முன்னோக்கு

பாலஸ்தீனப் பிரச்சினைக்கு ஏகாதிபத்தியம் அதன் "இறுதித் தீர்வைத்" தொடங்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

காஸாவில் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், கான் யூனிஸ் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தப்பிச் செல்கின்றனர். மே 19, 2025 திங்கட்கிழமை [AP Photo/Abdel Kareem Hana]

கடந்த வார இறுதியில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF), “கிதியோனின் ரதம்” என்ற இராணுவ நடவடிக்கை முழு அளவில் தொடங்கியுள்ளதாக அறிவித்தன. இந்த நடவடிக்கையை பிரதம மந்திரி பென்ஜமின் நெதன்யாகு காஸா மீதான “இறுதி நகர்வுகள்” என்று விவரித்தார். “இறுதித் தீர்வு” என்ற சொல், ஐரோப்பாவிலிருந்த யூதர்களை திட்டமிட்டு அழித்தொழிப்பதற்கு நாஜி ஜேர்மனி பயன்படுத்திய வார்த்தையை எதிரொலிக்கிறது.

இந்த இராணுவ நடவடிக்கையின் நோக்கம், காஸா பகுதியை முழுமையாக இராணுவ ரீதியாக கைப்பற்றி ஆக்கிரமித்தல், அங்கு மீதமுள்ள மக்களை நாட்டின் தெற்கில் உள்ள வதை முகாம்களுக்கு வலுக்கட்டாயமாக இடம்பெயர வைத்தல், மேலும் பாலஸ்தீனத்திலிருந்து அவர்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்றுவதற்கான தயாரிப்பு ஆகியவையாகும்.

இந்த நடவடிக்கையுடன் சேர்ந்து, சிறைபிடிக்கப்படும் மக்களுக்கான உணவு விநியோகத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக கையகப்படுத்துவதும் நடைபெறும். அமெரிக்க விநியோக நிறுவனங்களும் தனியார் இராணுவ ஒப்பந்ததாரர்களும் முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம் அடையாளம் காணப்பட்ட, முன் பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களுக்கு பட்டினி மட்டத்திலான உணவுப் பொருட்களை விநியோகிப்பர்.

திரைக்குப் பின்னால் ட்ரம்ப் நிர்வாகம், யூத இனப்படுகொலைக்குப் பிறகு, ஏகாதிபத்திய ஆதரவிலான மிகப்பெரிய இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது. படகுகள் அல்லது தரை வழியாக, ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக இடம்பெயர ஏற்றுக்கொள்ள வைப்பதற்காக, அமெரிக்க ஆதரவிலான இஸ்லாமிய கிளர்ச்சிகளால் தூக்கியெறிந்த லிபிய மற்றும் சிரியாவின் ஆட்சியாளர்களுடன் வெள்ளை மாளிகை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது,

இரண்டாம் உலகப் போர் முடிந்து எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு, நாஜி ஜேர்மனி மேற்கொண்ட மிகப்பெரிய குற்றங்களான பாரிய நிர்மூலமாக்கல், திட்டமிட்ட பாரிய பட்டினி மற்றும் இனச் சுத்திகரிப்பு என ஏகாதிபத்திய சக்திகளால் நிகழ்த்தப்பட்டு இயல்பாக்கப்பட்டு வருகின்றன.

யூத இனப்படுகொலையை மேற்கொண்ட நாஜிக்கள் ஜேர்மன் மக்களிடமிருந்தும் உலகத்திடமிருந்தும் அவர்களின் குற்றங்களின் அளவை மறைக்க முனைந்திருந்தனர். ஆனால், காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலை அனைவரின் பார்வையின் முன் அப்பட்டமாக கட்டவிழ்ந்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி, இனச்சுத்திகரிப்பு மற்றும் பாலஸ்தீனத்தை இணைத்துக் கொள்ளுதல் ஆகியவை தனது நிர்வாகத்தின் ஒரு மூலோபாய நோக்கம் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

காஸா இனப்படுகொலை ட்ரம்ப் மற்றும் நெதன்யாகுவால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதேவேளையில் இனப் படுகொலையானது, அனைத்து ஏகாதிபத்திய சக்திகளாலும் பாதுகாக்கப்பட்டு நியாயப்படுத்தப்பட்டு வருவதுடன், முதலாளித்துவ அரபு ஆட்சிகளால் வழிமொழியப்பட்டும் வருகிறது.

