இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) தோழர் நந்த விக்ரமசிங்கவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக குடும்ப உறுப்பினர்கள், தோழர்கள் மற்றும் நண்பர்களுமாக சுமார் ஆயிரம் பேர் வரை ஏப்ரல் 23, 24 ஆகிய திகதிகளில் ஜயரத்ன ரெஸ்பெக்ட் ஹோம் மலர் சாலைக்கு வந்திருந்தனர்.
விக்ஸ் என்று அழைக்கப்படும் நந்த விக்ரமசிங்க, ஏப்ரல் 20 அன்று காலை அவரது 85 வயதில் மாரடைப்பால் தூக்கத்திலேயே மரணமடைந்தார். அவர் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (பு.க.க.) ஸ்தாபக உறுப்பினரும் அதன் மத்திய குழு உறுப்பினரும் உலக சோசலிச வலைத் தளத்திற்கு (WSWS) ஆங்கிலம், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் தொடர்ந்து பங்களிப்பு செய்தவரும் ஆவார்.
வியாழக்கிழமை பிற்பகல், கொழும்பில் உள்ள பொரளை மயானத்தில் அவரது இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் குடும்ப உறுப்பினர்கள், சோசலிச சமத்துவக் கட்சி தோழர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளும் நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வந்து கலந்துகொண்டனர்.
விக்கிரமசிங்கவின் உடல் வைக்கப்பட்டிருந்த பேழை ஒரு கம்பீரமான ஊர்வலத்தில் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்திற்கு ஒரு கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாகச் சென்றனர். பேரணி முழுவதும் சர்வதேச கீதம் இசைக்கப்பட்டது.
தகனத்திற்கு முன்னர், சர்வதேச அளவில் நன்கு அறியப்பட்ட ட்ரொட்ஸ்கிசவாதிக்கு புகழஞ்சலி செலுத்துவதற்காக சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பும் இணைந்து ஒரு கூட்டத்தை நடத்தினர்.
உலக சோசலிச வலைத் தளத்தின் இலங்கை தேசிய ஆசிரியரும், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபக உறுப்பினருமான கே. ரட்நாயக்க கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
“ஒரு முன்னணி தோழரான லசிதவுடன் சேர்ந்து, ஏப்ரல் 6 மற்றும் 13 இரண்டு நாட்களும் சுமார் இரண்டு மணித்தியாலம் தோழர் விக்ஸைச் சந்திக்க முடிந்தது எனக்குக் கிடைத்த ஒரு பாக்கியம். நாம் சர்வதேச அரசியல் அபிவிருத்திகள் மற்றும் கட்சியின் பணிகள் குறித்து கலந்துரையாடினோம். விக்ஸ் மிகவும் உற்சாகமாக இருந்தார்.”
லெனினுடன் 1917 ரஷ்யப் புரட்சியின் துணைத் தலைவராக இருந்த லியோன் ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தின் வரலாற்று பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைச் சேர்ந்தவர் என்பதாலேயே விக்ஸ் புரட்சிகர உற்சாகம் மிக்கவராக விளங்கினார் என்று ரட்நாயக்க விளக்கினார்.
லங்கா சம சமாஜக் கட்சி (ல.ச.ச.க.) 1964 இல் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்திற்குள் நுழைந்துகொண்டு செய்த மாபெரும் காட்டிக்கொடுப்பால் உருவாக்கப்பட்ட அரசியல் குழப்பம் மற்றும் பிரச்சினைகளில் இருந்து மேல் எழும்புவதற்காகப் போராடிய இளைஞர்களில் விக்ஸும் ஒருவர் என்று பேச்சாளர் கூறினார்.
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை உருவாக்கும் பாதையில், அவர்களுக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு வழிகாட்டுதலை வழங்கியதுடன், பப்லோவாத திருத்தல்வாத போக்கிற்கு எதிரான போராட்டத்தில் தயாரிக்கப்பட்ட அதன் ஆவணங்களைப் பற்றி கலந்துரையாடினர்.
