ஸ்பெயின் பிரதமர் சான்செஸ், ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போரை ''எவ்வளவு காலம் சென்றாலும்'' அதை ஆதரிப்பதற்காக கியேவ் செல்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பதவியைத் தொடங்கியுள்ள ஸ்பெயினின் தற்காலிகப் பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸ், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர் முகாமின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்ட, கடந்த சனிக்கிழமையன்று கியேவுக்கு ஒரு போர்வெறி விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

உக்ரேனிய ஜனாதிபதியின் பத்திரிகை அலுவலகம் வழங்கிய இந்த புகைப்படத்தில், உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, வலது மற்றும் ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் கியேவில் ஒருவரையொருவர் வாழ்த்துகிறார்கள், உக்ரேன், சனிக்கிழமை, ஜூலை 1, 2023. [AP Photo/Ukrainian Presidential Office]

பிப்ரவரி 2022 இல் போர் தொடங்கியதிலிருந்தும், ரஷ்யாவில் தோல்வியுற்ற ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி நடந்து ஒரு வாரத்திற்குப் பின்பு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகள் உக்ரேனுக்கு மேலும் தீவிர ஆயுதங்களை அனுப்புவதை நோக்கி நகர்கின்ற நிலையிலும், கியேவுக்கு மூன்றாவது தடவையாக சான்செஸ் விஜயம் செய்கிறார். அத்தோடு, இவரது விஜயமானது, லிதுவேனியாவில் உள்ள வில்னியஸில் நடைபெற இருக்கும் ஜூலை 11-12 நேட்டோ உச்சிமாநாட்டில், போர் தொடர்பாக அவர்களின் ஈடுபாட்டை பாரியளவில் தீவிரப்படுத்தும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.

உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி உடனான சந்திப்பின் போது, ரஷ்யாவிற்கு எதிராக ஒரு அதிர்ச்சியூட்டும் போர் விரிவாக்கத்திற்கான நேட்டோவின் திட்டங்களுடன் ஐரோப்பிய ஒன்றியம் முழுமையாக இணைந்துள்ளது என்பதை சான்செஸ் தெளிவுபடுத்தினார். உக்ரேனுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவை உறுதியளித்த சான்செஸ், “எவ்வளவு காலம் எடுத்தாலும்’’ மற்றும் “செலுத்த வேண்டிய விலையைப் பொருட்படுத்தாமல்’’, ஒரு பெரிய அணு ஆயுத நாடான ரஷ்யாவுடன் மொத்தப் போருக்கு வழிவகுக்கும் திட்டத்தையும் வகுத்தார்.

நேட்டோ உறுப்பினராக ஆவதற்கு உக்ரேனின் முயற்சியை ஆதரிப்பதாக சான்செஸின் உறுதிமொழிகளைத் தொடர்ந்து இந்த போர்வெறி அறிக்கை வந்தது. நேட்டோ-உக்ரேன் கவுன்சிலை உருவாக்குவதன் மூலம், உக்ரேனின் அரசியல் பங்கேற்பை வலுப்படுத்துவதை ஸ்பெயின் ஆதரிக்கிறது, அங்கு உக்ரேன் இனி அழைக்கப்பட்ட கட்சியாக இருக்காது, ஆனால் முழு உறுப்பினராக இருக்கும். நடைமுறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் நாங்கள் ஆதரவாக இருக்கிறோம், உங்கள் பாதுகாப்புத் துறையை நேட்டோ தரநிலைகளுக்கு மாற்றியமைப்பதைத் தொடர்கிறோம்’’ என்று சான்செஸ் கூறினார்.

