இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையில் மே 6 நடைபெறும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்புடன் இணைந்து, யாழ்ப்பாணத்தில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தியது. கொழும்பில் மற்றொரு கூட்டத்தை நடத்தியது.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் உள்ள காரைநகர் பிரதேச சபைக்கும், கொழும்புக்கு அருகிலுள்ள கொலன்னாவ நகர சபைக்கும் சோசலிச சமத்துவக் கட்சி முறையே 12 மற்றும் 21 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
இரண்டு கூட்டங்களும் சோசலிச சமத்துவக் கட்சியின் முகநூல் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. நேற்றைய நிலவரப்படி, இந்த வீடியோக்களை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். யாழ்ப்பாணக் கூட்டம் குறித்த சுருக்கமான அறிக்கையை DAN TV அதன் செய்தி அறிக்கையில் ஒளிபரப்பியது. சோசலிச சமத்துவக் கட்சி யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்புகளில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களைச் சேர்ந்த கணிசமான எண்ணிக்கையிலான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாண கூட்டமானது ஏப்ரல் 7 அன்று YMCA கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதற்கு சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும் காரைநகர் பிரதேச சபைக்கான கட்சியின் வேட்பாளர்களில் ஒருவருமான டிலக்சன் மகாலிங்கம் தலைமை தாங்கினார்.
மார்ச் 25 அன்று சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி, மகாலிங்கம் கட்சியின் வேலைத்திட்டத்தை கோடிட்டுக் காட்டினார். இலங்கையில் சமூக நிலைமைகள் மோசமடைந்து வருவதானது கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரைனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான நேட்டோ போரினாலும் தீவிரமடைந்துள்ள பூகோள முதலாளித்துவ நெருக்கடியின் ஒரு பகுதியாகும் என்று அவர் விளக்கினார்.
சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்த வர்க்கமாக, சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கின் கீழ் தங்கள் அரசியல் பலத்தை சுயாதீனமாக அணிதிரட்டி, நெருக்கடிக்கு பதிலளிக்க வேண்டியதன் அவசியத்தை மகாலிங்கம் வலியுறுத்தினார்.
“உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முன்னாள் ஜனாதிபதிகள் கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் ஜனநாயக விரோதமாக ஒத்திவைக்கப்பட்டன. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) ஆட்சியானது இப்போது இந்தத் தேர்தல்களை நடத்துவதானது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக அல்ல, மாறாக சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதில் அதன் கையை பலப்படுத்திக்கொள்வதற்காகவே ஆகும். இந்தக் கொள்கைகளைச் செயல்படுத்த ஜே.வி.பி./தே.ம.ச., நேரடியாக விக்கிரமசிங்கவிடமிருந்து திட்டத்தைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டுக்கான திசாநாயக்கவின் வரவு செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது,” என்று மகாலிங்கம் கூறினார்.
ஐ.வை.எஸ்.இ.யின் முன்னணி உறுப்பினரான எம். அனிதா, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கடுமையான கல்வி நெருக்கடியை பற்றி விளக்கினார். அதிகாரப்பூர்வ தரவுகளை மேற்கோள் காட்டி, மாவட்டம் முழுவதும் மாணவர்களை பாடசாலைக்கு சேர்ப்பதில் வியத்தகு சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், 2020 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கு இடையில் 180,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பொருளாதார நெருக்கடியும் பிள்ளைகளை வகுப்பறையிலிருந்து வெளியேறி, சுரண்டல் நிலையிலான வேலைகளுக்கு செல்லத் தள்ளுவதாக அதிகாரப்பூர்வ அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாக அனிதா கூட்டத்தில் தெரிவித்தார்.
இலவச பொதுக் கல்வியைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் சோசலிசக் கொள்கைகளுக்காகப் போராடுவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். “இந்தத் திட்டத்திற்காகப் போராட பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் இளம் தொழிலாளர்கள் மத்தியிலும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. கிளைகளைக் கட்டியெழுப்புது அவசியம்,” என்று அவர் கூறினார்.
காரைநகருக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி வேட்பாளரும் அரசியல் குழு உறுப்பினருமான திருஞான சம்பந்தர், தமிழ் தேசியவாதக் கட்சிகளின் துரோகப் பங்கை அம்பலப்படுத்தினார்.
