இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இந்த உரையை, ரஷ்யாவில் உள்ள போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் பிரதிநிதியான ஆண்ட்ரி ரிட்ஸ்கி, மே 3 சனிக்கிழமை நடைபெற்ற சர்வதேச 2025 தின இணையவழிப் பேரணியில் நிகழ்த்தினார்.
மே தினம் 2025: ஆண்ட்ரி ரிட்ஸ்கி ஆற்றிய உரை
இன்று இங்கு கூடியிருக்கும் ஏனைய பேச்சாளர்கள் மற்றும் பங்குபற்றுவோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது தோழர் போக்டன் சிரோடியுக் கடந்த ஆண்டு கூட்டத்துக்கு சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். ஒரு வருடம் கழிந்த பின்னரும், அவர் இன்னமும் உக்ரேனிய ரகசிய சேவையான SBU-வின் தடுப்புக் காவலில் இருக்கிறார். SBU, அவரை புடின் ஆட்சியின் முகவராக பொய்யாக சித்தரிக்க முயற்சிக்கிறது. உண்மையில், தோழர் போக்டனின் 'குற்றம்' என்னவெனில், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் பாரம்பரியத்தில் மார்க்சிய கொள்கைகளை அவர் தொடர்ந்து பாதுகாப்பதாகும். அவரது கைதுடன், சோசலிச அனைத்துலகவாதத்தின் அடிப்படையில் செலென்ஸ்கி மற்றும் புடின் ஆட்சிகளுக்கு எதிராக ரஷ்ய மற்றும் உக்ரேனின் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனக் கொள்கைக்கான போராட்டம் ஒரு 'குற்றவியலாகவும்' 'தேசத்துரோகமாகவும்' அறிவிக்கப்பட்டுள்ளது.
செலென்ஸ்கி ஆட்சி மற்றும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களுமான உண்மையான குற்றவாளிகள், உக்ரேனிய பாசிசத்தின் குற்றங்களை மூடிமறைத்து நாஜி குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கின்றனர். மேற்கத்திய ஏகாதிபத்தியம் மற்றும் தன்னலக் குழுவின் நலன்களுக்காக அவர்கள் உக்ரேனிய தொழிலாளர்களை கொலைக் களத்திற்கு அனுப்புகிறார்கள்.
ஆனால், புடின் ஆட்சியின் கொள்கையும் பிற்போக்குத்தனத்தில் குறைந்தது அல்ல. ஏகாதிபத்தியத்துடன் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது சாத்தியம் என்ற கற்பனாவாத மாயையை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும் எந்தவொரு ஒப்பந்தமும் தன்னலக் குழுவின் நலன்களுக்கு மட்டுமே சேவை செய்வதோடு தற்காலிகப் பண்பையே கொண்டிருக்கும். முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் தொழிலாள வர்க்கத்தின் இருப்புக்கே அச்சுறுத்தல் விடுக்கப்படுவதை தடுக்க அது எதுவும் செய்யாது. அதன் கொள்கைகள் மற்றும் தேசியவாத பிரச்சாரத்துடன், புடின் ஆட்சியானது ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காகப் பயன்பட்டு, ஒரு மிகப்பெரிய பேரழிவைத் தயாரித்து வருகிறது.
இந்த ஆண்டு மே தினக் கூட்டமானது, நாஸிசத்திற்கு எதிரான போரில் சோவியத் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவுக்கு சமாந்தரமாக இடம்பெறுகின்றது. புடினின் ஆட்சி, இந்த வெற்றியை, உக்ரேன் மீதான அதன் பிற்போக்கு படையெடுப்பிற்கு ஒரு முற்போக்கான போராட்டத்தின் தோற்றத்தை அளிக்க சுரண்டிக் கொள்கிறது.
பாசிசத்திற்கு எதிராக சோவியத் யூனியனைப் பாதுகாக்க சோவியத் மக்கள் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியதாயிற்று. உத்தியோகபூர்வ மதிப்பீடுகளின்படி, சோவியத் ஒன்றியம் சுமார் 27 மில்லியன் மக்களை இழந்தது. அவர்களில் 14 மில்லியன் பொதுமக்களும், போர் முனையில் இறந்த 9 மில்லியன் செம்படை வீரர்களும் அடங்குவர். 2 மில்லியன் பேர் சிறைபிடிக்கப்பட்டும் கொலை முகாம்களிலும் இறந்தனர்; அத்துடன், மேலும் 2 மில்லியன் பேர் பட்டினி மற்றும் நோயால் இறந்தனர்.
இதனுடன், ஊனமுற்றோர், வதை முகாம்களில் இருந்து தப்பியவர்கள் மற்றும் உறவினர்கள், அன்புக்குரியவர்கள், நண்பர்கள் மற்றும் தோழர்களை இழந்தவர்கள் அனுபவித்த மிகப்பெரிய உளவியல் மற்றும் உடல் ரீதியான அதிர்ச்சியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இவை எதையும் மறக்க முடியாது. சோவியத் சினிமா, இசை, கவிதை, ஓவியம் - எல்லா இடங்களிலும் மக்களின் மகத்தான வீரப் போராட்டத்தின் பிரதிபலிப்புகளைக் காணலாம்.
