இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஸ்பெயின் பொதுத் தேர்தலில் அதிவலது வொக்ஸ் கட்சியின் வாக்குகள் கூர்மையாக வீழ்ச்சி அடைந்தன. இதனால் வலதுசாரி மக்கள் கட்சி (Popular Party - PP) அரசாங்கம் அமைப்பதற்கான வாய்ப்பை இழந்துள்ளது. பாசிசவாத பிராங்கோயிச வொக்ஸ் கட்சியை அதன் கூட்டணி பங்காளியாக அரசாங்கத்திற்கு கொண்டு வருவதற்கான மக்கள் கட்சியின் திட்டங்களுக்கு எதிராக இருந்த பெருவாரியான எதிர்ப்பால், போர் ஆதரவு கொள்கைகள் மற்றும் சிக்கன நடவடிக்கை கொள்கைகளுக்கு மத்தியிலும், பொடெமொஸ் உள்ளடங்களாக சுமர் கட்சி மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் (PSOE) ஆளும் கூட்டணியின் வாக்குகள் சற்று அதிகரித்தன.
2019 இல் 5 மில்லியன் வாக்குகளுடன் 89 இடங்கள் பெற்ற மக்கள் கட்சி (PP), 2023 இல் 8 மில்லியன் வாக்குகளுடன் 136 இடங்களை வென்றது. இது பெரிதும் இப்போது தோற்று போயுள்ள குடிமக்கள் கட்சியின் (Citizens party) வாக்குகளாலும், வொக்ஸ் கட்சியின் சரிவாலும் ஏற்பட்ட விளைவாகும்.
வொக்ஸ் கட்சி கணிசமாக வீழ்ச்சி கண்டிருந்தது, அது 650,000 வாக்குகளை இழந்தது. 2019 இல் 3.65 மில்லியன் மொத்த வாக்குகளுடன் 52 இடங்கள் வென்ற அது, இப்போது 3 மில்லியன் வாக்குகளுடன் வெறும் 33 இடங்களைப் பெற்றுள்ளது. இது 22 சதவீதத்திற்கும் அதிகமான வீழ்ச்சியாகும்.
வொக்ஸ், நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும், நாடெங்கிலும் வாக்குகளை இழந்தது. உதாரணமாக, மாட்ரிட்டில், 2019 இல் 653,476 வாக்குகளுடன் ஏழு இடங்களை பெற்றிருந்த அது, இப்போது 498,537 வாக்குகளுடன் (14.01 சதவீதம்) ஐந்து இடங்களை வென்றது.
வொக்ஸ் வாக்குகளில் ஏற்பட்ட இந்த திடீர் வீழ்ச்சியால், ஒரு கூட்டணி அரசாங்கம் அமைக்க மக்கள் கட்சிக்கு ஏழு இடங்கள் பற்றாக்குறை உள்ளது.
வாக்குப்பதிவு எண்ணிக்கை, 15 ஆண்டுகளில் இல்லாதளவில் நான்கு சதவீத புள்ளி அதிகரித்து, 70 சதவீதமாக இருந்தது என்பதே, மக்கள் கட்சி-வொக்ஸ் கட்சி அரசாங்கத்திற்கான எதிர்ப்பின் மேலோங்கிய வெளிப்பாடாக இருந்தது. இதிலிருந்து சோசலிஸ்ட் கட்சி (PSOE) முக்கியமாக ஆதாயம் அடைந்திருந்தது. இந்த நான்காண்டுகளில், அதன் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர் ஆதரவு நடவடிக்கைகள் காரணமாக, PSOE இக்கு உள்ளாட்சி மற்றும் பிராந்திய தேர்தல்களில் கடுமையான சரிவு ஏற்பட்டிருந்த நிலையில், இடைக்கால பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸ் முன்கூட்டியே இந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்.
