தென் இலங்கையில் டயர் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு எதிராக மிச்செலின் நிர்வாகம் வேட்டையாடலைத் தொடங்குகிறது

இந்த மொழிபெய்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

26 மே 2025 அன்று மிதிகம தொழிற்சாலையின் முன் மிச்செலின் தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய போது [Photo: WSWS]

தென் இலங்கையில் மிச்செலின் நிர்வாகம் மிதிகமவில் உள்ள அதன் டயர் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு எதிராக ஒரு வேட்டையாடலைத் தொடங்கியுள்ளது. இந்திய நிறுவனமான CEAT கம்பனிக்கு இந்த தொழிற்சாலை விற்பனை செய்யப்பட்டதில் இருந்து தலைதூக்கியுள்ள நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், தொழிலாளர்கள் தங்கள் தொழில்கள் மற்றும் வேலை நிலைமைகளைப் பாதுகாக்க போராடி வருகின்றனர்.

1,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் இந்த தொழிற்சாலை கடந்த ஆண்டு டிசம்பர் 6 அன்று விற்கப்பட்டதுடன், இந்திய நிறுவனம் ஜூன் 6 அன்று அதன் செயல்பாடுகளைத் தொடங்கவுள்ளது. சியட்டின் கீழ் தங்கள் தொழில்கள் மற்றும் ஏனைய நிலைமைகளுக்கும் என்ன நடக்கும் என அச்சமடைந்த தொழிலாளர்கள், மே 23 அன்று ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கி, மறுநாள் தொழிற்சாலையின் முன் தொழில் பாதுகாப்பு கோரி ஒரு சக்திவாய்ந்த போராட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், ஆளும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் தலைமை தங்களைக் காட்டிக் கொடுத்துவிட்டதாகக் குற்றம் சாட்டினர்.

மே 26 அன்று, தொழிலாளர்கள் தங்கள் பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாட கொழும்பில் உள்ள தொழில் அலுவலகத்திற்கு தங்கள் சொந்த பிரதிநிதிகளை அனுப்பினர். அப்போதுதான் கூட்டுத்தபானமும் அனைத்து நிறுவன ஊழியர் சங்க தலைவர்களும் ஒரு உடன்பாட்டில் கையெழுத்திட்டதை தொழிலாளர்கள் அறிந்துகொண்டனர்.

தொழிற்சங்கம் மிச்செலின் குழுமத்துடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் படி, மிச்செலின் தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்தமைக்கான நட்ட ஈடாக அவர்களின் அனுபவ காலம் அல்லது சேவை ஆண்டுகள் எதுவாக இருந்தாலும், 650 டொலர்கள் (சுமார் 200,000 ரூபாய்) நிலையான இழப்பீட்டைப் பெறுவார்கள்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அனைத்து நிறுவன ஊழியர் சங்கம், தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னால் ஒரு அற்ப இழப்பீட்டுப் பொதியை ஏற்றுக்கொண்டு, தொடர்ச்சியான தொழில் பாதுகாப்பிற்கான எந்த உத்தரவாதமும் இல்லாமல் உடன்படிக்கையை வலுக்கட்டாயமாக திணிக்கின்றது.

ஜே.வி.பி./தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் வசந்த சமரசிங்க தலைமையிலான அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் இந்தக் காட்டிக்கொடுப்பால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், தொழிற்சங்கத்திலிருந்து சுயாதீனமாக தங்கள் தொழில்கள் மற்றும் வேலை நிலைமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தைத் தொடர முடிவு செய்தனர்.

இந்த நிலைமைகளின் கீழ், தொழிலாளர்களை மிரட்டுவதன் மூலம் போராட்டத்தை அடக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பழிவாங்கலை மிச்செலின் நிர்வாகம் கட்டவிழ்த்துவிட்டது. மே 28 அன்று, நிறுவனம் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி, தொழிலாளர்கள் 'மேற்பார்வையாளரின் அனுமதியின்றி வேலை நேரத்தில் (மேலதிக நேரம் உட்பட) தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடமையிலிருந்து விலக முடியாது' என்று கூறியது.

'தொழிற்சாலை வளாகத்திலோ அல்லது வெளியிலோ போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை நடத்துதல், நிறுவனத்தைப் பற்றிய தவறான தகவல்களை உள்ளேயோ அல்லது வெளியேயோ தீய நோக்கத்துடன் பரப்புதல், மற்றும் நிறுவனக் கொள்கைகள் மற்றும் சட்டத்தை மீறுவதன் மூலம் தொழிற்சாலையின் செயல்பாடுகள், உறுப்பினர்களின் [தொழிலாளர்களின்] பாதுகாப்பு மற்றும் உற்பத்தித்திறனை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்' ஆகியவற்றை பற்றியும் நிறுவனம் எச்சரித்தது.

அத்தகைய செயல்களில் ஈடுபடும் எந்தவொரு தொழிலாளிக்கும் எதிராக 'வேலைநீக்கம் உட்பட ஒழுக்காற்று நடவடிக்கைகள்' எடுக்கப்படும் என்று அந்தச் செய்தி அச்சுறுத்தியது. நிறுவனத்தின் அச்சுறுத்தல்கள், தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை எழுப்புவதற்காக போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான அடிப்படை ஜனநாயக உரிமைக்கு எதிரானவை ஆகும்.

