முன்னோக்கு

ஐரோப்பிய மீள்ஆயுதமயமாக்கலை எதிர்ப்போம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

MLRS M270 ஏவு தளத்திலிருந்து ATACMS நீண்ட தூர ஏவுகணை ஏவப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகள் கூட்டாக நூறு பில்லியன் கணக்கான யூரோக்களை, இராணுவ செலவினங்களுக்காக, ஒரு பைத்தியக்காரத்தனமான வெறித்தனத்திற்குள் மூழ்கடித்து வருகின்றன. சமூக நலத்திட்டங்கள் மற்றும் பணிகளில் இருந்து ஆதார வளங்களை பாரியளவில் போர் எந்திரத்திற்குள் திருப்பிவிடுவதானது ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளை தொழிலாள வர்க்கத்துடன் ஒரு மோதல் பாதையில் கொண்டு செல்கிறது என்பதை காட்டுகிறது.

கடந்த ஞாயிறன்று, ஜேர்மன் ஆயுதப்படைகளின் தளபதி கார்ஸ்டென் ப்ரூயர், 2029 க்குள் ஜேர்மன் இராணுவம் முழுமையாக நவீன சாதனங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்திற்காக, பேர்லின் ஒதுக்கிய ட்ரில்லியன் யூரோ நிதிகள் ஆளில்லா விமானப் போர்முறை, நீண்டதூரம் செல்லும் ஏவுகணைகள் மற்றும் விண்வெளி போர்முறை திறன்களுக்காக செலவிடப்படும். கடந்த திங்களன்று, ஜேர்மன் சான்சிலர் பிரெட்ரிக் மேர்ஸ், இந்த நிதிகள் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதை தெளிவுபடுத்தி, ரஷ்யாவை இலக்காகக் கொண்ட ஒரு புதிய இராணுவ விரிவாக்கத்தை அறிவித்ததுடன், ஐரோப்பாவில் ஒரு முழுவீச்சிலான போரைக் கட்டவிழ்த்து விட அச்சுறுத்தினார். 

ரஷ்யா முழுவதும் தாக்குதல் நடத்துவதற்காக பேர்லின் இப்போது உக்ரேனுக்கு அதன் டாரஸ் (Taurus) குரூஸ் ஏவுகணை போன்ற நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கும் என்று மறைமுகமாக மேர்ஸ் பின்வருமாறு குறிப்பிட்டார்:

உக்ரேனுக்கு வழங்கப்படும் ஆயுதங்களின் வரம்பில் இனி எந்த வரம்புகளும் இல்லை. பிரிட்டிஷ், பிரெஞ்சு அல்லது எங்களுக்கு அல்ல. அல்லது அமெரிக்கர்களுக்கும் அல்ல.

ஜேர்மனி மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகளிடம் இருந்து வரும் ஏவுகணைகள் “ரஷ்ய மண்ணில் உள்ள இராணுவ நிலைகளுக்கு எதிராக” ஏவப்படும் என்று மேர்ஸ் வாக்குறுதியளித்தார். இது ஜேர்மனியில் உள்ள இலக்குகளை நோக்கி ரஷ்யாவின் ஏவுகணைகள் ஏவப்படும் அபாயத்திற்கு தள்ளுகிறது. மேலும், இது கட்டுப்படுத்த முடியாத அளவிலான போர் விரிவாக்கத்தையும் தூண்டுகிறது.

எவ்வாறிருப்பினும், ஜேர்மனியின் கொள்கை என்பது ஒட்டுமொத்த ஐரோப்பிய முதலாளித்துவத்தையும் பற்றிக்கொள்ளும் ஒரு போர்க் காய்ச்சலின் மிகவும் ஈவிரக்கமற்ற வெளிப்பாடு மட்டுமே ஆகும். 2014 இல் இருந்து 2024 வரையில், ஐரோப்பிய வருடாந்தர இராணுவ செலவுகள் 147 இருந்து 326 பில்லியன் யூரோவாக இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்து, 2022 முதல் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. ஜேர்மனியின் இராணுவ செலவுகள் 2024 இல் 28 சதவீதம் உயர்ந்து 88.5 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. போலந்தின் இராணுவ செலவுகள் 31 சதவீதம் அதிகரித்து 38 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. அதேவேளையில், பிரான்ஸ் அதன் இராணுவ செலவுகளை 2030 க்குள் கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கி 100 பில்லியன் யூரோவாக உயர்த்த சூளுரைத்துள்ளது.

