மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
எண்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், 1940 மே 24 அதிகாலையில், மாபெரும் மார்க்சிச புரட்சியாளரும் 1917 அக்டோபர் ரஷ்ய புரட்சியில் விளாடிமிர் லெனினுடன் இணைந்து செயல்பட்ட தலைவருமான லியோன் ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்வதற்கான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த தோல்வியுற்ற சதித்திட்டத்தைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 20, 1940 அன்று ஸ்டாலினிச இரகசிய போலீஸ் (GPU) முகவரான ரமோன் மெர்கேடரால் (Ramón Mercader) வெற்றிகரமான தாக்குதல் நடத்தப்பட்டது.
1940 மே 24 அன்று சுமார் அதிகாலை 4:00 மணியளவில், மெக்சிகன் சுவரோவியவாதி டேவிட் அல்ஃபாரோ சிக்விரோஸ் (David Alfaro Siqueiros) தலைமையிலான சுமார் 20 ஸ்ராலினிச கொலையாளிகளைக் கொண்ட ஒரு குழு, ட்ரொட்ஸ்கியின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) இளம் உறுப்பினரான ரொபர்ட் ஷெல்டன் ஹார்ட்டரின் (Robert Sheldon Harte) அனுமதியுடன், கொயோகானில் உள்ள ட்ரொட்ஸ்கியின் வீட்டுக்குள் சென்றது.
போலிஸ் வேடமிட்டு, இயந்திர துப்பாக்கிகள், தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் தீப்பிடிக்கும் குண்டுகளுடன் ஆயுதபாணியாக இருந்த இந்த கொலையாளிகள் இரண்டு குழுக்களாக பிரிந்தனர். ஒன்று ட்ரொட்ஸ்கியைக் கொல்லும் பணியிலும், மற்றொன்று ட்ரொட்ஸ்கியின் காவலரைத் தாக்கும் பணியிலும் ஈடுபட்டனர். ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றின் முடிக்கப்படாத கையெழுத்துப் பிரதி உட்பட, ட்ரொட்ஸ்கியின் காப்பகத்தையும் அவர்கள் அழிக்க முயன்றனர்.
இந்த தாக்குதலுக்குப் பிறகு, “ஸ்டாலின் என் மரணத்தை நாடுகிறார்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், ட்ரொட்ஸ்கி அன்று காலை நடந்த கொடூரமான நிகழ்வுகளை பின்வருமாறு விவரித்தார்:
என் மனைவி ஏற்கனவே படுக்கையில் இருந்து குதித்துவிட்டார். துப்பாக்கிச் சூடு இடைவிடாமல் தொடர்ந்தது. பின்னர் என் மனைவி என்னை தரையில் இறக்கி, படுக்கைக்கும் சுவருக்கும் இடையிலான இடைவெளியில் தள்ளிவிட்டதாகக் கூறினார். இது முற்றிலும் உண்மைதான். என் மனைவி தன் உடலால் என்னைப் பாதுகாக்கும் விதமாக, சுவரின் அருகே நின்று கொண்டிருந்தார். ஆனால் கிசுகிசுப்பான குரல்கள் மற்றும் சைகைகள் மூலம் அவரைத் தரையில் படுக்க வைத்தேன். எல்லா பக்கங்களிலிருந்தும் துப்பாக்கிச் சூடுகள் வந்தன. அவை எங்கிருந்து வருகின்றன என்று சொல்வது கடினமாக இருந்தது. ஒரு கட்டத்தில் என் மனைவி, பின்னர் என்னிடம் சொன்னது போல், துப்பாக்கியிலிருந்து வரும் தீப் பிளம்புகளை தெளிவாக வேறுபடுத்திப் பார்த்தார். கொலையாளிகள் யாரையும் பார்க்க முடியவில்லை என்றாலும், அறைக்குள் துப்பாக்கிச் சூடு நடந்து கொண்டிருந்தது. மொத்தம் இருநூறு குண்டுகள் சுடப்பட்டன என்றும், அவற்றில் சுமார் நூறு குண்டுகள் எங்களுக்குப் பக்கத்தில் விழுந்தன என்றும் நான் நினைக்கிறேன். ஜன்னல் கண்ணாடிகளிலிருந்து கண்ணாடித் துண்டுகளும், சுவர்களிலிருந்து சில்லுகளும் எல்லாத் திசைகளிலும் பறந்தன. சிறிது நேரம் கழித்து எனது வலது காலின் இரண்டு இடங்களில் லேசாக காயங்கள் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தேன்.
