மே 14 முதல் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் ஆனையிறவில் அமைந்துள்ள தேசிய உப்பள நிறுவனத்தில் சுமார் 200 தொழிலாளர்கள் அடிப்படை உரிமைகளைக் கோரியும் வேலை நிலைமைகளின் சீரழிவை எதிர்த்தும் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
தொழிலாளர்கள், பருவகால தொழிலுக்கு முடிவுகட்டி, அனைத்து ஊழியர்களுக்கும் நாளாந்த வேலையை உறுதிப்படுத்துமாறும் கோருகின்றனர். நிர்வாகம் தொழிலாளர்களை இழிவாக நடத்துவதை நிறுத்துமாறு கோரும் தொழிலாளர்கள், தொழிற்சங்கம் ஒன்றை அமைப்பதற்கான தங்களது உரிமையையும் கோருகின்றனர்.
பதனிடப்படாத உப்பு ஹம்பந்தோட்டை, மன்னார் மற்றும் புத்தளம் போன்ற இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதை நிறுத்தி, அவை ஆனையிறவு உப்பளத்திலேயே பைகளில் அடைக்கப்பட வேண்டும் என்பது மற்றொரு கோரக்கை ஆகும். “உள்ளுர் கௌரவம் மற்றும் அடையாளத்திற்கான” அவர்களின் அழைப்பை குறிக்கும் வகையில் உப்பின் வர்த்தக நாமத்தை மாற்றுமாறும் அவர்கள் கோருகின்றனர்.
உண்மையில், இந்த இரண்டு கோரிக்கைகளும் தமிழ் தேசியவாதக் கட்சிகளால் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த மார்ச்சில், இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், ஆனையிறவு தொழிற்சாலையின் உப்பை வடக்கின் அடையாளமாக கொண்டு அதன் பெயரை மாற்ற வேண்டும் எனக் கூறினார்.
சிறு தொழிற்சாலைகள் அமைச்சர் கந்துநெத்திக்கு எழுதிய கடிதத்தில், சிறிதரன் “ஆனையிறவு உப்பை” “ரஜ லுனு” என பெயர் மாற்றியமை அதிர்ச்சியளிக்கின்றது எனக் கூறினார். அவர், “எங்கள் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்துடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ள அடையாளத்தை மாற்ற வேண்டாம்” என அமைச்சரிடம் கூறினார். பதனிடப்படாத உப்பை வேறு இடங்களுக்கு அனுப்பவேண்டாம் என்ற முன்மொழிவும் இந்த தமிழ் தேசியவாத குழுக்களில் இருந்தே வந்துள்ளன.
சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் இந்த தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கின்றன. அதே நேரம், ஏனைய இடங்களுக்கு பதனிடப்படாத உப்பை கொண்டு செல்லக் கூடாது என்ற கோரிக்கையானது அந்த தொழிற்சாலைகளில் உள்ள தமது வர்க்க சகோதர தொழிலாளர்களுக்கு எதிரானதாக உள்ளது என நாம் எச்சரிக்கின்றோம்.
இந்தக் கோரிக்கையையும் தேசிய கௌரவம் என அடையாளப்படுத்த உப்பின் பெயரை மாற்றுமாறு முன்வைக்கும் கோரிக்கையையும் தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். தொழிலாளர்களின் வேலை நிலைமைளை மேம்படுத்தவும் ஊதிய உயர்வுக்காகவும் முன்வைக்கப்படும் உண்மையான கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்குப் பதிலாக இந்த முதலாளித்துவ குழுக்கள் தமது பிற்போக்கு அரசியலுக்காக இந்தத் தொழிலாளர்களின் கோபத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றன.
இலங்கைத் தமிழரசுக் கட்சி உட்பட அனைத்து தேசியவாத கட்சிகளும் சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்டுள்ள ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் சிக்கன வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கின்றன. இந்தக் குழுக்களுக்கு எதிரக, தொழிலாளர்கள் ஏனைய இடங்களில் உள்ள உப்பளத் தொழிலாளர்கள் பக்கம் மாத்திரமன்றி ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்தை நோக்கியும் திரும்ப வேண்டும்.
வேலை நிறுத்தத்தை கைவிடாவிட்டால் வெளியிடங்களில் இருந்து தொழிலாளர்களை அழைப்போம் என நிர்வாகம் தொழிலாளர்களை அச்சுறுத்துகின்றது. ஏனைய தொழிலாளர்கள் இந்தத் தொழிலாளர்களின் உறுதியான போராட்டத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்.
பெண்கள் உட்பட கிட்டத்தட்ட 200 தொழிலாளர்கள் மிகக் குறைந்த ஊதியத்துடன் மோசமான வேலை நிலைமைகளுடன் பல ஆண்டுகளாக இங்கு வேலை செய்து வருகின்றனர். இந்தத் தொழிலாளர்கள் உப்பு நீர் ஆவியாகி உப்பாக மாறும் வரைக்கும் அந்த உப்பு நீரை சேமித்து வைக்க வரம்பு கட்டுவதற்கு கடுமையாக உழைக்கின்றனர்.
