மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
உலக சோசலிச வலைத் தளத்தை ஆதரிக்குமாறு நான் இன்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
உலகெங்கிலும், முதலாளித்துவ ஆளும் வர்க்கம் அரசியல் பிற்போக்குத்தனத்தின் மிக மோசமான வடிவங்களை மீண்டும் புதுப்பித்து வருகிறது. இரண்டாம் உலகப் போர் முடிந்து எண்பது ஆண்டுகளுக்குப் பின்னர், அந்த வரலாற்றுக் காலகட்டத்தின் பயங்கரங்கள் —போர், பாசிசம் மற்றும் இனப்படுகொலை— மீண்டுமொருமுறை மனிதகுலத்தை காட்டுமிராண்டித்தனத்திற்குள் தள்ளும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.
அரசியல் பிற்போக்குத்தனத்தின் அனைத்துக் காலகட்டங்களின் இன்றியமையாத சிறப்பியல்பு என்னவென்றால், அரசாங்கங்களும் அவற்றின் ஊடக கூட்டாளிகளும் தங்கள் குற்றங்களை நியாயப்படுத்தவும் மக்களை திசைதிருப்பவும் பயன்படுத்தும் பெரிய பொய்யின் முறையை நாடுவதாகும்.
பெரிய பொய் என்பது இந்த அல்லது அந்த அரசியல்வாதி வழக்கமாக கூறும் பொய்யுரை அல்ல. மாறாக, அது தர்க்கரீதியான மறுப்பை மீறும் அளவுக்கு பிரமாண்டமாக, யதார்த்தத்தினை மிகப்பெரியளவிற்கு பொய்மைப்படுத்துவதாகும். அதன் சக்தி வஞ்சகத்தின் அரக்கத்தனமான அளவில் உள்ளது. பெரிய பொய் என்பது நன்கு கட்டமைக்கப்பட்ட வாதங்களால் நம்ப வைக்காது. அது தனது துணிச்சலான பொய்மையின் மூலம் பொதுமக்களை மூழ்கடிக்க முயல்கிறது.
20 ஆம் நூற்றாண்டில் அரசியல் பிற்போக்குத்தனம் மற்றும் எதிர்ப்புரட்சிக்கான ஒரு மைய ஆயுதமாக பெரிய பொய் வெளிப்பட்டது. ரஷ்யாவில் இருந்த ஜாரிச ஆட்சி, சோசலிச இயக்கத்தின் எழுச்சியைக் கண்டு மிரண்டு, சியோனின் மூப்பர்களின் நெறிமுறைகள் (Protocols of the Elders of Zion) என்ற யூத எதிர்ப்பு ஜோடிக்கப்பட்ட நூலை உருவாக்கியது.
1917 ரஸ்யாவில், போல்ஷிவிக்குகளை மதிப்பிழக்கச் செய்யவும், எழுச்சி பெறும் புரட்சிகர அலையை நிறுத்தவும் பெரும்பிரயத்தனம் செய்த முதலாளித்துவ இடைக்கால அரசாங்கம், லெனின் “ஜேர்மனியிடம் தங்கத்தை” பெற்றுள்ளார் என்ற கட்டுக்கதையை இட்டுக்கட்டியது.
முதலாம் உலகப் போருக்குப் பின்னர், ஜேர்மன் ஆளும் வர்க்கம் தனது இராணுவத் தோல்விக்கு, சோசலிஸ்டுகள் “முதுகில் குத்தியதே” காரணம் என்று அவர்கள் மீது குற்றஞ்சாட்டியது. ஹிட்லரின் நாஜி ஆட்சி, சீயோனின் மூப்பர்களின் நெறிமுறை புத்தகத்தை புதுப்பித்து, யூத-போல்ஷிவிக் சதிக்கு எதிராக ஜேர்மனியைப் பாதுகாப்பதாக பிரகடனம் செய்தது.
சோவியத் ஒன்றியத்தில் இருந்த ஸ்டாலினிச ஆட்சி, மாஸ்கோ விசாரணைகளை அரங்கேற்றியதன் மூலமும், போல்ஷிவிக் கட்சியின் தலைவர்களை —முதலும் முக்கியமுமாக லியோன் ட்ரொட்ஸ்கியை— பாசிசம் மற்றும் உலக ஏகாதிபத்தியத்தின் துரோக முகவர்களாக சித்தரித்ததன் மூலமாக, 1917 அக்டோபரில் இடம்பெற்ற சோசலிசப் புரட்சியை ஸ்டாலினிசம் காட்டிக்கொடுத்ததை நியாயப்படுத்த முயன்றது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில், அமெரிக்க ஆளும் வர்க்கம் “உலக கம்யூனிச சதி” என்றழைக்கப்படுவதற்கு எதிராக, செனட்டர் ஜோ மெக்கார்த்தியின் தலைமையில் சூனிய வேட்டை சிலுவைப் போரைத் தொடங்கியது. இது பனிப்போர் மற்றும் உலகெங்கிலும் உள்ள அமெரிக்க இராணுவத்தினதும், சிஐஏ யின் நடவடிக்கைகளுக்கும், ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான உள்நாட்டு அரசியல் எதிர்ப்பை ஒடுக்குவதற்கும், அரசியல் மற்றும் சித்தாந்த எரிபொருளை வழங்கியது.