நேட்டோ உக்ரேனை ஏற்றுக்கொண்டால், ஸ்பெயின் உட்பட அனைத்து நேட்டோ நாடுகளும் ரஷ்யாவிற்கு எதிராகப் போருக்குச் செல்ல வேண்டும் என்று நேட்டோ ஒப்பந்தத்தின் பிரிவு 5 ஐ கீயேவ் செயல்படுத்த முடியும். உலகின் முக்கிய அணு சக்திகளுக்கு இடையேயான இத்தகைய போர், நேட்டோ சக்திகளால் ரஷ்யாவை துண்டாடுவதற்கும், இராணுவமயமாக்குவதற்குமான ஒரு போராக இருக்கும். தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீட்டால் இது நிறுத்தப்படாவிட்டால், தவிர்க்க முடியாமல் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப்படும் போருக்கு இது வழிவகுக்கும்.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமைக்கான உக்ரேனின் வேட்பு மனுவிற்கு தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்திய சான்செஸ், “இது அவரது தலைமைப் பதவியின் முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கும்.’’ ஐரோப்பிய ஆணையம் சமீபத்தில் உக்ரேனின் வேட்புமனுவின் நிலை குறித்த இடைக்கால புதுப்பிப்பை வெளியிட்டதாக சான்செஸ் கூறினார். அது, உறுப்பினராவதற்கான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக பரிந்துரைகளை செயல்படுத்துவதில் 'குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக்' காட்டியது. இலையுதிர்காலத்தில் எழுத்துப்பூர்வ வெளியிடப்படும் இந்த அறிக்கை, “அடுத்த படிகள் மற்றும் முடிவுகளுக்கான’’ அடிப்படையை கோடிட்டுக் காட்டுகிறது.

ரஷ்யாவின் படையெடுப்பிற்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமைக்கு விண்ணப்பித்த உக்ரேன், பல மாதங்களுக்குப் பிறகு, கடந்த ஆண்டு ஜூன் 23 அன்று வேட்பாளர் அந்தஸ்தைப் பெற்றது.

உக்ரேனை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைப்பது என்பது, “ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையினருக்கு மரியாதை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நிலையான நிறுவனங்களைக் கொண்ட அரசுகள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்க முடியும் ” என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் கூற்றை இது கேலிக் கூத்தாக்கும்.

கடந்த 16 மாத கால யுத்தத்தில், உக்ரேன் இன்னும் அதிதீவிர வலதுசாரி ஆட்சியாக பரிணமித்துள்ளது. செலன்ஸ்கி 11 அரசியல் கட்சிகளை ரஷ்யாவுடன் தொடர்பு கொண்டுள்ளது என்ற குற்றச்சாட்டின் பேரில் தடை செய்துள்ளார். உக்ரேனின் நவ-நாஜி வட்டாரங்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கும் ஒரு இழிவான அமைப்பான, உக்ரேனின் இரகசிய சேவை SBU வை அவர் பலப்படுத்தியுள்ளார். இந்த அமைப்பு 'விசாரணை' முறைகளாக சித்திரவதை மற்றும் வன்புணர்வுகளைப் பயன்படுத்துகிறது.

அத்தோடு, ஊதியங்கள் மற்றும் நிபந்தனைகளை தொழில் நிறுவனங்கள் நிர்ணயம் செய்வதற்கான உரிமையோடு, அதிக நேர வேலை நேரத்தை திணிக்கவும், வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களைத் தடை செய்யவும் மற்றும் முன்னறிவிப்பின்றி தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் அதிகாரத்தையும் நிறுவனங்களுக்கு வழங்க அனுமதிக்கும் தொழிலாளர் சட்டங்களை செலன்ஸ்கி நிறைவேற்றியுள்ளார். மேலும் சுதந்திரமான நீதித்துறையில் எஞ்சியிருந்தவற்றையும் அவர் அழித்து ஒழித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரேனை மேலும் ஒருங்கிணைப்பது என்பது, ஐரோப்பிய மதிப்புகள் மற்றும் ஜனநாயகம் பற்றிய உத்தியோகபூர்வ பிரச்சாரத்தை மட்டும் குறிக்கவில்லை. மாறாக, ஐரோப்பா முழுவதும் பெருகிவரும் பாரிய வேலைநிறுத்தங்கள், உயர்ந்து வரும் விலைவாசிகள், குறைந்த ஊதியங்கள் மற்றும் பொலிஸ் வன்முறைக்கு எதிராக வெடிக்கும் எதிர்ப்புக்கள் மற்றும் கலவரங்களை ஒடுக்குவதற்கு, உக்ரேனிய தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக கியேவ் ஏற்கனவே செயல்படுத்தி வரும் அதிதீவிர வலதுசாரிக் கொள்கைகள், ஐரோப்பிய ஆளும் வர்க்கங்களால் கைப்பற்றப்பட்டு செயற்படுத்தப்படும்.

