ட்ரம்ப் மத்திய கிழக்கில் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில், இஸ்ரேல் காஸா மீது குண்டுவீச்சுக்கள், வலுக்கட்டாய இடம்பெயர்வுகள் மற்றும் பஞ்சத்தை அதிகரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

காஸா நகரின் ரிமால் பகுதியில் உள்ள பல பாடசாலைகள் மற்றும் ஒரு மருத்துவமனைக்கு இஸ்ரேலிய இராணுவம் வெளியேற்ற எச்சரிக்கை விடுத்ததை அடுத்து பாலஸ்தீனியர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். மே 14, 2025 புதன்கிழமை [AP Photo/Jehad Alshrafi]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் நிலையில், இஸ்ரேல் காஸாவில் அதன் பாரிய படுகொலைகளைத் தீவிரப்படுத்தி, இரண்டு மருத்துவமனைகள் மீது குண்டுவீசியதுடன், ஒரே நாளில் குறைந்தபட்சம் 80 பேரைக் கொன்றுள்ளது.

கடந்த செவ்வாயன்று, இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெதன்யாகு காஸா மீதான இராணுவ ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதாக சூளுரைத்தார். “வரும் நாட்களில், முழுப் பலத்துடன்... நடவடிக்கையை முடிப்பதற்கு நாங்கள் உள்ளே செல்வோம்” என்று உறுதியளித்தார்.

மேலும், “நாங்கள் போரை நிறுத்தும் சூழ்நிலை இருக்காது” என்று அவர் கூறினார். காஸாவை இனரீதியில் சுத்திகரிப்பதற்கான அவரது திட்டத்தை நெதன்யாகு இரட்டிப்பாக்கி, தனது அரசாங்கம் “[பொதுமக்கள்] காஸாவை விட்டு வெளியேற அனுமதிக்கும் ஒரு நிர்வாகக் குழுவை அமைத்துள்ளது” என்று அறிவித்தார்.

நெதன்யாகுவுக்கும் ட்ரம்புக்கும் இடையே ஒரு “விரிசல்” இருப்பதாக பல ஊடக அறிக்கைகள் இருந்தபோதிலும், ட்ரம்ப் இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேலுக்கு செல்லவில்லை. சவூதி அரேபியா மற்றும் வளைகுடா முடியாட்சிகளுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகள் இஸ்ரேலின் நலன்களுக்கானவை என்பதை ட்ரம்ப் தெளிவுபடுத்தியிருந்தார்.

“அடிப்படையில், மத்திய கிழக்கு நாடுகள் அனைத்துடனும் எனக்கு இருப்பது போன்ற உறவைக் கொண்டிருப்பது இஸ்ரேலுக்கு நல்லது” என்று ட்ரம்ப் கூறினார்.

புதனன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் ஹெவிட் பொலிட்டிகோவிற்கு கூறுகையில், “இஸ்ரேல் அதன் வரலாற்றில் ஜனாதிபதி ட்ரம்பை விட, ஒரு சிறந்த நண்பரை பெற்றிருக்கவில்லை” என்று கூறினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை, கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீனிய பத்திரிகையாளர் ஹசன் அஸ்லிஹ் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் இரண்டு நோயாளிகள் கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்தனர். அதேநாளில் நடந்த வேறொரு தாக்குதலில், இஸ்ரேலியப் படைகள் தெற்கு காஸாவில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனையின் முற்றத்திற்கு ஒன்பது ஏவுகணைகளை வீசியதில் 28 பேர் கொல்லப்பட்டதோடு, 60 பேர் காயமுற்றனர்.

போர் தொடங்கியதில் இருந்து காஸாவில் இஸ்ரேலிய தாக்குதல்களால் கொல்லப்பட்ட 160 பத்திரிகையாளர்களில் அஸ்லிஹ் ஒருவர்.

