மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
மே 24 அன்று, “ஏகாதிபத்திய இராணுவவாதம் மற்றும் பிற்போக்கு சர்வதேசத்திற்கு எதிராக” என்ற தலைப்பின் கீழ், ஆர்ஜென்டினாவின் சோசலிச தொழிலாளர் கட்சி (Socialist Workers Party - PTS) தலைமையிலான மொரேனோவாத “ட்ரொட்ஸ்கிச பிரிவு-நான்காம் அகிலத்தின்” (Trotskyist Fraction–Fourth International — FT-CI) கூட்டத்தை நிரந்தர புரட்சிக் (Révolution permanente - RP) குழு பாரிஸில் நடத்தியுள்ளது. இந்தக் கூட்டத்தில், பிரான்ஸ், ஆர்ஜென்டினா, ஜேர்மனி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் உள்ள FT-CI இன் துணை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளார்கள்.
காஸா இனப்படுகொலை, உக்ரேன் மற்றும் மத்திய கிழக்கு போர்களால் அதிகரித்து வரும் உயிரிழப்பு எண்ணிக்கை, மற்றும் அமெரிக்காவின் பாசிச ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது அதிதீவிர வலதுசாரி கூட்டாளிகளின் எழுச்சி குறித்து இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடம் அதிகரித்து வரும் சீற்றத்தின் மத்தியில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. ட்ரம்பின் உலகளாவிய வர்த்தகப் போர் அச்சுறுத்தல்கள் ஒரு பரந்த மோதல் குறித்த அச்சங்களைத் தூண்டிவிட்டுள்ள பிரான்சில், மக்கள்தொகையில் 55 சதவீதத்தினர் மூன்றாம் உலகப் போர் வெடிப்பது குறித்து அஞ்சுவதாக கருத்துக்கணிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன.
இனப்படுகொலை, போர் மற்றும் பாசிசத்தை எதிர்க்க முயலும் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு, நிரந்தர புரட்சிக் குழுவினது கூட்டம் ஒரு முன்னோக்கி செல்லும் பாதையை வழங்குவதற்குப் பதிலாக, ஒரு அரசியல் முட்டுச்சந்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் இல்லாதது கோபமோ அதிருப்தியோ அல்ல, மாறாக முதலாளித்துவத்தின் தீவிரமடைந்து வரும் மரணச் சுழலை தடுத்து நிறுத்த என்ன செய்ய வேண்டும், யாருடன் போராட வேண்டும் என்பது குறித்த ஒரு தெளிவான அரசியல் முன்னோக்கே பற்றாக்குறையாக உள்ளது. FT-CI அதுபோன்றவொரு முன்னோக்கை வழங்கவில்லை. மாறாக இது, புரட்சி, சர்வதேசியவாதம் மற்றும் ட்ரொட்ஸ்கிசம் குறித்த வெற்று வார்த்தைஜாலங்களை, போர்-ஆதரவு ஸ்ராலினிச, சமூக-ஜனநாயக மற்றும் தாராளவாத கட்சிகள், அத்துடன் தேசியவாத தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் உடனான அதன் உண்மையான கூட்டணிகளுடன் சமரசம் செய்ய முனைந்து வருகிறது.
RP ஆல் வெளியிடப்பட்ட கூட்ட நிகழ்வின் அறிவிப்பு பின்வருமாறு கூறுகிறது:
ஐரோப்பாவின் பிரதான சக்திகள் அதிகரித்தளவில் இராணுவவாதத்தை நோக்கி சாய்ந்து வருகின்ற நிலையில், இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. அட்லாண்டிக் கடந்த நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் ஒரு வரலாற்று நெருக்கடிக்கு மத்தியில், அனைத்து ஐரோப்பிய அரசு தலைவர்களும் அவர்களின் இராணுவ மீள்ஆயுதமயமாக்கலை தீவிரப்படுத்த தயாரிப்பு செய்து வருகின்றனர். … அவ்விதத்தில் அவர்கள் மீள்ஆயுதமயமாக்கலுக்கு நிதியளிக்கவும் மற்றும் அவர்களின் இராணுவவாத நிகழ்ச்சி நிரலைத் திணிக்கவும், இந்தத் தலைவர்கள் அநேகமாக எங்கள் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்துவார்கள்.
