ஜே.வி.பி. தொழிற்சங்கத் தலைவர்கள் கம்பனியுடன் இரகசிய உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்ட பின்னர் இலங்கையில் மிச்செலின் தொழிலாளர்களின் தொழில்கள் ஆபத்தில் உள்ளன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

26 மே 2025 அன்று மிதிகம தொழிற்சாலை முன் மிச்செலின் தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய போது. [Photo: WSWS]

பிரான்சைத் தளமாக கொண்ட பன்னாட்டு நிறுவனம் இலங்கையின் மிதிகமவில் உள்ள அதன் மிச்செலின் வாகனத் டயர் தொழிற்சாலையை இந்தியாவின் சியட் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து, சனிக்கிழமை அதன் தொழிலாளர்கள் ஒரு பலமான போராட்டத்தை நடத்தினர். சியட் நிறுவனம் ஜூன் 6 முதல் கம்பனியை இயக்க உள்ளது.

இந்தத் தொழிற்சாலை 1984 இல் இருந்து செயற்பாட்டில் உள்ளது. தற்போது 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

பயஸ் டயர்கள் (bias tires) மற்றும் சிறிய ரக கட்டுமான உபகரணங்களுக்கான ரப்பர் சங்கிலிகளை உற்பத்தி செய்யும் மிதிகம டயர் பிரிவு மற்றும் வார்ப்பு உற்பத்தி ஆலைகளையும், 6 டிசம்பர் 2024 அன்று விற்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. “மூன்று ஆண்டு அனுமதிப்பத்திர காலம் முடிந்தவுடன், இந்த வகைகளிலான டயர் உற்பத்தியில் பிரபல்யமான கம்சோ வர்த்தக நாமமும் இவ்வாறு சியட் நிறுவனத்துக்கு உரிமையாகிவிடும்”, என்று ஒரு மிச்செலின் குழும அறிக்கை கூறுகின்றது.

தமக்கு என்ன நடக்கும் என உறுதியாக தெரியாத தொழிலாளர்கள் தொழில் பாதுகாப்புக் கோரி சனிக்கிழமை தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ”தொழிற்சாலையைப் பாதுகாத்திடு”, “தொழிற்சங்கம் எம்மைக் காட்டிக்கொடுத்துவிட்டது”, தொழிற்சாலை மூடப்படுமானால் நாம் வாழ்வதற்கு பொருத்தமான இழப்பீடு வழங்கு” போன்ற சுலோகங்களை எழுப்பினர்.

இந்திய நிறுவனம் முன்னர் போலவே இந்தத் தொழிற்சாலையை இயக்குமா, தங்களது சேவையை இடையில் நிறுத்தாமல் தொடந்தும் தொழில் கொடுக்குமா என ஊழியர்கள் கடுமையாக சந்தேகிக்கின்றனர். வெளியேறும் நிர்வாகம் தெளிவான பதில்களை வழங்காததோடு இந்தப் பிரச்சினைக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லாதது போல் காட்டிக்கொள்கின்றது. இந்திய நிறுவனம் ஏற்கனவே உள்ள தொழிலாளர்களை புதிதாக வேலைக்கு அமர்த்தி, அவர்களது சம்பளம் மற்றும் நிலைமைகளை குறைக்க அச்சுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள் அன்று தொழிலாளர்கள் தமது அச்சங்களைப் பற்றி கலந்துரையாட கொழும்பில் உள்ள தொழில் அலுவலகத்திற்கு தமது பிரதிநிதிகளை அனுப்பினர். நிறுவனமும் அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் தலைவர்களும் ஒரு உடன்படிக்கையை எட்டியுள்ளனர் என்பது அப்போதுதான் தொழிலாளர்களுக்குத் தெரியவந்தது.

தொழிற்சங்கம் மிசெலின் குழுமத்துடன் ஒரு உடன்படிக்கையை எட்டியுள்ளதாக தொழிலாளர் பிரதிநிதிகளுக்கு தொழில் ஆணையாளர் தெரிவித்தார். இந்த உடன்படிக்கையின் கீழ், மிச்செலின் குழுமமானது வேலைநீக்கம் செய்யப்பட்டதற்கான ஊதியமாக தொழிலாளர்களுக்கு அவர்களின் சிரேஷ்ட நிலை மற்றும் சேவை ஆண்டுகளைக் கருத்தில் கொள்ளாது, அனைவருக்கும் வெறும் 650 டொலர், அதாவது சுமார் 200,000 ரூபா இழப்பீடு வழங்கும்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அனைத்து நிறுவன ஊழியர் சங்கமானது தொழிலாளர்களின் முதுகிற்குப் பின்னால் மிக சொற்பமான இழப்பீட்டுப் பொதியை ஏற்றுக்கொண்டுள்ளதோடு தற்போது இருக்கும் தொழில் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இன்றி, பொதியை வலுக்கட்டாயமாகத் திணிக்கின்றது.