ரஷ்யப் புரட்சியையும் அதைத் தொடர்ந்த உள்நாட்டுப் போரையும் கடந்து வந்த ட்ரொட்ஸ்கி, இந்த துப்பாக்கிச் சூடு பற்றி பரிச்சயமில்லாதவர் அல்ல. அவரும், அவரது மனைவியான நத்தாலியாவும் தங்கள் நிதானத்தை கடைப்பிடித்து, துப்பாக்கி சன்னங்கள் அவர்களின் உடல்களைத் தாண்டிச் சென்றபோதும்கூட தரையில் அப்படியே கிடந்தனர். அதிசயமாக, யாரும் கொல்லப்படவில்லை அல்லது படுகாயமடையவில்லை. கொலையாளிகள் அறையை விட்டு வெளியேறிய சிறிது நேரத்தில், ட்ரொட்ஸ்கியின் 14 வயது பேரன் சேவா கதறி அழுததை அவர் பின்வருமாறு நினைவு கூர்ந்தார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியில் இருளிலிருந்த அந்த சிறுவனின் குரல், அந்த இரவின் மிகவும் துயரமான நினைவாக உள்ளது. சிறுவன் படுக்கைக்கு அடியில் பதுங்கிக் கொண்டான். தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவன், பீதியில், படுக்கையை நோக்கி சுட்டான். — முதலாவது துப்பாக்கி சூடு அவனது படுக்கையை குறுக்காக துளைத்து சென்றதை கதவு மற்றும் சுவரில் இருந்த அடையாளங்கள் சாட்சியமளிக்கிறது— ஒரு துப்பாக்கி குண்டு மெத்தையை ஊடுருவிச் சென்று, எங்கள் பேரனின் பெருவிரலில் பாய்ந்து தரையில் புதைந்தது. தாக்குதல் நடத்தியவர்கள் இரண்டு தீப்பிடிக்கும் குண்டுகளை வீசிவிட்டு எங்கள் பேரனின் படுக்கையறையை விட்டு வெளியேறினர். “தாத்தா!” என்று அழுதுகொண்டே, உள் முற்றத்திற்குள் அவர்களைப் பின்தொடர்ந்து ஓடிய அந்த சிறுவன், தனக்கு பின்னால் இரத்தத் தடயத்தை விட்டுவிட்டு, துப்பாக்கிச் சூடுகளுக்கு மத்தியில், காவலர்களின் அறைகளில் ஒன்றிற்குள் விரைந்தான்.
ட்ரொட்ஸ்கியின் வளாகத்தின் துல்லியமான வடிவமைப்பை அறிந்திருந்த கொலையாளிகளுக்கு உள்ளேயிருந்து முகவர்களின் உதவிகள் தெளிவாக கிடைத்திருந்தது. ரொபர்ட் ஷெல்டன் ஹார்ட் கொலையாளிகளுடன் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். இது அவர் இந்த சதியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியது. ஒரு மாதத்திற்குப் பின்னர், ஜூன் 25, 1940 அன்று, ஹார்ட்டின் உடல் ஒரு குழியில் சுண்ணாம்பு பூசப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது தலையின் பின்புறத்தில் இரண்டு துப்பாக்கி சன்னங்கள் இருந்தன. ட்ரொட்ஸ்கிக்கு போதுமான தகவல்கள் இல்லாததால், ஹார்ட் ஒரு உளவாளியா என்ற முடிவுக்கு வருவதற்கு எந்த வழியும் இருக்கவில்லை. ஆனால் அதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகள் மற்றும் தசாப்தங்களில் கூடுதல் ஆதாரங்கள் கிடைத்தன. 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து GPU ஆவணக் காப்பகங்கள் வெளியிடப்பட்டன. அதில், ஹார்ட் ஒரு ஸ்டாலினிச முகவராக இருந்தார் என்பதையும், மே 24 படுகொலை முயற்சியில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார் என்பதையும் நிரூபித்தது.
ஹார்ட்டைத் தவிர, ஆவணங்கள் பின்னர் நிறுவியபடி, இன்னும் முக்கியமான ஒரு முகவர் ட்ரொட்ஸ்கியின் நெருங்கிய காவலரின் ஒரு பகுதியாக இருந்தார். இந்த தாக்குதல் நடந்த வேளையில், ட்ரொட்ஸ்கியின் அத்தனை பாதுகாவலர்களும் செயலற்றவர்களாக ஆக்கப்பட்டனர். ஏனென்றால், அவர்களின் துப்பாக்கிகளில் தவறான தோட்டாக்கள் நிரப்பப்பட்டிருந்ததால், அவர்களின் ஆயுதங்கள் செயலிழந்திருந்தன. வெடிமருந்துகளை நிரப்புவதற்குப் பொறுப்பான பாதுகாப்புத் தலைவராக சோசலிச தொழிலாளர் கட்சியின் அங்கத்தவர் ஜோசப் ஹான்சன் இருந்தார். அவர் 1938 ஆம் ஆண்டிலேயே GPU உடன் தொடர்பு கொண்டிருந்ததாக பின்னர் அமெரிக்க உள்நாட்டு உளவுத்துறையான FBI இடம் தெரிவித்தார்.