யதார்த்தத்தில், ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் வெறுமனே இராணுவவாதத்தை “நோக்கி சாய்வதற்கு” “தயாரிப்பு செய்து கொண்டிருக்கவில்லை”. மாறாக, அவை ஏற்கனவே அசுர வேகத்தில் இராணுவமயமாக்கலை மேற்கொண்டு வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் 800 பில்லியன் யூரோ மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்தை ஏற்றுள்ளது. ஜேர்மனி மட்டுமே 1 ட்ரில்லியன் யூரோ இராணுவக் கட்டமைப்பைத் தொடர்கிறது. இந்தப் பிரம்மாண்டமான போர் வரவு-செலவுத் திட்டங்கள் ஒரு விஷயத்தை உறுதிப்படுத்துகின்றன: ஆளும் வர்க்கம் பாரிய வறுமையைத் திணிக்கவும், தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் எதிர்ப்பை நசுக்க பாசிச போலீஸ்-அரசு ஆட்சிகளை அமைக்கவும் முயலும்.
தொழிலாளர்களும் இளைஞர்களும் வாக்குப் பெட்டி வழியாகப் போருக்கான உந்துதலைத் தடுக்க முடியாது. இத்தாலிய பிரதம மந்திரியும் ட்ரம்ப்பின் கூட்டாளியுமான ஜியோர்ஜியா மெலோனி போன்ற பாசிசவாதிகளின் கீழ், ஜேர்மன் சான்சிலர் பிரெடெரிக் மெர்ஸ் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் போன்ற “மையவாதிகள்” என்றழைக்கப்படுபவர்களின் கீழ், அல்லது ஸ்பெயினில் பொடெமோஸ் (இப்போது சுமர்) போன்ற ஊடகங்களால் ஊக்குவிக்கப்பட்ட “இடது” அமைப்புகளின் கீழ், எந்த முதலாளித்துவக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இராணுவக் குவிப்பு முன்னேறி வருகிறது.
இது தொடர்பாக RP யின் கருத்துக்கள்:
இந்த உள்ளடக்கத்தில், அமெரிக்காவில் ட்ரம்ப் மற்றும் எலோன் மஸ்க் தொடங்கி இத்தாலியில் மெலோனி, ஆர்ஜென்டினாவில் மிலேய் மற்றும் பிரான்சில் லு பென் வரையிலான அதிதீவிர வலதுசாரிகள், அதிகளவில் ஆளும் வர்க்கங்களால் ஈர்க்கப்பட்டு வருகின்றனர். இனவாதம் மற்றும் தொழிலாளர்-விரோத கொள்கைகளில் வேரூன்றிய ஒரு உண்மையான பிற்போக்குத்தனமான உலகம் எழுந்து வருகிறது.
எப்போதும் போல, RPயின் அறிக்கைகளில், மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர்கள் எதை விட்டுவிடுகிறார்கள் என்பதுதான். ஒருவர் கட்டாயம் கேட்க வேண்டும்: 20 ஆம் நூற்றாண்டில் பாசிசம், இனப்படுகொலை மற்றும் உலகப் போரின் கொடூரங்களுக்குப் பின்னர், முதலாளித்துவ வர்க்கத்தால் மீண்டுமொருமுறை அதிதீவிர வலதுசாரிகளின் அரசாங்கங்களை ஆட்சிக்குக் கொண்டுவருவது எப்படி சாத்தியமானது? ஹிட்லரின் பழுப்புச் சட்டைகள் அல்லது முசோலினியின் கறுப்புச் சட்டைகள் போன்ற பாரிய பாசிச இயக்கங்கள் வீதிகளில் அணிவகுத்து வருகின்றன அல்லது ஐரோப்பாவிலோ அல்லது அமெரிக்காவிலோ மில்லியன் கணக்கானவர்களை அணிதிரட்டுகின்றன என்பதல்ல இதற்குக் காரணம்.
மாறாக, முதலாளித்துவ ஊடகங்களால் “இடது” என்று தவறாக சித்தரிக்கப்பட்ட கட்சிகளின் காட்டிக்கொடுப்புகளால் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட ஆழ்ந்த சமூக கோபத்தை அதிதீவிர வலதுசாரி சக்திகள் சுரண்டிக் கொள்கின்றன. மேலும், இந்தக் கட்சிகளால் தொழிலாளர் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டமையானது, தொழிலாள வர்க்கத்தின் சில அடுக்குகள் உட்பட, அதிதீவிர வலதுசாரி வாய்வீச்சாளர்கள் வாக்குகளைப் பெறுவதற்கான நிலைமைகளை உருவாக்கியது.
