இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நண்பர்கள் மற்றும் எதிரிகள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள சுங்க வரிப் போர், அமெரிக்கா உட்பட ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதார, அரசியல் நெருக்கடியை ஆழப்படுத்தவுள்ளது. சீனா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பழிவாங்கும் வகையில் அமெரிக்க இறக்குமதிகளுக்கு சுங்க வரியை அதிகரிப்பதுடன் பதிலளித்துள்ளன.
ட்ரம்பின் வரிப் போர், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்களின் வேலைகள், ஊதியங்கள் மற்றும் நிலைமைகள் மீது கடுமையான தாக்குதல்களையும், வர்க்கப் போராட்டம் தீவிரமடைவதையும், பேரழிவு தரும் ஏகாதிபத்திய மோதல்களுக்குள் தள்ளப்படுவதையும் விளைவாக்கும்.
புதன்கிழமை, ட்ரம்ப் 75 நாடுகள் மீதான வரி அதிகரிப்பை 90 நாட்களுக்கு 'இடைநிறுத்தம்' செய்வதாக அறிவித்த அதே நேரம், சீனப் பொருட்களின் மீதான தனது வரிகளை 145 சதவீதமாக உயர்த்தினார். இந்த அறிவிப்புக்குப் பின்னர் அல்லது 90 நாட்கள் கடந்த பின்னர் அமெரிக்க ஜனாதிபதி என்ன திட்டமிடுகிறார் என்பது முற்றிலும் கணிக்க முடியாததாக உள்ளது.
இலங்கை மிகப்பெரிய 44 சதவீத வரி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி திசாநாயக்கவின் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கமும் இலங்கையின் ஆளும் உயரடுக்கும், இந்த அதிகரிப்பால் அதிர்ச்சியடைந்துள்ளதோடு மிகவும் அவநம்பிக்கையுடன் பிரதிபலித்துள்ளன. நேற்று அவர்கள் ட்ரம்பின் இடைநிறுத்த அறிவிப்புக்குப் பின்னர் நிம்மதிப் பெருமூச்சு விட்ட போதிலும், அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து ஆழ்ந்த கவலையுடன் உள்ளனர்.
சுங்க வரி அதிகரிப்பால், இலங்கை முதலாளித்துவ வர்க்கமும், தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கொடூரமான பிணை எடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி வரும் அதன் அரசாங்கமும் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியின் அளவை மேலும் அம்பலப்படுத்தியுள்ளது.
தற்போது தீவின் மொத்த ஏற்றுமதியில் 25 சதவீதத்தைப் பெறுகின்ற அமெரிக்காவே, இலங்கை ஏற்றுமதிகளுக்கான மிகப்பெரிய இலக்கு ஆகும். இலங்கையின் மொத்த ஆண்டு ஏற்றுமதி வருமானமான 18 பில்லியன் அமெரிக்க டாலர்களில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 3 பில்லியன் டாலர்கள் மதிப்புடையதாகும். அதே வேளை, கடந்த ஆண்டு இலங்கைக்கான அமெரிக்க ஏற்றுமதி 356 மில்லியன் டாலர்கள் மட்டுமே ஆகும்.
அமெரிக்காவிற்கான ஆடை ஏற்றுமதி மூலம் இலங்கை ஆண்டுதோறும் 1.5 பில்லியன் டாலர்களை ஈட்டும் நிலையில், அமெரிக்க வரி 44 சதவீதமாக உயர்ந்தால் அது ஆண்டுதோறும் 600 மில்லியன் டாலர்களுக்கு மேல் இழக்க நேரிடும் என்று ஆடைத் துறை மதிப்பிடுகிறது.
அமெரிக்காவிற்கான இலங்கை ஆடை ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டால், ஏராளமான தொழிற்சாலை மூடல்களும், பாரிய வேலை இழப்புகளும் ஏற்படும். இந்தத் துறையில் 350,000 தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள அதே நேரம், சுமார் 600,000 பேர் மறைமுகமாக வேலை செய்கிறார்கள்.
ஆடை நிறுவனங்கள், ஏற்கனவே துணை ஒப்பந்ததாரர்களை அவர்களின் செலவுகளை 40 சதவீதம் குறைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளமை, பெருந்தொகை வேலை நீக்கங்கள், ஊதிய வெட்டுக்கள் மற்றும் உற்பத்தித்திறன் அதிகரிப்புக்கான கோரிக்கைகளை சமிக்ஞை செய்துள்ளது. சில ஆடை நிறுவனங்கள் ஏற்கனவே செலவுகளைக் குறைக்க உற்பத்தியை வெளியாருக்கு கொடுத்து வருகின்றன.