பெண்கள் உட்பட ஒவ்வொரு தொழிலாளியும் உப்பள வரம்புகளை கட்ட மூன்று உழவு இயந்திரப் பெட்டியளவு மண்ணை தலையிலும் தோளிலும் சுமக்க வேண்டும். உப்பு சேகரிப்பு காலத்தில் ஒரு தொழிலாளி வெறுங் கையுடன் உப்பு இழுக்கும் வாரியைக் கொண்டு ஒன்றரை உழவு இயந்திரப் பெட்டியளவு உப்பை சேர்க்க வேண்டும். பின்னர் அந்த உப்பை லொறிகளில் ஏற்றுவதற்கு தொழிலாளர்கள் தங்கள் தலைகளிலும் தோள்களிலும் சுமக்க வேண்டும்.
இந்தக் கடினமான வேலையை முடித்த பின்னரே தொழிலாளர்கள் நாளாந்தம் வெறும் 2,000 ரூபா சம்பளத்தை பெறுகிறார்கள். அவர்கள் பல ஆண்டுகளாக, சிலர் சுமார் ஒன்பது ஆண்டுகளாக உழைக்கின்றனர். எவ்வாறாயினும் அவர்கள் பருவகால அல்லது தற்காலிகத் தொழிலாளர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
உப்பு, உப்புநீர் மற்றும் வெய்யிலில் தொடர்ந்து இருப்பதால், ஊழியர்களுக்கு தோல் வெடிப்புகள், அரிப்பு அல்லது தீக்காயங்கள் ஏற்படுகின்றன. உப்பு இழுத்தல், மண் மற்றும் உப்பு சுமை காவுதல் போன்ற தொடர்ச்சியாக செய்யும் சிரமமான வேலையால் இந்தத் தொழிலாளர்கள் தசை நோவு, முதுகு வலி மற்றும் மூட்டு வீக்கம் போன்றவற்றையும் எதிர்கொள்கின்றனர். கூர்மையான உப்பு படிகங்களை மிதிப்பதால் ஏற்படும் காயங்கள் மற்றும் இயந்திரங்களுடன் சம்பந்தப்பட்ட விபத்துகளையும் எதிர்கொள்கின்றனர்.
தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள், தொழில் உடை மற்றும் ஏனைய பாதுகாப்பு நடவடிக்கைகள் வழங்கப்படுவதில்லை. நிறுவனம் முதல் உதவி சிகிச்கை பெட்டிகளை மாத்திரமே வழங்கியுள்ளது. தொழிலோடு தொடர்புடைய விபத்துகள் ஏற்படின் சக தொழிலாளர்களே பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல வேண்டும்.
நிர்வாகம் தொழிலாளர்களை பாவித்துவிட்டு எறியும் பொருளாகவே நடத்துவதாக தொழிலாளர்கள் முறைப்பாடு செய்கின்றனர். தொழிலாளர்கள் எதிர்ப்பு காட்டினால், நிர்வாகம் அவர்களை அச்சுறுத்தும்.
இந்தத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை அலட்சியம் செய்துள்ள நிர்வாகம், இங்குள்ள ஏழு நிரந்தரத் தொழிலாளர்களைக் கொண்டு தனியார் புல்டோசர் இயந்திரங்களை பயன்படுத்தி உப்பள வேலையைத் தொடர்கின்றனர்.
இந்த வேலை நிறுத்தத்ததை தடுப்பதற்கு நீதிமன்ற தடை உத்தரவை பெற்ற கிளிநொச்சி பொலிஸ், கலகம் அடக்கும் பொலிஸ் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட பொலிசாரை உப்பளத்துக்கு அனுப்பியது. தொழிலாளர்களின் எதிர்ப்பிற்கு மத்தியில், உப்பை தொழிற்சாலைக்கு வெளியில் கொண்டு செல்வதற்கு பொலிஸ் வழியமைத்துக் கொடுக்கின்றது.
1938 இல் தொடங்கப்பட்ட இந்தத் தொழிற்சாலை, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்கள் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுத்த கொடூரமான யுத்தம் காரணமாக, 1990களின் முற்பகுதியில் மூடப்பட்டது. 2009 இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு யுத்தம் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தத் தொழிற்சாலை மீளத் திறக்கபட்டது.
இங்கு வேலை செய்யும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பலர், கொடூரமான உள்நாட்டுப் போர் உட்பட தசாப்த காலங்களாக துன்பங்களை அனுபவித்தவர்கள் ஆவர். நிறுவனம் கணிசமான இலாபத்தோடு இயங்கினாலும் தொழிலாளர்களுக்கு நியாயமான வேலை நிலைமைகள் மற்றும் ஊதியத்தை வழங்க மறுத்துள்ளது.
