இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஆளும் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) ஆட்சிக்கு வந்து ஏழு மாதங்களுக்குப் பின்னர், வளர்ந்து வரும் வெகுஜன எதிர்ப்பை எதிர்கொள்கிறது.
மே 6 அன்று, நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில், ஜே.வி.பி./தே.ம.ச. பாரம்பரிய முதலாளித்துவக் கட்சிகளை விட முதலிடத்தில் வெற்றி பெற்ற போதும், ஆறு மாதங்களுக்கு முன்பு, கடந்த நவம்பரில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களுடன் ஒப்பிடும்போது 2.3 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை இழந்தது. சதவீத புள்ளிகளில் கூறினால், இது 18.3 சதவீத சரிவு ஆகும். அதன் மொத்த வாக்குகள் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் திசாநாயக்க பெற்ற வாக்குகளை விட 1 மில்லியன் குறைவாகும்.
அதற்கு பரவலான ஆதரவு இருப்பதாக காட்டிக்கொள்ளும் நோக்கில் ஆயிரக்கணக்கானவர்களை அதன் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வது உட்பட அதன் பிரச்சாரத்திற்காக ஆடம்பரமாகச் செலவழித்திருந்த போதிலும், ஜே.வி.பி./தே.ம.ச.யின் ஒட்டுமொத்த தேசிய வாக்குகளில் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தக் கூட்டங்களில், எதிர்க்கட்சிகள் வெல்லும் உள்ளூராட்சி சபைகளுக்கு மத்திய அரசாங்கத்திடமிருந்து நிதி ஒதுக்கீடு கிடைக்காது என்று திசாநாயக்க கடுமையாக சமிக்ஞை செய்தார்.
இதற்கு முன்னர் ஒரு போதும் ஆட்சியில் இருந்திருக்காத ஜே.வி.பி./தே.ம.ச., கடந்த ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் தமிழ் மற்றும் முஸ்லிம் முதலாளித்துவக் கட்சிகள் உட்பட பாரம்பரிய ஸ்தாபனக் கட்சிகளிடமிருந்து பொதுமக்களின் பரவலான அந்நியப்படுதலைப் பயன்படுத்தி வெற்றி பெற்றது.
உள்ளூராட்சித் தேர்தல்கள் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன. முதலில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில், அரசாங்கம் அடுத்த மாத வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய நிலையில், 2022 மார்ச்சில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் ஒத்தி வைக்கப்பட்டது. விலைவாசி உயர்வு மற்றும் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளின் பற்றாக்குறை மற்றும் தினசரி நீண்ட நேர மின்வெட்டு ஆகியவை மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் பங்குபற்றிய வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களைத் தூண்டின. இதனால் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி இராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்.
அவருக்கு அடுத்ததாக வந்த வலதுசாரி ரணில் விக்கிரமசிங்க, தொழிற்சங்கங்களதும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி இடதுசாரிகளதும் ஜே.வி.பி./தே.ம.ச. உட்பட எதிர்க்கட்சிகளதும் உதவியுடன், 2022 ஜூலையில் பாராளுமன்றத்தால் ஜனநாயக விரோதமாக ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். நாடாளுமன்ற அரங்கில் ஒரு இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்தை ஸ்தாபிப்பதன் மூலம் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியும் என்று கூறி அவர்கள் வெகுஜன இயக்கத்தைத் தடம் புரளச் செய்தனர்.
விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடன் 3 பில்லியன் டாலர் பிணை எடுப்பு கடனுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதோடு அதன் கொடூரமான சிக்கன நிபந்தனைகளை செயல்படுத்தத் தொடங்கினார் - உழைக்கும் மக்கள் மீது வரிகளை அதிகரித்தல், விலை மானியங்கள் வெட்டுதல் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் வெட்டுக்கள் மற்றும் தனியார்மயமாக்கலுக்கான தயாரிப்பில் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைத்தல் போன்றவை இந்த சிக்கன நடவடிக்கைகளில் அடங்கும். குறிப்பிடத்தக்க அரசியல் அடித்தளம் இல்லாததால், அவர் மீண்டும் உள்ளூராட்சித் தேர்தல்களை ஒத்திவைத்தார்.