நேட்டோ விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுமே சமாதானம் வரும் என்று கியேவ்வில் சான்செஸ் தெளிவுபடுத்தினார். இது, கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக கியேவில் நேட்டோ-சார்பு ஆட்சிக்கு எதிராக ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் கிரிமியாவை விட்டுக் கொடுப்பது உட்பட மாஸ்கோவின் முழு சரணடைதலை குறிக்கிறது.

சீனாவின் சமாதான முன்மொழிவு மீதான தாக்குதலை வெளியிட்ட சான்செஸ், நியாயமான மற்றும் “நீடித்த அமைதியை வழங்கும்’’ நாடுகளுக்கு “நன்றி’’ தெரிவித்தார். ஆனால், இந்த முன்மொழிவுகளை ஏற்க முடியாது, ஏனெனில் “இது ஒரு ஆக்கிரமிப்பாளர் மற்றும் பாதிக்கப்பட்டவருடனான ஆக்கிரமிப்பு போர் மற்றும் உக்ரேனுக்கு எதிரான சட்டவிரோத மற்றும் நியாயமற்ற ரஷ்ய ஆக்கிரமிப்பு’’ என்று கூறினார்.

இது, போரின் தொடக்கத்தில் இருந்து இடைவிடாமல் சொல்லப்படும் வழக்கமான நேட்டோ சார்பு மந்திரம் ஆகும். உண்மையில், உக்ரேன் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் முக்கிய ஆக்கிரமிப்பாளர்கள் மாஸ்கோ அல்ல, ஏகாதிபத்திய சக்திகள் தான் முக்கிய ஆக்கிரமிப்பாளர் ஆகும். ரஷ்யாவை திட்டமிட்டு, இராணுவ சுற்றி வளைப்பை மேற்கொண்டதன் மூலம், புட்டின் ஆட்சியின் பிற்போக்குத்தனமான தலையீட்டை வேண்டுமென்றே தூண்டியுள்ள நேட்டோ, அன்றிலிருந்து தொடர்ந்து மோதலை தூண்டி வருகிறது.

உக்ரேனின் எதிர் தாக்குதலைப் பற்றி மிகவும் பெருமைப்பட்ட சான்செஸ், மேலும் இராணுவ உதவிகளை உக்ரேனுக்கு செய்தார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிராக வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் தோல்வியுற்ற சதி முயற்சியைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், 'இன்று, உக்ரேன் ரஷ்யாவிற்கு எதிரான எதிர்தாக்குதலின் மத்தியில் உள்ளது, இது ரஷ்யாவின் பலவீனத்தின் அறிகுறிகளைக் காட்டுகிறது' என்று சான்செஸ் கூறினார்.

உண்மை என்னவென்றால், பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகள் இருந்தபோதிலும், பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள் மரணத்திற்கு அனுப்பப்படுவதால், உக்ரேனின் அபரிமிதமான எதிர் தாக்குதல் தொடர்ந்து தடுமாறி வருகிறது. வெறும் 110 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை மீட்பதற்கான எதிர்த் தாக்குதலின் போது, கடந்த மூன்று வாரங்களில் ஏற்கனவே 10,000க்கும் மேற்பட்ட உக்ரேனிய படையினர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. இந்த இறப்புகள் இதுவரை கொல்லப்பட்ட 200,000 உக்ரேனியர்களுடன் கூடுதலாக சேர்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ரஷ்யாவை இராணுவ ரீதியாக தோற்கடிப்பதற்காக, இரத்தக்களரிக்கு மேலும் எண்ணையை ஊற்றுவதற்கு உறுதிபூண்டுள்ளனர். கடந்த வாரம் நடந்த ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில், ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், 'உக்ரேனை எப்படி ஆதரிப்பது என்பது குறித்த நீண்டகால மூலோபாயத்திற்கு' அழைப்பு விடுத்தார். “ஜேர்மனி, நீங்கள் அனைவரும் அறிந்தபடி, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உக்ரேனின் இரண்டாவது பெரிய ஆதரவாளர், நாங்கள் அதைத் தொடர்ந்து செய்வோம் (...) அவர்கள் (அமெரிக்கா) மற்றும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி, பிரெஞ்சு ஜனாதிபதி, போலந்து பிரதம மந்திரியிடம் பேசுவதிலிருந்து நான் என்ன புகாரளிக்க முடியுமோ அதைத் தொடர்வோம்” என்று தெரிவித்தார்.