“பயங்கரவாதத்திற்கு எதிரான” தனது மோசடிப் போரை நியாயப்படுத்த, புஷ் நிர்வாகம் “பாரிய பேரழிவுகரமான ஆயுதங்களின்” உடனடி அச்சுறுத்தல் என்ற இட்டுக்கட்டலை உருவாக்கியதன் மூலம் 21 ஆம் நூற்றாண்டு தொடங்கியது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான படையெடுப்புகள் மட்டுமல்லாமல், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் உருவாக்கம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களின் அதிகரிப்பு ஆகியவை டொனால்ட் ட்ரம்பின் இன்றைய சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு அடித்தளமிட்டன.
கடந்த ஐந்து ஆண்டுகள், பெரும் பொய்யின் ஒரு புதிய மற்றும் அரசியல்ரீதியில் கொடிய மீளெழுச்சியைக் கண்டுள்ளன.
ஒரு தொற்றுநோயின் அபாயம் குறித்த விஞ்ஞானிகளின் எச்சரிக்கையை கவனிக்கத் தவறியதற்கும், SARS-CoV-2 வைரஸ் பரவுவதற்கு எதிராக பொதுமக்களைப் பாதுகாக்க அத்தியாவசிய பொது சுகாதார நடவடிக்கைகளை எடுக்க மறுத்ததற்கும் தங்களின் பொறுப்பைத் தட்டிக்கழித்து, அரசாங்கமும் ஊடகங்களும் வூஹான் ஆய்வக கசிவு என்ற பொய்யை —அதாவது, ஒரு சீன ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு வைரஸால் இந்த தொற்றுநோய் ஏற்பட்டது என்ற முற்றிலும் மோசடியான கூற்றை— ஊக்குவித்துள்ளன. இந்தப் பொய் சீன-விரோத வெறுப்பைத் தூண்டுவதற்கும், போருக்கான தயாரிப்புகளைத் தீவிரப்படுத்துவதற்கும் மட்டும் சேவையாற்றவில்லை. மாறாக, இது மருத்துவ அறிவியலையும் தடுப்பூசிகளின் பயன்பாட்டையும் இழிவுபடுத்த பயன்படுத்தப்படுகிறது.
2020 களின் இரண்டாவது பெரிய பொய் உக்ரேனில் ஒரு “தூண்டுதலற்ற போர்” என்ற கூற்றாகும் — அதாவது, பிப்ரவரி 2022 இல் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பானது, முற்றிலும் விளாடிமிர் புட்டினின் தீய தற்பெருமையின் விளைபொருளாக இருந்ததே ஒழிய, இதற்கு உக்ரேனோ அல்லது நேட்டோவோ சிறிதளவும் பொறுப்பில்லை என்ற பொய்யாகும்.
1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதிலிருந்து, ரஷ்யாவின் எல்லைகள் வரை, கிழக்கே 1,300 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு நேட்டோவின் விரிவாக்கம் மற்றும் 2014 இல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உக்ரேனிய அரசாங்கத்தை தூக்கியெறிந்ததில் அமெரிக்கா ஆற்றிய மையப் பங்கு குறித்த எந்தவொரு குறிப்பையும் நீக்க வேண்டிய கட்டாயம் இந்த இட்டுக்கட்டப்பட்ட கதைக்கு ஏற்பட்டது. இந்தப் பெரிய பொய்யின் மற்றொரு கூறு, நாஜிக்களுடன் ஒத்துழைத்த பாசிஸ்டுகளை தேசிய ஹீரோக்களாக உயர்த்தி, போக்டன் சிரோடியுக் போன்ற போருக்கு எதிரான சோசலிஸ்டுக்களை சிறையில் அடைக்கும் உக்ரேனிய ஆட்சியை ஒரு செழிப்பான ஜனநாயகமாக சித்தரிப்பது ஆகும்.
