முன்னோக்கு

ஜோர்ஜ் ஃபுளோய்ட்டை போலிஸ் படுகொலை செய்து 5 ஆண்டுகள் ஆகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஃபுளோய்ட்டின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாளில், சே தேர் நேம்ஸ் கல்லறையில் உணர்ச்சியுடன் ஜோர்ஜ் ஃபிலாய்டுக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு பெண், மே 25, 2025 ஞாயிற்றுக்கிழமை, மினியாபோலிஸ் [AP Photo/Abbie Parr]

ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கரும் தந்தையுமான, 46 வயதான ஜோர்ஜ் ஃபுளோய்ட், மே 25, 2020 அன்று, மினியாபோலிஸ் போலிஸாரால் படுகொலை செய்யப்பட்டார். ஒரு போலிஸார் அவரை தரையில் வீழ்த்தி, மண்டியிட்டு ஒன்பது நிமிடங்களுக்கும் மேலாக அவரது கழுத்தை நசுக்கியபோது, திகிலடைந்த பார்வையாளர்கள் போலிஸாரை நிறுத்துமாறு கெஞ்சினர். படுகொலை குறித்த கைத்தொலைபேசி காட்சிகள் பாரிய சீற்றத்தைத் தூண்டி, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் எதிர்ப்பு போராட்ட அலையைத் தூண்டின.

அந்தக் காட்சிகளில், ஃபுளோய்ட் தனது தாயிடம் உதவி கேட்டு அழுதார். தான் இறக்கப் போகிறேன் என்று உயிருக்காக கெஞ்சினார். மேலும் அதிகாரிகளிடம் 20 க்கும் மேற்பட்ட முறை, “என்னால் சுவாசிக்க முடியவில்லை” என்று கூறினார். 19 வருட போலிஸ் துறையில் அனுபவமுள்ளவரும், அந்த சம்பவத்தில் தொடர்புடைய மூத்த அதிகாரியுமான டெரெக் சோவன், ஃபுளோய்ட்டின் கழுத்தை முழங்காலால் நசுக்கிக் கொண்டு, இறக்கும் நிலையில் இருந்த மனிதனின் அவநம்பிக்கையான வேண்டுகோள்களுக்கு பதிலளித்து, “பேசுவதை நிறுத்து, கத்துவதை நிறுத்து, பேசுவதற்கு நிறைய ஆக்ஸிஜன் தேவைப்படும்” என்று கேலி செய்தார்.

போலிஸின் கரங்களாலும் முழங்கால்களாலும் ஏற்படுத்தப்பட்ட ஃபுளோய்ட்டின் மரணம், தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களிடையே சமூக கோபத்தின் சக்திவாய்ந்த எழுச்சியைக் கட்டவிழ்த்துவிட்டது. அமெரிக்காவில் போலிஸாரின் மிருகத்தனத்திற்கு எதிராக, இனம், நிறம் கடந்து இடம்பெற்ற பல போராட்டங்களில் சுமார் 26 மில்லியன் மக்கள் பங்கேற்றனர்.

அமெரிக்காவில் இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் முக்கிய நகரங்களுக்கு அப்பாலும் பரவின. நாடெங்கிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. மே 24 மற்றும் ஆகஸ்ட் 22, 2020 க்கு இடையில், ஆயுத மோதல் இருப்பிடம் & நிகழ்வு தரவு என்ற அமைப்பு (ACLED) அமெரிக்காவில் மட்டும் 7,750 க்கும் மேற்பட்ட போராட்டங்களைப் பதிவு செய்தது. மக்கள் வசிக்கும் ஒவ்வொரு கண்டத்திலும் மற்றும் 60 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் போலிஸ் வன்முறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடந்தன, இது போலிஸ் ஒடுக்குமுறையின் உலகளாவிய வர்க்க தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஃபுளோய்ட்டின் படுகொலை பாரிய போராட்டங்களுக்கு உடனடி தூண்டுதலாக இருந்தது. ஆனால் அவற்றின் அளவும் விடாமுயற்சியும் ஆழமான சமூக நிலைமைகளை பிரதிபலித்தன. பல தசாப்தங்களாக கட்டுப்படுத்தப்படாத போலீஸ் வன்முறை, அதிகரித்து வரும் சமத்துவமின்மை மற்றும் COVID-19 இலிருந்து அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கையில் அரசாங்கத்தின் அலட்சியம் ஆகியவை ஒரு வெடிமருந்து கிடங்கை உருவாக்கியிருந்தது.