சர்வதேச நாணய நிதிய கடன் நிபந்தனைகளைப் பற்றி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடியைத் தணிப்பதாகவும் வாக்குறுதியளித்து, பாரம்பரிய கட்சிகளுக்கும் விக்ரமசிங்கவின் சிக்கன நடவடிக்கைகளுக்கும் விரோதமான எதிர்ப்பு அலையின் மீதே திசாநாயக்கவும் ஜே.வி.பி./தே.ம.ச.யும் அதிகாரத்தை நோக்கிச் சென்றனர். இருப்பினும், அதிகாரத்திற்கு வந்தவுடன் ஜே.வி.பி./தே.ம.ச. அதன் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் கைவிட்டு, சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை ஒன்றுவிடாமல் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வளர்ந்து வரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களுக்கு அது பொலிஸ் அரச அடக்குமுறையுடன் பதிலளித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் 4,503,930 மில்லியன் வாக்குகள் அல்லது மொத்த வாக்குகளில் 43.26 சதவீதமாக இருக்கும் தங்கள் வாக்குகளைப் பற்றி ஜே.வி.பி./தே.ம.ச. சந்தேகத்திற்கு இடமின்றி பெருமை பேசும். 2018 இல் நடந்த கடைசி உள்ளூராட்சித் தேர்தல்களில் ஜே.வி.பி. பெற்ற 693,875 வாக்குகளை விட இது நிச்சயமாக மிக அதிகமாக இருந்தாலும், ஏற்கனவே குறிப்பிட்டது போல, கடந்த ஆண்டை விட இது மிகவும் குறிப்பிடத்தக்க சரிவு ஆகும்.
339 உள்ளூராட்சி மன்றங்களில் 265 சபைகளுக்கான வாக்கெடுப்பில் ஜே.வி.பி./தே.ம.ச. அதிக வாக்குகளைப் பெற்ற போதிலும் 166 சபைகளில் மட்டுமே அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது. இதன் விளைவாக, ஏனைய 99 சபைகளில் ஆட்சியை அமைப்பதற்காக எதிர்க்கட்சிகள் அல்லது சுயேச்சை குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நிர்ப்பந்திக்கப்படும்.
அரசாங்கத்திற்கும் முழு அரசியல் ஸ்தாபனத்திற்கும் வாக்காளர்களின் எதிர்ப்பானது தகுதியுள்ள வாக்காளர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் வாக்களிக்காமல் இருந்ததில் பிரதிபலித்தது. 2018 இல் 80 சதவீதமானோர் வாக்களித்திருந்தனர். இந்த வாரம் வாக்குப் பதிவு வியத்தகு முறையில் வீழ்ச்சியடைந்திருந்தது. 60 சதவீதத்திற்கும் சற்று அதிகமானோரே வாக்களித்திருந்தனர். கடந்த ஆண்டு ஜே.வி.பி./தே.ம.ச.க்கு வாக்களித்த பலர் உட்பட மில்லியன் கணக்கான வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை.
பிரதான எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகள் கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களை விட இம்முறை அதிகரித்திருந்த போதிலும், கணிசமான அதிகரிப்பாக இல்லை. இந்த வாரம் ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாவதாக அதிகபட்ச தேசிய வாக்குகளைப் பெற்றிருந்தது. அதன் வாக்குகள் 1,968,716 (17.66 சதவீதம்) இலிருந்து 2,258,480 வாக்குகள் (21.69 சதவீதம்) வரை அதிகரித்திருந்தன. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 9.17 சதவீத வாக்குகளைப் பெற்றதுடன் ஐக்கிய தேசியக் கட்சி 4.69 சதவீத வாக்குகளைப் பெற்றது. இவற்றில் எதுவும் ஒரு உள்ளூராட்சி சபையையும் வெல்லவில்லை.