கடந்த செப்டம்பர் மாதம், காஸாவின் சுகாதாரப் பாதுகாப்பு முறையை அழிக்கும் ஒருங்கிணைந்த கொள்கையின் ஒரு பகுதியாக இஸ்ரேல் மருத்துவமனைகளை மீண்டும் மீண்டும் தாக்கி வருவதாக ஐ.நா. விசாரணை ஆணையம் முடிவு செய்தது.

புதன்கிழமை காலை முதல் தொடர்ந்து நடந்த படுகொலைகளில் 80 பேர் கொல்லப்பட்டனர். ஜபாலியா மீதான இஸ்ரேலிய குண்டுவீச்சைத் தொடர்ந்து 22 குழந்தைகள் மற்றும் 15 பெண்கள் உட்பட 50 உடல்கள் ஒரே இரவில் கிடைத்ததாக வடக்கு காஸாவில் இருக்கும் இந்தோனேசிய மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்தோனேசிய மருத்துவமனையின் அவசரகால மருத்துவர் முகமது அவாத் AFP செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “மரணித்தவர்களின் உடல்கள் மருத்துவமனை தாழ்வாரங்களில் தரையில் கிடக்கின்றன” என்று குறிப்பிட்டார்.

“போதுமான படுக்கைகள் இல்லை, மருந்துகள் இல்லை, அறுவை சிகிச்சை அல்லது மருத்துவ சிகிச்சைக்கு வழி இல்லை, இதனால் மருத்துவர்களால் இறந்து கொண்டிருக்கும் பல காயமடைந்தவர்களைக் காப்பாற்ற முடியவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.

“இந்த தாக்குதல்கள் வெறுமனே உள்கட்டமைப்பு அல்லது சுகாதார வசதிகளை மட்டும் இலக்காகக் கொண்டவை அல்ல” என்று யூரோ-மெட் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு மருத்துவமனையில் இடம்பெற்ற படுகொலை தொடர்பாக பதிலளித்தது. “இவை மெதுவான மரணத்தை ஏற்படுத்த வடிவமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. குடிமக்கள் உயிர்வாழ்வதற்கான மிக அடிப்படையான வழிகளைக் கூட இழந்து, அவர்கள் உயிர் வாழ்வதற்கான எந்த வாய்ப்பையும் இல்லதொழிப்பதன் மூலம் காஸாவை முழுமையான வீழ்ச்சியை நோக்கித் தள்ளுகின்றன. இது, காஸாவில் பாலஸ்தீன மக்களின் இருப்பை அதன் அடித்தளங்களில் இருந்து வேரறுப்பதற்கான ஒரு திட்டமிட்ட மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும்” என்று யூரோ-மெட் குறிப்பிட்டது.

புதன்கிழமை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தின் போது, ஐ.நா.வின் மனிதாபிமான உதவிகள் தொடர்பான தலைவர் டாம் பிளெட்சர், இஸ்ரேல் “ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனிய பிராந்தியத்தில் உள்ள பொதுமக்கள் மீது வேண்டுமென்றே மற்றும் வெட்கமின்றி, மனிதாபிமானமற்ற நிபந்தனைகளை திணிக்கிறது” என்று கூறினார்.

“காஸாவின் மருத்துவ முறையில் எஞ்சிய பகுதிகளைப் பார்வையிட்ட பிறகு, இந்த அளவிலான மரணத்திற்கு ஒரு ஒலியும் வாசனையும் உள்ளது, அது உங்களை விட்டு நீங்காது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல முடியும்” என்று அவர் குறிப்பிட்டார்.

“அப்பாவி பொதுமக்களின் உயிர்களிலும் பார்க்க, மக்கள்தொகையை காஸாவிலிருந்து அகற்றுவதையும், பட்டினியை ஒரு பேரம் பேசும் பொருளாக மாற்றுவதையும் இஸ்ரேல் தனது நோக்கமாகக் கொண்டுள்ளதாக” அவர் குற்றம் சாட்டினார்.

செவ்வாயன்று மேலும் பாரியளவில் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளைத் தொடங்கிய இஸ்ரேல், ஜபாலியா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு “இறுதி எச்சரிக்கையை” விடுத்தது. அடுத்த நாள் காஸா நகரத்தில் இருந்து மேலும் பாரிய வெளியேற்றங்களை அது அறிவித்தது.