மூன்றாவது மிகப்பெரிய பொய், காஸா மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போருக்கான எதிர்ப்பு என்பது “யூத-எதிர்ப்புவாதம்” என்ற கூற்றாகும். இந்தப் பொய் சீயோனின் மூப்பர்களின் நெறிமுறைகளுக்குப் பிறகு யூத மக்களுக்கு எதிரான மிக மோசமான அவதூறு ஆகும். இது, ஒரு யூதரின் வரையறுக்கும் பண்பு என்பது, பாலஸ்தீனியர்களின் படுகொலைக்கு அவர் ஆதரவளிப்பதுதான் என்று அவர் எல்லா உள்நோக்கங்களுக்காக வலியுறுத்தப்படுகிறார். இதன் மூலம், யூதர்களின் அடையாளம் இஸ்ரேலிய அரசின் கொள்கைகளாலும் அதன் பாசிச சியோனிச சித்தாந்தவாதிகளாலும் வரையறுக்கப்படுகிறது. இங்கு இனப்படுகொலையை எதிர்க்கும் எவரும், குறிப்பாக யூதர்கள் உட்பட, யூத எதிர்ப்புவாதிகள் ஆவர்.
இது 1984 ஆம் ஆண்டு என்ற நாவலில், “நியூஸ்பீக்” பற்றிய தனது சித்தரிப்பில் ஜோர்ஜ் ஆர்வெல் கற்பனை செய்த எதையும் விட மிக அதிகமான அளவில் “சொற்பொருள் தலைகீழ் மாற்றத்தின்” —அதாவது, ஒரு வார்த்தையை அதன் உண்மையான அர்த்தத்திற்கு எதிராக கற்பிப்பது— ஒரு நிகழ்வாகும்.
பெரிய பொய் என்பது அரசியல்வாதிகளின் ஒழுக்கக்கேட்டின் விளைவாக மட்டும் உருவாகவில்லை. இது ஆளும் வர்க்கத்தின் நலன்களின் புறநிலை வெளிப்பாடாகவும், அந்த நலன்களுக்கும் ஒட்டுமொத்த சமூகத்தின் தேவைகளுக்கும் இடையிலான முரண்பாடுகளின் வெளிப்பாடாகவும் உள்ளது. பொய்களின் பரிமாணம், சமூக முரண்பாடுகளின் ஆழம் மற்றும் தீவிரத்தாலும், புரட்சிகர வர்க்க மோதல் வெடிப்பதற்கான சாத்தியக்கூறு மற்றும் அதன் விளைவாக ஏற்படும் ஆற்றலாலும் தீர்மானிக்கப்படுகிறது, இதனை ஆளும் வர்க்கங்கள் அச்சத்துடன் அங்கீகரிக்கிறது.
பெரிய பொய்யின் இன்றைய யுகத்தில், வரலாற்று மற்றும் அரசியல் உண்மையைப் பாதுகாப்பதை விட முக்கியமானது வேறெதுவும் இல்லை. அதனால் தான், உலக சோசலிச வலைத் தளத்தின் தினசரி வெளியீடு மிகப்பெரும் அவசரத்தன்மையைப் பெறுகிறது. மார்க்சிசத்தின் விஞ்ஞானபூர்வ அடித்தளங்களில் வேரூன்றிய, ஒரு ஒட்டுமொத்த நூற்றாண்டின் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் வரலாற்று அனுபவங்களை உட்கிரகித்துக் கொண்ட, ஒரு சோசலிச அரசியல் முன்னோக்கைக் கொண்டு ஆயுதபாணியாக்கப்பட்ட உலக சோசலிச வலைத் தளம், பெரும் பொய்களை அம்பலப்படுத்துவதிலும் உண்மையைப் பாதுகாப்பதிலும் சளைக்காமல் ஈடுபட்டுள்ளது.
ட்ரொட்ஸ்கி தனது காலத்தின் பெரிய பொய்களுக்கு பதிலளிக்கும் விதமாக பின்வருமாறு எழுதினார்:
“புரட்சி சமூகப் பொய்யை வெடிக்கச் செய்கிறது. புரட்சி உண்மையைப் பேசுகிறது. புரட்சி பொருட்களுக்கும் சமூக உறவுகளுக்கும் அவற்றின் உண்மையான பெயரைக் கொடுப்பதன் மூலம் தொடங்குகிறது”.
இந்த வார்த்தைகள் உலக சோசலிச வலைத் தளத்தை வழிநடத்தும் கோட்பாடுகளை வரையறுக்கின்றன.
உலக சோசலிச வலைத் தளத்தின் பணிகளை தொடர்வதற்கும், அதனை அபிவிருத்தி செய்வதற்கும் உங்கள் ஆதரவு அவசியமாகும். போர், பாசிசம், இனப்படுகொலை மற்றும் பெரும் பொய் ஆட்சிகளுக்கு எதிராக, சோசலிச மற்றும் புரட்சிகர எதிர்ப்பைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
உலக சோசலிச வலைத் தளத்திற்கு உங்களால் முடிந்த மிகப்பெரிய நன்கொடையை இன்றே செய்யுங்கள். அவ்வாறு செய்ய, wsws.org/donate க்குச் செல்லவும். நன்றி.