திசாநாயக்க அரசாங்கத்தின் மீதான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு, மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினரான இலட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் வாழும் மத்திய மலையக மாவட்டங்களில் மிகவும் தெளிவாகத் தெரிந்தது. பரந்த சமூக துயரத்தைத் தணிப்பதற்கான வெற்று வாக்குறுதிகளின் அடிப்படையில், பாராளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பி./தே.ம.ச. நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் அதிக வாக்குகளைப் பெற்றது.
இந்த வாரம் நுவரெலியாவில், ஜே.வி.பி./தே.ம.ச. 13 உள்ளூராட்சி மன்றங்களில் இரண்டைத் தவிர மற்ற அனைத்திலும் முன்னிலை வகித்த போதிலும் எதிலும் பெரும்பான்மையைப் பெறவில்லை. பதுளையில், 18 சபைகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்திலும் அது முதலிடத்தைப் பிடித்த போதிலும், இரண்டில் மட்டுமே பெரும்பான்மையைப் பெற்றது. குறிப்பிடத்தக்க வகையில், ஹப்புத்தளை நகர சபைக்கான வாக்கெடுப்பில் ஒரு சுயேச்சைக் குழு முன்னிலை வகித்தது.
தமிழர்களும் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழும், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில், தேர்தல் முடிவுகள் இதை ஒத்ததாக இருந்தன. கடந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பி./தே.ம.ச. பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றிகள் பெரும்பாலும் மறைந்துவிட்டன. வடக்கு மாகாணத்தில் உள்ள 33 சபைகளில் 5 சபைகளிலும், கிழக்கு மாகாணத்தில் 39 சபைகளில் 15 சபைகளிலும் மட்டுமே அது முதலிடத்தைப் பிடித்தது.
சிங்களப் பேரினவாதத்தில் மூழ்கிய ஒரு கட்சியான ஜே.வி.பி./தே.ம.ச., கடந்த ஆண்டு, நாட்டை ஒன்றிணைத்து, 2009 இல் முடிவடைந்த நாட்டின் நீடித்த இனவாதப் போரிலிருந்து தீர்க்கப்படாத பல எரியும் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக உறுதியளித்தது. தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது மற்றும் போரின் போது இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை அதன் தமிழ் உரிமையாளர்களிடம் திருப்பித் தருவது ஆகியவையும் இதில் அடங்கும். ஏனைய அனைத்து ஜனரஞ்சக வாக்குறுதிகளையும் போலவே, திசாநாயக்க அவற்றையும் விரைவாகக் கிழித்து எறிந்தார்.
தமிழ் முதலாளித்துவக் கட்சியான இலங்கைத் தமிழ் அரசு கட்சி (ITAK), ஒட்டுமொத்த தேசிய வாக்குகளில் 2.96 சதவீதத்தைப் பெற்றது. ஆனால் அது பிற்போக்கு தமிழ் தேசியவாதத்தைத் தூண்டிவிடுவதன் அடிப்படையிலேயே வடக்கு மற்றும் கிழக்கில் 35 சபைகளில் முதலிடத்தைப் பிடித்தது. தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் எதுவும் தமிழ் உழைக்கும் மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை, மாறாக தமிழ் உயரடுக்கிற்கு அதிக சலுகைகளை வழங்க வலியுறுத்துகின்றன. தமிழரசுக் கட்சியானது, அனைத்து எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை முழுமையாக ஆதரித்தது.