எவ்வாறாயினும் நிர்வாத்தை மாற்றினால், மோசமான வேலை நிலைமைகளை மாற்றியமைக்கலாம் என தொழிலாளர்கள் பிழையாக நம்பிக்கொண்டிருக்கின்றனர். உண்மையில், இதற்கு முழு பொறுப்பு, புதிதாக தேர்ந்தெடுக்கபட்ட ஜே.வி.பி./ தே.ம.ச. அரசாங்கமே ஆகும். உப்பள நிர்வாகம் அரசாங்கத்தின் கட்டளைகளையே இரக்கமின்றி செயற்படுத்துகின்றது.
இந்த ஆண்டு மார்ச 25 அன்று, அரசாங்கம் இலாபத்தை அதிகப்படுத்துவதற்காக ஆனையிறவு உப்பளத்தில் உப்புத்தூள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தொடங்கியது. அதிநவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட இந்த தொழிற்சாலை மணித்தியாலத்திற்கு ஐந்தாயிரம் கிலோ உப்பை தயாரிக்கும வல்லமை கொண்டது.
ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், இலங்கை முதலாளித்துவ அமைப்பைக் காப்பாற்றவும், சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கனத் திட்டத்தை அமுல்படுத்தவும் அர்ப்பணித்துக்கொண்டுள்ள நிலையில், ஏனைய அனைத்து அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைப் போலவே, தேசிய உப்பு தொழிற்சாலையும் சர்வதேச நாணய நிதிய திட்டத்தின்படி மறுசீரமைப்புக்காகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைப்பானது தனியார்-அரச கூட்டாண்மைக்கு வழிவகுத்து, பின்னர் முழுமையாக தனியார்மயமாக்கப்படும்.
இலங்கை முதலாளித்துவ அரசாங்கம், முதலாளித்துவ உரிமையாளர்களின் நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது சுமத்துகின்றமையால், தேசிய உப்பளத் தொழிலாளர்களும் அதைச் சுமக்கத் தள்ளப்பட்டுள்ளனர்.
நிர்வாகத்தின் தாக்குதல்களை மட்டுமன்றி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் அதன் வாடிக்கையாளரான ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் தாக்குதல்களையும் தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர். இந்தத் தொழிலாளர்களின் வேலை நிலைமைகள், ஊதியங்கள் மற்றும் தம்மை ஒழுங்கமைத்துக்கொள்வதற்கான அடிப்படை உரிமைகளையும், நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் வெற்றிகொள்ள முடியாது. அரசாங்கத்திற்கும் அது முன்னெடுக்கும் சர்வதேச நாணய நிதிய கொள்கைகளுக்கும் எதிராக ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது தீர்க்கமானதாகும்.
அரசாங்கத்தின் சிக்கன வேலைத்திட்டத்திற்கு எதிராக இலங்கை முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் எதிர்பு அதிகரித்து வருகின்ற போதிலும், தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிலாளர்களின் எதிரப்பை நசுக்குவதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கின்றனர்.
உங்கள் உரிமைகளைப் பாதுகாக்க ஒழுங்கமைவதற்கு உங்களுக்கு உள்ள ஆர்வத்தை நாம் புரிந்துகொள்கின்றோம். எவ்வாறாயினும், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் தொழிலாளர்களின் நலன்களை அன்றி, மாறாக, அரசாங்கம் மற்றும் கம்பனிகளின் இலாபத் தேவைகளையே பிரதிநிதித்துவம் செய்கின்றன என்பதே அனுபவம் ஆகும்.
நாம், சோசலிச சமத்துவக் கட்சி, இந்தப் போராட்டத்தை உங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள, உங்களால் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட உங்களின் சொந்த சுயாதீன நடவடிக்கை குழுவை அமைக்க அழைப்பு விடுக்கின்றோம். இது, உங்கள் போராட்டம், அனைத்து இடங்களிலும் உள்ள தேசிய உப்பு நிறுவனத்தில் உழைக்கும் தொழிலாளர்களையும், ஏனைய தொழிலாளர்களையும் சென்றடையவும், உங்கள் போராட்டத்திற்கு அவர்களின் ஆதரவைப் பெறவும் வழிவகை செய்யும்.
அரசாங்கத்தின் கொள்கைளுக்கு எதிராக ஒரு பொதுவான அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பது அவசியமாகும். அத்தயை ஒரு போராட்டம் சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட முடியும்.
பல தொழிலாளர்கள் இந்தப் போராட்டம் பற்றியும் நிலைமைகள் பற்றியும் உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்தினர்.