இஸ்ரேலின் சமீபத்திய வெளியேற்ற உத்தரவுகள் காஸா மக்கள்தொகையில் இன்னும் கூடுதலாக 20 சதவீதத்தினரை இடம்பெயரச் செய்துள்ளது. காஸா பகுதியில் இருக்கும் 70 சதவீதத்தினர் பலவந்தமாக “வெளியேற்றப்படும்” உத்தரவுகளின் கீழ் உள்ளனர்.

மார்ச் 2 அன்று, இஸ்ரேல் ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை முறித்துக் கொண்டதில் இருந்து காஸாவிற்கு உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரத்தை வழங்கவில்லை. இதன் விளைவாக, காஸாவில் உள்ள அனைத்து ஐ.நா.வின் ரொட்டிக் கடைகளும் மூடப்பட்டுவிட்டன. காஸாவின் 180 சமூக சமையலறைகளில் 60 சதவிகிதத்திற்கும் மேலானவை மூடப்பட்டுவிட்டன.

கடந்த திங்களன்று, ஐ.நா ஆதரவு பெற்ற ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு அமைப்பு (IPC) காஸாவிலுள்ள முழு மக்களும் “கடுமையான பஞ்ச அபாயத்தில்” இருப்பதாக எச்சரித்தது. “அரை மில்லியன் மக்கள் —ஐந்தில் ஒருவர்— பட்டினியை முகங்கொடுத்து வருகின்ற நிலையில், ஒட்டுமொத்த மக்களும் உயர்ந்த மட்டத்திலான கடுமையான உணவுப் பாதுகாப்பின்மைக்கு முகங்கொடுத்து வருகின்றனர்,” என்று அது குறிப்பிட்டது.

புதன்கிழமை, காஸாவில் உள்ள அனைத்து உணவு விநியோகத்தையும் கையகப்படுத்தத் திட்டமிட்டுள்ள அமெரிக்க ஆதரவு பெற்ற அமைப்பு ஒன்று, இந்த மாதம் அதன் நடவடிக்கைகளைத் தொடங்கும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தின் இராணுவ மேற்பார்வையின் கீழ், அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களால் ரோந்து செல்லப்படும் பாதுகாப்பான விநியோக தளங்களிலிருந்து “காஸா மனிதாபிமான அறக்கட்டளை” உணவு விநியோகத்தைத் தொடங்கும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் திட்டமானது, இந்த மாத தொடக்கத்தில் நெதன்யாகு அரசாங்கத்தால் காஸா பகுதி முழுவதையும் இராணுவ ரீதியாக ஆக்கிரமித்து, காஸாவின் மக்களை அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்கான தயாரிப்பாக மக்களுக்கு பட்டினிப் பொருட்களை வழங்குவதாக அறிவித்த திட்டத்துடன் ஒத்துப்போகிறது.

பிபிசி உடனான ஒரு நேர்காணலில், ஐ.நா மனிதாபிமான செய்தித் தொடர்பாளர் ஓல்கா செரெவ்கோ இந்த திட்டத்தை கண்டித்ததோடு, இஸ்ரேல் “ஒரு இராணுவ மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, உணவு மற்றும் எரிபொருளை நெம்புகோலாக பயன்படுத்த விரும்புகிறது” என்று கூறினார். “அனைத்து உதவிகளும் விரல்விட்டு எண்ணக்கூடிய இராணுவமயப்பட்ட மையங்கள் மூலமாக அனுப்பப்படும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். இதற்கிடையில், ஆக்ஸ்ஃபோம் அறக்கட்டளை இந்த முன்மொழிவை ஒரு “கேலிக்கூத்து” என்று கண்டித்ததோடு, “வலுக்கட்டாயமாக இடம்பெயர்வு மற்றும் பட்டினியை ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தும் இஸ்ரேலின் மூலோபாயத்தை எந்த தீர்வும் நிவர்த்தி செய்யப் போவதில்லை,” என்று கூறியது.

