முன்னணி சோ.ச.க. உறுப்பினர் தங்கள் தொழில்களைப் பாதுகாக்கப் போராடும் இலங்கை மிச்செலின் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் முன் உரையாற்றினார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மிதிகமவில் உள்ள மிச்செலின் தொழிற்சாலை தொழிலாளர்கள், சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) முன்னணி உறுப்பினரான அருண நிஷாந்த மலலகமவை, உரை ஒன்றை நிகழ்த்துவதற்காக, நேற்று காலை, அழைத்திருந்தனர். மிச்செலின் பன்னாட்டு நிறுவனம் தனது தொழிற்சாலையை இந்திய சியட் நிறுவனத்திற்கு விற்ற பின்னர், அவர்கள் தங்கள் தொழில்களைப் பாதுகாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர் அருண நிஷாந்த மலலகம, 26 மே 2025 அன்று மிச்செலின் தொழிலாளர்களுடன் பேசுகிறார். [Photo: WSWS]

திங்கட்கிழமை, அனைத்து நிறுவன ஊழியர் சங்கம் (ICEU) மற்றும் மிச்செலின் நிர்வாகத்திற்கும் இடையே ஒரு ரகசிய ஒப்பந்தம் பற்றி தொழிலாளர்கள் அறிந்துகொண்டனர். தொழிலாளர்களுக்குத் தெரியாமல் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் கீழ், வேலை இழக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் வெறும் 650 அமெரிக்க டொலர்கள் (சுமார் 200,000 ரூபாய்) மட்டுமே நட்ட ஈடு கொடுக்க தொழிற்சங்கம் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

நேற்று விடுமுறை நாள் என்றாலும், அந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் 2,000 தொழிலாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தொழிற்சாலையில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மெகாஃபோன் மூலம் மலலகம ஆற்றிய உரையை அவர்கள் அனைவரும் வரவேற்றனர். அவரது கருத்துக்களை கீழே வெளியிடுகிறோம்.

***

நான் சோசலிச சமத்துவக் கட்சியைச் சேர்ந்த அருண நிஷாந்த மலலகம, தொழில்கள் மற்றும் ஏனைய உரிமைகளைப் பாதுகாக்க நீங்கள் முன்னெடுக்கும் இந்த வலுவான போராட்டத்துடன் எனது கட்சியும் நானும் ஒன்றாக நிற்கிறோம்.

தோழர்களாகிய நீங்கள் முன்வைத்த கோரிக்கைகளை மிகவும் நியாயமான கோரிக்கைகளாக நான் ஏற்றுக்கொள்கிறேன்.

மிச்செலின் மற்றும் சியட் இடையேயான ஒப்பந்தம் காரணமாகவே நீங்கள் இந்தப் போராட்டத்தில் இருக்கிறீர்கள். தோழர்களே, தொழிற்சங்கத்தால் மோசடியான முறையில் நீங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளீர்கள். தொழிற்சங்கத்தால் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உங்களுடைய இந்தத் தொழிற்சாலை மூடப்பட்டமை, உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் விளைவாகும். கடந்த வாரம், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள நெக்ஸ்ட் ஆடைத் தொழிற்சாலை இரவோடு இரவாக மூடப்பட்டதைக் கண்டோம்.

இங்குள்ள மிச்செலின் தொழிற்சாலையின் செயல்பாடு அப்பகுதியில் உள்ள கிராமப்புற மக்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துள்ளது. எனவே, உங்கள் தொழில்களையும், அப்பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் பெரும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது.

தொழிற்சங்கத் தலைவர்களின் காட்டிக்கொடுப்பின் அதே அனுபவத்தை எல்லா இடங்களிலும் நாம் கண்டிருக்கிறோம். ஒரு தொழிற்சாலை மூடப்படும்போதோ அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை வரும்போதோ, தொழிற்சங்கத் தலைவர்கள் முதலாளிகளுடன் இணைந்து தொழிலாளர்களின் போராட்டங்களைக் காட்டிக் கொடுக்கிறார்கள்.

கொக்கல சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பிற மூடப்பட்ட தொழிற்சாலைகளுக்குள் நாம் கண்ட அனுபவம் அதுதான்.

தோழர்களே, போராட்டத்தை உங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்காக, தொழிற்சங்கங்களை நம்புவதற்குப் பதிலாக, உங்கள் சொந்த தொழிலாளர் நடவடிக்கைக் குழுவை உருவாக்குமாறு நான் பரிந்துரைக்கிறேன்.

இந்த மிச்செலின் தொழிற்சாலை ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும். இது உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் உள்ள பல தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்களைப் வேலைக்கு அமர்த்தியுள்ளது. தோழர்களே! நீங்கள் அந்தத் தொழிலாளர்களுடன் ஒன்றுபட வேண்டும். அதற்காக, அந்த வர்க்க சகோதர சகோதரிகளிடம் எங்கள் போராட்டத்தை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுக்க வேண்டும், நாங்கள் அவர்களை ஆதரிக்க வேண்டும்.

இலங்கையில் இத்தகைய கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள தொழிலாளர்களின் ஆதரவையும் நாம் கோர வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் இந்த சர்வதேச ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப உங்களுடன் இணைந்து செயல்படுகின்றன.

உங்கள் போராட்டத்திற்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். நன்றி.

Loading