“இந்தக் கட்சிகளுக்கு எதிரான பாரிய எதிர்ப்பு [கடந்த ஆண்டு] நவம்பர் தேர்தலில் வெளிப்பட்டது. பழமையான தமிழ் முதலாளித்துவக் கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சிக்கான வாக்குகள், 2020 ஆகஸ்ட் பொதுத் தேர்தலில் பெற்ற 327,168 உடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு நவம்பரில் 257,813 ஆகக் குறைந்தன. அதேபோல், அதன் நாடாளுமன்ற ஆசனங்கள் 10 இலிருந்து 8 ஆகக் குறைந்தன,” என்று அவர் கூறினார்.
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் உயரடுக்கிற்கான சலுகைகளைப் பெறுவதற்காக, இந்தக் கட்சிகள் பிரதானமாக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்களுடன் சூழ்ச்சித் திறன்களைக் கையாள்வதில் ஈடுபட்டதாக சம்பந்தர் கூட்டத்தில் கூறினார். 26 ஆண்டுகால இனவாதப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீதான அவர்களின் அக்கறை கபடத்தனமானது என்று அவர் வாதிட்டார்.
கடந்த கால மற்றும் தற்போதைய இலங்கை அரசாங்கங்களின் கீழ், சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட சிக்கனக் கொள்கைகளை தமிழ் தேசியவாதக் கட்சிகள் ஆதரித்ததாக அவர் விளக்கினார்.
“இலங்கையின் முதலாளித்துவ அமைப்பின் நலன்களைப் பாதுகாப்பதில் இந்தக் கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன. அதனால்தான் கடந்த தேர்தலில் பாரம்பரிய தமிழ் கட்சிகளுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை ஜே.வி.பி./தே.ம.ச. பயன்படுத்திக் கொண்டு அதனால் கனிசமான வெற்றிகளைப் பெற முடிந்தது.
“தமிழ் வாக்காளர்களை ஏமாற்றுவதற்காக, ஜனாதிபதி திசாநாயக்க தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாகவும், கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வதாகவும் கூறியுள்ளார். ஆனால் அரசாங்கம் இப்போது அரசியல் கைதிகள் இல்லை என்று வலியுறுத்துகிறது -பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மட்டுமே இருப்பதாக கூறுகின்றது. இதேபோன்ற சட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்பாட்டில் இருக்கும்,' என்று அவர் கூறினார்.
வடக்கு மற்றும் கிழக்கில் தொடர்ந்து இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களை இராணுவம் தொடர்ந்து ஆக்கிரமித்து வைத்திருப்பதை சம்பந்தர் கண்டித்தார். இலங்கைப் படைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் கோரிக்கையை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
'தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கும் சோசலிசத்திற்குமான போராட்டத்தின் மூலம் மட்டுமே அடைய முடியும்,' என்று அவர் வலியுறுத்தினார்.
யாழ்ப்பாணக் கூட்டத்தில் பிரதான பேச்சாளர் சோசலிச சமத்துவக் கட்சியின் உதவிச் செயலாளர் சமன் குணதாச ஆவார். ஜே.வி.பி./தே.ம.ச. பூகோள நிதி மூலதனத்தின் நேரடி கருவியாகச் செயல்பட்டு வருவதாகவும், வரி உயர்வுகள், மானியக் குறைப்புகள், சேவைக் கட்டண அதிகரிப்புகள் மற்றும் தனியார்மயமாக்கல் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தைத் தீவிரப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
அரசாங்கத்தின் 'ஊழல் எதிர்ப்பு' என்ற வாய்ச்சவடால் ஒரு மூடு திரையாக இருக்கும் அதே நேரத்தில் அது பெருவணிகங்களையும் சர்வதேச கடன் வழங்குநர்களையும் தொடர்ந்து வளப்படுத்தியது என்று அவர் வாதிட்டார். 'ஜே.வி.பி./தே.ம.ச. பாதுகாக்கின்ற முதலாளித்துவ அமைப்பிலேயே ஊழலின் வேர் உள்ளது,' என்று குணதாச கூறினார்.
உலகமயமாக்கப்பட்ட உற்பத்திக்கும் காலாவதியான தேசிய அரசு அமைப்புக்கும் இடையிலான முரண்பாடுகளால் குறிக்கப்பட்டுள்ள உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியானது, ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கீழ் அமெரிக்காவில் காணப்படுவது போல், சர்வாதிகாரம் மற்றும் போரின் எழுச்சிக்கு எவ்வாறு வழிவகுத்தது என்பதை அவர் விளக்கினார்.
