முன்னோக்கு

ரஷ்யாவின் விமான நிலையங்களை தாக்குவதன் மூலம் நேட்டோ அணுஆயுத பேரழிவுக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

[Photo by Ukrainian video]

உக்ரேனிய இரகசிய சேவையான SBU ரஷ்யாவிற்குள் ஆழமாகச் சென்று மூலோபாய குண்டுவீச்சு விமானங்களை அழித்தமை, ஒரு அணுஆயுத பேரழிவைத் தூண்டுவதாக இருந்தாலும் கூட, ரஷ்யாவுடனான போரைத் தீவிரப்படுத்த நேட்டோ எதையும் செய்யும் என்பதைக் காட்டுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ரஷ்யாவுக்குள் ஏற்கனவே கடத்தப்பட்டிருந்த சுமார் 120 உக்ரேனிய ட்ரோன்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம் நான்கு ரஷ்ய இராணுவ விமானத் தளங்கள் தாக்கப்பட்டன. உக்ரேனில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிழக்கு சைபீரியாவின் பெலாயா மற்றும் பின்லாந்து-ரஷ்ய எல்லைக்கு அருகிலுள்ள ஒலேனியா ஆகிய இரண்டு விமானத்தளங்கள் இத்தாக்குதலுக்கு உள்ளாகின.

ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனிப்பட்ட முறையில் டுவிட்டர் X இல் “முற்றிலும் புத்திசாலித்தனமான வெற்றி” பற்றி பெருமை பேசினார். மேலும் இது நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட சதிச் செயல் என்று அறிவித்தார்: “திட்டமிடலின் தொடக்கத்திற்கும் அதன் உண்மையான செயல்படுத்தலுக்கும் இடையில் ஒரு வருடம், ஆறு மாதங்கள் மற்றும் ஒன்பது நாட்கள் கடந்தன” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

SBU இந்த தாக்குதல்கள் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டது. அதன் தகவலின்படி, க்ரூஸ் ஏவுகணைகளை செலுத்தும் திறன் கொண்ட 34 சதவீதமான ரஷ்ய குண்டுவீச்சு விமானங்களில் சுமார் 40க்கும் மேற்பட்ட போர் மற்றும் வேவுபார்ப்பு விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளன. நன்கு அறிந்த ரஷ்ய வலைப்பதிவாளர்கள் குறைந்த எண்ணிக்கையை மதிப்பிடுகின்றனர். ஆனால் அவர்களின் தகவல்களின்படி, சுமார் ஒரு டசின் விமானங்கள் தீப்பிழம்புகளில் சிக்கின.

இந்த தாக்குதல் தொடர்பாக நேட்டோவிற்கு தகவல் தெரிவிக்கப்படாமலும், அது இந்த தாக்குதலில் நெருக்கமாக ஈடுபடாமலும் இருந்தது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகும். நீண்ட காலத்திற்கு மேலாக திட்டமிடப்பட்ட இத்தகைய சிக்கல் வாய்ந்த நடவடிக்கை, அமெரிக்காவிடம் மட்டுமே இருக்கும் வேவுபார்க்கும் தகவல்கள் இல்லாமல் நடத்தப்பட முடியாது. நேட்டோ மற்றும் உக்ரேனின் இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து, நெருங்கிய தொடர்பில் உள்ளனர். மேலும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கிட்டத்தட்ட தினசரி அடிப்படையில் நேட்டோ நாடுகளின் அரசாங்கத் தலைவர்களுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறார்.

இந்த நடவடிக்கை ரஷ்ய அரசாங்கத்தை அவமானப்படுத்தவும் ஆத்திரமூட்டவும் வடிவமைக்கப்பட்டது என்பது வெளிப்படையாகும். அடுத்த நாள், ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையே இரண்டாம் சுற்று நேரடிப் பேச்சுக்கள் இஸ்தான்புல்லில் நடந்தன. அது ஒரு மணி நேரத்திற்குள் எந்த குறிப்பிடத்தக்க முடிவுகளும் இல்லாமல் முடிவடைந்தது.

மாஸ்கோவில், இந்த தாக்குதல் ரஷ்யாவிற்குள் மூலோபாய இலக்குகள் மீதான நேட்டோவின் தாக்குதலாக அர்த்தப்படுத்தப்படும். மேலும், ஆட்சி அதற்கேற்ப பதிலளிக்கும். உத்தியோகபூர்வ வட்டாரங்கள் இதுவரை எச்சரிக்கையாக இருந்து வருகின்றன. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெறுமனே “சில விமான சாதனங்கள் தீப்பிடித்தன” என்றும் “அனைத்து பயங்கரவாத தாக்குதல்களும்” முறியடிக்கப்பட்டு விட்டன என்றும் தெரிவித்தது.

