மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஐரோப்பா முழுவதும் சமீபத்தில் நடந்த தேர்தல்களின் முடிவுகள், ஆபத்தான மற்றும் தீவிரமடைந்து வரும் போக்குகளை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன : அவை, அதிதீவிர வலதுசாரிகள் மற்றும் பாசிச சக்திகளின் எழுச்சி, மற்றும் அதிகாரப்பூர்வ அரசியலின் மையத்தில் அவற்றின் ஒருங்கிணைப்பு என்பனவாகும்.
போர்த்துக்கலில், நவ-பாசிசவாத சேகா (Chega) கட்சி 22.6 சதவீத வாக்குகளைப் பெற்று, நாடாளுமன்றத்தில் 58 இடங்களைப் பெற்றுள்ளது. போலந்தில், ஜனாதிபதி தேர்தல்களின் முதல் சுற்றில், மூன்று அதிவலது வேட்பாளர்கள் —கரோல் நவ்ரோக்கி (Karol Nawrocki - PiS), ஸ்லாவோமிர் மென்ட்ஜென் (Sławomir Mentzen, Konfederacja) மற்றும் கிரெஸ்கோர்ஸ் பிறவுன் (Grzegorz Braun) — கூட்டாக 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வென்றுள்ளனர். ருமேனியாவில், ருமேனியர்களின் ஒன்றியத்திற்கான பாசிச கூட்டணியின் (AUR) வேட்பாளரான ஜோர்ஜ் சிமியோன் (George Simion), இரண்டாம் சுற்று ஜனாதிபதி வாக்கெடுப்பில் 46 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இந்த அபிவிருத்திகள் ஒரு அச்சுறுத்தும் வரலாற்று மாற்றத்தைக் குறிக்கின்றன. போர்த்துக்கல்லில், 1974 இல் பாசிச எஸ்டாடோ நோவோ (Estado Novo) ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் முதல் முறையாக அதிதீவிர வலதுசாரிகள் தேசிய அரசியலில் ஒரு தீர்க்கமான இடத்தைப் பிடித்துள்ளனர். ஸ்ராலினிசத்தால் சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய அரசுகள் கலைக்கப்பட்ட பின்னர் “ஜனநாயகம்” ஸ்தாபிக்கப்பட்டதாக கூறப்பட்ட போலந்து மற்றும் ருமேனியாவில்— பாசிச மற்றும் அதிதீவிர-தேசியவாத சக்திகள் இப்போது அரசியல் வாழ்வில் மேலாதிக்கம் செலுத்துகின்றன.
இந்த நிகழ்வுப்போக்கு, கீழிருந்து பாசிச சித்தாந்தத்தின் பாரிய புத்துயிர்ப்பின் விளைபொருளால் ஏற்பட்டது அல்ல. மாறாக, தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது இடைவிடாத தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய முழு அரசியல் ஸ்தாபனமும் வேண்டுமென்றே வலதுபுறம் நோக்கி நகர்ந்ததன் விளைவு ஆகும்.
ஆளும் வர்க்கம் ஒரு சிறிய முதலாளித்துவ தன்னலக்குழுவின் அதிகாரத்தைப் பாதுகாக்க, கீழிருந்து அதிகரித்து வரும் எதிர்ப்புக்கு முகங்கொடுத்து, இனப்படுகொலை கொள்கைகளை நடைமுறைப்படுத்தி, உலகப் போருக்குத் தயாராகி வருவதன் மூலம், அதிகரித்தளவில் சர்வாதிகார மற்றும் பாசிச வழிமுறைகளில் தஞ்சமடைந்து வருகிறது. ஊடகங்களும் அரசியல் உயரடுக்குகளும் நனவுபூர்வமாக அதிவலதுசாரி சக்திகளை இயல்பாக்குகிறார்கள், அவர்களுக்கு தளங்களை வழங்குகிறார்கள், அவர்களின் வாய்வீச்சை ஏற்றுக்கொள்கிறார்கள், அவர்களை அரசாங்கத்திற்குள் கொண்டு வருகிறார்கள் – குறிப்பாக, அமெரிக்காவில் ட்ரம்ப், ஆர்ஜென்டினாவில் மிலெய் மற்றும் இத்தாலியில் மெலோனி ஆகியோர் மிக முக்கியமானவர்கள்.
அனைத்திற்கும் மேலாக, அதிவலதுசாரிகளுக்கு பாதை அமைத்துக் கொடுத்துள்ள “இடது” கட்சிகள் என்றழைக்கப்படுபவை மற்றும் தொழிற்சங்கங்கள் மீதே இதற்கான பொறுப்பு தங்கியுள்ளது. போலி-இடது கட்சிகள் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் நிராயுதபாணியாக்குவதில் ஒரு முக்கியமான பாத்திரத்தை வகித்து வருகின்றன.