இலங்கை, பிளாஸ்டிக், இரப்பர் பொருட்கள், உணவு, நகைகள் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களையும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது. இவை அனைத்தும் மீளாய்வு செய்யப்படுகின்றன. இந்தத் தொழில்களில் உழைப்பவர்களும் தங்கள் வேலைகளில் இதேபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்வர்.
திங்களன்று, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) அனைத்து பங்கு விலைக் குறியீடானது 227 பில்லியன் ரூபாய் இழப்பைச் சந்தித்தது, இது ஏப்ரல் 2 இல் இருந்து ஏற்பட்ட கிட்டத்தட்ட 500 பில்லியன் ரூபாய் (1.68 பில்லியன் டாலர்) இழப்புக்கும் மேலாக ஏற்பட்ட நட்டமாகும். வரி அதிகரிப்பின் தற்காலிக இடைநிறுத்தம் பற்றி கேள்விப்பட்ட பின்னர் நேற்று பங்குச் சந்தை உயர்ந்தது.
இலங்கையின் வலைத் தளமான எகோனொமி நெக்ஸ்ட் (EconomyNext), புதிய சுங்க வரி ஆட்சியின் சமூக-அரசியல் தாக்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டது. 'அரசியல் ரீதியாக, இது புதிய நிர்வாகத்தை பலவீனப்படுத்தலாம், பொதுமக்களின் கோபத்தைத் தூண்டலாம், மற்றும் ஜனரஞ்சகவாத அல்லது பாதுகாப்புவாத எதிர்வினைகளுக்கு இடமளிக்கலாம்' என்று அது கூறியது.
இலங்கை பொருளாதாரத்தின் சரிவின் மத்தியில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் ஏழைகளும் அரசாங்கத்திற்கு எதிராக எழுச்சியடைந்து, ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை நாட்டை விட்டு வெளியேறி இராஜினாமா செய்ய நிர்ப்பந்தித்த, 2022 ஏப்ரல்-ஜூலையில் வெடித்த வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களால் ஆளும் வர்க்கம் சந்தேகத்திற்கு இடமின்றி பீதிக்குள்ளாகியுள்ளது.
ஏப்ரல் 7 அன்று ஒரு தேர்தல் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி திசாநாயக்க தெரிவித்ததாவது: 'நாம் ஒரு தேசமாக இந்த [வரி] பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்க அதிகபட்ச தலையீட்டை மேற்கொள்ளும் அதே வேளை, அதை எதிர்கொள்ள ஒரு தேசமாக தயாராக இருக்குமாறு நாட்டில் உள்ள அனைவரையும் நான் அழைக்கிறேன்.'
'தேசத்தை' காப்பாற்றுவது என்ற போர்வையில், திசாநாயக்க விடுக்கும் வேண்டுகோள், அனைத்து உழைக்கும் மக்களும் எதிர்கால பொருளாதார சரிவின் சுமையை சுமக்க வேண்டும் என விடுக்கும் கோரிக்கையாகும்.
செவ்வாயன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ, புதிய சுங்க வரிகளை கையாள்வதற்கான பல்வேறு அரசாங்க நடவடிக்கைகளை பட்டியலிட்டார். வரி உயர்வின் விளைவுகளை ஆராய்ந்து திட்டங்களை முன்வைக்க திசாநாயக்க ஒரு நிபுணர் குழுவை நியமித்துள்ளார்.
பெர்னாண்டோவும் சில இலங்கை அதிகாரிகளும் செவ்வாய்க்கிழமை தெற்காசியாவிற்கான உதவி அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பிரென்டா லீச் மற்றும் பிற உயர் பிரதிநிதிகளுடன் ஒரு மெய்நிகர் சந்திப்பை நடத்தினர். அமெரிக்க இறக்குமதிகள் மீதான இலங்கை வரிகளை குறைக்க தங்கள் விருப்பத்தை கோடிட்டுக் காட்டும் ஒரு திட்டத்தை அவர்கள் முன்வைத்தனர்.
ஜனாதிபதி திசாநாயக்க, இலங்கையானது 'தணிப்பு நடவடிக்கைகளை' எடுக்கும் என்று கடிதம் மூலம் டொனால்ட் ட்ரம்பிற்கு தெரிவித்ததாக பெர்னாண்டோ கூறியபோது, “அமெரிக்காவின் கொள்கைகளை நாங்கள் எதிர்க்க முடியாது” என்றும் அவர் ஊடகங்களிடம் ஒப்புக்கொண்டார்.