தொழிலாளர்கள் பரப்பியதாகக் கூறப்படும் 'நிறுவனம் பற்றிய தவறான தகவல்' என்ன என்பதை கம்பனி குறிப்பிடவில்லை. இது தொழிலாளர்கள் மீதான தெளிவான போலிக் குற்றச்சாட்டு ஆகும்.

தனது எச்சரிக்கையை செயல்படுத்தி, மிச்செலின் நிர்வாகம் மே 30 அன்று எம்.எம்.எஸ். கருணாசேன என்ற தொழிலாளியை 'ஒரு (தொழிலாளிக்கு) உறுப்பினருக்குப் பொருந்தாத தவறான நடத்தையில் ஈடுபட்டார்' என்று குற்றம் சாட்டி இடைநீக்கம் செய்தது.

அந்தக் கடிதம் '23.05.2025 அன்று இரவு கடமையிலிருந்து 26.05.2025 அன்று இரவுக் கடமை வரை மிதிகம தொழிற்சாலையின் உறுப்பினர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்ட தவறான நடத்தை குறித்த ஆரம்ப விசாரணையைக்” குறிப்பிடுகிறது. “நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் தொழில்துறை அமைதியை சீர்குலைக்கும் சட்டவிரோத வேலைநிறுத்தங்களும் இதில் அடங்கும்'. 'இது குறித்து முறையான விசாரணை நடத்தப்படும்' என்றும், அவர் 'சம்பளம் இல்லாமல் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்' என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.

கருணாசேன என்ன 'தவறான நடத்தையில்' ஈடுபட்டார் என்று அந்தக் கடிதம் குறிப்பாகக் குறிப்பிடவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, நிறுவனத்தின் அச்சுறுத்தும் குறுஞ்செய்திகள், மே 23 அன்று தங்கள் வேலைகளைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம் போன்ற சட்டபூர்வமான தொழில்துறை போராட்ட நடவடிக்கைகள் இந்த வகையில் அடங்கும் என்பதை அது குறிக்கிறது.

மிச்செலினின் ஆத்திரமூட்டும் பழிவாங்கல், ஒரு பரந்த அடக்குமுறைக்கான தயாரிப்பாகும். அனைத்து நிறுவன ஊழியர் சங்க அதிகாரத்துவத்தின் பிடியில் இருந்து விடுபட்டு, தொழிலாளர்கள் விஷயங்களைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளத் தொடங்குகிறார்கள் என்பதே நிர்வாகத்தின் உண்மையான கவலை ஆகும்.

கொழும்பில் தொழில் ஆணையரைச் சந்தித்த குழுவில் கருணாசேனவும் இருந்ததாக தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்திடம் தெரிவித்தனர். தொழிலாளர்களின் சுயாதீனமான போராட்டத்திற்கு அவர் தலைமை தாங்குவதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டதாக அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

மே 30 அன்று மதியம் கருணாசேன இடைநீக்கப்பட்டது குறித்து அறிந்ததும், மிச்செலின் தொழிலாளர்கள் உடனடியாக வேலையை நிறுத்திவிட்டு, நிறுவனத்தின் பழிவாங்கலை கைவிடக் கோரி தொழிற்சாலை உள்ளமர்வைத் தொடங்கினர்.

தொழில் ஆணையரைச் சந்திக்க தூதுக்குழுவில் இணைந்த மற்ற மூன்று தொழிலாளர்களுக்கும் அத்தகைய இடைநீக்கக் கடிதங்கள் அனுப்பப்பட்டதை அறிந்ததும், தொழிலாளர்கள் அனைத்து இடைநீக்கங்களையும் உடனடியாக இரத்துச் செய்யக் கோரினர். தொழிற்சாலை முகாமையாளரும் மனிதவளத் துறையைச் சேர்ந்த நிர்வாக ஊழியர்களும் வளாகத்தை விட்டு வெளியேறுவதையும் தொழிலாளர்கள் தடுத்தனர்.

இந்த இடைநீக்கங்களின் ஆத்திரமூட்டும் நோக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், மே 30 அன்று மாலை 4 மணியளவில் ஒரு பொலிஸ் ஜீப் தொழிற்சாலையை நெருங்கியது. இருப்பினும், தொழிற்சாலையை ஆக்கிரமித்திருந்த கோபமடைந்த தொழிலாளர்களின் எதிர்வினைக்கு பயந்து அவர்கள் தலையிட முயற்சிக்கவில்லை.

மாலை 5 மணியளவில், தொழிலாளர்கள் நிர்வாக ஊழியர்களை வளாகத்தை விட்டு வெளியேற அனுமதித்தனர். மாலை 6.30 மணியளவில், தொழிலாளர்கள் தங்கள் ஆக்கிரமிப்பை முடித்துக்கொண்டு தொழிற்சாலையை விட்டு வெளியேறினர். அந்த நேரத்தில், தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்ட மற்ற மூன்று தொழிலாளர்களைக் கைது செய்ய முயன்றனர். இருப்பினும், மற்ற தொழிலாளர்கள் அந்த முயற்சியைத் தடுத்து நிறுத்தி, தங்கள் சக ஊழியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றினர். மாலை 7 மணியளவில், பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படை (STF) அதிகாரிகள் தொழிற்சாலைக்கு அருகில் வந்தனர்.