இன்று, கிரெம்ளின் போரின் ஆழமாக வேரூன்றிய நினைவைப் பயன்படுத்தி தேசியவாதத்தை ஊக்குவிக்கவும் வரலாற்று குழப்பத்தை விதைக்கவும் முயல்கிறது. இந்த பிரச்சாரத்தின் முக்கிய தந்திரோபாயம், சோவியத் ஒன்றியத்துக்கும் ரஷ்ய கூட்டமைப்புக்கும் இடையிலான அரசியல் வேறுபாட்டை மழுங்கடிப்பதாகும். ஆனால், அவற்றின் புவியியல் இருப்பிடம் மற்றும் இரு நாடுகளிலும் வாழ்ந்த மக்களின் தலைமுறைகள் இருந்தபோதிலும், சோவியத் ஒன்றியமும் ரஷ்ய கூட்டமைப்பும் முற்றிலும் மாறுபட்ட வர்க்க மற்றும் வரலாற்றுத் தோற்றத்தைக் கொண்டுள்ளன.
போல்ஷிவிக்குகள் தலைமையிலான தொழிலாள வர்க்கம் அக்டோபர் புரட்சியின் வெற்றிகளைப் பாதுகாத்து உள்நாட்டுப் போரில் வென்ற பின்னர், 1922 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் நிறுவப்பட்டது.
முதலாளித்துவத்தை பறிமுதல் செய்து, தேசியமயமாக்கப்பட்ட சொத்து உறவுகளையும் திட்டமிட்ட பொருளாதாரத்தையும் ஸ்தாபிப்பதன் மூலம், போல்ஷிவிக்குகள் ஒரு சோசலிச சமூகத்திற்கான சமூக-பொருளாதார அடித்தளங்களை அமைத்தனர். அவர்கள் சோசலிசத்தை நிர்மாணிப்பதை உலகப் புரட்சியின் வெற்றியுடன் நனவான முறையில் இணைத்தனர். ஆனால், தனது சொந்த சலுகைகளைப் பாதுகாக்க, 'தனியொரு நாட்டில் சோசலிசத்தை' கட்டியெழுப்பும் பிற்போக்கு வேலைத் திட்டத்தை அறிவித்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால், இந்த சர்வதேச மார்க்சிஸ வேலைத்திட்டம், காட்டிக் கொடுக்கப்பட்டது.
சோவியத் அரசு மற்றும் போல்ஷிவிக் கட்சியின் அதிகாரத்துவ சீரழிவு, பெரும் பயங்கரவாதத்தில் புரட்சியாளர்களின் தலைமுறைகளின் படுகொலையில் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஆயினும்கூட, தொழிலாளர் அரசின் அடிப்படை அடித்தளம் தொடர்ந்தும் பராமரிக்கப்பட்டது. மார்க்சியத்தின் மிகச் சிறந்த பிரதிநிதிகள் படுகொலை செய்யப்பட்ட போதிலும், அக்டோபர் புரட்சியின் மரபுகள் குறித்த அடிப்படை உணர்வு இன்னும் மக்களிடையே நீடித்தது. நாஸிசத்திற்கு எதிரான போரின் போது வெளிப்பட்டு சோவியத் ஒன்றியத்திற்கு வெற்றியை உறுதி செய்தது இந்த மரபுகளே ஆகும்.
அக்டோபர் புரட்சியின் மரபுகள் மற்றும் சாதனைகளுக்கு எதிரான ஸ்ராலினிச எதிர் புரட்சியிலிருந்து ரஷ்ய கூட்டமைப்பு எழுந்தது. 1985 இல் தொடங்கி, மிகைல் கோர்பச்சேவின் பெரெஸ்ட்ரோயிகா, சீரழிந்த தொழிலாளர் அரசின் அடித்தளத்திற்கு திட்டமிட்ட வகையில் குழிபறித்தது. 1991 இல், அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தை கலைத்தது. இந்த எதிர் புரட்சியிலிருந்தே யெல்ட்சின் மற்றும் புடினின் தன்னலக் குழுவின் ஆட்சிகள் தோன்றின. உக்ரேனில் போருடன், புடினின் ஆட்சியானது ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்களை அன்றி, ரஷ்ய தன்னலக் குழுவின் முதலாளித்துவ சொத்துக்களையே பாதுகாக்கின்றது.
நாஸிசத்திற்கு எதிரான போரில் சோவியத் மக்களின் மகத்தான தியாகங்களுக்கு நேர்மையான முறையில் அஞ்சலி செலுத்துவதானது உண்மையைக் கூறுவதாகும்: புடினும் ரஷ்ய தன்னலக் குழுவின், நாஸிசத்திற்கு எதிரான போரின் மரபுகளின் எதிரிகள் ஆவர். அவர்கள் ரஷ்ய, உக்ரேனிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நலன்களின் எதிரிகள் ஆவர்.
இன்று, ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடுவதற்கான ஒரே வழி, அக்டோபர் புரட்சியின் பதாகையின் கீழ் உக்ரேனிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் சேர்ந்து ரஷ்ய தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்காகப் போராடுவதே ஆகும்.
உக்ரேனில் போர் வேண்டாம்!
ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவோம்!
ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்தை எதிர்ப்போம்!
அக்டோபர் புரட்சியின் மரபுகளின் மறுமலர்ச்சிக்காகப் பாடுபடுவோம்!
போக்டன் சிரோடியுக்கை விடுதலை செய்!
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை கட்டியெழுப்புவோம்!