ஏகாதிபத்திய போர், பாசிசம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிராக தொழிலாளர்கள் எவ்வாறு போராட வேண்டும்? RP குழுவின் பாரிஸ் கூட்டம் “சோசலிச இடதுகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் குரலை ஓங்கி ஒலிப்பதை” நோக்கமாகக் கொண்டிருப்பதாக அது குறிப்பிடுகிறது.
RP இவ்வாறு கூறுகிறது:
இராணுவவாதத்தை நிறுத்தும் வலிமை தொழிலாள வர்க்கத்திற்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் மட்டுமே உண்டு என்பதை வலியுறுத்த இந்தக் கூட்டம் எங்களுக்கு ஒரு தளத்தை வழங்கும். கடந்த காலத்தில் இராணுவவாதம் படுகொலைகளுக்கு இட்டுச் சென்றுள்ள அதேவேளையில், ஆளும் வர்க்கம் டாங்கிகள் அல்லது அணுஆயுத ஏவுகணைகளைக் காட்டிலும் போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்குமே அதிகம் அஞ்சுகிறது. நமது அரசாங்கங்கள், நமது எஜமானர்கள், நமது சொந்த ஏகாதிபத்தியம் மற்றும் அதன் போர்த் திட்டங்களை ஒரு சர்வதேசியவாத, தொழிலாள வர்க்க மற்றும் புரட்சிகர முன்னோக்கில் இருந்து எதிர்த்துப் போராடுவதே சமாதானத்திற்கான சிறந்த பங்களிப்பாகும்.
இந்த “சோசலிச இடதுசாரிகள்” யார் ? தொழிலாள வர்க்கத்தின் குரலை அது எவ்வாறு “பெருக்க” உத்தேசித்துள்ளது, அல்லது உண்மையில் என்ன “புரட்சிகர முன்னோக்கை” அது ஆதரிக்கிறது என்பதை அந்த அறிக்கை கூறவில்லை. அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA), ஜேர்மனியின் இடது கட்சி, ஸ்பெயினின் பொடெமோஸ், பிரான்சில் புதிய மக்கள் முன்னணி மற்றும் ஸ்ராலினிச தலைமையிலான CGT தொழிற்சங்க அதிகாரத்துவம் போன்ற ஏகாதிபத்திய-ஆதரவு சக்திகளுடனான அதன் சொந்த உறவுகள் மற்றும் நோக்குநிலை குறித்து RP வெளிப்படையாக மௌனம் சாதிக்கிறது.
ஒரு உண்மையான புரட்சிகர முன்னோக்கிற்கு தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ அரசுடன் கட்டிப்போடும் அனைத்து அமைப்புக்களுக்கும் எதிரான, சமரசத்திற்கு இடமில்லாத அரசியல் போராட்டம் தேவைப்படுகிறது. ஆயினும், இதனை RP மற்றும் FT-CI ஆகிய குழுக்கள் துல்லியமாக செய்யப் போவதில்லை.
FT-CI இன் பாத்திரத்தைப் புரிந்து கொள்வதற்கு, 1930களில் மத்தியவாத அரசியலுக்கு எதிரான லியோன் ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தை நினைவுகூர்வது மதிப்புக்குரியதாகும். 1936 பொது வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து பிரான்சில் நிலவிய புரட்சிகர நெருக்கடிக்கு இடையேயும், இரண்டாம் உலகப் போர் அச்சுறுத்தல் சூழ்ந்திருந்த நிலையிலும், மக்கள் முன்னணி அரசாங்கத்தை விமர்சித்த, ஆனால் ஸ்ராலினிசத்துடன் முறித்துக் கொண்டு நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்ப மறுத்த ஒரு சமூக ஜனநாயகவாதியான மார்சோ பிவேர்வின் பாத்திரத்தை ட்ரொட்ஸ்கி பகுப்பாய்வு செய்தார். அது மத்தியவாதம், ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்:
வலதுசாரி நண்பர்களுடனான அதன் வழக்கமான நட்புறவை முறித்துக் கொள்ள அஞ்சுகிறது, மேலும் தனிப்பட்ட கருத்துக்களை “மதிக்கிறது”; அதனால்தான் அது இடதுகளுக்கு எதிராக அதன் அனைத்து தாக்குதல்களையும் செய்கிறது. இவ்விதம் தீவிரமான பொதுக் கருத்தின் பார்வையில் அதன் மதிப்பை உயர்த்த முயற்சிக்கிறது. ... அடிப்படை கேள்விகளை இரக்கமற்ற முறையில் முன்வைப்பதும், ஊசலாட்டங்களுக்கு எதிராக ஒரு மூர்க்கமான விவாதமும், நமது காலத்தின் வர்க்கப் போராட்டத்தின் சமரசமற்ற மற்றும் கொடூரமான குணாம்சத்தின் அவசியமான சித்தாந்த மற்றும் கற்பித்தல் பிரதிபலிப்பு மட்டுமே என்பதை [அது] முற்றிலும் புரிந்து கொள்ளவில்லை.