ஏகாதிபத்திய அரசாங்கங்கள் இஸ்ரேலுக்கு “தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு” என்று வலியுறுத்துவதன் மூலமாக பாரிய படுகொலை மற்றும் இனச் சுத்திகரிப்பை நியாயப்படுத்தி வருகின்றன. ஐரோப்பா எங்கிலும், ஒவ்வொரு அரசாங்கமும் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களை “யூத-எதிர்ப்புவாதம்” என்று மோசடியாக கண்டனம் செய்து, பெருந்திரளான கைதுகளை நடத்தி வருகின்றன மற்றும் இஸ்ரேலிய அரசு மேற்கொண்டுவரும் குற்றங்களுக்கு எதிராக பேசுபவர்களை துன்புறுத்தியும் வருகின்றன.

ஜேர்மன் சான்சலர் பிரெட்ரிக் மெர்ஸ், நெதன்யாகுவை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை மீறுவதாக சூளுரைத்து, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஜேர்மனிக்கு அழைத்துள்ளார்.

சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான ட்ரம்பின் விஜயம், காஸா இனப்படுகொலையில் அரபு ஆட்சிகளின் உடந்தையை உலகம் முழுவதும் காட்சிப்படுத்தியுள்ளது. காஸாவை அழிப்பதற்காக ட்ரம்ப் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள குண்டுகளை இஸ்ரேலுக்கு அனுப்பி வருகின்ற நிலையில், கட்டார் அரச குடும்பம் ட்ரம்புக்கு 400 மில்லியன் டாலர் மதிப்பிலான தனியார் ஜம்போ ஜெட் விமானத்தை பரிசாக வழங்கியுள்ளது.

பாலஸ்தீனியர்கள் பட்டினியால் வாடுவதைக் கண்டித்து சம்பிரதாய சார்பு அறிக்கைகளை வெளியிட்ட போதிலும், அரபு ஆட்சிகள் இனப்படுகொலை மற்றும் காஸாவில் மக்களை பலவந்தமாக இடம்பெயர வைப்பதில் உடந்தையாக இருந்து வருகின்றன.

பத்திரிகையாளர் பாப் உட்வார்ட் தனது போர் என்ற புத்தகத்தில் விவரித்தபடி, ஜோர்டானிய மன்னர் இரண்டாம் அப்துல்லா 2023 இல். வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனிடம் “இஸ்ரேல் ஹமாஸை தோற்கடிக்க வேண்டும். இதை நாங்கள் பகிரங்கமாக சொல்ல மாட்டோம், ஆனால் ஹமாஸின் தோல்வியை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்று கூறியுள்ளார். இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை படுகொலை செய்து கொண்டிருந்த போதிலும் கூட, எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா எல்-சிசி பிளிங்கனிடம் அவரது ஆட்சி “இஸ்ரேலுடன் அமைதியைப் பேண மட்டுமே விரும்புகிறது” என்று கூறியதாகவும் பத்திரிகையாளர் உட்வார்ட் எழுதினார்.

நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையின் முன்னால் “சர்வதேச சட்டத்தின்” அமைப்புகள் முற்றிலும் திவாலாகி விட்டன என்பதை நிரூபித்துள்ளன. அரை நூற்றாண்டு கால ஏகாதிபத்திய ஆதரவிலான “சமாதானத் திட்டங்கள்”, ஐ.நா. பொதுச் சபை மற்றும் பாதுகாப்புச் சபையில் எண்ணற்ற வாக்குகள், சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுக்கள் ஆகியவை முற்றிலும் அர்த்தமற்றவை என்று நிரூபணமாகியுள்ளன.