2019 இல் 6.8 மில்லியன் வாக்குகளுடன் 120 இடங்கள் வென்றிருந்த PSOE இன் வாக்குகள், 7.7 மில்லியன் வாக்குகளுடன் 122 இடங்களாக அதிகரித்தது. அது அதன் பிரச்சாரத்தின் பின்பகுதியில் முக்கியமாக வொக்ஸைத் தடுப்பதற்கான முறையீடுகளில் ஒருமுனைப்பட்டிருந்தது.
PSOE அதன் கூட்டணி பங்காளியாக சேர்க்க விரும்பிய சுமர் கட்சியும் அதே முறையீட்டை செய்தது என்றாலும், அது சுமார் 600,000 வாக்குகளைப் பெரும்பாலும் PSOE வசம் இழந்தது. போலி இடது பொடெமொஸை உள்ளடக்கிய 15 கட்சிகளின் தேர்தல் அரங்கமாக இருந்த சுமர், 3 மில்லியன் வாக்குகளுடன் 31 இடங்களை வென்றது. 2019 உடன் ஒப்பிட்டால், யூனிடாஸ் பொடெமொஸ் (Unidas Podemos) என்ற பெயரில் இதே கட்சிகள் அப்போது 3.6 மில்லியன் வாக்குகளுடன் 38 இடங்களை வென்றிருந்தன.
அதன் அரசியல் முன்வரலாறுக்கு மத்தியிலும், PSOE இன் வாக்குகள் அதிகரித்திருப்பது என்பது, மக்கள் கட்சி-வொக்ஸ் அரசாங்கம் முன்னிறுத்திய அச்சுறுத்தலுக்கு எதிராகவும் மற்றும் 1978 இல் சர்வாதிகாரத்தின் முடிவுடன் “ஜனநாயக மாற்றம்” கொண்டு வரப்பட்டதற்கு பின்னர் முதல்முறையாக மிகவும் வெளிப்படையாக பிராங்கோயிசவாதிகள் திரும்பி வரும் அச்சுறுத்தலுக்கு எதிராகவும், பகுதியளவில் மற்றும் பெரிதும் சிதறிய விதத்தில் வர்க்க விடையிறுப்பு இருந்ததாக மட்டுமே இதைப் புரிந்து கொள்ள முடியும். 2019 உடன் ஒப்பிட்டால், PSOE ஏறக்குறைய எல்லா பிராந்தியங்களிலும் வாக்குகளை இழந்திருந்தது என்றாலும், வறிய நகர்ப்புறங்களில் இந்த நிலை இல்லை. மாட்ரிட்டில், புலம்பெயர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் வறிய அண்டை பகுதியில் PSOE இக்கு வாக்குகள் வந்தன. அந்நகரத்தில் அது 40 சதவீத வாக்குகள் வென்றது. வாக்குப்பதிவும் சுமார் 4 இல் இருந்து 5 சதவீத புள்ளிகள் அதிகரித்தன.
ஆனால் இதுவரை மிகவும் வியத்தகு மாற்றம், கட்டலான் மற்றும் பாஸ்க் பிராந்தியங்களில் இருந்து வந்தது. இந்தப் பிராந்தியங்கள், பிராங்கோ சர்வாதிகாரத்தின் போது ஒடுக்குமுறையின் இலக்கில் வைக்கப்பட்டிருந்தன. இங்கே பிரிவினைவாத கட்சிகள் தொழிலாள வர்க்க வட்டாரங்களில் PSOE வசம் வாக்குகளை இழந்தன.