12 எதிர்க்கட்சித் தலைவர்களை இலங்கை ஜனாதிபதியுடன் ஒரு சந்திப்புக்கு அழைப்பு விடுத்த பின்னர், திசாநாயக்க ஜனாதிபதி செயலகத் தலைவர்கள் மன்றத்தில் அவர்களைச் சந்தித்து, தனது அரசாங்கம் சுங்க வரி அதிகரிப்புகளுக்கு எவ்வாறு பதிலளிக்கும் என்பதை விளக்கினார். 'அமெரிக்காவுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கான திட்டங்கள் மற்றும் எங்கள் ஏற்றுமதி சந்தைகளை பன்முகப்படுத்துவதற்கான உத்திகள் குறித்து நாங்கள் ஒரு ஆக்கபூர்வமான உரையாடலை நடத்தினோம்' என்று திசாநாயக்க தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
'உலக நாடுகளுடன் வர்த்தகத்தை வலுப்படுத்த நாம் அனைத்தையும் செய்யும் அதே நேரம், உடனடி பிரச்சினை அமெரிக்காவுடன் இசைவு உறுதிப்படுத்தப்பட்ட பொருட் குறியீட்டு முறைமை [Harmonised System-HS] அடிப்படையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதாகும்' என்ற பொதுவான உடன்பாட்டை இந்த சந்திப்பில் எட்டியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட தலைவரான ஹர்ஷா டி சில்வா பின்னர் எழுதினார்.
முன்னதாக டி சில்வா வரி நெருக்கடியை நிவர்த்தி செய்ய 'ஒருங்கிணைந்த தேசிய அணுகுமுறைக்கு' அழைப்பு விடுத்திருந்ததுடன், 'இது ஒரு தேசிய நெருக்கடியாகும். இதன் விளைவு பிரமாண்டமானதாக இருக்கலாம்,' எனவும் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவின் சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் மகன் நாமல் இராஜபக்ஷ, 'அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட துறைகளுக்கு உதவ வேண்டும்' என்று இதேபோன்ற அழைப்பை விடுத்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு அவை ஆதரவு கொடுப்பது போலவே 'தேசிய ஐக்கியத்துக்கான' எதிர்க் கட்சிகளின் அழைப்புகளும், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களையும், தவிர்க்க முடியாத வெகுஜன எதிர்ப்பின் மீதான அரச அடக்குமுறையையும் அவை முழுமையாக ஆதரிக்கும் என்பதற்கான உறுதிமொழிகளாகும்.
திசாநாயக்கவுடன் ஏற்கனவே நெருக்கமாக பணியாற்றி வரும் இலங்கையின் பெருவணிக ஆலோசனை குழுவான இலங்கை வர்த்தகர் சபை, இராஜபக்ஷவின் பிரதிபலிப்பை வரவேற்றதுடன், அரசாங்கத்தை 'அதன் வரி கட்டமைப்பை மறுபரிசீலனை செய்து, வர்த்தக வசதியை மேம்படுத்தும் மற்றும் வணிகம் செய்வதை எளிதாக்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு' கேட்டுக்கொண்டது.
பெருவணிகங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அதிக வரி குறைப்பையும் ஏனைய சலுகைகளை கோரிய இந்த அமைப்பு, மறுபக்கம் உழைக்கும் மக்கள் மீது மேலும் சுமைகளை சுமத்துவதற்கு அழைப்பு விடுக்கிறது.
வரிகளைக் குறைக்க வேண்டும் என திசாநாயக்கவும் எதிர்க்கட்சிகளும் விடுத்த அவநம்பிக்கையான வேண்டுகோள்களைப் பொருட்படுத்தாத வாஷிங்டனின் நடவடிக்கைகள், அனைத்து நாடுகளும் அதன் புவிசார் அரசியல் திட்ட நிரலுடனும் பொருளாதார நலன்களுடனும் அணிசேர வேண்டும் என்ற அதன் கோரிக்கைகளிலிருந்து பிரிக்க முடியாதவை ஆகும்.
வரி ஆட்சி குறித்த வெள்ளை மாளிகையின் விடயத் தாள் கூறுவது போல், 'பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு விஷயங்களில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் மட்டுமே' 'வர்த்தக பங்காளிகள்' தங்களுக்கு வரி நிவாரணத்தைப் பெற முடியும்.
