மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்திற்குப் பிறகு, பாலஸ்தீன மக்களை அவர்களின் பாரம்பரிய தாயகத்திற்கு வெளியே வலுக்கட்டாயமாக இடம்பெயர வைக்கும் அமெரிக்காவின் மிக முன்னேறிய திட்டத்திற்கு மத்தியில், இஸ்ரேல் காஸா மீதான “இறுதி” வெற்றியை அறிவித்துள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் பாலஸ்தீனியர்கள் மீது பட்டினியையும் படுகொலைகளையும் திணித்து வருவது குறித்த செய்திகள் ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இருந்து நீக்கப்பட்டாலும், எண்ணற்ற முதல் பக்க கட்டுரைகள் இரண்டு அரசாங்கங்களுக்கும் இடையிலான “பதட்டங்களுக்கு” மத்தியில், இஸ்ரேலுக்கு விஜயம் செய்யாமல் பெஞ்சமின் நெதன்யாகுவை ட்ரம்ப் “அலட்சியப்படுத்தியதை” சித்தரித்தன.
இது, வாஷிங்டன் போஸ்ட் ஆசிரியர் குழு, —பல உதாரணங்களில் ஒன்று— ட்ரம்பின் “வழக்கத்திற்கு மாறான” இராஜதந்திரத்தின் அடிப்படையில், அவரது விஜயம் வெற்றிகள் நிறைந்ததாகப் பாராட்டுவதற்கான அரசியல் இடத்தை உருவாக்கியது. மேலும், அல்-கொய்தாவுடன் தொடர்புடைய சிரியா அரசாங்கத்துடனான உறவுகளை அவர் “பாராட்டத்தக்க” வகையில் இயல்பாக்கியதையும், பிராந்தியம் முழுவதும் அவர் “நல்ல முன்னேற்றம்” கண்டதையும் தி போஸ்ட் பாராட்டியது.
எவ்வாறிருந்த போதிலும், காஸாவில் நெதன்யாகு அரசாங்கம் எதை “இறுதி நகர்வுகள்” என்று அழைத்ததோ அதற்கான இராஜாங்க அடித்தளத்தை அமைப்பதே ட்ரம்ப்பின் இந்த பயணத்தின் ஒரு பிரதான நோக்கமாக இருந்தது: அதாவது, இஸ்ரேலிய இராணுவம் அப்பகுதியை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிப்பதுக்கு, பாலஸ்தீனிய மக்களை ஆயுதமேந்திய தடுப்பு சித்திரவதை முகாம்களுக்கு உள்நாட்டில் இடம்பெயர வைப்பது, மேலும் காஸாவில் இருந்து பாலஸ்தீனியர்களை பலவந்தமாக வெளியேற்றுவது ஆகியவையாகும்.
மே 5 அன்று, “கிதியோனின் ரதம்” (Gideon’s Chariots) என்ற இராணுவ நடவடிக்கையை அறிவித்த நெதன்யாகு, இது ட்ரம்ப் மத்திய கிழக்கிலிருந்து வெளியேறிய பிறகு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்தார். கடந்த ஞாயிறன்று, இஸ்ரேலிய இராணுவம் வடக்கு காஸாவில் பெரும் புதிய தரைப்படைத் தாக்குதல்கள், பாரிய குண்டுவீச்சுகள் மற்றும் கூடுதல் இடப்பெயர்வு உத்தரவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய நடவடிக்கையின் முழு அளவிலான தொடக்கத்தை அறிவித்தது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 144 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த வாரத்தில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுபவர்களில், அக்டோபரில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட யஹ்யா சின்வாரின் சகோதரர் ஹமாசின் தலைவர் முகமது சின்வார் அடங்குவார். முகமது சின்வாரின் கொலை பல செய்தி வெளியீடுகளால் அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் இன்னும் இதுபற்றி உறுதிப்படுத்தப்படவில்லை.
“கிதியோனின் இரதம்” என்ற இராணுவ நடவடிக்கையின் உள்ளடக்கம் மே 6 அன்று இஸ்ரேலிய நிதி மந்திரி பெசலெல் ஸ்மோட்ரிச்சால் உச்சரிக்கப்பட்டது. அவர் பின்வருமாறு அறிவித்தார்:
ஓராண்டிற்குள், காஸா முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிடும், குடிமக்கள் தெற்கில் இருந்து ஒரு மனிதாபிமான பகுதிக்கு அனுப்பப்படுவார்கள், அங்கிருந்து அவர்கள் பெரும் எண்ணிக்கையில் மூன்றாம் நாடுகளுக்கு வெளியேறத் தொடங்குவார்கள்.
இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டவுடன், இஸ்ரேலிய அரசாங்கத்திடமிருந்து உற்சாகமான பிரகடனங்களும் வந்தன. அவை, அமெரிக்க ஊடக சுருக்கெழுத்தாளர்களால் கடமையுணர்வுடன் அறிவிக்கப்பட்டன. “இந்த தருணத்திலும் கூட, டோஹாவில் உள்ள பேச்சுவார்த்தை குழு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு உடன்பாட்டிற்கான ஒவ்வொரு சாத்தியக்கூறையும் பயன்படுத்த வேலை செய்து கொண்டிருக்கிறது”. ஆனால் இந்த “ஒப்பந்தத்தின்படி, ஹமாஸ் பயங்கரவாதிகளை நாடுகடத்துவதும் மற்றும் காஸா பகுதியை நிராயுதபாணியாக்குவதும்” தேவைப்படும் என்பதை நெதன்யாகு அரசாங்கம் தெளிவுபடுத்தியது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஹமாஸ் பேச்சுவார்த்தையாளர்கள் தங்கள் சொந்த மரண உத்தரவுகளில் கையெழுத்திட வேண்டும்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில், மற்ற முக்கிய ஊடகங்களிலிருந்து எந்த செய்தியும் இடம்பெறாத ஒரு உன்னதமான “வெள்ளிக்கிழமை இரவு செய்தி குப்பையில்” NBC “1 மில்லியன் பாலஸ்தீனியர்களை லிபியாவிற்கு நகர்த்துவதற்கான திட்டத்தில் ட்ரம்ப் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது” என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டது.
ட்ரம்ப் மத்திய கிழக்கில் இருந்த சமயத்தில், அவரது நிர்வாகம் லிபியா மற்றும் சிரியாவுடன் முன்கூட்டியே பேச்சுவார்த்தைகளில் இருந்தது என்பதை அந்தக் கட்டுரை வெளிப்படுத்தியது. இந்த இரண்டு நாடுகளின் அரசாங்கங்களும் அமெரிக்க-ஆதரவிலான இஸ்லாமிய கிளர்ச்சிகளால் தூக்கியெறியப்பட்டன.
அந்த ஒளிபரப்பாளர் கூறியதாவது:
காஸா பகுதியிலிருந்து லிபியாவுக்கு 1 மில்லியன் பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக குடியமர்த்தும் திட்டத்தில் ட்ரம்ப் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இந்த முயற்சியை அறிந்த ஐந்து பேர் என்.பி.சி நியூஸிடம் தெரிவித்தனர். ... டிசம்பரில் பஷர் அல்-அசாத் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து புதிய தலைமையைக் கொண்டுள்ள சிரியா, தற்போது காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களை மீள்குடியேற்றுவதற்கான சாத்தியமான இடமாக விவாதிக்கப்படுகிறது.
NBC செய்தி தெரிவித்ததாவது.
பாலஸ்தீனியர்களை மீள்குடியேற்றுவதற்கு ஈடாக, நிர்வாகம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அமெரிக்கா முடக்கிய பில்லியன் கணக்கான டாலர் நிதியை லிபியாவிற்கு விடுவிக்க வாய்ப்புள்ளது.
யூத இனப்படுகொலைக்குப் பின்னர், எந்தவொரு ஏகாதிபத்திய சக்தியாலும் மேற்கொள்ளப்பட்ட எதையும் போலல்லாத அமெரிக்க இனச்சுத்திகரிப்பு திட்டங்களின் அளவைப் பற்றிய பயங்கரமான விவரங்களை கட்டுரை விவரிக்கிறது. “நிர்வாக அதிகாரிகள் அவர்களை [பாலஸ்தீனியர்களை] தங்க வைப்பதற்கான விருப்பங்களையும், காஸாவில் இருந்து லிபியாவிற்கு - வான், நிலம் மற்றும் கடல் வழியாக - கொண்டு செல்வதற்கான அனைத்து சாத்தியமான முறைகளையும் பரிசீலித்து வருவதாக” NBC குறிப்பிட்டது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2011 ஆம் ஆண்டு லிபியாவின் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிக்க மத்தியதரைக் கடலில் பொதுமக்களை ஏற்றிச் செல்ல அமெரிக்கா இறுதியாக தயாரித்து பயன்படுத்திய, சில படகுகளில் 2,000 பேர் வரை பயணிக்க முடியும். அந்தக் கப்பல்களைப் பயன்படுத்தினால், —அவை எரிபொருள் நிரப்ப வேண்டிய அவசியமில்லை மற்றும் வானிலை நிலைமைகள் நன்றாக உள்ளன என்று வைத்துக் கொண்டால்— காஸாவில் இருந்து பெங்காசிக்கு 1 மில்லியன் மக்கள் வரை பயணிக்க ஒரு நாளைக்கு மேல் நூற்றுக்கணக்கான பயணங்கள் தேவைப்படும்.
