

முந்தைய ட்ரம்ப் மற்றும் பைடென் நிர்வாகங்கள் மேற்கொண்ட சீனாவுடனான மோதலானது, இப்போது அப்பட்டமான பொருளாதார மற்றும் வர்த்தகப் போராகவும், ஆயுதப் போட்டியாகவும், வெளிப்படையான இராணுவ மோதலைத் தூண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இராஜதந்திர மற்றும் இராணுவ ஆத்திரமூட்டல்களாகவும் அதிகரித்துள்ளன.

ஆசியாவில் போருக்கான பிற வெடிப்புப் புள்ளிகளைக் குறிப்பிடும் அதே வேளையில், ஹெக்ஸெத் மிகவும் உணர்திறன் வாய்ந்த தாய்வான் மீது கவனம் செலுத்தினார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் 2027 ஆம் ஆண்டுக்குள் தாய்வான் மீது படையெடுப்பதற்குத் தயாராகி வருவதாக அவர் அறிவித்தார். உண்மையில், சீன அரசாங்கங்கள் எப்போதும் தாய்வான் இறையாண்மை கொண்ட சீனப் பிரதேசம் என்று வலியுறுத்தி வருகின்றன. மேலும் 1970களில் இருந்து அமெரிக்கா உட்பட சர்வதேச அளவில் பெரும்பாலான நாடுகளால் “ஒரு சீனா கொள்கையின்” கீழ் அது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், கடந்த தசாப்தத்தில், ட்ரம்ப் மற்றும் பைடென் நிர்வாகங்கள், தாய்வானின் சுதந்திரம் குறித்த எந்தவொரு அறிவிப்பும் அல்லது தீவுக்கு அமெரிக்க துருப்புகள் திரும்புவது போரைத் துரிதப்படுத்தும் என்பதை நன்கு அறிந்திருந்தும், “ஒரே சீனா கொள்கைக்கு” அடித்தளமாக இருந்த இராஜாங்க மற்றும் இராணுவ நெறிமுறைகளை திட்டமிட்டு பலவீனப்படுத்தி வந்துள்ளன. ரஷ்ய எல்லைகளை ஆக்கிரமிப்பதன் மூலம் அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யாவை உக்ரேனை ஆக்கிரமிக்கத் தூண்டியது போலவே, ட்ரம்ப் நிர்வாகமும் தாய்வானை படிப்படியாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதன் மூலம், தாய்வான் மீது சீனா படையெடுப்பைத் தூண்ட முயற்சிக்கிறது.

சிங்கப்பூரில் ஹெக்சேத், அமெரிக்க இராணுவ தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் குறித்தும், பெரிதும் விரிவாக்கப்பட்டுவரும் கூட்டுப் போர் பயிற்சிகள், தள ஏற்பாடுகள், இராணுவ தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மற்றும் இராணுவ தொழில்துறைகள் மூலமாக வாஷிங்டனின் போர் திட்டங்களுக்குள் ஆசிய கூட்டாளிகள் மற்றும் மூலோபாய பங்காளிகளை ஒருங்கிணைப்பது குறித்தும் பெருமையடித்துக் கொண்டார்.

அவர் குறிப்பிட்டவற்றில் பின்வருவன அடங்கும்:

[bullet list]

பிலிப்பைன்ஸில் இடம்பெற்ற கூட்டுப் பயிற்சிகளில் “அமெரிக்க இராணுவத்தின் மிகவும் தகைமை வாய்ந்த மற்றும் அபாயகரமான ஆயுதங்களில் ஒன்றான” 3வது மரைன் லிட்டோரல் ரெஜிமெண்டால் பயன்படுத்தப்பட்டுவரும் NMESIS நடமாடும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புமுறை, இந்த ஆண்டு முதன்முறையாக வெளிநாடுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க சிறப்பு நடவடிக்கை படைகளை உள்ளடக்கிய இந்தப் போர்ப் பயிற்சிகள், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்வானுக்கு இடையே உள்ள லூசோன் ஜலசந்தியில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த படானஸ் தீவுகளில் நடைபெற்றன.

இந்த ஆண்டின் பிற்பகுதியில், அமெரிக்க இராணுவம் ஆஸ்திரேலியாவில் அதன் நடுத்தர தூர திறன்கொண்ட ஆயுத அமைப்பை நேரடியாக சுட்டுப் பரிசோதனையை நடத்தும். 2,500 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் இந்த ஆயுதம், வெளிநாட்டு மண்ணில் சோதனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். 19 நாடுகளைச் சேர்ந்த 30,000 க்கும் மேற்பட்ட இராணுவ சிப்பாய்களை உள்ளடக்கிய மிகப்பெரிய தாலிஸ்மன் சேபர் பயிற்சிகளை ஆஸ்திரேலியா நடத்தும்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் நாற்கர பாதுகாப்பு உரையாடலின் (Quad) ஒரு பகுதியாக, அமெரிக்கா “இந்தோ-பசிபிக் தளவாட வலையமைப்பு என்ற முன்முயற்சியை வழிநடத்தி வருகிறது, இது குவாட் கூட்டாளிகள் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பகிரப்பட்ட தளவாட திறன்களைப் பயன்படுத்த உதவுகிறது”.

சீனாவிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான போரை ஆதரிக்க “ஒரு ஒருங்கிணைந்த பாதுகாப்பு தொழில்துறை தளத்திற்கு” அமெரிக்கா அழுத்தமளித்து வருகிறது. “தொழில்துறை மீள்தன்மையை வலுப்படுத்தவும், நமது திறனை விரிவுபடுத்தவும், விநியோகங்களை விரைவுபடுத்தவும்” 14 அமெரிக்க நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளர்களை உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் தொழில்துறை மீள்தன்மைக்கான கூட்டாண்மையை (PIPIR) அது உருவாக்கியுள்ளது.