இந்த முன்னேற்றங்கள், தொழிற்சாலையின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், மிதிகம தொழிற்சாலை தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்புக்கான போராட்டத்தை நசுக்க, தொழிலாளர்களுக்கு எதிராக மிச்செலின் ஒரு பரந்த வேட்டையாடலைத் தயாரிக்கிறது என்பதைக் காட்டுகிறது.

ஜே.வி.பி. கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிறுவன ஊழியர் சங்க தலைமையின் துரோக வகிபாகம், தொழிலாளர்களுக்கு எதிராக மிச்செலினின் கைகளை வலுப்படுத்தியுள்ளது.

மே 28 அன்று நிறுவனத்தின் மிரட்டல் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட மறுநாள், அனைத்து நிறுவன ஊழியர் சங்க செயலாளர் ஜனக அதிகாரி, ஒரு சுருக்கமான குரல்பதிவு செய்தி மூலம், மிச்செலின் தொழிலாளர்களுக்கு உரையாற்றி, அவர்களின் தொழில்கள் பாதுகாக்கப்படும் என்றும், ஒரு தொழிலாளிக்கு 200,000 ரூபாய்க்கு மேல் இழப்பீடு பெற தனது தொழிற்சங்கம் பாடுபட்டுள்ளதாகவும் அறிவித்தார்.

இருப்பினும், நிறுவனத்துடன் தொழிற்சங்கம் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எந்த குறிப்பிட்ட விதிகள் சியட்டின் கீழ் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்துள்ளன என்பதைக் காட்ட அவர் தவறிவிட்டார். இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில், விற்பனையில் ஈடுபட்டுள்ள இரண்டு நிறுவனங்களிடமிருந்து அவர்கள் என்ன கோரிக்கைகளைப் பெற விரும்புகிறார்கள் என்பது குறித்து அனைத்து நிறுவன ஊழியர் சங்க தலைவர்கள் ஒருபோதும் தொழிலாளர்களிடம் ஆலோசனை நடத்தவில்லை. குறிப்பிடத்தக்க வகையில், 'தேவையற்ற போராட்டங்களில்' ஈடுபட வேண்டாம் என்று அதிகாரி தொழிலாளர்களை எச்சரித்துள்ளார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கான பிரச்சாரத்திற்கு எதிராக, அனைத்து நிறுவன ஊழியர் சங்கமானது மிச்செலின் நிர்வாகத்துடன் தெளிவாக கூட்டுச் சேர்ந்துள்ளது.

அனைத்து நிறுவன ஊழியர் சங்க தலைமைத்துவத்தின் இந்த காட்டிக்கொடுப்பில் இருந்து, மிச்செலின் தொழிலாளர்கள் எடுக்க வேண்டிய முடிவு என்னவென்றால், சாதாரண தொழிலாளர்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கைக் குழுவை உருவாக்குவதன் மூலம், தங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க வேண்டியது அவசியம் என்பதே ஆகும். அத்தகைய குழுவானது நிர்வாகத்தின் ஒரு அங்கமாக செயல்படும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திலிருந்தும், முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் முற்றிலும் சுயாதீனமாக இருக்க வேண்டும்.

ஒரு சுயாதீனமான நடவடிக்கைக் குழு, இலங்கையிலும் உலகளவிலும் தொழில்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் தாக்குதலுக்கு உள்ளான பல தொழிலாளர்களுடன் ஒரு கூட்டுப் போராட்டத்திற்கான ஒரு சக்திவாய்ந்த வேண்டுகோளை விடுக்க முடியும்.

உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடியை தொழிலாள வர்க்கம் எதிர்கொள்கிறது. இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள், நெருக்கடியின் முழு சுமையையும் சாதாரண மக்கள் மீது சுமத்தும் அரசாங்கங்களால் கட்டவிழ்த்து விடப்படும் கொடூரமான தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் இலங்கையின் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் (IMF) கட்டளையிட்ட கடுமையான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துகிறது. அந்த திட்டத்தின் கீழ், 400 க்கும் மேற்பட்ட அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் மற்றும்/அல்லது தனியார்மயமாக்கப்பட வேண்டும். இதனால் இலட்சக் கணக்கான தொழில்கள் அழிக்கப்படும்.

முதலாளித்துவ முறைமைக்குள்ளும் தேசிய வரம்புகளுக்குள்ளும் தொழிலாள வர்க்கத்தால் தங்கள் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க முடியாது. மிதிகம மிச்செலின் தொழிலாளர்கள், இலங்கையில் அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள ஏனைய தொழிலாளர்களுடன் இணைந்து, முதலாளித்துவ ஆட்சியை ஒழிக்கவும், சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிக்கவும் போராடும், தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட இயக்கத்தில் இணைய வேண்டும். இது சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

Loading