போர்த்துக்கலில், சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் அதன் இடது முகமூடியான இடது முகாம் (BE) ஆகியவற்றின் அரசியல் காட்டிக்கொடுப்புக்களால் நவ-பாசிசவாத சேகா கட்சியின் எழுச்சிக்கான பாதை அமைக்கப்பட்டது. முந்தைய சோசலிஸ்ட் கட்சி தலைமையிலான அரசாங்கங்களின் போது, இடது முகாம் சிக்கன வரவு-செலவு திட்டக்கணக்கை ஆதரித்ததுடன், ஐரோப்பிய ஒன்றியத்தால் கட்டளையிடப்பட்ட சமூக வெட்டுக்களைச் செயல்படுத்தவும் உதவியது. இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்குப் பதிலாக, இடது முகாம் எதிர்ப்புகளை மீண்டும் முதலாளித்துவ அரசுக்குள் திருப்பி விட்டது.
இது கிரேக்கத்தின் பேரழிவுகரமான அனுபவத்தைப் பிரதிபலித்தது. அங்கே போலி-இடது சிரிசா அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளைத் திணித்து, ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் பொதுச் சேவைகளை அழித்தது மட்டுமல்லாமல், மாறாக அதிவலது சுதந்திர கிரேக்கர்கள் (ANEL) என்ற கட்சியுடனான கூட்டணியுடன் அவற்றை நடைமுறைப்படுத்தியது.
ஐரோப்பா கண்டம் முழுவதும் இதே வடிவங்கள்தான் மீண்டும் மீண்டும் வருகின்றன.
பிரான்சில், ஜோன்-லூக் மெலன்சோனின் அடிபணியாத பிரான்ஸ் கட்சியின் துரோகங்களையும், சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) உடனான அதன் கூட்டணியையும் பயன்படுத்தி, இம்மானுவேல் மக்ரோன் ஒரு மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகள், புலம்பெயர்ந்தோர் எதிர்ப்புச் சட்டங்கள் மற்றும் பொலிஸ் அடக்குமுறையை செயல்படுத்தியுள்ளார்.
அனைத்திற்கும் மேலாக, 2023ம் ஆண்டு பிரான்சில் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிரான பாரிய வேலைநிறுத்தங்களின் போது, தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட மெலன்சோனின் அடிபணியாத பிரான்ஸ் கட்சி மறுத்தமையானது, மரின் லு பென்னின் அதிவலதின் எழுச்சிக்கான பாதைக்கு வழிவகுத்தது. மக்ரோனின் அரசாங்கம் வீழ்ச்சியை நோக்கி தள்ளாடிக் கொண்டிருந்த போது, புதிய மக்கள் முன்னணியானது (NFP), மரின் லு பென்னின் தேசிய பேரணிக்கு எதிராக, மக்ரோனின் மறுமலர்ச்சிக் கட்சியை ஆதரித்ததன் மூலமாக, மக்ரோனின் அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுத்தது.
இது மக்ரோனைத் தொடர்ந்து அவரது கொள்கையை கட்டளையிட அனுமதித்தது. அதேவேளையில், பொதுத் தேர்தலில் புதிய மக்கள் முன்னணி முதலிடத்தைப் பிடித்திருந்த போதிலும், குறைந்த பெரும்பான்மையுடன் இருந்த மரின் லு பென்னுக்கு, ஆளும் ஸ்தாபனத்திற்கு இருக்கின்ற ஒரே உண்மையான எதிர்ப்பாகக் காட்டிக் கொள்ளும் திறனை வழங்கியது.
ஜேர்மனியில், அதிதீவிர வலதான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சியின் வளர்ச்சியானது, பிரதான கட்சிகளின் ஒட்டுமொத்த உடந்தையின் ஒரு நேரடி விளைபொருளாகும். கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) வலதுசாரி முன்னாள் வங்கியாளர் பிரெடெரிக் மெர்ஸ் தலைமையிலான ஜேர்மனியின் புதிய அரசாங்கம், பாரிய இராணுவ செலவின அதிகரிப்புகள் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான ஒரு ஆக்ரோஷமான போர் முனைவுடன் சேர்ந்து, ஹிட்லரின் மூன்றாம் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிந்தைய ஜேர்மனியின் மிக விரிவான மீள்இராணுவமயமாக்கலை மேற்பார்வை செய்து வருகிறது.
மெர்ஸின் கூட்டணியில் சமூக ஜனநாயகக் கட்சியினர் அடங்குவர், மேலும் பசுமைக் கட்சியினரும் இடது கட்சியும் இதற்கு ஆதரவளிக்கின்றன.