ஆனால், ரஷ்ய இராணுவத்திற்கு நெருக்கமான வலைப்பதிவாளர்கள் இந்த தாக்குதலை “ரஷ்யாவின் பேர்ல் துறைமுகம்” என்று அழைக்கின்றனர். டிசம்பர் 1941 இல், ஜப்பானிய விமானப்படை ஹவாயிலுள்ள பேர்ல் துறைமுகத்தில் அமெரிக்க பசிபிக் கடற்படையின் சில பகுதிகளை அழித்தது. அடுத்த நாள், அமெரிக்கா ஜப்பான் மீது போர் அறிவித்து இரண்டாம் உலகப் போரில் நுழைந்தது.

பரவலாக பார்க்கப்படும் தொலைக்காட்சியான “Dva Majora” நேட்டோ நேரடியாக மூலோபாய “அணுஆயுத சமநிலையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், நமது நாட்டின் அணுஆயுத பாதுகாப்பைக் குறைப்பதாகவும்” குற்றம் சாட்டியது. 1.3 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்ட டெலிகிராம் சேனல் Rybar, உக்ரேனுடனான பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்து “மோதலை மேலும் அதிகரிக்க” அழைப்பு விடுத்தது.

ரஷ்யாவின் இரண்டாவது பெரிய செய்தித்தாளான மொஸ்கோவ்ஸ்கி கொம்சோமோலெட்ஸ், ஜூன் 1 ஐ “ரஷ்யாவின் நீண்ட தூர மற்றும் இராணுவ போக்குவரத்து விமானங்களுக்கு ஒரு கறுப்பு நாள்” என்று விவரித்ததுடன், ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் காட்டியதைப் போலவே உக்ரேனுக்கு எதிராக அதே “உறுதியையும் கடுமையையும்” காட்ட அழைப்பு விடுத்தது.

அதிகரித்து வரும் அழுத்தத்திற்கு ஜனாதிபதி புட்டின் விடையிறுப்பார் என்று நேட்டோவின் அனுபவம் வாய்ந்த மூலோபாயவாதிகள் இதை நன்கு அறிவார்கள். அழிக்கப்பட்ட ரஷ்ய குண்டுவீச்சு விமானங்களைப் போன்ற மூலோபாய முக்கியத்துவத்தைக் கொண்ட உக்ரேனுக்கு வெளியே உள்ள நேட்டோ இலக்குகள் மீதான தாக்குதல்களை நிராகரிக்க முடியாது. அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது உட்பட உக்ரேனில் போரை மேலும் தீவிரப்படுத்துவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் உள்ள ஆபத்துகள் முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது.

இந்த ஆபத்தை எடுக்க நேட்டோவை எது தூண்டுகிறது? ஏற்கனவே நூறாயிரக்கணக்கான உக்ரேனிய மற்றும் ரஷ்ய சிப்பாய்களின் உயிர்களைப் பலிகொண்டுள்ள ஒரு போரை அது ஏன் தொடர்ந்து தீவிரப்படுத்துகிறது?

உக்ரேன் போரின் வரலாறு இதற்கான பதிலை வழங்குகிறது. ஊடகங்களால் சித்தரிக்கப்படுவதைப் போல இது ஒருபோதும் “தூண்டப்படாத ரஷ்ய ஆக்கிரமிப்புப் போராக” இருக்கவில்லை. சோவியத் சமூக சொத்துக்களை சூறையாடுவதன் மூலமும், புட்டின் பிரதிநிதித்துவப்படுத்தும் நலன்களாலும் வளப்படுத்தப்பட்ட ரஷ்ய தன்னலக்குழுக்கள், எப்போதும் பெரும் முதலாளித்துவ “வல்லரசுகளின்” வட்டத்திற்குள் நுழைவதையே விரும்பின. அந்த வகையில், 2001ல் ஜேர்மனிய பாராளுமன்றம் எழுந்து நின்று புட்டினுக்கு கரவொலி எழுப்பிக் கொண்டாடியது.

ஆனால், அமெரிக்காவோ அல்லது பிரதான ஐரோப்பிய சக்திகளோ ரஷ்ய தன்னலக்குழுக்களுடன் இதனைப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. பெருகிவரும் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகளாலும், மூலப்பொருட்கள், சந்தைகள் மற்றும் இலாபங்களைத் தேடுவதிற்கு உந்தப்பட்டு வருவதாலும், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதிலிருந்து அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்களை ஒன்றன்பின் ஒன்றாக முறித்துக் கொண்டு, பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் கிழக்கு நோக்கி இந்த சக்திகள் மேலும் மேலும் முன்னேறினர். நேட்டோ கிழக்கு ஐரோப்பா முழுவதையும் மற்றும் முன்னாள் பால்டிக் சோவியத் குடியரசுகளையும் இணைத்துக் கொண்ட பின்னர், அது ரஷ்யாவை அழிக்கும் நோக்கத்துடன் உக்ரேன் மற்றும் ஜோர்ஜியாவுடனும் கைகோர்த்தது.

