ட்ரம்ப்-நெதன்யாகு இனச் சுத்திகரிப்பு திட்டத்தின் அடுத்த கட்டமாக காஸா மீதான இராணுவ ஆக்கிரமிப்பை இஸ்ரேல் அறிவித்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் வரவேற்கிறார். திங்கட்கிழமை, ஏப்ரல் 7, 2025. [AP Photo/Evan Vucci]

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று அறிவிக்கையில், காஸா பகுதியை நிரந்தரமாக ஆக்கிரமிக்கவும், அதன் மக்களை உள்நாட்டில் சித்திரவதை முகாம்களுக்கு இடம்பெயர்க்கவும் மற்றும் உணவு விநியோகத்தில் ஒரு இராணுவ ஏகபோகத்தை திணிக்கவும் இஸ்ரேலிய அமைச்சரவை ஒரு திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார்.

ஐரோப்பிய யூதர்களின் இனப்படுகொலைக்கான நாஜிக்களின் வார்த்தையான “இறுதித் தீர்வை” எதிரொலிக்கும் வகையில், நெதன்யாகு, “இறுதி நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டிய நேரம் இது” என்று அறிவித்தார்.

பாலஸ்தீன மக்கள் “இடமாற்றம் செய்யப்படுவார்கள்” என்றும், இஸ்ரேலிய படைகள் ஆக்கிரமித்துள்ள பிராந்தியங்களில் இருந்து பின்வாங்காது என்றும் நெதன்யாகு தெரிவித்தார். இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் எஃபி டெஃப்ரின் கூறுகையில், இந்தத் திட்டம் “காஸாவிலுள்ள பெரும்பாலான மக்களை “சுத்தமான” பகுதிகளுக்கு நகர்த்துவதை உள்ளடக்கியிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

காஸாவில் சர்வதேச மனிதாபிமான நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதும், இஸ்ரேலால் கட்டுப்படுத்தப்படும் மற்றும் தனியார் அமெரிக்க இராணுவ ஒப்பந்ததாரர்களால் நிர்வகிக்கப்படும் “மையங்களால்” அது பிரதியீடு செய்யப்படுவதும் இதில் உள்ளடங்கி உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவரது ஆதர்ச நாயகன் அடோல்ஃப் ஹிட்லருக்கு தகுதியான இனப்படுகொலை இரட்டை பேச்சில், திங்களன்று, “மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள், அவர்களுக்கு கொஞ்சம் உணவு கிடைக்க நாங்கள் உதவப் போகிறோம்” என்று கூறினார்.

பாலஸ்தீன மக்களை வெளியேற்றுவதற்கும், இப்போதிருக்கும் கட்டிடங்களை இடித்து உழுவதற்கும், அப்பிராந்தியத்தை இணைப்பதற்குமான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் கடந்த பெப்ரவரியில் அறிவிக்கப்பட்டு, நெதன்யாகுவால் பகிரங்கமாக அரவணைக்கப்பட்ட திட்டத்திற்கு, காஸா மீதான முழு இராணுவ ஆக்கிரமிப்பு முன்நிபந்தனையாக உள்ளது.

இந்த உண்மையை உறுதிப்படுத்தும் வகையில், ஒரு “மூத்த பாதுகாப்பு அதிகாரி” கார்டியனிடம் “காஸா குடியிருப்பாளர்களை இடமாற்றும் திட்டம் ... நடவடிக்கையின் இலக்குகளின் ஒரு பகுதியாக இருக்கும்” என்று கூறினார்.

இஸ்ரேலிய சிப்பாய்கள் மற்றும் அமெரிக்க “ஒப்பந்ததாரர்களின்” ஆயுதமேந்திய பாதுகாப்பின் கீழ் காஸா மக்கள் சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டவுடன், அடுத்த கட்டமாக அவர்களை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதற்காக கப்பல்களில் ஏற்றத் தொடங்குவதாகவோ அல்லது பாலைவனத்தின் வழியாக மரண அணிவகுப்புகளில் ஏற்றத் தொடங்குவதாகவோ இருக்கும்.