அமெரிக்க ஊடகங்களால் கற்பனை என்று நிராகரிக்கப்பட்ட போதிலும், காஸாவை இனரீதியில் சுத்திகரித்து இணைத்துக் கொள்வதற்கான ட்ரம்பின் தொடர்ச்சியான திட்டங்கள், ட்ரம்ப் நிர்வாகத்தால் மிகுந்த தீவிரத்துடன் எடுத்துக் கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை அக்கட்டுரை தெளிவுபடுத்துகிறது. “விவாதத்தின் கீழ் உள்ள திட்டம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் போருக்குப் பிந்தைய காஸாவுக்கான பார்வையின் ஒரு பகுதியாகும்” என்று NBC செய்தி வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 5 அன்று, நெதன்யாகு உடனான வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் ட்ரம்ப், “அமெரிக்கா காஸா பகுதியைக் கைப்பற்றும், மேலும் அதனுடன் நாங்கள் ஒரு வேலையைச் செய்வோம். ... நாங்கள் அந்தப் பகுதியைக் கைப்பற்றப் போகிறோம் ... நாங்கள் அதை உருவாக்கப் போகிறோம்” என்று அறிவித்தார். நான்கு நாட்களுக்குப் பின்னர், பிப்ரவரி 9 அன்று, “ஆனால் நாங்கள் அதை சொந்தமாக்கிக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம், அதை எடுத்துக்கொள்வோம்” என்று அவர் தெளிவுபடுத்தினார். பிப்ரவரி 11 அன்று, ஜோர்டானின் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், “நாங்கள் எதையும் வாங்கப் போவதில்லை. நாங்கள் அதை [காஸாவை] கைப்பற்றப் போகிறோம், நாங்கள் அதைத் தக்க வைத்துக் கொள்ளப் போகிறோம்” என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒரு முக்கிய மாற்றம், அமெரிக்காவை தளமாகக் கொண்ட “காஸா மனிதாபிமான அறக்கட்டளையால்” நிர்வகிக்கப்படும் காஸாவில் உணவுப் பொருட்களை வழங்குவதை முழுமையாகக் கையகப்படுத்தும் அமெரிக்க-இஸ்ரேலிய திட்டமாகத் தெரிகிறது;
இந்த “அறக்கட்டளை” “மே 24 இல் இருந்து மனிதாபிமான உதவிகளை விநியோகிக்கத் தொடங்கும்” என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியதாக இஸ்ரேல் இராணுவ வானொலி கடந்த வாரயிறுதியில் மேற்கோளிட்டது.
காஸா பகுதியின் முழுமையான ஆக்கிரமிப்புக்கு ஒரு மறைப்பாக இந்த “மனிதாபிமான” நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது. ஈராக்கில் வார இறுதியில் நடந்த அரபு லீக் உச்சி மாநாட்டில் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியதாவது:
சர்வதேச சட்டம் மற்றும் மனிதநேயம், பாரபட்சமின்மை, சுதந்திரம் மற்றும் நடுநிலைமை ஆகிய மனிதாபிமானக் கோட்பாடுகளைப் பின்பற்றாத எந்தவொரு உதவி நடவடிக்கையிலும் ஐ.நா பங்கேற்காது என்பதை நான் வலியுறுத்துகிறேன்.
இஸ்ரேல் “மக்களுக்கு ஒரு அடிப்படை அளவு உணவையே வழங்கும்” என்று ஞாயிறன்று நெதன்யாகு அலுவலகம் அறிவித்ததன் அர்த்தம் இதுதான். அமெரிக்க “அழுத்தம்” காரணமாக ஒரு “திருப்புமுனை” என்று அமெரிக்க ஊடகங்களால் சித்தரிக்கப்பட்ட இந்த அறிவிப்பு, உண்மையில், இன சுத்திகரிப்பு தாக்குதலின் பாகமாக காஸா பகுதியை இராணுவரீதியில் ஆக்கிரமிக்கும் அமெரிக்க-இஸ்ரேலிய திட்டத்தின் ஒரு மத்திய கூறுபாடாகும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, காஸா இனப்படுகொலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 53,339 ஐ எட்டியுள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மார்ச் 2 முதல், காஸாவிற்கு உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரம் எதுவும் வரவில்லை, இதனால் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது.
கடந்த வாரம், ஐ.நா ஆதரவிலான ஒருங்கிணைந்த உணவு பாதுகாப்பு கட்ட வகைப்பாடு (IPC) என்ற அமைப்பானது, காஸாவின் முழு மக்களும் “கடுமையான பஞ்சத்தின் ஆபத்தில்” இருப்பதாக எச்சரித்தது. காஸாவில் 244,000 பேர் ஏற்கனவே உணவுப் “பேரழிவுக்கு” முகங்கொடுத்து வருவதாக அந்த அறிக்கை கண்டறிந்தது. இது பாரிய பட்டினியின் மிக மோசமான வகைப்பாடு ஆகும். இது அக்டோபர் 2024 இல் IPCயின் முந்தைய அறிக்கையை விட 85 சதவீதம் அதிகமாகும்.
வார இறுதியில், ஒரு “கொடூரமான மைல்கல்லாக” UNRWA உதவி நிறுவனத்தின் 300 ஊழியர்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் பிலிப் லாசரினி ட்விட்டரில் ஒரு பதிவில் பின்வருமாறு எழுதினார் :
பெரும்பாலான ஊழியர்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் அவர்களின் குழந்தைகள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் கொல்லப்பட்டனர்: அவர்களின் முழுக் குடும்பங்களும் அழிக்கப்பட்டன. ... கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஐ.நா. சுகாதார ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களாவர்.