[bullet list]

எவ்வாறிருப்பினும், இப்பிராந்தியம் முழுவதும் பரந்த இராணுவக் கட்டமைப்பு போதுமானதல்ல என்று ஹெக்சேத் வலியுறுத்தினார். அமெரிக்கா அதன் நேட்டோ கூட்டாளிகள் இராணுவச் செலவுகளை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக ஒரேயடியாக அதிகரிக்க கோரி வருவதைப் போலவே, அது இந்தோ-பசிபிக்கில் உள்ள அதன் கூட்டாளிகளையும், பங்காளிகளையும் அவ்வாறே செய்யுமாறு அழைப்பு விடுத்து வருகிறது.

மேலும், ஆசியா முழுவதிலும் உள்ள அரசாங்கங்கள் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே தந்திரோபாய உத்திகளை கையாளும் அவற்றின் முயற்சிகளை நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஏனெனில், சீனாவோ இப்பிராந்தியத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலும் மிகப் பெரிய வர்த்தக பங்காளியாக இருந்து வருகிறது. “சீனாவுடனான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அமெரிக்காவுடனான பாதுகாப்பு கூட்டுறவு” இரண்டையும் நாடுவதற்கான தூண்டுதல் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்று அவர் தெரிவித்தார்.

ட்ரம்ப் நிர்வாகம், சீனாவிற்கு எதிராக மட்டுமல்லாமல், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அரசாங்கங்களை பெய்ஜிங்கிற்கு எதிராக இராணுவ ரீதியாக அணிதிரட்டவும், போரின் செலவுகளில் மிகப் பெரிய பங்கை ஏற்கவும் கட்டாயப்படுத்தும் ஒரு வழிமுறையாகவும் வரிகள் என்ற பொருளாதார ஆயுதத்தைப் பயன்படுத்துகிறது.

இந்தோ-பசிபிக் பகுதியில் போரை நோக்கிய சுழலை பாசிச ட்ரம்பின் விளைவாக மட்டுமே பார்ப்பது, அவர் உருவான அமெரிக்காவில் மையமாகக் கொண்டிருக்கும் உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் ஆழத்தை கவனிக்காமல் விடுவதாகும்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் 1970 களில் சீனாவை, சோவியத் ஒன்றியத்திற்கு குழிபறிப்பதற்கான ஒரு வழிமுறையாகவும், அதன் உற்பத்திகள் குறைந்த-தொழில்நுட்ப பொருட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த வரையில், மலிவு உழைப்புக்கான முடிவற்ற ஆதார வளமாகவும் தழுவிக் கொண்டது. சீனப் பொருளாதாரம் சில அளவுகளால் உலகின் மிகப்பெரியதாக மாறும் அளவிற்கு விரிவடைவது, மின்னணுவியல், பசுமை தொழில்நுட்பம், மின்சார வாகனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற உயர் தொழில்நுட்பத் துறைகள் உட்பட, அமெரிக்காவை விஞ்சும் அளவிற்கு அச்சுறுத்துகிறது.

சீனா, அணு ஆயுத மோதலில் ஈடுபடும் அபாயம் இருந்தாலும், இராணுவம் உட்பட —விரைவில் சிறந்தது— கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளிலும் அமெரிக்காவை பொருளாதார ரீதியாக முந்திச் செல்வதைத் தடுக்க ட்ரம்ப் நிர்வாகம் உறுதியாக உள்ளது. ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான அதன் அதிகரித்து வரும் தாக்குதல்களுக்கு உள்நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் அதிருப்தி மற்றும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள ட்ரம்ப் நிர்வாகம், வெளிநாட்டு எதிரிகளுக்கு எதிராக தீவிர சமூக பதட்டங்களை வெளிப்படுத்தும் வழிமுறையாக, ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலிருந்து ஆசியாவிலும் ஏற்கனவே நடந்து வரும் போர்களை விரிவுபடுத்த பொறுப்பற்ற முறையில் உந்தப்பட்டு வருகிறது.

சீனாவிற்கு எதிரான போருக்கு அவசியமான அனைத்து தயாரிப்புகளையும் செய்வதில் வாஷிங்டனுடன் அணிதிரளுமாறு இந்தோ-பசிபிக்கில் உள்ள அமெரிக்க கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளுக்கு ஹெக்சேத் சமீபத்தில்தான் இந்த அறிவிப்பை வழங்கியுள்ளார்.

இந்தப் பிராந்தியம் முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கம் அவசியமான அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும். வாஷிங்டன் இராணுவச் செலவினங்களை இரட்டிப்பாக்குவதற்கு அல்லது இன்னும் அதிகமாக்குவதற்கு, தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளில் மிகவும் ஆழமான சரிவை ஏற்படுத்துகிறது. இதனை ஜனநாயக ரீதியாக அதனால் திணிக்க முடியாது.

உலகப் போரை நோக்கிய வீழ்ச்சியை நிறுத்துவதற்கான அரசியல் போராட்டம், இவ்விதத்தில் அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்துடன் நெருக்கமாக பிணைந்துள்ளது. போர், சமூக சமத்துவமின்மை மற்றும் பாசிசத்திற்கு மூல காரணமாக இருக்கும் முதலாளித்துவ அமைப்பு முறையை தூக்கியெறிவதை நோக்கமாகக் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த சர்வதேச மற்றும் சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.

Loading