1987 இல் இறந்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபக பொதுச் செயலாளர் கீர்த்தி பாலசூரிய மற்றும் 2022 இல் காலமான பொதுச்செயலாளர் விஜே டயஸ் ஆகியோரின் வகிபாகத்திற்கும் ரட்நாயக்க புகழஞ்சலி செலுத்தினார்.
சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான விலானி பீரிஸ், பல தசாப்தங்களாக விக்ஸிடம் தனக்கு இருந்த வலுவான அரசியல் பிணைப்பைப் பற்றிப் பேசினார். 1964ல் லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பின் அனுபவத்தின் முக்கியத்துவத்தை விக்ஸ் தன்னுடன் எவ்வாறு கலந்துரையாடினார் என்பதை அவர் விளக்கினார்.
லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பை எதிர்த்த இளைஞர்கள் பப்லோவாதம் மற்றும் தேசியவாதத்தை தழுவிக்கொள்வதற்கான பாரிய அழுத்தம் இருந்தது. இருப்பினும், இந்த இளைஞர்கள் அந்த அழுத்தத்திற்கு அடிபணியாமல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை உருவாக்க முன்வந்தனர். “தோழர் விக்ஸ் நடந்த பாதையை எடுத்துக்கொண்டு, அவரது இலட்சியத்திற்காகப் போராட சோசலிச சமத்துவக் கட்சியில் சேருமாறு அனைவரையும், குறிப்பாக இளைஞர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.
தமிழில் பேசிய சோசலிச சமத்துவக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் எம். தேவராஜா, ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திலும் சோசலிச சமத்துவக் கட்சியிலும் விக்ஸிடம் இணைந்து பணியாற்றியதாகக் கூறினார். “அவர் மார்க்சிய வரலாறு மற்றும் தத்துவம் பற்றிய அறிவின் முக்கிய வளமாக இருந்தார். நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்,” என்று தேவராஜா கூறினார்.
1987-89 காலகட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பாசிச சக்திகள் கட்சி உறுப்பினர்களையும் தொழிலாளர்களையும் தாக்கி கொன்றபோது விக்ஸ் காட்டிய துணிச்சலை அவர் நினைவு கூர்ந்தார்.
ஜே.வி.பி.யின் பயங்கரவாத பிரச்சாரத்திற்கு எதிரான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் போராட்டத்திலும், அந்தத் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை ஒன்றிணைக்க ஐக்கிய முன்னணியை அமைப்பதற்கான கட்சியின் அழைப்பிலும் விக்ஸ் முன்னணிப் பங்காற்றினார். அப்போது மத்திய வங்கி ஊழியர் சங்கத் தலைவராக இருந்த தோழர் ஹேரத்துடன் விக்ஸ் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு ஐக்கிய முன்னணியைக் கட்டியெழுப்ப பிரச்சாரம் செய்யச் சென்றார்.
ட்ரொட்ஸ்கிசக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்கான அரசியல் போராட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக விக்ஸ் பல முறை இந்தியாவுக்குச் சென்று, பல மாதங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் தங்கி இருந்ததாக தேவராஜா விளக்கினார்.
சோசலிச சமத்துவக் கட்சியின் துணைச் செயலாளர் சமன் குணதாச கூறுகையில், தனது 20 வயதிலேயே புரட்சிகர இயக்கத்தில் இணைந்த விக்ஸ், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இலட்சியத்திற்காக தனது இறுதி மூச்சு வரை போராடியவர், என்றார்.
1964 காட்டிக்கொடுப்புக்குப் பிறகு, இலங்கை இடதுசாரிகளின் முக்கியஸ்தர்களான கொல்வின் ஆர். டி சில்வா மற்றும் என்.எம். பெரேரா போன்ற லங்கா சம சமாஜக் கட்சித் தலைவர்களால், விக்ஸ் போன்ற இளைஞர்களை முதலாளித்துவ வர்க்கத்துடன் சமரசம் செய்ய இணங்க வைக்க முடியாமல் போனது. அதற்கு பதிலாக, விக்ஸ் அவர்களுக்கு சவால் விடுத்தார். அவர் சவால் மாத்திரம் விடவில்லை, மாறாக இலங்கை மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கான சரியான பாதையையும் தேடினார்.