அபார வெற்றியை எதிர்பார்த்த ஜே.வி.பி./தே.ம.ச. தலைவர்கள், வாக்குகள் வீழ்ச்சியடைந்ததை மூடிமறைத்து, தங்களுக்கு ஒரு மக்கள் ஆணை கிடைத்துள்ளதாக அறிவித்தனர். அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்பே, ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, கட்சி ஒரு 'தெளிவான' மற்றும் 'வலுவான வெற்றியை' அடைந்துள்ளதாகவும், அரசாங்கம் 'நாட்டைக் கட்டியெழுப்புவதை' தொடரும் என்பதே அதன் தேர்தல் வெற்றியின் அர்த்தம் என்றார்.
இதன் அர்த்தம், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் தனியார்மயமாக்கல், அரசாங்க தொழில்களை பெருந்தொகையில் வெட்டுதல், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளை மேலும் சீரழித்தல், விலைவாசி அதிகரிப்பு மற்றும் வரி அதிகரிப்பு போன்ற சர்வதேச நாணய நிதிய திட்ட நிரலை அமுல்படுத்துவதை துரிதப்படுத்தும் என்பதே ஆகும். அதிகரித்து வரும் பூகோள பொருளாதார நெருக்கடி மற்றும் புவிசார் அரசியல் மோதல்களுக்கு மத்தியில், அமெரிக்காவின் மிகப்பெரிய வரிவிதிப்பு அச்சுறுத்தல் உட்பட இலங்கை முதலாளித்துவம் எதிர்கொள்ளும் பெருகிவரும் பிரச்சினைகளுக்கு, உழைக்கும் மக்கள் மீது மேலும் பெரிய சுமைகளை திணிப்பதைத் தவிர, திசாநாயக்கவிடம் வேறு எந்த தீர்வும் கிடையாது.
வாக்களிக்காமல் இருப்பதன் மூலமோ அல்லது எதிர் முதலாளித்துவக் கட்சிகளில் ஒன்றிற்கு வாக்களிப்பதன் மூலமோ அரசாங்கத்திற்கு எதிராக எதிர்த்து வாக்களிப்பதன் மூலமோ தொழிலாளர்களால் தங்கள் நலன்களைப் பாதுகாக்க முடியாது. தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் சமூகப் பேரழிவிற்கும், உலகப் போர் அபாயத்திற்கும் முதலாளித்துவ அமைப்பு மற்றும் தேசிய அரசுக்குள் எந்தத் தீர்வும் கிடையாது.
தேர்தல் பிரச்சாரத்தில் ஏராளமான தடைகள் இருந்த போதிலும், சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் மற்றும் அனைத்து எதிர் முதலாளித்துவக் கட்சிகள், போலி இடதுசாரி குழுக்கள் மற்றும் அவற்றின் தொழிற்சங்கங்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று நலன்களுக்காகப் போராடியது.
எங்கள் தேர்தல் அறிக்கை விளக்கியது: “கிராமப்புற ஏழைகளை ஒன்றிணைக்கவும், அரசாங்கத்தின் சிக்கனத் திட்டத்தை எதிர்த்துப் போராடவும் தொழிலாளர்களை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்காக சோ.ச.க. பிரச்சாரம் செய்து வருகிறது. அனைத்து முதலாளித்துவக் கட்சிகளில் இருந்தும் பிரிந்து, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான ஒரு தொழில்துறை மற்றும் அரசியல் போராட்டத்தில் அதன் பிரமாண்டமான பலத்தை அணிதிரட்டுமாறு தொழிலாள வர்க்கத்துக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.”
நாம் சிங்களம் மற்றும் தமிழில் பல்லாயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து, தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச இயக்கத்தின் ஒரு பகுதியாக ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தை விளக்கினோம். எங்களுக்கு வாக்களித்து எங்கள் பிரச்சாரத்தை ஆதரித்த அனைவரையும், வரவிருக்கும் போராட்டங்களில் தொழிலாள வர்க்கத்திற்கு இன்றியமையாத புரட்சிகரத் தலைமையாக சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டியெழுப்ப அதில் இணைந்துகொள்ள விண்ணப்பிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.