ஒட்டுமொத்தமாக கட்டலானில், 2019 இல் 794,000 வாக்குகள் பெற்றிருந்த PSOE இன் வாக்குகள், 1.2 மில்லியனாக அதிகரித்தது. இதில் 553,889 வாக்குகள், அதாவது மொத்த வாக்குகளில் 45 சதவீதம் கட்டலான் தலைநகரான பார்சிலோனாவைச் சுற்றியுள்ள வரலாற்றுரீதியில் தொழிலாள வர்க்கத்தின் “சிவப்பு வளாக” பகுதிகளாக விளங்கும் 36 நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் இருந்து வந்தன. PSOE வாக்காளர்களில் எட்டில் ஒருவர் (அதாவது, 15.6 சதவீதத்தினர்) இப்போது 1996 பிந்தைய அதிகபட்ச எண்ணிக்கையாக பார்சிலோனாவில் உள்ளனர். 2019 இல் 40.4 சதவீத வாக்குகள் பெற்றிருந்த மூன்று சுயேட்சை கட்சிகளின் ஒருமித்து மொத்தம் வாக்குகள், இப்போது வெறும் 23.2 சதவீதமாகச் சரிந்தது. மிகவும் செல்வ செழிப்பான சாரியா சான்ட் ஜெர்வாசி (Sarrià-Sant Gervasi) அண்டை பகுதியில் மட்டுமே மக்கள் கட்சி ஜெயித்தது.
PSOE இப்போது முன்னணி கட்சியாக உள்ள பாஸ்க் உள்ளாட்சியில், 2019 இல் 62,430 இக்கு அதிகமாக பெற்றிருந்த அது, 289,826 வாக்குகள் (25.2 சதவீத வாக்குகள்) பெற்றுள்ளது.
அதிவலது அமைப்புகளுக்கு மறுவாழ்வளித்து, அவற்றை அரசாங்கத்திற்குள் கொண்டு வருவதற்காக ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் நடக்கும் சரமாரியான ஊடகப் பிரச்சார அலை மற்றும் ஸ்பெயின் ஆளும் உயரடுக்குகளின் கடுமையான முயற்சிகளுக்கு மத்தியில், வொக்ஸ் கட்சிக்கான வாக்குகள் கூர்மையாக சரிந்துள்ளன. இது, இத்தாலி, பின்லாந்து, சுவீடன், போலந்து மற்றும் செக் குடியரசில் நடந்துள்ள சமீபத்திய வடிவங்களுக்கு நேரெதிராக நடந்துள்ளது. இங்கெல்லாம் அதிவலது கட்சிகள் அரசாங்கத்தில் இடம் பெற்றிருப்பதுடன், பிரான்சில் மரீன் லு பென்னின் தேசிய பேரணி மற்றும் ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) ஆகியவை தேர்தலில் முன்னேறி உள்ளன.
ஸ்பெயின் மக்களில் மூன்றில் ஒரு பங்கினருக்குப் பிராங்கோ சகாப்தம் இன்னமும் நினைவில் வாழ்கிறது. அதன் காட்டுமிராண்டித்தனமான சமூக ஒடுக்குமுறையும் இவர்கள் நினைவில் உள்ளது. நாடெங்கிலும் பிராங்கோவால் 114,000 பேர் சிதறடிக்கப்பட்டதாக மதிப்பிடப்படுவதுடன், 2,300 இக்கும் அதிகமான புதைகுழிகள் இன்னமும் இருக்கின்றன. இது 1936 ஸ்பானிய புரட்சி தோல்வியின் கொடூரமான விளைவுகளை நினைவூட்டுகிறது. சமூகத்தின் உயர்மட்ட அதிகாரிகளும் முக்கிய பெருநிறுவனங்களும் ஜெனரல் பிராங்கோவின் கீழ் செல்வத்தைக் குவிப்பதற்காக மட்டும் அவர்களின் பதவிகளைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை, மாறாக அவர்கள் அவருடைய காட்டுமிராண்டித்தனமான ஆட்சியிலும் செயலூக்கத்துடன் பங்கெடுத்தார்கள் என்ற பரந்த புரிதலும் அங்கே உள்ளது.