விக்ஸ் ஒரு புரட்சிகர போராளியாக இருந்த அதே நேரம், அவர் நகைச்சுவை உணர்வு நிறைந்தவராகவும், நன்கு படித்தவராகவும், சிக்கலான பிரச்சினைகளை சிறப்பாக விளக்கக்கூடியவராகவும் இருந்தார்.
ஐ.வை.எஸ்.இ. ஒருங்கிணைப்பாளர் கபில பெர்னாண்டோ, விக்ஸ் உடன் நெருக்கமாக பணியாற்றிய தனது அனுபவத்தை நினைவு கூர்ந்தார். 'கடந்த நூற்றாண்டின் எரியும் கேள்விகளாக இருந்த உலகப் போர்கள் மற்றும் பாசிசம் இந்த நூற்றாண்டிலும் மீண்டும் எழுந்துள்ளன. குறிப்பாக சீனாவை குறிவைக்கும் பாரிய வரிகள் உட்பட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்ளையடிக்கும் கொள்கைகள் இதையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அதனால்தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு ‘முடிவுறா 20 ஆம் நூற்றாண்டு' பற்றிப் பேசுகிறது. தோழர் விக்ஸின் வாழ்நாள் முழுவதும் நடந்த போராட்டம், போர் மற்றும் பாசிசத்திற்கு எதிரான நமது போராட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் நம்மை வழிநடத்துகிறது.'
சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர இறுதி உரையை நிகழ்த்தினார். 'சர்வதேச சோசலிசம் மற்றும் ட்ரொட்ஸ்கிச கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக இலங்கையிலும் சர்வதேச அளவிலும் போராடுவதற்காக தனது 85 ஆண்டுகளில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக, அல்லது தனது வாழ்க்கையின் நான்கில் மூன்று பங்கிற்கும் மேலாக அர்ப்பணித்த ஒரு தோழருக்கு இன்று நாம் அனைவரும் மரியாதை செலுத்துகிறோம்.'
ஏனைய தோழர்கள் விளக்கியது போல், விக்ஸும் லங்கா சமசமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்புக்கு எதிராகப் போராடிய இளம் தோழர்கள் குழுவில் சேர்ந்தார். 'அந்த நேரத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் மிகவும் தீர்க்கமான அரசியல் தலையீடு மிக முக்கியமான விடயமாக இருந்தது. இது லங்கா சம சமாஜக் கட்சியின் மாபெரும் காட்டிக்கொடுப்பின் வேர்கள் தேசிய அளவில் அன்றி, சர்வதேச அளவிலானதாக இருந்தன என்பதை விளக்கியது.'
நான்காம் அகிலத்திற்குள் தோன்றிய பப்லோவாத திருத்தல்வாதம், ட்ரொட்ஸ்கிசக் கொள்கைகளைக் காட்டிக் கொடுத்தாலும் அதற்கு எதிரான ஒரு கொள்கை ரீதியான போராட்டம் இடம்பெற்றது என்று ஜயசேகர விளக்கினார். “1953 இல், ட்ரொட்ஸ்கிசக் கொள்கைகளைப் பாதுகாக்கவும், பப்லோவாத திருத்தல்வாதத்தை அரசியல் ரீதியாக எதிர்த்துப் போராடவும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு உருவாக்கப்பட்டது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தொடர்ச்சி அனைத்துலகக் குழுவின் மூலம் பராமரிக்கப்பட்டு நிலைத்து நிற்கின்றது.”
ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தொடர்ச்சியைப் பாதுகாப்பதில் விக்ஸின் பங்கை பேச்சாளர் விளக்கினார். 'லங்கா சமசமாஜக் கட்சியின் துரோகத்திற்கு பதிலளிக்கும் விதமாக, ஜனரஞ்சக பதிலிறுப்புகள் என்று அழைக்கப்பட்ட பல்வேறு குட்டி முதலாளித்துவ இயக்கங்கள் தோன்றின. அவை தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தை நிராகரித்து, இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள் போன்ற ஏனைய சக்திகளின் பக்கம் திரும்பின. இவற்றில் மிக பிரதானமானது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஆகும்.