வெறும் எட்டு மாதங்களுக்கு முன்பு செப்டம்பர் 1, 1939 அன்று வெடித்த இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தின் பின்னணியில், மே 24, 1940 அன்று லியோன் ட்ரொட்ஸ்கியின் மீதான படுகொலை முயற்சி நடந்தது. பிரான்சில் தீவிரமாக நடந்து கொண்டிருந்த போரில், பிரெஞ்சுப் படைகள் ஜூன் 22, 1940 அன்று நாஜிக்களிடம் சரணடைந்தன.
ஆகஸ்ட் 20, 1940 அன்று நடந்த ட்ரொட்ஸ்கியின் படுகொலை, 20 ஆம் நூற்றாண்டில் மிகவும் பின்விளைவுகளை ஏற்படுத்திய மிகப் பெரிய அரசியல் குற்றமாகும். 1930 களில் ஜோசப் ஸ்டாலினால் கட்டவிழ்த்து விடப்பட்ட உலகளாவிய பயங்கரவாத அலையின் உச்சக்கட்டத்தை இது குறித்தது. அப்போது ஸ்டாலினிச அதிகாரத்துவம் தன்னை ஒரு வெளிப்படையான எதிர்ப்புரட்சிகர சக்தியாக மாற்றியது. தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அதிகாரத்தை பறித்த சோவியத் அதிகாரத்துவத்தின் தலைவர் என்ற முறையில், ஸ்டாலின் சோவியத் ஒன்றியத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தனது சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் அழிக்க தீர்மானகரமாக இருந்தார்.
சோவியத் ஒன்றியத்தில், 1936 ஆகஸ்டில் இடம்பெற்ற முதல் மாஸ்கோ விசாரணை, புரட்சிகர சோசலிச தொழிலாள வர்க்கம் மற்றும் புத்திஜீவிகளுக்கு எதிராக, ஸ்டாலினிச அதிகாரத்துவத்தால் தொடுக்கப்பட்ட ஒரு போரான, மாபெரும் பயங்கரத்தை தொடக்கி வைத்தது. 1936க்கும் 1939க்கும் இடையில், நூறாயிரக்கணக்கான சோசலிஸ்டுகள், மார்க்சிச புத்திஜீவிகள் மற்றும் தொழிலாளர்களுடன் சேர்ந்து, அக்டோபர் புரட்சியின் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தலைமையையும் ஸ்டாலின் படுகொலை செய்தார். சர்வதேச அளவில், ஸ்டாலினிசத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மூன்றாம் அகிலம் (கம்யூனிச அகிலம்) 1936-39 ஸ்பானிய உள்நாட்டுப் போரை நனவுபூர்வமாக காட்டிக்கொடுத்தது. அது, ஆயிரக்கணக்கான இடதுசாரி, சோசலிச மற்றும் அராஜகவாத எதிர்ப்பாளர்களை படுகொலை செய்தது. இதில், மார்க்சிச ஐக்கியத்திற்கான தொழிலாளர் கட்சியான POUM ன் தலைவர் ஆண்ட்ரூ நின் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, மற்றும் படுகொலை செய்யப்பட்டதும் அடங்கும்.
ட்ரொட்ஸ்கியின் தலைமையிலான நான்காம் அகிலம் எப்பொழுதுமே ஸ்டாலினின் இந்த அரசியல் பயங்கரத்தின் உலகளாவிய தாக்குதலின் மைய இலக்காக இருந்தது. லெனினின் மரணத்திற்குப் பின்னர், ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றியம் ஸ்தாபிக்கப்பட்டிருந்த சர்வதேசியவாத கோட்பாடுகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்திற்கு தலைமை கொடுத்து, ஸ்டாலினிச அதிகாரத்துவத்திற்கும் அதன் தேசியவாத வேலைத்திட்டமான “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்பதற்கும் எதிராக ஒரு சமரசமற்ற போராட்டத்தை நடத்தினார். ட்ரொட்ஸ்கி மற்றும் அவரது ஆதரவாளர்கள், ஸ்டாலின் மற்றும் ஏனைய சோவியத் தலைவர்களைப் படுகொலை செய்ய சதி செய்ததாகவும், நாஜி ஜேர்மனி உட்பட வெளிநாட்டு சக்திகளுடன் ஒத்துழைத்ததாகவும், சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவத்தை மீட்சி செய்யும் நோக்கம் கொண்டிருந்ததாகவும், மாஸ்கோ விசாரணைகள் பொய்யாகக் குற்றம் சாட்டின. ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்கு முன்னர், சோவியத் இரகசிய போலிசான GPU ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பல முன்னணி தலைவர்களின் படுகொலைகளை ஒழுங்கமைத்தது. ஒவ்வொரு படுகொலையின் மையத்திலும் GPU முகவர் மார்க் ஸ்பொரோவ்ஸ்கி என்றழைக்கப்படும் எட்டியான் இருந்தார். இந்த படுகொலைகளில் பின்வருவன அடங்கும்:
ட்ரொட்ஸ்கியின் அரசியல் செயலாளர்களில் ஒருவரான எர்வின் வொல்ஃப், 1937 கோடையில் ஸ்பெயினில் GPU ஆல் படுகொலை செய்யப்பட்டார்
ஸ்டாலினிசத்தில் இருந்து வெளியேறி நான்காம் அகிலத்திற்கு தனது ஆதரவை அறிவித்த இக்னேஸ் ரைஸ், 1937 செப்டம்பரில் சுவிட்சர்லாந்தில் GPU ஆல் படுகொலை செய்யப்பட்டார்.