பாரிய எதிர்ப்பு போராட்டங்களுக்கு அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் எதிர்வினையானது, வன்முறையான ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிடுவது மற்றும் போராட்ட இயக்கத்தை பிளவுபடுத்தி தடம்புரளச் செய்யும் நோக்கில் இனவாத அரசியலை ஊக்குவிப்பது என்ற இரண்டு முக்கிய வடிவங்களை எடுத்தது.

முதலாவது ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் இரண்டினதும் ஆதரவுடன், ஆர்ப்பாட்டங்களை நசுக்குவதற்கு நாடெங்கிலும் போலிஸ் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. 2020 கோடையில், அமைதியான போராட்டங்களில் பங்கேற்றதற்காக 10,000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நிராயுதபாணியாக இருந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இராணுவமயப்பட்ட போலிஸ் பிரிவுகள், கண்ணீர்ப்புகைக் குண்டுகள், இரப்பர் தோட்டாக்கள் மற்றும் பிற மிருகத்தனமான தந்திரோபாயங்களை பயன்படுத்தியதில் ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

மினசோட்டாவில், ஜனநாயகக் கட்சி மேயர் ஜேக்கப் ஃப்ரே மினியாபோலிஸில் ஊரடங்கு உத்தரவை திணித்தார். அதேவேளையில், ஜனநாயகக் கட்சி ஆளுநர் டிம் வால்ஸ் போராட்டக்காரர்களுக்கு எதிராக தேசிய பாதுகாப்புப் படையை குவித்தார். இறுதியில், 30 க்கும் மேற்பட்ட மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவுகளை அமல்படுத்தின. மேலும் பல தேசிய காவலர் பிரிவுகள் ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியில் செயல்படுத்தப்பட்டன.

பாரிய போராட்ட இயக்கம் போலிஸ், இராணுவம் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் கட்டுப்பாட்டையும் மீறி சுழன்று விடுமோ என்று பீதியடைந்த ட்ரம்ப் நிர்வாகம், ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை நடத்த முயன்றது. வெள்ளை மாளிகை ரோஜா தோட்டத்தில் இருந்து ஜூன் 1 அன்று வழங்கிய ஓர் உரையில், ட்ரம்ப் கிளர்ச்சி சட்டத்தைக் கையிலெடுக்க அச்சுறுத்தியதுடன், போராட்டங்களை ஒடுக்க “ஆயிரக் கணக்கான கனரக ஆயுதமேந்திய சிப்பாய்கள், இராணுவ அதிகாரிகள் மற்றும் சட்ட அமலாக்கப் பிரிவை” குவிக்கப் போவதாக அறிவித்தார்.

எவ்வாறிருந்த போதிலும், அரசியல்ரீதியாக, வெகுஜன போராட்டங்களை தடம்புரளச் செய்வதில் மத்திய பாத்திரத்தை, ஜனநாயகக் கட்சி மற்றும் அதனுடன் இணைந்த அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட் உட்பட்ட ஏனைய அமைப்புக்களால் ஆற்றப்பட்டது. இவை, இந்த இயக்கத்தை சாந்தமாக, அடிப்படையில் பிற்போக்குத்தனமான வழிகளில் திசைதிருப்ப இனவாத அரசியலை ஊக்குவித்தன.

இது, இதற்கு முந்தைய செப்டம்பரில் ஜனநாயகக் கட்சியின் ஒரு அங்கமாக இருந்த நியூ யோர்க் டைம்ஸ் வெளியிட்ட 1619 திட்டத்தின் உச்சக்கட்டமாக இருந்தது. அமெரிக்க வரலாற்றை ஒரு வர்க்கப் போராட்டமாக அல்லாமல் “வெள்ளை” மற்றும் “கறுப்பினத்தவருக்கு” இடையிலான ஒரு போராட்டமாக சித்தரித்த அதன் இனவாத சொல்லாடல், போலிஸ் படுகொலைக்கு எந்தவொரு வர்க்க அடிப்படையையும் மறுப்பதன் மூலம் நடைமுறையில் உணரப்பட்டது. அதற்கு பதிலாக இது “திட்டமிட்ட இனவாதம்” மற்றும் “வெள்ளை மேலாதிக்கத்தின்” மற்றொரு வெளிப்பாடாக மாற்றியது.