இந்த மீள்ஆயுதமயமாக்கல் பெரும்பாலும் ஐரோப்பிய மக்களின் முதுகுக்குப் பின்னால் தொடர்கிறது. இதன் செலவுகள் அல்லது இலக்குகள் குறித்து பொதுமக்களுக்கு எந்த விளக்கமும் வழங்கப்படுவதில்லை. கடந்த வாரம், ஐரோப்பிய ஒன்றியம் (EU) மார்ச் மாதத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட 800 பில்லியன் யூரோக்கள், மறுஆயுதமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக ஐரோப்பாவிற்கான பாதுகாப்பு நடவடிக்கை (SAFE) திட்டத்தை செயல்படுத்தியது. இது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் பிரிட்டனுக்கும் கூட்டு ஐரோப்பிய பாதுகாப்புத் திட்டங்களுக்கு 150 பில்லியன் யூரோ கடன்களை வழங்குகிறது. இந்த முடிவு பெரிதும் அறிவிக்கப்படாமலேயே எடுக்கப்பட்டது என்றாலும், ஐரோப்பிய அரசுகள் வரிகளை உயர்த்துவதன் மூலமாகவோ அல்லது சமூக நலத் திட்டங்களை வெட்டுவதன் மூலமாகவோ இறுதியில் 150 பில்லியன் யூரோக்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும் என்பதே இதன் அர்த்தமாகும்.

இந்த ஆண்டு ட்ரம்ப் அதிகாரத்திற்கு வந்ததற்கு ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் பிரதிபலிப்பு, ஐரோப்பாவின் நாஜி ஆட்சிக்குப் பிறகு காணப்படாத அளவில் இராணுவவாதத்தின் வெடிப்பாக இருந்தது. ட்ரம்ப் உக்ரேனுக்கான இராணுவ உதவியை நிறுத்தி வைக்கவும் ஐரோப்பாவுக்கான அமெரிக்க பாதுகாப்பு உத்தரவாதங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் அச்சுறுத்திய நிலையில், அணு ஆயுதமேந்திய ரஷ்யாவுக்கு எதிராக, ஐரோப்பாவில் பெரிய அளவிலான போர்களை சுயாதீனமாக நடத்தும் திறனை வளர்க்க ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய நேட்டோ “கூட்டாளிகளும்” உலகின் பிரதான சக்திகளுக்கு இடையே கட்டவிழ்ந்து வருகின்ற சந்தைகள் மற்றும் மூலோபாய அனுகூலங்களுக்கான இழுபறியில் போட்டியாளர்களாக உள்ளனர். உக்ரேன் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இருந்து ஐரோப்பாவை விலக்கி வைக்க ட்ரம்ப் முயன்ற பின்னர், வாஷிங்டனுக்கு 500 பில்லியன் டாலர்கள் பெறுமதியான அரிய மண் தாதுக்களை உக்ரேன் வழங்கவேண்டும் என்று கோரிய பிறகும், பிரிட்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரேனிய கனிமங்களை கொள்ளையடிக்க போட்டித் திட்டங்களை முன்னெடுத்தன. ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் ஸ்டீபன் செஜோர்ன், ஐரோப்பாவிற்குத் தேவையான 30 முக்கியமான தாதுப் பொருட்களில் 21 ஐ உக்ரேன் வழங்கும் ஒரு வெற்றி-வெற்றி கூட்டாண்மைக்கு அழைப்பு விடுத்தார். 

ஐரோப்பாவின் மீள்ஆயுதமயமாக்கல் ரஷ்யாவுக்கு எதிராகவோ அல்லது ட்ரம்புக்கு எதிராகவோ ஜனநாயகத்தைப் பாதுகாக்கவில்லை. மாறாக இது, அதிகரித்தளவில் ஆக்ரோஷமான பாசிசக் குணாம்சத்தை எடுக்கிறது. ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் சில அடுக்குகள், பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான உலகப் போரில் தாங்கள் ஈடுபடவில்லை என்ற அரசியல் கட்டுக்கதையை நிராகரித்து வருகின்றன, அல்லது தங்கள் பொருளாதார மற்றும் இராணுவ நலன்களுக்கு சேவை செய்ய இனப்படுகொலையைப் பயன்படுத்துவதை அரசியல் கட்டுக்கதை என்று ஒதுக்கித் தள்ளுகின்றன.