காஸாவில் கட்டவிழ்ந்து வரும் இனப்படுகொலை, அது மிகப்பெரியளவிலான ஒரு குற்றம், மிகவும் நீண்டகால அரசியல் தாக்கங்களைக் கொண்டுள்ளது. இது ஏகாதிபத்தியத்தையும் அனைத்து “ஜனநாயக” முதலாளித்துவ அரசாங்கங்களின் இன்றியமையாத இயல்பையும் அம்பலப்படுத்துகிறது. 1916 முதலாம் உலகப் போரின் மத்தியில், லெனினால் எழுதப்பட்ட ஏகாதிபத்தியம் குறித்த அவரது அழிக்கவியலாத பகுப்பாய்வில், முதலாளித்துவ ஜனநாயகங்களுக்கும் பழைய முடியாட்சி எதேச்சாதிகாரங்களுக்கும் இடையிலான வேறுபாடு துடைத்தெறியப்பட்டு வருவதாக அவர் எச்சரித்தார். ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், மனித உரிமைகளின் பாதுகாவலர்கள் என்று தன்னைத்தானே பிரகடனப்படுத்திக் கொண்ட நவீன ஏகாதிபத்திய ஆட்சிகள், ஒட்டுமொத்த மக்கள் மீதான பாரிய படுகொலையை நியாயப்படுத்துகின்றன, ஆதரிக்கின்றன மற்றும் பாராட்டவும் கூட செய்கின்றன.

இனப்படுகொலையை இயல்பாக்குவது என்பது, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைதல், தொழிலாள வர்க்கத்தின் வறுமை மற்றும் ஏகாதிபத்திய அரசாங்கங்களின் போர்த் திட்டங்கள் ஆகியவற்றின் பிரிக்க முடியாத கூறுபாடாகும். வாஷிங்டன் முதல் பேர்லின் வரை, லண்டன் முதல் டோக்கியோ வரை, ஒவ்வொரு ஏகாதிபத்திய தலைநகரிலும், அரசாங்கங்கள் சமூகத் திட்டங்களை வெட்டிக்குறைக்கும் அதே வேளையில் இராணுவச் செலவினங்களை பெருமளவில் அதிகரித்து வருகின்றன.

ஒவ்வொரு ஏகாதிபத்திய அரசாங்கத்தின் தலைவர்களும் —மற்றும் அவர்களின் மத்திய கிழக்கு ஆதரவு ஆட்சிகளும்— இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலையை ஆதரிக்கின்ற அதேவேளையில், உலக மக்களில் மிகப் பெரும்பான்மையினர் இத்தகைய குற்றங்களால் பீதியடைந்துள்ளனர். உலகெங்கிலுமான நகரங்கள் மற்றும் சிறுநகரங்களில், எண்ணற்ற ஆயிரக்கணக்கான யூதர்கள் உட்பட மில்லியன் கணக்கான மக்கள் காஸா இனப்படுகொலைக்கு எதிரான பாரிய போராட்டங்களில் இணைந்துள்ளனர். இனப்படுகொலையால் சீற்றமடைந்துள்ள உலக மக்களின் பெருந்திரளுக்கும் அவர்களின் அரசாங்கங்களுக்கும் இடையே இணைக்க முடியாத பிளவு உருவாகியுள்ளது.

இனப்படுகொலை தொடங்கி பத்தொன்பது மாதங்கள் கடந்துள்ள நிலையில், சில அடிப்படை முடிவுகளுக்கு வருவது அவசியமாகிறது. முதலும் முக்கியமானதுமாக, ஏகாதிபத்திய சக்திகளுக்கு அல்லது சர்வதேச சட்ட நிறுவனங்களுக்கு முறையீடு செய்வதன் மூலமாக காஸா இனப்படுகொலையை நிறுத்துவது சாத்தியமற்றது. காஸாவில் நடைபெறும் படுகொலைகளைத் தடுத்து நிறுத்துவதற்கான ஒரே வழி, தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதே ஆகும். காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டமானது, வர்க்கப் போராட்டத்தின் விரிவாக்கத்தையும் தொழிலாள வர்க்கத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதையும் சார்ந்துள்ளது.

Loading