இன்று FT-CI செயல்படும் குட்டி முதலாளித்துவ சூழலிலிருந்து மார்சியோ பிவெர்ட்டைப் பிரிக்கும் ஒரு பரந்த வர்க்க இடைவெளி உள்ளது. எட்டு மணி நேர வேலை நாள் மற்றும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாட்கள் உள்ளிட்ட முக்கியமான சீர்திருத்தங்களுக்காகப் போராடி வென்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பாரிய தொழிலாளர் கட்சியின் தலைவராக பிவர்ட் இருந்தார். ஸ்ராலினிசத்திற்கு ஒரு புரட்சிகர மாற்றீட்டைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தை இறுதியில் அவர் நிராகரித்த போதிலும், அவர் ட்ரொட்ஸ்கிஸ்டுகளை தனது கட்சியில் சேர அனுமதித்தார். இது அவர்களை தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த அடுக்குடன் ஈடுபட அனுமதித்தது. எண்பத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், FT-CI சீர்திருத்தவாத தொழிலாளர் அமைப்புகளுக்குள் வேலை செய்யவில்லை. மாறாக, வசதியான நடுத்தர வர்க்கத்தில் வேரூன்றிய பகிரங்கமான ஏகாதிபத்திய-சார்பு கட்சிகளைச் சுற்றி அது வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.
பாசிசம் மற்றும் போருக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தை FT-CI எவ்வாறு தடுக்கிறது
ஆனால், இன்றைய போலி-இடது கட்சிகள், 1930 களின் பிரான்சின் அரசியல் திவால் நிலைகளுடன் மறுக்கவியலாத ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்கின்றன: பாசிச அச்சுறுத்தலையும் சூழ்ந்து வரும் உலகப் போரின் அச்சுறுத்தலையும் எதிர்கொண்டு, அவை புரட்சிகரப் போராட்டத்தைத் தடுக்க உறுதியாக உள்ளன, மேலும் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றன.
FT-CI இன் பல்வேறு கூறுகள் அவை செயல்படும் நாடுகளில் இந்த பாத்திரத்திற்கு சேவை செய்கின்றன. உண்மையில், ஒரு ஒருங்கிணைந்த உலக மூலோபாயத்தைக் கொண்ட ஒரு அமைப்பு என்ற அர்த்தத்தில், இது ஒரு சர்வதேச அமைப்பு அல்ல. மாறாக, அந்தந்த நாடுகளில் உள்ள முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களை நோக்கிய தந்திரோபாய சூழ்ச்சிகளை அடித்தளமாகக் கொண்ட பல்வேறு தேசிய அமைப்புகளின் ஒரு தொகுப்பாக இருக்கிறது.
கடந்த ஆண்டு, ஸ்பானிய அமைப்பான தொழிலாளர் புரட்சி நடப்பு (WRC), முதன்மையாக பப்லோவாத எதிர்ப்பு முதலாளித்துவவாதிகளை நோக்கிய ஒரு தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியது. அவர்கள் முன்னர் ஸ்பெயினின் சோசலிஸ்ட் கட்சி (PSOE)-பொடெமோஸ் சிக்கன அரசாங்கத்தில் பங்கேற்றிருந்தனர்.
பாரிஸ் கூட்டத்தில், FT-CI இன் அமெரிக்க இணை நிறுவனமான இடது குரல் (LV) அமைப்பின் சார்பாக, சேவை ஊழியர் சர்வதேச சங்கத்தின் (SEIU) அதிகாரியும், தொழிலாள வர்க்கத்தை இன அடிப்படையில் பிளவுபடுத்தவும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒருங்கிணைந்த போராட்டத்தைத் தடுக்கவும் முயலும் Black Lives Matter (BLM) என்ற அமைப்பின் முக்கிய உறுப்பினருமான ஜூலியா வாலஸ் பிரதிநிதித்துவப்படுத்துவார்.