கடந்த ஞாயிறன்று ஐக்கிய இராச்சியத்தின் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் கெமி படேனோக் (Kemi Badenoch) ஸ்கை நியூஸில் காஸாவில் இடம்பெற்றுவரும் இஸ்ரேலிய இனப்படுகொலையை பிரிட்டனுக்கு நன்மை பயக்கும் என்று கூறி ஆணவத்துடன் பாதுகாத்தார். ஏனெனில் அது ஈரானையும் ஹமாஸையும் இலக்கு கொண்டுள்ளது. அவர் பின்வருமாறு கூறினார்:

ரஷ்யாவுக்கு எதிராக மேற்கு ஐரோப்பாவின் சார்பாக உக்ரேன் போரிடுவதைப் போலவே, பிரித்தானியாவின் சார்பாக இஸ்ரேல் ஒரு மறைமுகப் போரை நடத்தி வருகிறது. 

ஐரோப்பிய மீள்ஆயுதமயமாக்கலுக்கு நிதியாதாரமளிக்க இப்போது தயாரிப்பு செய்து வரும் சமூக வெட்டுக்களைப் போலவே, காஸா இனப்படுகொலையும் தொழிலாளர்கள் மத்தியில் ஆழ்ந்த கோபத்தைத் தூண்டி உள்ளது. வெடிப்புத்தன்மை நிறைந்த வர்க்கப் போராட்டங்கள் நிகழ்ச்சிநிரலில் உள்ளன. எவ்வாறிருப்பினும், ஒரு மூன்றாம் உலகப் போருக்குள் மூழ்குவதைத் தடுக்க, ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிற்குள்ளும் நடுத்தர வர்க்க போலி-இடது கட்சிகள் மற்றும் அவற்றுடன் இணைந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் பிற்போக்குத்தனமான சூழ்ச்சிகளைக் கொண்டு ஒரு தீர்க்கமான அரசியல் கணக்கீடு செய்யப்பட வேண்டும்.

ஸ்ராலினிசத்திலிருந்தும், ட்ரொட்ஸ்கிசத்திலிருந்தும் வந்த குட்டி-முதலாளித்துவ ஓடுகாலிகளில் இருந்து வளர்ந்த இந்த சக்திகள், போரை நடத்துவதிலும் மற்றும் தொழிலாள வர்க்க எதிர்ப்பைத் தடுப்பதிலும் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்றன. போர்வெறியர் மேர்ஸை அதிகாரத்திற்குக் கொண்டுவர ஜேர்மன் இடது கட்சி நாடாளுமன்றத்தில் தீர்மானகரமான வாக்குகளைக் கொண்டு வந்த அதேவேளையில், ஜோன்-லூக் மெலோன்சோன் தலைமையிலான பிரான்சின் புதிய மக்கள் முன்னணி, கடந்த ஆண்டு அதன் தேர்தல் வேலைத்திட்டத்தில் உக்ரேனுக்கு “அமைதி காக்கும் படையினராக” பிரெஞ்சு துருப்புக்களை அனுப்பும் மக்ரோனின் திட்டத்தை பொறித்தது. ஸ்பானிய கட்சியான பொடெமோஸ் (இப்போது சுமர்), ஸ்பெயினின் வரலாற்றிலேயே மிகப்பெரும் இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கை ஏற்கும் அரசாங்கங்களில் பங்கெடுத்து வருகிறது.

அனைத்திற்கும் மேலாக, இந்தக் கட்சிகளும் அவற்றின் கூட்டாளிகளும், ஐரோப்பாவில் காஸா இனப்படுகொலை மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களை, கொள்கையை மாற்றுமாறு ஏகாதிபத்திய அரசாங்கங்களுக்கு முறையிடும் திவாலான முன்னோக்குடன் முடிச்சுப் போட வேலை செய்து வருகின்றன.

இந்த முன்னோக்கின் நாற்றம்பிடித்த தன்மை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாரிய ஐரோப்பிய வேலைநிறுத்த இயக்கத்தில் அவர்கள் வகித்த பாத்திரத்தில் அம்பலப்பட்டது. ஜேர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், துருக்கி மற்றும் ஐரோப்பா எங்கிலும் பணவீக்கம் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்த நிலையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) ஐரோப்பிய பிரிவுகள் வளர்ந்துவரும் போராட்ட இயக்கம் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டன. “பாரிய வேலைநிறுத்த இயக்கமும், ஐரோப்பாவில் போரும் புரட்சிகர நெருக்கடியும்” என்று தலைப்பிட்ட அந்த அறிக்கையில் அது பின்வருமாறு விளக்கியது:

ஒரு முதலாளித்துவ அரசாங்கத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்படக்கூடிய தொடர்ச்சியான தேசிய தொழிற்சங்க போராட்டங்கள் அல்ல கட்டவிழ்ந்து வருகின்றன. மாறாக, ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்கள் இதே போன்ற கோரிக்கைகளை எழுப்பி வருவதோடு, மதிப்பிழந்த மற்றும் பரவலாக வெறுக்கப்படும் அரசாங்கங்களின் பொலிஸ் ஒடுக்குமுறை மற்றும் சட்ட அச்சுறுத்தல்களைச் சந்திக்கின்றனர் என்பதால், இதுவொரு சர்வதேச அரசியல் போராட்டமாக கட்டவிழ்ந்து வருகின்றது.... 