அமெரிக்க ஜனநாயகக் கட்சி, பெருநிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் “கறுப்பு உயிர்கள் பொருட்டாகும்” (Black Lives Matter) என்ற இயக்கத்தை ஆதரித்து, நூறு மில்லியன் கணக்கான டாலர்கள் வழங்கின.

இந்தப் பிரச்சாரம் அனைத்தும் ஒவ்வொரு நாட்டிலும் போலிஸாரால் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தொழிலாள வர்க்கம், ஏழைகள் அல்லது மனநல நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற உண்மையை மூடிமறைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. இனவாத மற்றும் பாசிச மனோபாவங்கள் போலிஸ் துறைகளுக்கு உள்ளேயும் —அமெரிக்க ஆளும் வர்க்கத்தால்— வளர்க்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டு வருகின்ற அதேவேளையில், போலிஸானது வர்க்க ஆட்சியின் ஒரு கருவியாக செயல்பட்டு வருகிறது. தனியார் சொத்துடைமை மற்றும் நிதிய தன்னலக்குழுவின் ஆட்சியைப் பாதுகாப்பதற்காக, தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமையுடன், மக்களை கொல்வதற்கு முதலாளித்துவ அரசால் அவர்களுக்கு அசாதாரண அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

போலிஸ் வன்முறைக்கு எதிரான வெகுஜன இயக்கத்திற்கு குழிபறிக்கும் ஒரு முயற்சியில், ஜனநாயகக் கட்சி தலைமையிலான இனவாதப் பிரச்சாரம், “இனவாத கணக்கீட்டின்” பாகமாக, தோமஸ் ஜெபர்சன், ஜோர்ஜ் வாஷிங்டன் மற்றும் மாபெரும் விடுதலையாளரான ஆபிரகாம் லிங்கனின் சிலைகள் கூட உடைக்கப்பட வேண்டுமென கோரி, அமெரிக்க புரட்சி மற்றும் உள்நாட்டுப் போர் மீது அதன் பார்வையைத் திருப்பியது.

போலிஸ் வன்முறை மற்றும் சமத்துவமின்மைக்கான எதிர்ப்பு, பின்னர் ஜோ பைடென் மற்றும் அவரது துணை ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் வழக்குத்தொடுனரும் போலிசின் நண்பியுமான கமலா ஹாரிஸ் ஆகியோரின் ஜனாதிபதி பிரச்சாரத்திற்குப் பின்னால் திருப்பிவிடப்பட்டது. கமலா ஹாரிஸின் வேட்புமனு, அவரது இனம் மற்றும் பாலினம் காரணமாக ஊடகங்கள் மற்றும் ஜனநாயகக் கட்சி செயற்பாட்டாளர்களால் “வரலாற்றுச் சிறப்புமிக்கதாகப் “ பாராட்டப்பட்டது.

ஜனவரி 6, 2021 இல், ட்ரம்பின் தோல்வியுற்ற பாசிச ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சிக்குப் பின்னர், இராணுவவாதம் மற்றும் போர் அரசாங்கத்தின் தலைவராக பைடென் அதிகாரத்திற்கு வந்தார். இவரது ஆட்சியின்கீழ் போலீஸ் வன்முறை படிப்படியாக அதிகரித்தது.

2020 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் போலிஸாரால் கொல்லப்பட்ட 1,160 க்கும் மேற்பட்டவர்களில் ஃபுளோய்டும் ஒருவர். அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது. பைடென் நிர்வாகத்தின் கடைசி ஆண்டான 2024 இல், போலிஸ் வன்முறை வரைபடத்தால் தொகுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, போலிஸார் குறைந்தது 1,226 பேரைக் கொன்றனர். இது கிட்டத்தட்ட 6 சதவீத அதிகரிப்பு ஆகும்.

ஜனாதிபதி ஜோ பைடெனின் கீழ், அமெரிக்க பில்லியனர்களின் செல்வவளம் உயர்ந்தது. அதேவேளையில், 300 மில்லியன் டாலருக்கும் அதிகமான பணம் போலிஸ் துறைகளுக்குள் பாய்ச்சப்பட்டது. உள்ளூர் மக்களின் ஆட்சேபனைகளையும் மீறி இராணுவமயமாக்கப்பட்ட “போலீஸ் நகரங்கள்” கட்டியெழுப்பப்பட்ட அதேவேளையில், போலிஸ் “சீர்திருத்தம்” மற்றும் “பொறுப்புக்கூறலுக்கான” அடையாள முயற்சிகள் விரைவாக கைவிடப்பட்டன.

