இந்தியா-பாகிஸ்தான் மோதலும் அணு ஆயுத உலகப் போரின் அச்சுறுத்தலும்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் IYSSE விரிவுரை

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பு, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் “இந்திய -பாகிஸ்தான் மோதலும் அணு ஆயுத உலகப் போரின் அச்சுறுத்தலும்” என்ற தலைப்பில் ஒரு விரிவுரையை நிகழ்த்தவுள்ளது. இந்த விரிவுரையை அரசியல் விஞ்ஞான மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த விரிவுரை ஜூன் 5, வியாழன் பிற்பகல் 3.30 மணிக்கு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையின் 86வது அறையில் நடைபெறும்.

இன்று, உலகில் நாம் அனைவரும் எதிர்கொள்ளும் வாழ்வா சாவா பிரச்சினையைப் பற்றி கலந்துரையாடும் இந்த நிகழ்விற்கு வருகை தருமாறு மாணவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் IYSSE அழைப்பு விடுக்கின்றது.

ஏப்ரல் 22 அன்று, இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதிபலிக்கும் விதமாக, இந்தியா “ஆபரேஷன் சிந்துர்” என்ற பெயரில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலும் பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரிலும் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்தது. பாகிஸ்தானின் விவசாயம் மற்றும் மின் உற்பத்திக்கு இன்றியமையாத நீர் விநியோகங்களைத் தடுத்து நிறுத்தியதன் மூலம், இந்தியா ஒருதலைப்பட்சமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்தும் விலகிக்கொண்டது.

75 க்கும் மேற்பட்ட நவீன போர் விமானங்களை உள்ளடக்கிய இந்தியாவின் சரமாரி ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், 'இந்தியா இப்பகுதியை சூழ்ந்து கொள்ளும் முழு அளவிலான போரை நடத்தினால், எந்த நேரத்திலும் அணு ஆயுதப் போர் வெடிக்கலாம்' என்று எச்சரித்தார்.

இந்திய-பாகிஸ்தான் மோதல், இரண்டு பில்லியன் மக்கள் வசிக்கும் இந்திய துணைக்கண்டத்தை மட்டுமன்றி, முழு உலகத்தையும் அணு ஆயுத மோதலின் விளிம்பிற்கே கொண்டு வந்துள்ளது. இந்திய-பாகிஸ்தான் மோதல் ஒரு அணு ஆயுத பேரழிவிற்கு வழிவகுக்கும் அதேநேரம், உலக வல்லரசுகள், குறிப்பாக அமெரிக்காவும் சீனாவும் இந்த மோதலுக்குள் இழுக்கப்படும். 1930களின் பெரும் மந்தநிலைக்குப் பிறகு காணப்படாத ஆழமான பூகோளப் பொருளாதார நெருக்கடியினதும் அமெரிக்காவால் தூண்டப்பட்ட பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான உலகளாவிய பகைமையினதும் தற்போதைய இயக்கவியல் விளைவு இதுவே ஆகும். சீனாவிற்கு எதிரான போர் தயாரிப்புகளில் இந்தியா ஒரு முக்கிய கூட்டாளியாக மாறியுள்ளது.

அணு ஆயுதம் ஏந்திய நாடுகளுக்கு இடையிலான மோதல் உருவாக்கும் பேரழிவின் அளவு கணக்கிட முடியாததாகும். ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அளவிலான குண்டுகளில் நூறு குண்டுகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு வரையறுக்கப்பட்ட மோதல் கூட, குண்டுவெடிப்புகள், தீ, கதிர்வீச்சு ஆகியவற்றால் ஆரம்பத்தில் ஏற்படக்கூடிய 20 மில்லியன் மரணங்களுக்கும் மேலாக, ஒரு “அணுசக்தி குளிர்காலத்தை” உருவாக்கி, உலகளவில் விவசாயத்தை அழித்து, வெகுஜன பட்டினியை ஏற்படுத்தி, பில்லியன் கணக்கான உயிர்களை காவுவாங்கும்.

நான்கு நாட்கள் மோதல்கள் மற்றும் இரு தரப்பிலும் குறிப்பிடத்தக்க உயிரிழப்புகளுக்குப் பிறகு, இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் தணியவில்லை. இந்து பேரினவாத பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்தின் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்லாமாபாத்தை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில் இஸ்லாமாபாத்தும் பதிலடி கொடுப்பதாக கூறிவருகிறது.

சீனாவிற்கு எதிரான அதன் மூலோபாய இராணுவ நிலைப்பாட்டின் ஒரு பகுதியாக, அமெரிக்கா இலங்கையில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களுடன் நெருக்கமான மூலோபாய இராணுவ கூட்டாண்மைகளை உருவாக்கியுள்ளது. அனுரகுமார திசாநாயக்கவின் ஜே,வி,பி,/தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இந்த உறவுகள் புதிய நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதத்தில், திசாநாயக்க அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இந்தியாவுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இலங்கை இந்தியாவுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இதுவே முதல் முறை ஆகும்.

1947 இல் பிரிட்டிஷ் இந்தியாவை, முஸ்லிம் பாகிஸ்தான் மற்றும் இந்து பெரும்பான்மை இந்தியா எனப் பிரித்து தெற்காசியாவில் நிறுவப்பட்ட முதலாளித்துவ அமைப்பு மற்றும் பொருத்தமில்லா தேசிய-அரசு கட்டமைப்பிலேயே இந்திய-பாகிஸ்தான் மோதல் வேரூண்றியுள்ளது.. இந்த முதலாளித்துவ அரசு அமைப்பு, பிராந்தியத்தில் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் வளர்ந்து வரும் போராட்டங்களை அடக்குவதற்கும், முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கும் நிறுவப்பட்டதாகும்.

ஏகாதிபத்திய சக்திகளுக்கு விவேகத்துடன் செயல்படுமாறு வேண்டுகோள் விடுப்பதால் அணு ஆயுதப் போரின் பேரழிவைத் தவிர்க்க முடியாது. ஒரே ஒரு புரட்சிகர சமூக சக்தியால் மட்டுமே பேரழிவைத் தவிர்க்க முடியும்: அது சர்வதேச தொழிலாள வர்க்கம் ஆகும். இது முதல் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த, 1917 இல் ரஷ்யாவில் நடந்த சோசலிசப் புரட்சியால் வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

IYSSE, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடனும் அதன் கிளைகளான சோசலிச சமத்துவக் கட்சிகளுடனும் சேர்ந்து, சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்ப இடைவிடாத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தப் போராட்டத்தின் வெற்றியைப் பொறுத்தே அனைத்தும் தங்கியிருக்கின்றன. இந்தப் போராட்டத்தில், தேசிய எல்லைகள், மத மற்றும் இனப் பிரிவுகளைக் கடந்து தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்காகவும், உலகளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, தெற்காசியாவில் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் நாங்கள் முன்நிற்கின்றோம்.

எங்கள் பேச்சாளர் இந்தக் கருத்துக்களை மேலும் விளக்குவார். இந்த விரிவுரைக்கு வருகை தந்து, இந்த முக்கியமான கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு உங்கள் அனைவருக்கும் அழைப்புவிடுக்கின்றோம்.

இடம்: அறை எண். 86, அரசியல் விஞ்ஞானத் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்

திகதி மற்றும் நேரம்: ஜூன் 5, வியாழன் பிற்பகல் 3.30 மணிக்கு

Loading