எம். சுகந்தன்: “நான் மூன்று ஆண்டுகளாக தற்காலிக தொழிலாளியாக 2,000 ரூபா நாள் சம்பளத்துக்கு இங்கு வேலை செய்து வருகிறேன். இந்தத் தொகையில் இருந்தே ஊழியர் சேமலாப நிதியை நிர்வாகம் எடுக்கின்றது. நான் பிரயாணத்திற்கு மாத்திரம் 600 ரூபா செலவு செய்து 35 கிலோமீற்றர் பயணித்தே இங்கு நாளாந்தம் வருகிறேன். கையில் மீதமாவதைக் கொண்டு என்ன செய்ய முடியும்?
“போரின் போது ஒன்பது வயதாக இருந்த எனது மகனின் தலையைில் காயம் ஏற்பட்டது. தற்போது 29 வயதான அவர், நிரந்தரமான மனநல குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். நான் அவரை தினமும் பராமரிக்க வேண்டும். எனது மகள் பாடசாலை செல்கிறார். அவரின் கல்விச் செலவுகளுக்காக ஒவ்வொரு மாதமும் ஆயிரங்கள் செலவாகின்றன”
அவர் நிர்வாகத்தின் குற்றகரமான அலட்சியத்தையும் சுட்டிக்காட்டினார்.
'எங்களை தொழிலாளர்களைப் போல் நடத்துவதில்லை, அடிமைகளைப் போலவே நடத்துகிறார்கள். எங்களுக்கு அன்றாடம் வேலை கொடுப்பதில்லை; இங்கு சரியான மருத்துவ வசதிகள் கிடையாது. சமீபத்தில் ஒரு தொழிலாளி மீது உப்பு குவியல் சரிந்து விழுந்ததில் காயமடைந்தார். நிர்வாகம் அவரது சிகிச்சைக்கு உதவ மறுத்துவிட்டது.'
சுகந்தன், வேலைத் தளத்தில் ஜனநாயக உரிமைகள் இன்மையைக் கண்டித்தார். “தொழிற்சங்கம் ஒன்றை நிறுவ எம்மை அனுமதிப்பதில்லை. எமக்காக பேச யாரும் கிடையாது. நாம் தொழில் நிரந்தரத்தை கோருகிறோம். எமது உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.”
“அரசாங்கம் தூக்கிப் பிடித்த வீட்டுத் திட்டம் எமது நெருக்கடியை தணிக்க பெரிதும் உதவவில்லை. வெறும் 325,000 ரூபா தந்தார்கள். நான் இந்த வீட்டைக் கட்டி முடிக்க கடன் பெற்றேன். தற்போது மாதாந்தம் 25,000 ரூபா முதல் 30,000 ரூபா வரை திரும்பச் செலுத்துகிறேன். அரசாங்கம் மாறியுள்ளது ஆனால் எமக்கு எதுவும் மாறவில்லை.
பல ஆண்டுகளாக தற்காலிகமாக வேலை செய்யும் 60 வயது கே. மல்லிகாதேவி, இரு பிள்ளைகளின் விதவைத் தாயாவார். “எனது வயதுக்கு நிர்வாகம் தொடர்ந்தும் வேலை தருமோ தெரியாது. எனக்கு வேறு வழியும் இல்லை. கணவர் புற்றுநோயால் இறந்தார். மகன் உயர்தரத்தில் படிக்கின்றார். கல்விச் செலவுக்காக இரு பிள்ளைகளுக்கும் 4,000 ரூபா வேண்டும். பெண்களாக இருந்தாலும் ஒரு ஆண் செய்யும் கடுமையான வேலையைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்,” என அவர் விளக்கினார்.
மிக மோசமான வேலை நிலைமைகளை விபரித்த அவர் கூறியதாவது: 'கொளுத்தும் வெய்யிலில், நாங்கள் தினமும் ஒன்றரை டிராக்டர் உப்பு வெட்டி ஏற்றுகிறோம். பாதுகாப்பு உபகரணங்களுக்கு பற்றாக்குறை உள்ளது. மழை பெய்யும்போது, உப்பு வேலை நிறுத்தப்படும், அந்த நாட்களுக்கு எங்களுக்கு சம்பளம் கிடைப்பதில்லை. உப்பு சுமந்து செல்வதால் என் தோள்கள் வீங்கிவிட்டன. எனக்கு எளிதான வேலையைத் தருமாறு நான் அவர்களிடம் கெஞ்சினேன், ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர்.'
மல்லிகாதேவியும் ஒரு போர் அகதி ஆவார். வீடு கட்டுவதற்காக 5 இலட்சம் ரூபா அவருக்கு வழங்கப்பட்டது. வீடு கட்டுவதற்கு வழங்கப்பட்ட பணம் போதாததால் அவருடைய குடும்பம் முழுமையாக கட்டிமுடிக்கப்படாத வீட்டிலேயே வாழ்ந்து வருகின்றது.