ஆச்சரியமடைந்த தொழிலாளர் பிரதிநிதிகள், அத்தகைய ஒப்பந்தத்திற்கு தாம் உடன்படவில்லை என தொழில் ஆணையாளரிடம் தெரிவித்தனர். எவ்வாறாயினும், தொழிற்சங்கத்துடன் மட்டுமே பேசுவேன் எனக் கூறிய ஆணையாளர், தொழிலாளர் பிரதிநிதிகளுடன் பேச மறுத்துவிட்டார்.

இது ஆளும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) கட்டுப்பாட்டில் உள்ள ஒரு அரசாங்கத்தின் அமைச்சரான சமரசிங்கவால் வழிநடத்தப்படும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் துரோகச் செயல் ஆகும்.

வலதுசாரி ஜே.வி.பி. / தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) அரசாங்கம் சர்வதேச நாணய நிதிய சிக்கன வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அர்ப்பணித்துக்கொண்டுள்ளதோடு இலாபங்களை அதிகப்படுத்திக்கொள்ள பாரிய சலுகைகளை வழங்குவதாக உறுதியளித்து, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை தமது நிறுவனங்களை ஸ்தாபிக்க வரவேற்றுள்ளது.

நாட்டின் ஏனைய இடங்களிலும் இதே போன்ற தாக்குதல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டு வரும் நிலையிலேயே, மிச்செலின் தொழிலாளர்களின் தொழில் மற்றும் நிலைமைகள் மீதான இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மே 19 அன்று, பிரதான ஆடை நிறுவனமான நெக்ஸ்ட், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக நிலையத்தில் உள்ள அதன் தொழிற்சாலையை திடிரென மூடி, சுமார் 1,500 தொழிலாளர்களை வேலை இழக்கச் செய்துள்ளது.

ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நெக்ஸ்ட் நிர்வாகத்துடனான ஒரு சந்திப்பிற்குப் பின்னர் அந்தத் தொழிற்சாலையை மூடியதை நியாயப்படுத்தினார். கடந்த பல ஆண்டுகளாக இந்த நிறுவனம் நட்டத்தைப் பதிவு செய்தமையால் மூடப்பட்டுள்ளது என அவர் கூறினார். வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை தேட நிறுவனம் உதவும் எனவும் அவர் பொய் கூறினார்.

நேற்றைய தினம் செய்தியாளர் சந்திப்பை நடத்திய அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் செயலாளர் ஜனக அதிகாரி, “சில திவாலான அரசியல்வாதிகள்” பாதாள உலகத்தின் உதவியுடன் மிதிகம தொழிற்சாலையில் ”150 தொழிலாளர்களின்” போராட்டத்தை ஏற்பாடு செய்ததாக குற்றம் சாட்டினார்.

இந்த தொழிலாளர்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும் தொழில்களைப் பாதுகாக்க மிச்செலின் மற்றும் சியட் நிறுவனங்களுடன் தனது தொழிற்சங்கம் ஒரு “புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்” கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் கூறினார். உண்மையில் ”இந்தப் புரிந்தணர்வு ஒப்பந்தத்தை” தயாரிக்க தொழிலாளர்களிடம் கலந்தாலோசிக்கவில்லை.

“தவறாக வழிநடத்தப்பட்ட” 150 தொழிலாளர்கள் மாத்திரமே போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பது பொய். தொழிற்சங்கம் தம்மை காட்டிக்கொடுத்ததை கண்டித்து முழுத் தொழிலாளர்களும் போராட்டத்தில் இணைந்தனர். தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்ட அதிகாரி என்பவரின் ஒலிப் பதிவை அவர்கள் கண்டித்தனர். கடந்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் ஜே.வி.பி./தே.ம.ச.க்கு வாக்களித்ததாகவும் அரசாங்கம் தங்களைக் கைவிட்டுவிடும் என எதிர்பார்க்கவில்லை எனவும் பல தொழிலாளர்கள் கூறினார்கள்.

கடந்த இரு நாட்களாக தொழில், சம்பளம் மற்றும் நிலைமைகளைப் பாதுகாக்க தமது சொந்த நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டியதன் அவசியத்தை தெளிவுபடுத்தி இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்கள் மத்தியில் தலையீடு செய்தது.

மிச்செலின் மற்றும் நெக்ஸ்ட் தொழிற்சாலைகளில் உள்ள தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தினதும் பெருநிறுவனங்களதும் கருவியாக செயற்படுகின்றன என்பது அனுபவ ரீதியாக தெளிவாகியுள்ளதால், அத்தகைய நடவடிக்கை குழுக்கள் சுயாதீனமானவையாக இருக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியம், முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அவற்றின் அரசியல் பிரதிநிதியான ஜே.வி.பி./தே.ம.ச. நிர்வாகத்திற்கும் எதிராக, அடிப்படை உரிமைகளுக்கான ஒரு பொதுவான போராட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் கம்பனிகள் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதே இந்த நடவடிக்கை குழுக்களின் இலக்காக இருக்க வேண்டும்.

இந்தக் கட்டுரையுடன் சேர்த்து நேற்று மிதிகம தொழிலாளர்கள் முன் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினர் ஆற்றிய உரையையும் விரைவில் பிரசுரிப்போம்.

Loading