வாலஸ் பாரிஸுக்குப் பயணிக்கையில், ட்ரம்பின் தேசியவாத வர்த்தகப் போரை ஆதரிக்கும் ஐக்கிய வாகன தொழிலாளர் சங்கத்தின் (UAW) தலைவர் ஷான் ஃபைன் போன்ற தொழிற்சங்க அதிகாரிகளை இடது குரல் அமைப்பு பாதுகாத்து வருகிறது. “தேசிய மற்றும் தொழிலாள வர்க்க நலன்களுக்கு சேவை செய்யும் சுங்கவரிகளில் ட்ரம்புடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக” ஃபைன் கூறியதை விமர்சித்த பின்னர், இடது குரல் அவரை “புதிய, முற்போக்கான தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மிக முக்கியமான நபர்களில் ஒருவராகப்” பாராட்டியது.
ஜேர்மனியில், அதிகாரப்பூர்வமாக இடது கட்சியின் (ஜேர்மன் அரசிற்குள் ஒரு முக்கிய பங்கை வகிக்கும் ஏகாதிபத்திய சார்பு அமைப்பு) ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், மொரேனோவாத புரட்சிகர சர்வதேச அமைப்பு (RIO) இந்தக் கட்சிக்கும் அதைச் சுற்றியுள்ள அமைப்புகளுக்கும் முழுமையாக அர்ப்பணித்துள்ளது. அதிதீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றுக் (AfD) கட்சியின் எழுச்சிக்கு பதிலளிக்கும் விதமாக, “இடதுசாரிகளை மட்டுமல்ல, AfD இன் எழுச்சிக்கு பொறுப்பான பல்வேறு வலதுசாரி அமைப்புகளையும்” உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த இயக்கத்திற்கு RIO அழைப்பு விடுத்தது.
ட்ரொட்ஸ்கிசத்திற்கு, இடது குரல் மற்றும் FT-CI குழுக்களின் எதிர்ப்பானது, இலங்கையின் சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவான ஜனாதிபதியும் முன்னாள் மாவோயிஸ்ட், சிங்கள-பேரினவாத மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) தலைவருமான அனுர குமார திசாநாயக்கவை ஊக்குவிப்பது வரை நீண்டு செல்கிறது. RP ஆல் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், இடது குரல், திசாநாயக்கவின் பிரச்சாரம் “சிங்கள-பௌத்த பேரினவாதத்தால் குறிக்கப்பட்டது” என்பதை ஒப்புக் கொண்டது. ஆயினும், அது மக்களின் ஒரு பகுதியினருக்கு “ஒரு நம்பிக்கையாக இருந்திருக்கலாம்” என்று கூறுகிறது. திசாநாயக்க இப்போது “தனது மார்க்சிச மூலங்களையும், அவரது வேலைத்திட்டத்தின் மிகவும் முன்னேறிய கூறுகளையும்” கைவிட்டுவிட்டார் என்பதே அவர்களின் ஒரே புகாராகும். இந்த வேலைத்திட்டம், ஏற்கனவே தேசியவாதத்தில் மூழ்கியுள்ள மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான குரோதத்தில் மூழ்கியுள்ள ஒரு வேலைத்திட்டமாகும்.
இங்கே, FT-CI இலங்கையின் சிக்கன சார்பு ஜே.வி.பி ஆட்சிக்கு அரசியல் மூடுதிரையை வழங்குகிறது. உண்மையில், முல்லைத்தீவில் பத்தாயிரக்கணக்கான தமிழ் போராளிகள் மற்றும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டது உட்பட, தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசின் 1983-2009 இனவாத யுத்தத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்துள்ள ஜே.வி.பி, சிங்கள பேரினவாதத்தை எதிர்த்ததற்காகவும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் ஐக்கியத்துக்காகப் போராடியதற்காகவும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதி உறுப்பினர்களை இலக்கு வைத்து படுகொலை செய்ததற்கும் பொறுப்பாகும்.