ட்ரொட்ஸ்கியின் மகனும் சக-சிந்தனையாளருமான லியோன் செடோவ், GPU ஆல் படுகொலை செய்யப்பட்டதை அனைத்து ஆதாரங்களும் சுட்டிக்காட்டும் நிலையில், 1938 பிப்ரவரி 16 அன்று பாரிஸ் மருத்துவமனை ஒன்றில் சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகளின் கீழ் இறந்து கிடந்தார்.
நான்காம் அகிலத்தின் செயலரான ருடோல்ஃப் கிளெமென்ட் 1938 ஜூலையில் பாரிசில் கடத்தப்பட்டு GPU ஆல் கொல்லப்பட்டார். அவரது சிதைந்த உடல் பின்னர் செயின் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது.
1939 வாக்கில் ட்ரொட்ஸ்கி, ரஷ்ய புரட்சியின் எஞ்சியிருந்த கடைசித் தலைவராக இருந்தார். நவம்பர் 1927 இல் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு, 1929 பிப்ரவரியில் சோவியத் ஒன்றியத்தில் இருந்து நாடுகடத்தப்படுவதற்கு நிர்பந்திக்கப்பட்ட ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை தொடர்ச்சியாக ஆபத்தில் இருந்து வந்தது. ட்ரொட்ஸ்கி விவரித்தபடி, “விசா இல்லாமல் இந்த கிரகத்தில்” வாழ்ந்த அவர், நாடுகடத்தப்பட்ட பின்பு முதல் எட்டு ஆண்டுகளை துருக்கி, பிரான்ஸ் மற்றும் நோர்வேயில் கழித்தார். ஸ்டாலின் இந்த பயங்கரத்தை தொடக்கி வைத்த பின்னர் ட்ரொட்ஸ்கி ஐரோப்பாவை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டார். சோசலிச ஓவியரும் ட்ரொட்ஸ்கியின் அனுதாபியுமான டியாகோ ரிவேராவின் அழைப்பைத் தொடர்ந்து, 1936 டிசம்பரில் மெக்சிகோவில் லசாரோ கோர்டெனாஸின் தீவிர தேசியவாத அரசாங்கத்தால் மட்டுமே அவருக்கு தஞ்சம் வழங்கப்பட்டது.
ட்ரொட்ஸ்கி தனிமைப்படுத்தப்பட்டிருந்த போதிலும், ஸ்டாலின் அவரை தனது மிகவும் அபாயகரமான எதிரியாகவே தொடர்ந்து பார்த்தார். குறிப்பாக, ஒரு புதிய ஏகாதிபத்திய உலகப் போர் நிலைமைகளின் கீழ், பாரிய பார்வையாளர்களை சென்றடைவதற்கான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் புரட்சிகர சாத்தியத்திறன் எப்போதும் உயிர்ப்புடன் இருந்து வந்தது. ஸ்டாலினை ஆட்டிப்படைத்த இந்த ஆபத்தை 1937 ஆம் ஆண்டில் புரட்சியாளர் விக்டர் சேர்ஜ், ட்ரொட்ஸ்கிக்கு “வயதான மனிதன்” என்ற அன்பான பெயரைப் பயன்படுத்தி பொருத்தமாக விவரித்தார்:
இந்த வயதான மனிதன் உயிருடன் வாழும் வரை, வெற்றி பெற்ற அதிகாரத்துவத்துக்கு பாதுகாப்பு இருக்காது. அக்டோபர் புரட்சியின் ஒரு மனம் எஞ்சியுள்ளது. அதுதான் ஒரு உண்மையான தலைவரின் மனம். முதல் அதிர்ச்சியில், மக்கள் அவரை நோக்கித் திரும்புவார்கள். போரின் மூன்றாவது மாதத்தில், சிரமங்கள் தொடங்கும் போது, முழுத் தேசமும் “வெற்றியின் ஒழுங்கமைப்பாளரை” நோக்கித் திரும்புவதை எதுவும் தடுக்க முடியாது.
தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் புரட்சியை முன்கூட்டியே தடுக்கவும் ட்ரொட்ஸ்கி கொலை செய்யப்பட வேண்டும் என்று ஸ்டாலின் தீர்மானித்தார். மெக்சிகோவில் ட்ரொட்ஸ்கியைப் படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் முதன்முதலில் 1939 வசந்த காலத்தில் உறுதிப்படுத்தப்பட்டது என்றும், அதற்கடுத்த ஆண்டில் GPU முகவர்கள் அந்நகருக்குள் வெள்ளமென நுழைந்தனர் என்றும் சமீபத்திய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. மெக்சிகன் கம்யூனிஸ்ட் கட்சி (PCM) மே 24 தாக்குதலைத் தயாரிப்பதில் முக்கிய பங்கு வகித்தது. மார்ச் 1940 இல், ட்ரொட்ஸ்கிசத்தை அழிப்பதே மையக் கருப்பொருளாகக் கொண்ட ஒரு அசாதாரண மாநாட்டை மெக்சிகன் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. PCM அதன் அதிகாரப்பூர்வ ஏடான La Voz de Mexicoவிலும், அது செல்வாக்கு செலுத்திய El Popular மற்றும் Futuro வெளியீடுகளிலும் ட்ரொட்ஸ்கியை கடுமையாகக் கண்டித்து, தாக்குதலுக்கு முந்தைய மாதங்களில் அவர் மீதான பொதுக் கருத்தை மாசுபடுத்தியது. இந்த தாக்குதலின் முக்கிய அமைப்பாளர்களான டேவிட் அல்பாரோ சிக்குயிரோஸ், அவரது சகோதரர் ஆல்பிரெடோ சிக்குயிரோஸ், அன்டோனியோ புஜோல் மற்றும் பெட்ரோ ஜூனிகா கமாச்சோ ஆகியோர் மெக்சிகன் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாக இருந்தனர்.
மாஸ்கோவில், மே 24 தாக்குதலின் தோல்வி ஒரு அரசியல் பேரழிவாக பார்க்கப்பட்டது. முன்னாள் சோவியத் தளபதியும் ரஷ்ய வரலாற்றாசிரியருமான டிமிட்ரி வோல்கோகோனோவின் கூற்றுப்படி, ட்ரொட்ஸ்கி மீதான “படுகொலை முயற்சி தோல்வியடைந்த செய்தி ஸ்டாலினுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.” மேலும் “மெக்சிகோவில் நீண்ட காலமாக நியமிக்கப்பட்டு, தனது பணியைச் செய்யத் தயாராகி வந்த ஒரு தனிப்பட்ட செயற்பாட்டாளரின் நடவடிக்கையின் மீது இப்போது அனைத்தும் பணயம் வைக்கப்படும்” என்று முடிவெடுக்க ஸ்டாலினை இட்டுச் சென்றது.
1940 மே 26 அல்லது 27 இல், அந்த செயற்பாட்டாளரான ரமோன் மெர்க்கடேருக்கு (ஜாக் மோர்னார்ட் மற்றும் பிராங்க் ஜாக்சன் என்ற புனைப்பெயர்கள்) ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்வதற்கான பணி முதலில் வழங்கப்பட்டது. மே 28 காலையில், 1938 இல் இருந்து ட்ரொட்ஸ்கிச இயக்கத்துடன் மெர்க்கடேரின் தொடர்பாளராக சேவையாற்றிய, சோசலிச தொழிலாளர் கட்சி அங்கத்தவரான சில்வியா அகலோவ் என்ற பெண்மணியால் ட்ரொட்ஸ்கிக்கு அவர் அறிமுகப்படுத்தப்பட்டார். எரிக் லண்டனின் 2021 தொடரான “சில்வியா அகலோஃப் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலை” என்ற ஆய்வில் உன்னிப்பாக ஆவணப்படுத்தப்பட்டதைப் போல, அடுத்த மூன்று மாதங்களில் மெர்க்கடெர் மற்றும் அகெலோஃப் நியூ யோர்க் நகரம் மற்றும் மெக்சிகோ நகரத்தை தளமாகக் கொண்ட அவர்களின் GPU கையாளுபவர்களுடன் சேர்ந்து படுகொலைக்கான சதித் திட்டத்தை மேற்கொண்டனர்.