அக்டோபர் 7 தாக்குதல்கள் மற்றும் அமெரிக்க ஆதரவு இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து, இதே போலீஸ் படைகள் படுகொலையை நிறுத்தக் கோரும் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராகத் திருப்பி விடப்பட்டன. பைடெனும் ஜனநாயகக் கட்சியினரும் தங்கள் குடியரசுக் கட்சி சகாக்களுடன் சேர்ந்து, பாலஸ்தீன மக்கள் மீதான படுகொலைக்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் “யூத-எதிர்ப்புவாதம்” என்று அவதூறு செய்தனர்.

பைடென் நிர்வாகத்தின் தன்மையானது, ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான நிலைமைகளை உருவாக்கியது. ஜனநாயகக் கட்சியினர் வரலாற்றுரீதியில் செல்வ வளத்தை ஆளும் உயரடுக்கிற்கு கைமாற்றுவதையும் வெளிநாட்டில் போரை விரிவுபடுத்துவதையும் மேற்பார்வை செய்தவந்த அதேவேளையில், தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்த இனம் மற்றும் பாலினம் குறித்த பிற்போக்குத்தனமான அரசியலை ஊக்குவித்து வந்தனர். இது ட்ரம்பின் பிற்போக்குத்தனமான வாய்வீச்சுக்கு வளமான களத்தை வழங்கியது.

தன்னலக்குழுவால், மற்றும் தன்னலக்குழுவிற்காக உருவாக்கப்பட்ட தன்னலக்குழுக்களின் நிர்வாகம், நீதித்துறையின் மிகக் குறைந்த விசாரணைகளைக் கூட அகற்றி, போலிஸ் துறைகளிலான சீர்திருத்தங்களைக் கூட தகர்க்க உத்தேசித்துள்ளது என்பதை இப்போது மீண்டும் வெள்ளை மாளிகைக்கு வந்துள்ள ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். அதேநேரத்தில், புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் மாணவர்களை மட்டுமல்ல, மாறாக “உள்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள்” என்றழைக்கப்படுபவர்களை, அதாவது ஆட்சியின் கொள்கைகளை எதிர்க்கும் அமெரிக்க குடிமக்களையும் பாரியளவில் நாடுகடத்த புலம்பெயர்வு போலிஸ் கெஸ்டாபோவின் அதிகாரங்களைப் பாரியளவில் விரிவாக்கவும் ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிடுகிறது.

ஒரு அரசியல் சர்வாதிகாரத்தை நிறுவுவதன் மூலம், ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில், 2020 கோடையில் தொடங்கியதை முடித்துவைக்க விரும்புகிறார்.

ஜோர்ஜ் ஃபுளோய்ட் போலிஸாரால் படுகொலை செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அனுபவத்தின் மையப் படிப்பினை என்னவென்றால், ஜனநாயகக் கட்சியும் அதன் துணைக் கட்சிகளும், பாரிய எதிர்ப்பு போராட்டங்களை தடம் புரள வைத்தது, அரசியல் ரீதியாக ஆபத்தானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பாரிய போராட்டமாக தொடங்கிய ஒன்று, இனவாத அரசியலின் முட்டுச்சந்துக்குள் திருப்பி விடப்பட்டு, ட்ரம்ப் மற்றும் அதிதீவிர வலதுசாரிகளின் மீள்வருகைக்கு ஒரு அரசியல் திறப்பை வழங்கியது.

போலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டம் சர்வாதிகாரம், முதலாளித்துவ அரசு மற்றும் அமெரிக்காவை ஆளும் நிதியியல் தன்னலக்குழுக்களுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாதது என்பதை கடந்த அரை தசாப்தகால நிகழ்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

போலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டமானது, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், பாசிசம் மற்றும் போரை எதிர்ப்பதற்கும், மற்றும் சோசலிச அடித்தளங்களில் சமூகத்தை மறுஒழுங்கு செய்வதற்குமான தொழிலாள வர்க்கத்தின் பரந்த போராட்டத்தின் பாகமாக நடத்தப்பட வேண்டும். இதற்கு ஒரு புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். இந்த முன்னோக்குடன் உடன்படும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.

Loading