RP யும் பிரான்சில் வர்க்கப் போராட்டமும்
இத்தகைய முன்னோக்குகளின் அடிப்படையில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு தீவிர எதிர்ப்பை உருவாக்குவது சாத்தியமற்றது. இது பிரான்சில் எடுத்துக்காட்டப்படுகிறது. பப்லோவாத புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியிலிருந்து (NPA) இளம் CGT அதிகாரத்துவத்தினரை ஆட்சேர்ப்பு செய்ய முயலும் ஒரு பிரிவாக நிரந்திரப் புரட்சி அமைப்பு (RP) வெளிப்பட்டது. பல தசாப்த கால காட்டிக்கொடுப்புகளுக்குப் பிறகு தொழிலாளர்கள் ஸ்ராலினிச அமைப்புகளைக் கைவிட்டதால், நிரந்திரப் புரட்சி அமைப்பு ஒரு புரட்சிகர மாற்றீட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய அவசியத்தைக் காணவில்லை. மாறாக தொழிற்சங்க எந்திரத்திற்குள்ளாக அரசியல் மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கான ஒரு வாய்ப்பைக் கண்டது.
அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
CGT க்குள் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியினுடைய (PCF) சரிவு மற்றும் ஆட்சேர்ப்பு நெருக்கடிக்கு மத்தியில், இளம் தொழிற்சங்க அதிகாரிகள் தங்களை மிக விரைவாக முக்கிய தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் கட்டமைப்புகளுக்கு தலைமை தாங்கிக் கொள்ள முடியும். ... பெயருக்குத் தகுதியான ஒவ்வொரு புரட்சியாளரும் இந்த நிகழ்வுப்போக்கின் மீது பெரும் கவனம் செலுத்த வேண்டும், என்ன விலை கொடுத்தாவது இந்தப் புதிய தலைமுறையுடன் ஒன்றுபட முனைய வேண்டும்.
இராணுவ மீள்ஆயுதமயமாக்கலுக்கு நிதியாதாரம் வழங்குவதற்கான உத்தரவாணை மூலமாக திணிக்கப்பட்ட மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான 2023 பாரிய வேலைநிறுத்தங்களின் போது, நிரந்திரப் புரட்சிக் குழுவின் முன்னோக்கிற்கு ஒரு தீர்க்கமான சோதனை வந்தது. மக்ரோன் பாரிய எதிர்ப்பு போராட்டங்களை புறக்கணித்து, போராட்டக்காரர்கள் மீது கலகம் ஒடுக்கும் பொலிசாரை கட்டவிழ்த்து விட்ட நிலையில், மே 1968 க்குப் பிறகு பிரான்ஸ் அதன் ஆழமான அரசியல் நெருக்கடியில் மூழ்கியது. இக்காலப்பகுதி முழுவதும், CGT தொழிற்சங்க அதிகாரத்துவம், மக்ரோனுக்கு எதிராக ஒரு “போர்த் திட்டத்தை” வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமே RP முன்னெடுத்தது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (PES), மக்களுக்கு எதிராக ஆட்சி செய்ய முயற்சிக்கும் மக்ரோனைப் பதவியிலிருந்து வீழ்த்துவதற்கான தொழிலாள வர்க்கத்திற்கான அழைப்பை முன்னெடுத்தது. போராட்டங்களின் போது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் கூட்டங்களில், PES பின்வருமாறு விளக்கியது:
என்ன செய்யப்பட வேண்டும் என்றால், மக்ரோனை அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிவதற்கும், ஒரு பொது வேலைநிறுத்தத்தின் மூலமாக அவரது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கும் ஒரு அரசியல் இயக்கத்தைத் தொடங்குவதாகும். ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று அறிவிக்க பிரான்சின் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும், ஒவ்வொரு வேலையிடத்திலும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இதை எட்டுவதற்கு, மக்ரோனுடன் அரசியல்ரீதியில் சண்டையிடாமல் அவருடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் அத்தனை அதிகாரத்துவங்களில் இருந்தும் சுயாதீனமாக தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்பட வேண்டும். மக்ரோன் தூக்கியெறியப்பட வேண்டும், ஐந்தாம் குடியரசின் ஜனாதிபதி பதவியானது, தெளிவாக தொழிலாளர்களுக்கு எதிராக, வங்கிகளால் பிரயோகிக்கப்படும் ஒரு சட்டவிரோத சர்வாதிகாரத்தின் விமானிகளின் அறையாக ஆகியுள்ளது என்று குறிப்பிடும் ஒரு தெளிவான தீர்மானத்திற்கு பாராளுமன்றம் வாக்களித்தால், இது ஒரு பிரம்மாண்டமான தாக்கத்தைக் கொண்டிருக்கும். இது இளைஞர்களை வேலையிடங்களுக்குச் செல்வதற்கும், தொழிலாளர்களுடன் பேசுவதற்கும், அவர்களின் பணியிடங்களில் பொதுக் கூட்டங்களில் ஒன்றுகூடுவதற்கும், அதேபோன்ற அறிக்கைகளுக்கு வாக்களிப்பதற்கும் அவர்களை ஊக்குவிக்கும். அவ்விதத்தில் தொழிலாளர்கள் மக்ரோனை வீழ்த்துவதற்கும், ஐந்தாம் குடியரசின் ஜனநாயக-விரோத ஜனாதிபதி முறையை ஒழித்துக் கட்டுவதற்கும், தொழிலாளர்கள் கூட்டாக அதிகாரத்தைக் கைப்பற்றி சோசலிசத்தை கட்டியெழுப்பவும் வழி திறக்கும்.