ஆனால் இந்த விடையிறுப்பை வினோதமானதாக ஸ்பெயினுக்கு மட்டும் வைத்துப் பார்ப்பது தவறாகி விடும். ஒவ்வொரு இடத்திலும் தொழிலாளர்கள் அதிவலது அபாயத்தைக் குறித்த விழிப்புணர்வை எட்டி வருகிறார்கள் என்பதற்கும், அதற்கு எதிராக ஏதாவது செய்ய விரும்புகிறார்கள் என்பதற்கும் இதுவொரு அறிகுறியாகும்.
ஆளும் வர்க்கத்தின் சமூகத் தாக்குதலைத் தோற்கடிக்கவும் மற்றும் போர் முனைவை நிறுத்தவும் தொழிலாள வர்க்க இயக்கம் போராடி வருவதில் இருந்தும், இடதை நோக்கி அது உருவெடுத்து வருவதில் இருந்தும் அதிவலதுக்கு எதிரான இந்த வாக்குகளைப் பிரித்துப் பார்க்க முடியாது. அனைத்திற்கும் மேலாக, வொக்ஸ் கட்சியின் வளர்ச்சியானது, முக்கியமாக அரசு மற்றும் ஆளும் வர்க்கத்திடம் இருந்து அதற்கும் மற்ற அதிவலது கட்சிகளுக்கும் கிடைத்து வரும் ஆதரவின் விளைவாகும் என்பதே வொக்ஸில் இருந்து விலகி நிற்கும் நடுத்தர வர்க்க அடுக்குகளின் இயக்கம் எடுத்துக் காட்டுகிறது.
ஆனால் அதிவலது அபாயம் நீங்கிவிட்டது என்று PSOE மற்றும் சுமர் கூறுவது, அபாயகரமான பொய்களாகும். எந்த விதத்திலும் வெளியேற்ற முடியாத பாசிச அச்சுறுத்தலுக்கு முன்னால், இந்தச் சக்திகள் தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணி ஆக்க முயன்று வருகின்றன. வொக்ஸ் உடன் பெரிய கருத்து வேறுபாடுகள் எதுவும் கொண்டிராத மாட்ரிட் பிராந்திய முதலமைச்சர் Isabel Ayuso போன்ற பிரமுகர்களை மக்கள் கட்சி அடுக்கி வைத்துள்ளது.
ஸ்பெயினில் ஒரு நீண்டகால அரசியல் நிச்சயமற்றத்தன்மைத் தொடங்கி உள்ளது, இதில் யாரும் ஓர் அரசாங்கம் அமைக்க முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் ஆட்சியில் இருந்தாலும் அல்லது வெளியே இருந்தாலும், PSOE உம் சுமரும் தொழிலாள வர்க்க விரோத, வியாபாரங்களுக்கு ஆதரவான, போருக்கு ஆதரவான கொள்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும். இறுதியில் இது அதிவலதுக்கு ஆதாயப்படுத்துவதாக இருக்கும். அதேவேளையில் எரிச்சலூட்டும் விதத்தில் ஒன்றுபடுவோம் என்ற கோரிக்கைகள், அதிகரித்து வரும் சமூக மற்றும் அரசியல் அதிருப்திக்கு எதிரான ஓர் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படும்.
அதிவலதின் வளர்ச்சி, 1930 களில் நடந்ததைப் போல அவர்களுக்குப் பாரிய சமூக அடித்தளம் இருப்பதால் ஏற்பட்டதில்லை, மாறாக ஆளும் வர்க்கத்தால் அவர்கள் செயலூக்கத்துடன் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்பதற்கும், எந்தவொரு உண்மையான மாற்றீடும் இல்லை என்பதற்கும் தான் இதற்காக நன்றி கூற வேண்டும். பல ஆண்டுகளாக, சாதாரண வலது அரசாங்கங்களும் மற்றும் இடது அரசாங்கங்களும் உள்நாட்டில் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், வெளிநாடுகளில் இராணுவவாதம் மற்றும் போருக்குள் இறங்கின.