'விக்ஸ் உட்பட தோழர்கள், அந்த ஜனரஞ்சக குட்டி முதலாளித்துவ மாற்றீட்டை நிராகரித்து, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதற்காக, அனைத்துலகக் குழுவின் பக்கம், இலங்கை மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்பினர்,' என்று அவர் கூறினார்.
1970 இல் கீர்த்தி பாலசூரியா எழுதிய ஜே.வி.பியின் வர்க்கத் தன்மை குறித்த அற்புதமான புத்தகத்தை ஜெயசேகரா குறிப்பிட்டார். 'ஜே.வி.பியின் அடுத்தடுத்த அரசியல் சீரழிவு, குறிப்பாக நிதி மூலதனத்தின் நிர்வாணக் கருவியாக அதன் மாற்றம் குறித்து அவர் ஆழ்ந்த கவலை கொண்டிருந்தார்,' என்று அவர் கூறினார்.
'பின்னர், ஜே.வி.பி. சிங்கள பேரினவாதத்தின் பாதையில் மேலும் சீரழிந்து, 1988-89 காலகட்டத்தில் ஒரு பாசிச இயக்கமாக பரிணமித்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில், அது முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தின் கட்சியாக மாறியது. இன்று அது முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் கடிவாளத்தை எடுத்துக்கொண்டுள்ளது.”
ட்ரொட்ஸ்கிச மூலோபாயத்தை வளர்ப்பதற்காக ஜே.வி.பி.க்கு எதிரான அரசியல் போராட்டத்தில் விக்ஸ் ஒரு முக்கிய பங்கைக் ஆற்றினார் என்று ஜயசேகர வலியுறுத்தினார்.
விக்ஸின் மூத்த மகள் வேரா விக்கிரமசிங்க, தனது தந்தையின் நெகிழ்ச்சியான நினைவுகளை முன்கொணர்ந்தமைக்காக பேச்சாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மாபெரும் புரட்சிகரக் கட்சியின் பாதுகாப்பின் கீழ் வளர்ந்ததில் தான் மிகவும் பெருமைப்படுவதாக அவர் விளக்கினார். ஏராளமான சிரமங்கள் இருந்தபோதிலும், விக்ஸ் அவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருந்தார்.
சமூகத்தைப் பற்றிய தனது புரிதலை புரட்சிகரக் கட்சி பெரிதும் வலுப்படுத்தி வருவதாக அவர் கூறினார். விக்ஸ் முழுநேர கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்ததால், அவரது தாயார் (வேராவின் பாட்டி) விக்ஸின் குழந்தைகளின் நல்வாழ்வில் கவனம் செலுத்துமாறு அவரிடம் கேட்பார். அந்த சமயங்களில், 'இந்த உலகில் உள்ள அனைத்து குழந்தைகளும் என்னுடையவர்கள்' என்று மட்டுமே விக்ஸ் ஒரு புன்னகையுடன் அவளுக்குப் பதிலளிப்பதே வழமை.
'ஒரு தீவிரமான அரசியல் நபராக இருந்தபோதிலும், என் தந்தை தனது பிள்ளைகளை சிரிக்க வைக்கவும் மகிழ்ச்சியாக இருக்க வைப்பதற்கும் வேடிக்கையான விஷயங்களைச் சொல்வார். இதற்கிடையில், அவர் தனது பிள்ளைகள் பிரச்சினைகளைப் பற்றி வாதிட அனுமதித்தார். இதன் மூலம் சவால்களை எதிர்கொள்ள அவர்களுக்கு பயிற்சி அளித்தார். அவர் மிகவும் நேசம் மிக்க மனிதர். அவர் தனது குழந்தைகளையும் மனைவி மணிகேவையும் மிகவும் நேசித்தார்.
“எங்களுக்கு வலிமை, அன்பு மற்றும் நம்பிக்கையை அளித்த இந்த புரட்சிகர கட்சியை, இந்த மாபெரும் சர்வதேச குடும்பத்தை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.