இந்த நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் நேட்டோ சக்திகள் மத்திய கிழக்கில் தங்கள் ஏகாதிபத்தியப் போர்களில் முதன்மையாக ஈடுபட்டிருந்தாலும், இரண்டாவது தசாப்தத்தில் அவர்கள் ரஷ்யாவின் மீது அதிக கவனம் செலுத்தினர். 2014 இல், அவர்கள் ஒரு வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் உதவியுடன் உக்ரேனில் ஒரு மேற்கத்திய-சார்பு ஆட்சி அதிகாரத்திற்கு வர உதவியதுடன், பின்னர் திட்டமிட்டு உக்ரேனை ஆயுதபாணியாக்கினர்.

உக்ரேன் மீது இராணுவத் தாக்குதலை மேற்கொள்வதன் மூலம் புட்டின் இதற்கு பதிலளித்தார். ஏகாதிபத்திய சக்திகளுடன் ஒரு புதிய உடன்பாட்டை எட்டுவதற்காக அவற்றின் மீது அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு திவாலான மற்றும் பிற்போக்குத்தனமான முயற்சியாக இது இருந்தது. ஆனால், ரஷ்யாவுடனான மோதலைத் தீவிரப்படுத்தவும் தங்களை பாரியளவில் ஆயுதபாணியாக்கிக் கொள்ளவும் இந்தப் போர் அவர்களுக்கு ஒரு வரவேற்கத்தக்க சாக்குப்போக்கை வழங்கியது.

அப்போதிருந்து, ஜேர்மனி தனது இராணுவச் செலவை இரட்டிப்பாக்கி, மும்மடங்காக்கியுள்ளது, மேலும் ஐரோப்பாவில் வலிமையான இராணுவத்தைக் கட்டியெழுப்புவதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களைப் போலவே, அது மீண்டும் கிழக்கு நோக்கி நகர்வுகளை விரிவாக்கி வருகிறது. ஜேர்மன் இராணுவம், அதன் வரலாற்றில் முதல்முறையாக, மற்றொரு நாட்டில் - ரஷ்ய கலினின்கிராட் பகுதியை எல்லையாகக் கொண்ட லிதுவேனியாவில் – ஒரு போர்ப் படையணியை நிரந்தரமாக நிலைநிறுத்தி உள்ளது. இது, ரஷ்யாவுடன் நேரடி இராணுவ மோதல் அபாயத்தை பெரிதும் அதிகரிக்கிறது. பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் போலந்து ஆகிய நாடுகள், உக்ரேனிய போரை தீவிரமாக மறுஆயுதபாணியாவதற்கு ஒரு சாக்குபோக்காக பயன்படுத்துகின்றன.

ஐரோப்பிய சக்திகள், அமெரிக்காவை இராணுவ ரீதியாக சார்ந்திருப்பதிலிருந்து விலகி, ரஷ்யாவை தாங்களாகவே எதிர்கொள்ள முயற்சிப்பதன் மூலம் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதுக்கு பதிலளிக்கின்றன. ட்ரம்ப் ரஷ்யாவை நோக்கிய சலுகைகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு இடையே ஊசலாடிக் கொண்டே வர்த்தகப் போர் நடவடிக்கைகளைக் கொண்டு ஐரோப்பாவை அச்சுறுத்துகிறார். ஆயினும்கூட, சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான பனிப்போர் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட நேட்டோவின் இராணுவ முதுகெலும்பாக அமெரிக்கா தொடர்ந்து உள்ளது. ரஷ்ய இராணுவ விமான நிலையங்கள் மீதான உக்ரேனிய தாக்குதலில் எடுத்துக்காட்டப்பட்டவாறு, அவை ரஷ்யாவுடனான மோதலைத் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த தாக்குதல், வாஷிங்டனிடம் இருந்து பச்சை விளக்கு காட்டாமல் நடந்திருக்க முடியாது.

ரஷ்யாவுக்கு எதிரான போரை நேட்டோ தீவிரப்படுத்தி வருகின்ற நிலையிலும் கூட, அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள் சீனாவுடனான அவற்றின் மோதலைத் தீவிரப்படுத்தி வருகின்றன. கடந்த வாரயிறுதியில், தைவான் தொடர்பாக சீனாவுடனான போர், “தவிர்க்க முடியாத சாத்தியம்” என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் அறிவித்தார்.

உக்ரேனிய போரையும், அணுஆயுத விரிவாக்கத்தின் அபாயத்தையும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீட்டின் மூலமாக மட்டுமே நிறுத்த முடியும். போர் மற்றும் இராணுவவாதத்தின் விளைவுகளை தொழிலாள வர்க்கம்தான் தாங்கிக் கொள்கிறது. இந்தப் போரில் இரு தரப்பையும் ஆதரிப்பதில் தொழிலாள வர்க்கத்திற்கு அக்கறை இல்லை. அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா மற்றும் உக்ரேனின் தொழிலாளர்கள் போர் மற்றும் அதன் காரணமான முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் ஐக்கியப்பட வேண்டும்.

Loading