திசாநாயக்க அரசாங்கம் ஏற்கனவே இந்த திசையில் நீண்ட தூரம் சென்றுள்ளது. கடந்த செப்டம்பரில் திசாநாயக்க ஜனாதிபதியான உடனேயே, சிரேஷ்ட அமெரிக்க இராணுவ அதிகாரிகள் இலங்கைக்குச் சென்று அவரைச் சந்தித்தனர்.
அமெரிக்க பசிபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை வெளியுறவுச் செயலாளர் டொனால்ட் லூ மற்றும் அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே. பப்பாரோ ஆகியோர் விஜயம் செய்தவர்களில் அடங்குவர். இந்த வருகைகளில் அமெரிக்காவுடனான கொழும்பின் இராணுவ உறவுகளை வலுப்படுத்துவது பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
அதே நோக்கத்துடனேயே பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். வாஷிங்டனின் சீன-விரோத போர் மூலோபாயத்தில் இந்தியா பிரதான பிராந்திய பங்காளியாகும்.
கொழும்பை தளமாகக் கொண்ட சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஒரு செய்தியின்படி, இலங்கை அரசாங்கத் தலைவர்கள் வாஷிங்டனுக்கு தாம் விடுத்த வேண்டுகோளை ஆதரிக்குமாறு மோடியிடம் கேட்டுகொண்டனர். ஏப்ரல் 5 அன்று நடந்த ஒரு ஊடக சந்திப்பில், அமெரிக்க வரி பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்களில் உதவுவதாக இலங்கை அரசாங்க அதிகாரிகளுக்கு மோடி உறுதியளித்துள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
'நெருக்கடியை எதிர்கொள்ள ஒரு தேசமாகத் தயாராகுங்கள்' என்ற அரசாங்கத்தின்தும் எதிர்க்கட்சிகளதும் பிற்போக்கு அழைப்பை இலங்கை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். இலங்கை முதலாளித்துவத்தையும் அதன் ஆளும் உயரடுக்கையும் காப்பாற்ற தொழிலாளர்களும் ஏழைகளும் ஏன் தங்கள் தொழில்கள், ஊதியங்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை தியாகம் செய்ய வேண்டும்?
ட்ரம்பின் நடவடிக்கைகள் முதலாளித்துவத்தின் வரலாற்று நெருக்கடியின் வெளிப்பாடாகும். அதாவது, பூகோள ரீதியில் ஒருங்கிணைந்த உற்பத்திக்கும் உற்பத்தி சாதனங்களின் தனியார் உரிமைக்கும் மற்றும் போட்டி தேசிய-அரசு அமைப்புக்கும் இடையிலான முரண்பாடுகளின் விளைவாகும். ட்ரம்பின் வரிப் போரை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த தேசிய பிரதிபலிப்பை காட்டுவதற்கு ஜே.வி.பி./தே.ம.ச. மற்றும் எதிர்க்கட்சிகளும் விடுக்கும் வாய்வீச்சு அழைப்புகளால், இந்தப் பொருளாதார நெருக்கடி மற்றும் சரிவுக்கு தேசிய அளவில் தீர்வுகள் இல்லை என்ற உண்மையை மூடிமறைக்க முடியாது.
தொழிலாள வர்க்கம் அதன் ஜனநாயக, சமூக உரிமைகளுக்காகப் போராட அவசரமாகத் தயாராக வேண்டும். அனைத்து முதலாளித்துவக் கட்சிகள், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் அவற்றின் அனைத்து ஆதரவாளர்களிடமிருந்தும் பிரிந்து, ஒரு சோசலிச, சர்வதேச முன்னோக்கிற்காகப் போராட தொழிலாள வர்க்கத்தின் தொழில்துறை மற்றும் அரசியல் பலத்தை அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும்.
சோசலிச சமத்துவக் கட்சி, ஒவ்வொரு வேலைத் தளத்திலும், அனைத்து பிரதான பொருளாதார மையங்களிலும் சுயாதீனமாக அணிதிரள்வதற்காக தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்புமாறு தொழிலாளர்களுக்உக அழைப்புவிடுக்கிறது. இந்தப் போராட்டத்தில் சேர கிராமப்புற மக்கள் தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டும்.
தொழிலாள வர்க்கம் அதன் சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஒன்றிணைந்து, தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியை உருவாக்குவதன் மூலமே இந்தப் போராட்டத்தை முன் கொண்டு செல்ல முடியும்.