“காஸாவில் பாலஸ்தீன மக்களின் வாழ்க்கையை ஒழிப்பதற்கான நிலைமைகளை உருவாக்குவதன்” ஒரு பகுதியாக இந்தத் திட்டம் இருப்பதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு (MSF) ஒரு தனி அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை “காஸாவில் பாலஸ்தீன மக்களை இன ரீதியாக சுத்திகரிப்பதற்கு நடந்து வரும் தாக்குதலின் மற்றொரு கருவி” என்று அது குறிப்பிட்டது.

“உதவிகள் கிடைப்பதை மேலும் குறைக்கும் மற்றும் அதை இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பு நோக்கங்களுக்கு அடிபணியச் செய்யும் எந்தவொரு திட்டத்தையும் MSF உறுதியாக நிராகரிக்கிறது மற்றும் கண்டிக்கிறது” என்று அது மேலும் கூறியது. கடந்த இரண்டு வாரங்களில் காஸாவில் பதிவான ஊட்டச்சத்து குறைபாடு நோயாளிகளின் எண்ணிக்கை 32 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

“பாலஸ்தீனியர்களின் உயிர்பிழைப்பு, இஸ்ரேலிய அதிகாரிகளின் கருணையில் தங்கியுள்ளது, அவர்கள் ஒட்டுமொத்த மக்களுக்கும் உணவு, தண்ணீர், மருத்துவ பராமரிப்பு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை வழங்குவதற்கு மறுத்து வருகின்றனர். வாழ்வதற்கு அவசியமான நிலைமைகளை வேண்டுமென்றே அழிப்பதன் மூலமாக இஸ்ரேல் அதன் இனச்சுத்திகரிப்பு தாக்குதலைத் தொடர்கிறது” என்று MSF தெரிவித்தது.

இஸ்ரேலிய அரசு சாரா நிறுவனமான கிஷா, அமெரிக்க ஆதரவுடன் இயங்கும் இந்த அறக்கட்டளையை உருவாக்குவதைக் கண்டித்து, “மக்களை வலுக்கட்டாயமாக இடம்பெயர வைப்பதற்கும், அதே நேரத்தில் அவர்களை தீங்கு விளைவிக்கும் அபாயத்திற்குள் தள்ளுவதற்கும்” இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தனி அறிக்கையில் தெரிவித்துள்ளது. “இந்தத் திட்டம், இந்தப் பகுதியின் மீதான கட்டுப்பாட்டை பலப்படுத்துவதையும், மக்களையும் அவர்களுக்கு நிவாரணம் வழங்க முயற்சிக்கும் எவர் கழுத்தையும் நெரிப்பதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் அடுத்த படியாகும்” என்று அது மேலும் தெரிவித்தது.

பாலஸ்தீனிய அரசு சாரா வலையமைப்பின் தலைவர் அம்ஜத் ஷாவா, அல் ஜசீராவுக்கு அளித்த ஒரு பேட்டியில், “உதவிகளை விநியோகிப்பதற்கான இந்த இராணுவத் திட்டம், பாலஸ்தீனியர்களை காஸாவின் வடக்கில் இருந்து ரஃபாவிற்கு பலவந்தமாக இடம்பெயரச் செய்வதும் மற்றும் ஒரு மனிதாபிமான தோற்றத்தை ஸ்தாபிப்பதும் ஆகும்,” என்று குறிப்பிட்டார். “இது ஒருவிதத்தில், ஒன்றரை ஆண்டுகளாக முழுத் திறனுடன் செயல்பட்டு வந்த மனிதாபிமான கட்டமைப்பை மாற்றி, உதவிகளை இராணுவமயமாக்குவது போன்றது. அத்தோடு, காஸாவில் இன்னும் அதிகமானவர்களை அழித்து மக்களை அங்கிருந்து வெளியேறத் தள்ளும் இஸ்ரேலிய திட்டத்தின் ஒரு பகுதியாக இது இருக்கிறது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Loading