ஐரோப்பா முழுவதிலும் புறநிலைரீதியாக ஒரு புரட்சிகரமான சூழ்நிலை உருவெடுத்து வருகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் முதலாம் உலகப் போர் வெடித்த போது இருந்ததைப் போலவே, இதற்கான மாற்றீடுகள் அப்பட்டமாக முன்வைக்கப்படுகின்றன. ஒன்று, முதலாளித்துவ வர்க்கம் ஐரோப்பாவையும் உலகையும் அணுஆயுதமேந்திய அரசுகளுக்கு இடையிலான ஓர் உலகளாவிய போருக்குள் மூழ்கடிக்கும். அல்லது தொழிலாள வர்க்கம் போர்வெறி கொண்ட ஆளும் உயரடுக்குகளின் கரங்களில் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்.

எவ்வாறிருப்பினும், வேலைநிறுத்தங்கள் ஒரேமாதிரியாக விற்கப்பட்டன அல்லது அரசியல்ரீதியாக ஒடுக்கப்பட்டன. அதிகரித்த இராணுவ செலவினங்களுக்கு நிதியாதாரம் அளிப்பதற்காக மக்கள் விரோத ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக, பிரான்சில் நடந்த பாரிய வேலைநிறுத்தங்களை விட இது வேறெங்கும் இந்தளவுக்கு அப்பட்டமாக இருந்ததில்லை.

மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். பிரான்சில் மே 1968 பொது வேலைநிறுத்தத்திற்குப் பிந்தைய மிகப்பெரிய அரசியல் நெருக்கடியாக தேசியளவில் கலகங்கள் வெடித்தன. ஆயினும் மக்ரோனை வீழ்த்துவதற்கான ஒரு அரசியல் போராட்டத்திற்கான எந்தவொரு அழைப்பையும் மெலோன்சோன் தவிர்த்தார். பெருவாரியான மக்களின் எதிர்ப்பையும் மீறி வெட்டுக்கள் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் ஒட்டுமொத்தமாக வேலைநிறுத்தங்களையும் போராட்டங்களையும் முடிவுக்குக் கொண்டு வந்தன. இவ்விதத்தில் அவை கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா எங்கிலும் இராணுவ செலவுகளில் சாதனையளவிலான அதிகரிப்புகளுக்கு களம் அமைத்துக் கொடுத்தன. 

ஐரோப்பிய ஏகாதிபத்தியம் இன்னும் பிரம்மாண்டமான மீள்ஆயுதமயமாக்கல் முனைவை தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில், இதேபோன்ற இயக்கங்கள் இன்று திட்டநிரலில் உள்ளன. ஆனால், இதிலிருந்து படிப்பினைகள் பெறப்பட வேண்டும். வர்க்கப் போராட்டம் மீதான போலி-இடது சக்திகளின் பிடி உடைக்கப்பட வேண்டும். இதன் அர்த்தம், முதலாவதாக, அதிகாரத்துவத்தின் நாசவேலையில் இருந்து சுயாதீனமாக, சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டங்களை ஒருங்கிணைக்கவும், இனப்படுகொலை, பாசிசம் மற்றும் போருக்கு எதிராக ஒரு பரந்த, தொடர்ச்சியான அணிதிரட்டலைக் கட்டியெழுப்பவும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சாமானிய தொழிலாளர் நடவடிக்கை குழுக்களைக் கட்டியெழுப்புவதும் அவசியமாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, அத்தகைய போராட்டம் இறுதியில் உலக சோசலிசப் புரட்சியில் தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றுவதை அவசியமாக்குகிறது என்ற உணர்வை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஊட்டமளிக்கும் ஒரு அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதாகும். அத்தகைய இயக்கத்தின் உயிர்நாடி, ஸ்ராலினிசம் மற்றும் அனைத்து வகையான தேசிய சந்தர்ப்பவாதத்திற்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சமரசமற்ற எதிர்ப்பும், ட்ரொட்ஸ்கிசத்தைப் பாதுகாப்பதில் அதன் முறிவற்ற தொடர்ச்சியும் ஆகும்.

Loading