ஓர் அரசியல் மாற்றீட்டைத் தேடிய தொழிலாளர்களுக்கு, அவர்களின் விருப்பங்களையும் அரசியல் முன்முயற்சிகளையும் காட்டிக்கொடுத்து வலதுசாரிகளுக்கே மீண்டுமொருமுறை ஒப்படைக்கும், கிரேக்கத்தில் சிரிசா போன்ற புதிய “பரந்த இடது” அமைப்புகளே வழங்கப்பட்டன.
ஸ்பெயினில், 2014 இல் பப்லோவாத முதலாளித்துவ எதிர்ப்பாளர்களும் ஸ்ராலினிச பேராசிரியர்களின் ஒரு குழுவும் உருவாக்கிய பொடெமொஸ் இந்தப் பாத்திரத்தை வகிக்கிறது. இந்தப் புதிய கட்சியின் தலைவர் பப்லோ இக்லியாஸூம் இதில் உள்ளடங்குவார். இவர்களுடன் அடுத்தடுத்து வரிசையாக பிற போலி-இடது குழுக்களும் இணைந்தன. இது, சமூக ஜனநாயகக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு எதிரான தொழிலாள வர்க்கக் கிளர்ச்சியைத் தடுத்து, தீவிர, ஆனால் முதலாளித்துவ-ஆதரவு அமைப்புகள் எனப்பட்ட அமைப்புகளுக்குப் பின்னால் இந்த அதிருப்தியைத் திருப்பி விடும் நோக்கில், ஒரு சர்வதேச மறுகுழுவாக்கத்தின் பாகமாக இருந்தது.
பொடெமொஸ் தலைமையில் சுமர் என்று அரசியல் மறுபெயர் மாற்றம் இருந்த போதினும், வொக்ஸின் வாக்குச் சரிவு இதற்கு ஆதாயமாக மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். நவம்பர் 2019 பொது தேர்தல்களைத் தொடர்ந்து, பொடெமொஸ் PSOE உடன் ஒரு கூட்டணி அரசாங்கத்தில் இணைந்தது. அதற்கடுத்த மூன்று ஆண்டுகளில், பொடெமொஸ் PSOE அரசாங்கத்துடன் சேர்ந்து அணிவகுத்தது. அது உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் நடைமுறை போரில் ஸ்பெயின் பங்கேற்பதற்குத் தலைமை தாங்கியதுடன், புலம்பெயர்ந்தவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான மற்றும் மரணகதியிலான ஒடுக்குமுறையையும் மற்றும் தொழிலாளர்கள் மீது வன்முறை தாக்குதல்களையும் தொடங்கியது, மேலும் 2008 உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் வாழ்க்கைத் தரங்களில் மிகப் பெரிய வீழ்ச்சியை மேற்பார்வை செய்தது.
பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கி ஆளும் உயரடுக்கு திரும்பி இருப்பது, அதீத சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பு மற்றும் ஏகாதிபத்திய போரின் விரிவாக்கத்தில் வேரூன்றி உள்ளது. இதை முதலாளித்துவக் கட்சிகளின் தேர்தல் உத்திகள் மூலமாக நிறுத்த முடியாது, மாறாக உலகெங்கிலும் விரிவடைந்து வரும் வர்க்கப் போராட்ட அபிவிருத்தியைச் சோசலிசத்திற்கான ஒரு நனவுப்பூர்வமான அரசியல் இயக்கத்திற்குள் திருப்புவதன் மூலமாகவே தடுக்க முடியும்.
சிக்கன நடவடிக்கைகள், சர்வாதிகாரம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்திற்கு ஓர் உண்மையான முன்னோக்கிய பாதையைத் தேடும் தொழிலாளர்களும் இளைஞர்களும், இப்போதே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாறு மற்றும் வேலைதிட்டத்தை வாசித்து, ஸ்பெயினிலும் மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் ICFI இன் பிரிவுகளைக் கட்டியெழுப்ப பொறுப்பேற்க வேண்டும்.