ஸ்டாலினிச பத்திரிகைகள் பகிரங்கமாக ட்ரொட்ஸ்கிக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தின. மே 24 படுகொலை முயற்சியை, ஏதோவொரு விதத்தில் ட்ரொட்ஸ்கியே ஏற்பாடு செய்த “சுய தாக்குதல்” என்று அபத்தமாக அவை சித்தரித்தன. இந்த அப்பட்டமான பொய்யை மெக்சிகன் முதலாளித்துவ பத்திரிகைகள் மற்றும் பிற சர்வதேச ஊடகங்கள், முழுமையான ஆதாரங்கள் இல்லாத போதிலும், கிளிப்பிள்ளை போல் ஏற்றுக்கொண்டன. இந்த அவதூறுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, ட்ரொட்ஸ்கி தனது உயிருக்கு எதிரான ஸ்டாலினிச சதித்திட்டத்தை அம்பலப்படுத்த ஒரு தீவிரமான பிரச்சாரத்தைத் முன்னெடுத்தார். ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்குப் பின்னர் “தந்தையும் மகனும்” என்ற தலைப்பில், நத்தலியா செடோவா எழுதிய ஒரு கட்டுரையில், மே 24 அன்று ட்ரொட்ஸ்கி மீதான கொலை முயற்சிக்குப் பிந்தைய காலகட்டத்தை பின்வருமாறு நினைவுகூர்ந்தார்:
அதேநேரத்தில், லேவ் டேவிட்டோவிச் [ட்ரொட்ஸ்கி] மே 24 வழக்கு விசாரணையில் பங்கெடுத்துக் கொண்டிருந்தார். அந்த விசாரணையின் சோம்பேறித்தனமான வேகம் லேவ் டேவிட்டோவிச்சை மிகவும் கவலைக்குள்ளாக்கியது. அவர் பொறுமையாகவும் அயராதும் இந்த நிகழ்வுகளைப் பின்பற்றி, வழக்கின் சூழ்நிலைகளை நீதிமன்றத்திற்கும் பத்திரிகைகளுக்கும் விளக்கினார். மேலும் வெளிப்படையான மற்றும் நம்பிக்கையற்ற பொய்கள் அல்லது தீங்கிழைக்கும் சந்தேகங்களை மறுக்க தன்னை கட்டாயப்படுத்த மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்ட முயற்சிகளை மேற்கொண்டார். மேலும் இதையெல்லாம் அவருக்கே உரிய தீவிர நுண்ணறிவுடன் மேற்கொண்டார். மேலும் ஒரு விவரத்தையும் கூட கவனத்திலிருந்து தப்பிக்க அவர் அனுமதிக்கவில்லை. மேலும், அவர் ஒவ்வொரு விஷயத்திற்கும் சரியான முக்கியத்துவத்தை ஒதுக்கி, அனைத்தையும் ஒன்றாக இணைத்தார்.
1940 ஜூன் 8 அன்று, ட்ரொட்ஸ்கி “ஸ்டாலின் எனது மரணத்தை நாடுகிறார்” என்று தலைப்பிட்ட அவரது முதல் அறிக்கையை வெளியிட்டார். “சுய-தாக்குதல்” என்ற கூற்றுகளை அம்பலப்படுத்தி, ட்ரொட்ஸ்கி பின்வருமாறு குறிப்பிட்டார்:
மிகவும் கவனமாகவும் திறமையாகவும் தயாரிக்கப்பட்ட தாக்குதலின் தற்செயலான தோல்வி, ஸ்டாலினுக்கு ஒரு பலத்த அடியாகும். GPU ஸ்டாலினுடன் இணைந்து தன்னை புனரமைத்துக் கொள்ள வேண்டும். ஸ்டாலின் தனது அதிகாரத்தை நிரூபிக்க வேண்டும். மறுபடியும் முயற்சி செய்வது தவிர்க்க முடியாதது.
அந்த அறிக்கை, படுகொலை முயற்சிக்கு முன்னர், மெக்சிகன் தொழிலாளர் கூட்டமைப்பின் (CTM) நிறுவனரும் மற்றும் தலைவருமான விசென்ட் லோம்பார்டோ டோலிடானோ மற்றும் மெக்சிகன் கம்யூனிஸ்ட் கட்சியின் (PCM) முன்னாள் தலைவர் ஹெர்னான் லாபோர்டே ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட முன்னணி மெக்சிகன் ஸ்டாலினிஸ்டுகள் ட்ரொட்ஸ்கியை கடுமையாகப் பகிரங்கமாகக் கண்டித்ததை ஆவணப்படுத்தியது. லாபோர்டே ரோட்ரிக்ஸ், படுகொலை சதித்திட்டத்தை எதிர்த்த போதிலும், விசுவாசமான ஸ்டாலினிஸ்டாகவே இருந்தார். ட்ரொட்ஸ்கி தனது அறிக்கையை முடிக்கும்போது, பின்வருமாறு எழுதினார்:
நான் இந்தப் பூமியில் விதிப்படி அல்ல, விதிக்கு விதிவிலக்காகவே வாழ்கிறேன். நம்முடைய காலத்தைப் போன்ற ஒரு பிற்போக்குத்தனமான சகாப்தத்தில், ஒரு புரட்சியாளர் நீரோடைக்கு எதிராக நீந்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். என்னால் இயன்றவரை இதைச் சிறப்பாகச் செய்து வருகிறேன். உலக எதிர்வினையின் அழுத்தம் எனது தனிப்பட்ட விதியிலும் எனக்கு நெருக்கமானவர்களின் விதியிலும் மிகவும் சமரசமற்ற முறையில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது. இதில் எந்த தகுதியும் இருப்பதாக நான் காணவில்லை. இது வரலாற்று சூழ்நிலைகளின் பின்னிப்பிணைப்பின் விளைவாகும். ஆனால், டோலிடானோ, லாபோர்டே போன்றவர்கள் என்னை ஒரு “எதிர்ப்புரட்சியாளர்” என்று அறிவிக்கும்போது, நான் அமைதியாக அவர்களைப் புறக்கணிக்க முடியும். ஆதலால், இறுதி தீர்ப்பை வரலாற்றிடம் விட்டுவிடுகிறேன்.
ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்படுவதற்கு வெறும் மூன்று நாட்களுக்கு முன்னர் 1940 ஆகஸ்டு 17 அன்று “கம்யூனிச அகிலமும் GPU வும்” என்ற தலைப்பில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் ட்ரொட்ஸ்கி, இந்தக் கருப்பொருள்களை விரிவாகக் கூறியிருந்தார். அதே நேரத்தில், தன்னை சட்டப்பூர்வமாக பாதுகாத்துக் கொண்டு, தனது உயிருக்கு எதிரான ஸ்டாலினிச சதித்திட்டத்தை மேலும் அம்பலப்படுத்திக் கொண்டிருந்தார்.
ட்ரொட்ஸ்கியின் மரணத்தைத் தொடர்ந்து, சோசலிச தொழிலாளர் கட்சியால் எந்த தொடர்ச்சியான விசாரணையும் நடத்தப்படவில்லை. பல தசாப்தங்களாக, அக்கட்சி பெரிதும் இந்த விடயத்தில் மௌனமாக இருந்தது. அகெலோஃப் மற்றும் மெர்கேடருக்கு இடையிலான சந்தேகத்திற்குரிய தொடர்புகளையும், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் ஊடுருவி தங்கள் பதவிகளில் இருந்த GPU முகவர்களின் பரந்த வலையமைப்பையும் சோசலிச தொழிலாளர் கட்சி விசாரிக்கத் தவறியது. இதில் பாரிஸில் மார்க் ஸ்போரோவ்ஸ்கி, நியூயோர்க் நகரில் சில்வியா கால்டுவெல், மெக்சிகோ நகரில் ஜோசப் ஹான்சன் மற்றும் பலரும் அடங்குவர். 1950கள் மற்றும் 1960களின் முற்பகுதியில் இடம்பெற்ற சோவியத் உளவு பார்ப்பு விசாரணைகள் முழுவதும், ஸ்போரோவ்ஸ்கி, சோபோலேவிசியஸ் சகோதரர்கள் (ஜாக் சோபிள், அல்லது செனின்; மற்றும் ராபர்ட் சோப்லென், அல்லது ரோமன் வெல்), சில்வியா கால்டுவெல் (சில்வியா பிராங்க்ளின் பயன்படுத்திய கட்சிப் பெயர்) மற்றும் பிறரின் சூழ்ச்சிகளை வெளிப்படுத்தியது. மேலும், சோசலிச தொழிலாளர் கட்சி இது தொடர்பாக அவர்களின் பத்திரிகைகளில் ஒரு மரண மௌனத்தைக் கடைப்பிடித்தது.
1975 வரையில், சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே மாதத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என்ற தலைப்பின் கீழ், ட்ரொட்ஸ்கியின் படுகொலை குறித்த முதல் விரிவான விசாரணையைத் தொடங்கியது. இந்த விசாரணை பல மறைக்கப்பட்ட உண்மைகளை அம்பலப்படுத்தியதுடன், படுகொலை மற்றும் சதியில் சம்பந்தப்பட்ட ஸ்டாலினிச முகவர்களின் வலையமைப்பு ஆகிய இரண்டிலும் கிடைக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களையும் ஒன்றாகக் கொண்டுவந்தது.
விசாரணைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களாக, ஸ்போரோவ்ஸ்கி, ஹான்சன், ஹார்டே, கால்டுவெல் மற்றும் பலர் படுகொலையில் ஆற்றிய பாத்திரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டன. இவர்களின் உண்மை வரலாறுகள் பல தசாப்தங்களாக மறைக்கப்பட்டிருந்தன அல்லது புறக்கணிக்கப்பட்டிருந்தன. அந்த நேரத்தில், ஹான்சனின் தலைமையில் இருந்த சோசலிச தொழிலாளர் கட்சி, ட்ரொட்ஸ்கிசத்தை கைவிட்டிருந்தது. 1940 ஆகஸ்டு 31 லிருந்து, ஹான்சன் FBI உடனான உறவுகளைத் தொடங்கி, துரிதமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு இரட்டை-முகவராக ஆனார் என்பதை தகவல் சுதந்திர சட்டத்தின் (FOIA) கோரிக்கைகள் மூலமாக கிடைத்தவைகளை பாதுகாப்பு விசாரணை கண்டறிந்தது. 1950களின் பிற்பகுதியில் தொடங்கி, போலிஸ் முகவர்களால் நிரம்பி வழிந்த ஒரு ட்ரொட்ஸ்கிச-விரோத கட்சியாக சோசலிச தொழிலாளர் கட்சி உருமாறுவதை ஹான்சன் மேற்பார்வையிட்டார். இது 1963 ஜூனில் பப்லோவாதிகளுடனான கோட்பாடற்ற மறுஐக்கியத்திற்கு வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தது.
சோசலிச தொழிலாளர் கட்சி மற்றும் பல்வேறு பப்லோவாத போக்குகளால் பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலத்தின் விசாரணைக்கு அளிக்கப்பட்ட பதில், ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்குப் பின்னால் உள்ள உண்மையை மேலும் மேலும் மறைப்பதற்கு நிகரானதாக இருந்தது.
ஹார்ட், ஹான்சன், கோல்ட்வெல் மற்றும் ஸ்பொரோவ்ஸ்கி போன்ற நிரூபிக்கப்பட்ட முகவர்களை இவர்கள் அனைவரும் பாதுகாத்து வந்தனர். அதேவேளையில், இந்த விசாரணையை “முகவர்-சண்டை” என்று தொடர்ந்து இவர்கள் கண்டனம் செய்தனர். ஒரு பொது அறிக்கையில், ராபர்ட் ஷெல்டன் ஹார்ட்டின் கல்லறையை, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அவமதித்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அந்த நேரத்தில் முழுமையாக ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருந்ததோடு, 1991 இல் ஸ்டாலினிசத்தால் சோவியத் ஒன்றயம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து சோவியத் உளவுத் தகவல்கள் (வெனோனா ஆவணங்கள்) வெளியிடப்பட்டதன் மூலமாக மட்டுமே அவை மேலும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளன.
ஹார்ட், பிராங்க்ளின் மற்றும் பிறரும் GPU முகவர்களாக இருந்தனர் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இருந்தபோதிலும், சோசலிச தொழிலாளர் கட்சியும் ஏனைய பப்லோவாத அமைப்புகளும் பாதுகாப்பு விசாரணையின் உண்மைத்தன்மையை ஒருபோதும் ஒப்புக் கொண்டதில்லை. உண்மையில் வரலாற்றுப் பதிவுகள் மீதான அவற்றின் பொய்மைப்படுத்தலைத் தொடர்கின்றன. பப்லோவாதிகளால் அரசியல்ரீதியாக கட்டுப்படுத்தப்பட்டுவரும், கோயோகானில் உள்ள ட்ரொட்ஸ்கியின் அருங்காட்சியகத்தில் ஹார்ட்டுக்கு ஒரு நினைவுச்சின்னம் இன்றுவரை நடைமுறையில் உள்ளது. இது, இந்த நிரூபிக்கப்பட்ட உளவாளியின் நினைவைத் தொடர்ந்து பப்லோவாதிகள் கௌரவித்து வருகின்றனர் என்பதைக் காட்டுகிறது.
வரவிருக்கும் மாதங்களில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலத்தின் விசாரணை தொடங்கியதன் 50 வது ஆண்டு நிறைவை மேலும் நினைவுகூரும். இது விசாரணையால் தொகுக்கப்பட்ட பரந்த ஆதாரங்களையும் மற்றும் எடுக்கப்பட வேண்டிய தொலைநோக்கு அரசியல் முடிவுகளையும் முன்னுக்குக் கொண்டுவரும். ட்ரொட்ஸ்கிசத்திற்கும் ஸ்டாலினிசத்திற்கும் இடையிலான இருபதாம் நூற்றாண்டின் மையமான போராட்டத்துடன் நெருக்கமாக பிணைந்துள்ள இந்த மரபியம், இன்று புரட்சிகர அரசியலில் நுழையும் புதிய தலைமுறை சோசலிஸ்டுகளின் அரசியல் கல்விக்கு இன்றியமையாததாகும்.
***
1940 மே 24 தாக்குதல் குறித்த இன்னுமொரு விரிவான விபரத்திற்கு, லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும் என்ற தொகுதியில் உள்ளடங்கியுள்ள டேவிட் நோர்த்தின் “ட்ரொட்ஸ்கியின் இறுதி ஆண்டு“ என்ற கட்டுரையின் 3 ஆம் பகுதியைப் படியுங்கள்.