மார்ச் 23 அன்று, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், காஸாவிலிருந்து பாலஸ்தீனியர்களை இடமாற்றம் செய்வதற்காக, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) ஒரு பணியகத்தை உருவாக்க இருப்பதாக அறிவித்தார். இது, “மூன்றாம் நாடுகளுக்கு அவர்கள் வெளியேற்றப்படுவதை மேற்பார்வையிடும். இதில் அவர்களின் நடமாட்டத்தை உறுதிப்படுத்துதல், அவர்களை கொண்டு செல்லும் பாதைகளை உருவாக்குதல், காஸா பகுதியில் உருவாக்கப்பட்ட கடவைகளில் பாதசாரிகளைச் பரிசோதித்தல், அத்துடன் தரை, கடல் மற்றும் வான் வழியாக குறிக்கப்பட்ட நாடுகளுக்குச் செல்ல உதவும் உள்கட்டமைப்பை வழங்குவதை ஒருங்கிணைத்தல்” ஆகியவை அடங்கும்.

இந்த இனச் சுத்திகரிப்பு திட்டம் குறித்த அமெரிக்க ஊடக செய்திகள், அமெரிக்க-இஸ்ரேல் வழங்கிய தவறான தகவல்களால் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை “ஹமாஸை” இலக்காகக் கொண்டது அல்லது மீதமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டது என இவை கூறுகின்றன.

காஸா மீதான இராணுவ ஆக்கிரமிப்பு ட்ரம்பின் இனப்படுகொலைத் திட்டத்தின் உண்மையான தன்மையைக் குறிக்கிறது. மேலும், அது காஸாவில் எஞ்சியிருக்கும் பணயக்கைதிகளுக்கு மரண தண்டனையாக இருக்கும் என்றும், அவர்கள் இஸ்ரேலிய குண்டுகளால் கொல்லப்படாவிட்டால் வெறுமனே பட்டினியால் இறக்க நேரிடும் என்றும் கூறுவதன் மூலம் உண்மையை மறைக்க வேண்டுமென்றே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

எவ்வாறிருப்பினும், இஸ்ரேலிய அரசாங்கத்திற்குள்ளேயே, இராணுவ ஆக்கிரமிப்பு திட்டத்தின் நோக்கங்களை மூடிமறைப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

“நாங்கள் இறுதியாக காஸா பகுதியை ஆக்கிரமிப்போம். ‘ஆக்கிரமிப்பு’ என்ற வார்த்தைக்கு பயப்படுவதை நாங்கள் நிறுத்துவோம்,” என்று இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் இஸ்ரேலின் சேனல் 12 இடம் கூறினார்.

“நாம் கைப்பற்றியுள்ள பிராந்தியங்களில் இருந்து பின்வாங்க மாட்டோம், பணயக் கைதிகளுக்கு ஈடாகக் கூட பின்வாங்க மாட்டோம்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். இது, நடைமுறையளவில் எஞ்சியிருக்கும் பணயக்கைதிகளின் உயிர் வாழ்க்கையை உறுதிப்படுத்தும் எந்தவொரு ஏற்பாட்டையும் தவிர்க்கிறது.

தேசிய பாதுகாப்பு மந்திரி இட்டாமர் பென்-க்விர் காஸாவிற்குள் அனைத்து உணவு உதவிகளும் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். “சிவில் சமூகம் அல்லது இஸ்ரேலிய இராணுவம் மின்சாரத்தை அல்லது வேறு எந்த உதவியையும் வழங்குவதற்கு அனுமதிக்கக்கூடாது” என்று அவர் மேலும் கூறினார்.

இஸ்ரேல், முந்தைய போர்நிறுத்த உடன்படிக்கையை மீறி, உணவு, தண்ணீர், மின்சாரம் மற்றும் மருத்துவப் பொருட்கள் அனைத்தும் காஸாவிற்குள் நுழைவதை நிறுத்தி 60 நாட்களுக்கும் அதிகமான காலம் ஆகிவிட்டன.

காஸாவில் நடந்து வரும் இனப் படுகொலையையும் மற்றும் நேரடி ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் ஒரு “புதிய மத்திய கிழக்கை” உருவாக்குவதற்கான அமெரிக்க-இஸ்ரேலிய திட்டத்தையும் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட அடுத்த வாரம், ட்ரம்ப் மத்திய கிழக்கிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை உட்பட காஸாவில் செயல்படும் மனிதாபிமான உதவிக் குழுக்களின் ஒரு அறிக்கை, இந்த திட்டம் “ஒரு இராணுவ மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, ஒரு அழுத்த தந்திரோபாயமாக உயிர் காக்கும் பொருட்களின் மீதான கட்டுப்பாட்டை வலுப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று கூறியது.

ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனத்தின் மேற்குக் கரை கொள்கை தலைவர் புஷ்ரா காலிடி கூறியதாவது:

இராணுவம் அல்லது தனியார் ஒப்பந்தக்காரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வேலியிடப்பட்ட, மேற்பார்வையிடப்பட்டு வருகின்ற இடங்களுக்கு உதவிப் பொருட்களை நகர்த்துவது மனித தோல்வியின் சில இருண்ட அத்தியாயங்களை நினைவூட்டுகிறது. ... இது பாதுகாப்பு அல்ல, வற்புறுத்தல். பொதுமக்களை அடிப்படையில் கைதிகளாக நடத்தும் எந்தவொரு மாதிரியையும் நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்.

ஒரு அறிக்கையில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) காஸாவை ஆக்கிரமித்து உணவு விநியோகத்தை எடுத்துக் கொள்ளும் திட்டத்தை கண்டித்து பின்வருமாறு அறிவித்தது:

காஸாவில் உள்ள பொதுமக்கள் மத்தியில் இப்போது தேவையின் அளவு அதிகமாக உள்ளது மற்றும் உதவிகள் உடனடியாக அனுமதிக்கப்பட வேண்டும். ... சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ், இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்ய கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளையும் பயன்படுத்த வேண்டிய கடமையைக் கொண்டுள்ளது

காஸாவைத் தளமாகக் கொண்ட பாலஸ்தீனிய அரசு சாரா வலையமைப்பின் இயக்குனர் அம்ஜத் ஷாவா, அல் ஜசீராவிடம் கூறுகையில், காஸாவில் பெரும்பாலான மக்கள் “பட்டினியால் வாடுகின்றனர்,” உணவுப் பொருட்களின் விலைகள் எட்ட முடியாத மட்டங்களுக்கு உயர்ந்து கொண்டிருக்கின்றன என்றார். “ஒரு மூட்டை மாவு, 25 கிலோ [55 பவுண்டு], அது இப்போது கள்ளச் சந்தையில் 350 டாலர்கள்.” இனப்படுகொலை தொடங்குவதற்கு முன்பு இவ்வளவு பெரிய மாவு மூட்டை 5 டாலர்கள்தான் செலவாகியிருக்கும்.

இதுகுறித்து ஐ.நா.வின் முன்னணி மனிதாபிமான அதிகாரி டாம் பிளெட்சர் கூறியதாவது:

இஸ்ரேலிய அதிகாரிகளுக்கும், அவர்களுடன் இன்னும் நியாயப்படுத்தக்கூடியவர்களுக்கும், நாங்கள் மீண்டும் கூறுகிறோம்: இந்த மிருகத்தனமான முற்றுகையை அகற்றுங்கள். ... பாதுகாப்பின்றி விடப்பட்ட பொதுமக்களுக்கு, எந்த மன்னிப்பும் போதுமானதாக இருக்காது. ஆனால், இந்த அநீதியைத் தடுக்க சர்வதேச சமூகத்தை நகர்த்த முடியாமல் போனதையிட்டு நான் உண்மையிலேயே வருந்துகிறேன்.

ஐ.நா. ஆதரவிலான ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாட்டின்படி, காஸா மக்களில் 91 சதவீதத்தினர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். பெரும்பாலான மக்கள் “அவசரகால” அல்லது “பேரழிவுகரமான” பட்டினி மட்டங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

போர்நிறுத்தம் முறிந்த பின்னர், இஸ்ரேலின் புதிய குண்டுவீச்சு தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து, இஸ்ரேல் மேலும் மேலும் மக்களை வெளியேற்றுவதையும், தடைசெய்யப்பட்ட மண்டலங்களையும் அறிவித்துள்ளது. இதனால் சுமார் 420,000 காஸா மக்கள் மீண்டும் வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், ஐ.நா. மதிப்பீடுகளின்படி, சுமார் 70 சதவீத காஸா பகுதிக்கான அணுகல்களும் தடுக்கப்பட்டுள்ளது.

இன்றுவரை, அமெரிக்க-இஸ்ரேலிய இனப்படுகொலையில் 52,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் நேரடியாகக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆவர்.

Loading