பிரான்ஸ் முழுவதும் கலகங்கள் வெடித்தபோதும் கூட, RP எந்தவொரு சோசலிச முன்னோக்கையும் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்தது. பாரிய எதிர்ப்பு பேரணிகளில், பொது வேலைநிறுத்தம் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் முறித்துக் கொள்ள அழைப்பு விடுத்து PES சமர்ப்பித்த தீர்மானங்களை RP பிரதிநிதிகள் நிராகரித்தனர்.
“நிலைமை புரட்சிகரமானது என்று நான் நினைக்கவில்லை” என்று RP குழுவின் உறுப்பினர் ஜுவான் சிங்கோ கூறினார். “ஜாக்கோபிய மாதிரியில்”, அதாவது 1789 புரட்சி போன்ற ஒரு தேசிய முதலாளித்துவ புரட்சியை அது ஆதரித்ததாக கூறி, RP “முதலாளித்துவ பிரதிநிதித்துவ ஜனநாயகத்துடன் அனுபவங்களை உருவாக்கவும், சுய-ஒழுங்கமைப்புக்கான தேவை குறித்த நனவை அபிவிருத்தி செய்ய அனுமதிக்கவும்” வெகுஜன இயக்கத்திற்கு அழைப்புவிடுத்தது. ஓய்வூதியச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் போராட்டத்தின் முடிவுக்கு அது தன்னைத் தகவமைத்துக் கொண்டது.
முதலாளித்துவ ஆட்சிக்கு RP யின் அடிப்படை விசுவாசம் சோசலிசம் அல்ல, மாறாக ஸ்ராலினிசத்துடனான கூட்டணிகளால் ஆதரிக்கப்படும் முதலாளித்துவம் என்பது வெளிப்பட்டது. ஜோன்-லூக் மெலோன்சோனின் ஜனரஞ்சகவாத அடிபணியாத பிரான்ஸ் கட்சி, பெருவணிக சோசலிஸ்ட் கட்சி, பசுமைக் கட்சி, ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பப்லோவாத NPA ஆகியவற்றின் ஒரு கூட்டணியான புதிய மக்கள் முன்னணிக்கு (NFP) விமர்சனரீதியான வாக்களிப்பை RP கடந்த ஆண்டு ஆதரித்த போது, இது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
உக்ரேனுக்கு பிரெஞ்சு துருப்புகளை அனுப்புவதற்கு அழைப்பு விடுத்த ஒரு போர்-ஆதரவு கூட்டணியான NFP இன் திவால்நிலை மற்றும் துரோகம் குறித்த சோசலிச சமத்துவக் கட்சியின் எச்சரிக்கைகள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளன. நவ-பாசிச RN ஐ தடுத்து நிறுத்துகிறோம் என்ற சாக்குபோக்கின் கீழ், மக்ரோனுடன் ஒரு தேர்தல் கூட்டணியை உருவாக்கிய பின்னர், மக்ரோன் தேர்தல் முடிவைப் புறக்கணித்து —இதில் தான் புதிய மக்கள் முன்னணி முதலிடம் பெற்றது— ஒரு வலதுசாரி சிறுபான்மை அரசாங்கத்தை நிறுவிய போதும், NFP எந்த தீவிர ஆர்ப்பாட்டங்களையோ அல்லது வேலைநிறுத்தங்களையோ நடத்தவில்லை. இவ்வாறு மக்ரோன் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதிப்பதில் NFP ஒரு தீர்க்கமான பாத்திரம் வகித்தது.
ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை உள்ளடக்கியிருப்பதால், அது “தொழிலாளர் இயக்கத்தின்” பாகமாக இருக்கிறது என்ற போலியான அடித்தளத்தில் NFP க்கு வாக்களிக்குமாறு தொழிலாளர்களை வலியுறுத்திய RP, அதற்கு உடந்தையாக இருந்தவர்களில் ஒன்றாக இருந்தது. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி “சட்டம்-ஒழுங்கு, வெளிநாட்டவர் விரோத மற்றும் இஸ்லாமிய வெறுப்பு வாதங்களை எதிர்ப்பதில் இருந்து வெகு தொலைவில் உள்ளது மற்றும் சில சமயங்களில் அவற்றை ஊக்குவிக்கவும் கூட உதவுகிறது” என்பதை ஒப்புக் கொண்ட அதேவேளையில், RP அப்போதும் அதன் ஆதரவை நியாயப்படுத்தி பின்வருமாறு கூறியது: “பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி பல இடதுசாரி அரசாங்கங்களில் சேவை செய்திருந்தாலும், இந்தக் கட்சி தொழிலாளர் இயக்கத்தில் இருப்பதாக கூறிக்கொள்கிறது மற்றும் அதன் கடந்த காலத்திலிருந்து அல்லது தொழிற்சங்கங்களுடனான சில தொடர்புகளிலிருந்து உருவாகும் ஒரு குறிப்பிட்ட தொழிலாள வர்க்க அடித்தளத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.”
இந்த சாதனைகள், அதி தீவிர வலதுசாரிகளுக்கு எதிராக ஒரு முழுவீச்சிலான போராட்டத்தை நடத்தி வருகிறது என்ற அதன் பாரிஸ் கூட்டத்துக்கு பின்னால் இருக்கின்ற மையமான பொய்யை அம்பலப்படுத்துகிறது. யதார்த்தத்தில், தொழிலாளர்களை முறையாக அணிதிரட்டாமல், தீவிர வலதுசாரிகள் தற்போதைய நிலைக்கு ஒரே உண்மையான எதிர்ப்பாக தன்னை பொய்யாகக் காட்டிக்கொள்ளக்கூடிய நிலைமைகளை உருவாக்கி வருகின்ற போலி-இடது அமைப்பாளர்களுடன் RP அணிவகுத்துச் செல்கிறது. இந்த காட்டிக்கொடுப்புகளில் பிரதானமாக ஆதாயமடைந்துவருவது நவ-பாசிசவாத தேசிய பேரணி ஆகும்.
இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் இருந்து ஒரு இன்றியமையாத அரசியல் படிப்பினையை இன்று அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டும். உலகப் போர், பாசிசம் மற்றும் இனப்படுகொலையால் குறிக்கப்பட்ட ஒரு சகாப்தத்தில், ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து, வெளிநாட்டவர் விரோத மனோபாவத்தை நியாயப்படுத்தும் மற்றும் போலி-மார்க்சிச வார்த்தைஜாலங்களுக்குப் பின்னால் ஸ்ராலினிசம் மற்றும் பாரிய படுகொலையை மறைக்கின்ற குட்டி-முதலாளித்துவ போக்குகள், தவிர்க்கவியலாமல் பேரழிவுக்கு இட்டுச் செல்கின்றன. ஒரு உண்மையான புரட்சிகர பாதையை தேடும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைப் பொறுத்த வரையில், இந்த சக்திகளுடன் தீர்க்கமாக முறித்துக் கொள்வதும் அவற்றை செயலூக்கத்துடன் எதிர்ப்பதும் அவசர பணியாகும்.
இத்தகைய போராட்டம், தேசிய அடிப்படையிலான, நடைமுறை ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தந்திரோபாயங்களின் ஒட்டுவேலைகளில் இருந்து ஒன்றிணைக்கப்பட முடியாது. இதற்கு, போர், பாசிசம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அளவில் அணிதிரட்டுவதும், ட்ரொட்ஸ்கிசத்தில் வேரூன்றிய ஒரு புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதும், மார்க்சிச சர்வதேசியவாதத்திற்கான ஒரு சமரசமற்ற போராட்டமும் அவசியமாகும். இதுவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுக்கும் முன்னோக்காகும்.