இராணுவவாதம் மற்றும் சிக்கன நடவடிக்கைகளை எதிர்ப்பதற்குப் பதிலாக, இந்தக் கட்சிகள் அவற்றின் முக்கிய பாதுகாவலர்களாக மாறிவிட்டன. சமூக சீர்திருத்தத்திற்கான எந்தவொரு பாசாங்கையும் அவர்கள் கைவிட்டு, ஏகாதிபத்தியப் போரை ஏற்றுக்கொண்டதானது, இன்று AfD ஆக்கிரமித்துள்ள அரசியல் வெற்றிடத்தை உருவாக்குதற்கான நிலைமையை உருவாக்கியுள்ளது.
ஜேர்மன் தேசிய பொருளாதார மற்றும் எரிசக்தி நலன்களின் நிலைப்பாட்டில் இருந்து ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் ஆக்ரோஷத்தை விமர்சித்துவரும், முற்றிலும் இராணுவவாத AfD கூட ஒரு “போர்-எதிர்ப்பு” கட்சியாக காட்டிக் கொள்ளும் அளவுக்கு, பாரம்பரிய கட்சிகளின் போர்வெறி மிகவும் தீவிரமாக உள்ளது.
பிரிட்டனில், தொழிற் கட்சித் தலைவரும் பிரதம மந்திரியுமான கெய்ர் ஸ்டார்மர், தாட்சரிச சிக்கன நடவடிக்கைகளைத் தழுவிக் கொண்ட, நைஜல் ஃபாராஜின் வெளிநாட்டவர் விரோத மனோபாவத்தை எதிரொலிக்கும், இராணுவ செலவினங்களை முன்னெடுக்கும் மற்றும் ரஷ்யாவுடன் ஏகாதிபத்திய போருக்கு அச்சுறுத்தும் ஒரு அரசாங்கத்திற்கு தலைமை கொடுக்கிறார்.
தொழிற்கட்சியின முன்னாள் தலைவரான ஜெர்மி கோர்பினுக்கு அரை மில்லியன் புதிய உறுப்பினர்கள் உட்பட மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு இருந்தபோதிலும், வலதுசாரிகளை விரட்டியடிக்க மறுத்த தொழிற் கட்சியின் “இடதுகள்” ஸ்டார்மரிடம் கட்சியின் தலைமையை ஒப்படைத்தது. பிரிட்டனில் தொழிற் கட்சியை ஒரு உண்மையான தொழிலாளர்’ கட்சியாக மாற்றுவதாக போலி-இடது குழுக்களால் ஊக்குவிக்கப்பட்டன. ஆனால், அதன் தீவிர வலதுசாரி மற்றும் ஏகாதிபத்திய-சார்பு கொள்கைகளை வலுப்படுத்தவே போலி-இடது குழுக்கள் சேவையாற்றி உள்ளன.
இன்றியமையாத மற்றும் அவசரமான படிப்பினைகள் பெறப்பட வேண்டும்: அதிவலதுசாரிகளுக்கு எதிரான போராட்டமானது முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்தின் எந்தவொரு கன்னையுடனும் கூட்டணிகள் அமைப்பதன் மூலமாக தொடுக்கப்பட முடியாது. உத்தியோகபூர்வ “இடது” கட்சிகள் தங்களை தொழிலாள வர்க்கத்தின் ஈவிரக்கமற்ற எதிரிகளாக காட்டிக் கொண்டுள்ளன. கிரீஸில் சிரிசா, போர்த்துக்கலில் இடது அணி, ஜேர்மனியில் இடது கட்சி, பிரான்சில் அடிபணியாத பிரான்ஸ் கட்சி மற்றும் பிரிட்டனில் கோர்பினிஸ்ட் குழுக்கள் போன்ற போலி-இடது மற்றும் ஸ்ராலினிச அமைப்புகள், தொழிலாள வர்க்கத்தை தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் முதலாளித்துவ அரசுக்கும் அடிபணியச் செய்வதற்காக செயல்பட்டு வருகின்றன.
இந்தக் காட்டிக்கொடுப்புகள் தற்செயலானவை அல்ல. மாறாக, இந்தக் கட்சிகள் பிரதிநிதித்துவம் செய்யும் தனிச்சலுகை கொண்ட நடுத்தர வர்க்க சமூக அடுக்கின் பிரதிபலிப்பாகும். அவற்றின் சடரீதியான நலன்கள் முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறையைப் பாதுகாப்பதுடன் பிணைந்துள்ளன.
உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை ஒவ்வொரு நாட்டிலும் கட்டியெழுப்புவது அவசர அவசியமாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே சமூக சமத்துவமின்மை, போர், சர்வாதிகாரம் மற்றும் முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறைக்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த போராடி வருகிறது.
ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய இயக்கத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமாக மட்டுமே பாசிசம் மற்றும் போருக்குள் மனிதகுலம் மீண்டும் வீழ்த்தப்படுவதை தடுத்து நிறுத்த முடியும், மேலும் மனிதகுலத்திற்கு ஒரு உண்மையான எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் முடியும்.