டிரம்பின் நடவடிக்கைகளுக்கும் ஹிட்லரின் எழுச்சிக்கும் இடையிலான ஒற்றுமைகளை குணதாச எடுத்துக்கட்டி, ஆளும் வர்க்கங்கள் பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கித் திரும்புகின்றன என்று எச்சரித்தார்.
“ட்ரம்ப் முன்னெடுத்துள்ள சுங்கவரிப் போர், இது ஒரு வர்த்தகப் போராக அதிகரித்து வருவதுடன் உலகளாவிய மோதலுக்கு வழிவகுக்கும். இந்த வரிப் போர் முக்கியமாக சீனாவை குறிவைத்துள்ளதுடன், அதிர்ச்சியூட்டும் வகையில் 145 சதவீத வரி சீனா மீது விதிக்கப்பட்டுள்ளது.
“இலங்கையில், திசாநாயக்க அரசாங்கம் சமீபத்திய 44 சதவீத வரி அதிகரிப்பால் அதிர்ந்துள்ளது. இது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், அது மேலும் பொருளாதார கொந்தளிப்பைத் தூண்டக்கூடும் என்பதால் அரசாங்கம் பதட்டமாக உள்ளது. ஆளும் உயரடுக்கு வெகுஜன அமைதியின்மையை எண்ணி அஞ்சுகிறது,” என்று அவர் கூறினார்.
இலங்கையில் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து ஒடுக்கப்படுவதை குணதாச எடுத்துக்காட்டினார். டிசம்பரில், பாசடாலை அபிவிருத்தி அதிகாரிகளின் ஆர்ப்பாட்டங்களை போலீசார் தாக்கியதோடு கருத்துச் சுதந்திரத்திற்கு பெரும் அடியாக, “சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவது எப்படி?” என்ற தலைப்பில் பேராதனை பல்கலைக்கழகத்தில் நடத்தவிருந்த ஐ.வை.எஸ்.எஸ்.இ. கூட்டத்தை அரசாங்கம் தடை செய்தது.
வேலைநிறுத்தம் செய்த சுகாதார ஊழியர்கள் 'நியாயமற்ற' கோரிக்கைகளை வைப்பதாக எச்சரிக்கப்பட்டதுடன் சமீபத்தில் வேலையற்ற துணை சுகாதார பட்டதாரிகளின் போராட்டத்தை பொலிசார் அடக்கினர்.
சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்ட நிரலை எதிர்த்துப் போராடவும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் ஒவ்வொரு வேலைத் தளத்திலும் சுற்றுப்புறத்திலும் சுயாதீனமான தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் வலையமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசரத் தேவையை குணதாச வலியுறுத்தினார். இந்தக் குழுக்கள் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளின் பிடியில் இருநுத விடுபட வேண்டும் என்று அவர் கூறினார்.
“சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதையும், பிரதான நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை தேசியமயமாக்குவதையும், அவற்றை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு சோசலிச வேலைத் திட்டத்தை சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுத்துள்ளது.
“வெளிநாட்டு கடன்கள் நிராகரிக்கப்பட வேண்டும். சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, மனித தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தியை மறுசீரமைக்க வேண்டியது அவசியம். லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி தலைமையிலான ரஷ்ய புரட்சியின் உதாரணத்தை நாங்கள் பின்பற்றுகிறோம்.
“இந்த முன்னோக்கிற்காகப் போராட, நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டை கட்டியெழுப்ப சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரம் செய்கிறது.
'முதலாளித்துவ வர்க்கத்தின் மூலோபாயத்திற்கு எதிராக, உழைக்கும் மக்கள் தங்கள் சொந்த மூலோபாயத்தை முன்னெடுக்க வேண்டும். இது உலக சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதியாக மற்றும் தெற்காசிய சோசலிச குடியரசு ஒன்றியத்தின் பாகமாக ஸ்ரீலங்கா=ற்றும் ஈழம் சோசலிச குடியரசுக்கான போராட்டமாக இருக்க வேண்டும்.'
மேலும் படிக்க
- இலங்கை சோ.ச.க. தேர்தல் கூட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பது குறித்து கலந்துரையாடியது
- இலங்கை: உள்ளூராட்சித் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள்
- இந்தியப் பிரதமரின் இலங்கைப் பயணம் பொருளாதார மற்றும் இராணுவ உறவுகளை மேம்படுத்துகிறது
- சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) உரிமைகள் பறிக்கப்படுவதற்கும் சர்வாதிகாரத்துக்கும் போருக்கும் எதிராக, சோசலிசத்திற்காக உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றது