கடந்த வாரம் ஜேர்மன் அரசாங்கம் உக்ரேனுக்கான ஹோவிட்சர் தானியங்கி பீராங்கிக்கான வெடிமருந்து உற்பத்தியை அதிகரிப்பதற்கும், 4,000 போர் துருப்புக்களை நிரந்தரமாக லிதுவேனியாவில் நிறுத்துவதற்கும் திட்டங்களை அறிவித்தது. ஸ்பெயின் உக்ரேனுக்கு 55 மில்லியன் யூரோ மதிப்புள்ள கூடுதல் உதவிப் பொதி உட்பட, இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே அனுப்பப்பட்ட ஆறு டாங்கிகளுடன் சேர்த்து மாட்ரிட் மேலும் நான்கு லியோபார்ட் டாங்கிளை அனுப்பும். மற்றும் சிப்பாய்களை கொண்டு செல்லும் கவச வாகனங்கள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களுடன் கூடிய ஒரு சிறிய கள மருத்துவமனையையும் உக்ரேனுக்கு வழங்குகிறது.

எவ்வாறாயினும், ஸ்பெயினில், மே மாதம் நடந்த உள்ளூர் மற்றும் பிராந்திய தேர்தல்களில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஜூலை 23 அன்று ஒரு உடனடித் தேர்தலுக்கு அழைப்பு விடுத்த சான்செஸ், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் பதவியை வழிநடத்தும் அதிகாரத்தில் நீடிப்பாரா என்பது குறித்து இன்னும் பார்க்கப்படவில்லை.

WSWS விளக்கியது போல், PSOE மற்றும் பொடமோஸ் ஆகியவை, அதன் இடது புறத்தில் கட்டுப்பாட்டை மீறி வெடிக்கும் போர், சிக்கன நடவடிக்கை மற்றும் பொலிஸ் அடக்குமுறை ஆகியவற்றிற்கு பாரிய தொழிலாள வர்க்க எதிர்ப்பைக் கண்டு அஞ்சுகின்றன. இந்த வளர்ச்சியை எதிர்பார்க்கும் வகையில், நாடு முழுவதும் வேலைநிறுத்தங்கள் மற்றும் பிரான்சில் 17 வயது இளைஞன் மீதான போலீஸ் கொலையைத் தொடர்ந்து வெடிக்கும் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றுக்கு எதிராக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் போரை தீவிரப்படுத்த வலதுசாரி மக்கள் கட்சி (PP) மற்றும் பாசிச வோக்ஸ் கட்சிக்கு அதிகாரத்தை ஒப்படைக்க இந்தத் தேர்தல்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

போர்க் கொள்கைக்கு ஆளும் வர்க்கத்திற்குள் உள்ள ஒருமித்த கருத்தை வெளிப்படுத்திய வலதுசாரி மக்கள் கட்சி, உக்ரேனைத் தவிர, ஐரோப்பிய ஒன்றியத்தின் மீள்இராணுவமயமாக்கல் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களுக்கான மேம்பட்ட திட்டங்களை உள்ளடக்கிய சான்செஸின் ஐரோப்பிய முன்னுரிமைகளுடன் தான் உடன்படுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.

ஸ்பெயின் பல நூற்றாண்டுகளாக கொடூரமாக காலனித்துவப்படுத்தி, கொள்ளையடித்த ஒரு பகுதியான லத்தீன் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த முயல்கிறது. லத்தீன் அமெரிக்காவை ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலோபாய பங்காளியாக மாற்ற மாட்ரிட் விரும்புகிறது. ஐரோப்பிய ஒன்றிய சக்திகள், சமீப வருடங்களில் அமெரிக்கா மற்றும் சீனாவிடம் இப்பகுதி தங்கள் நிலத்தை இழந்துவிட்டதாக அஞ்சுகின்றன, மேலும் நிலக்கரி, தாமிரம், இயற்கை எரிவாயு, பெட்ரோலியம், யுரேனியம் மற்றும் லித்தியம் போன்ற மூலோபாய மூலப்பொருட்களை எடுப்பதற்கு இந்தப் பிராந்தியத்தை நாடுகின்றன.

புதிய ஐரோப்பிய ஒன்றிய தலைவர் பதவியானது, போருக்கு பணம் செலுத்த தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான சிக்கன நடவடிக்கைகளை மேற்பார்வையிடும். ஐரோப்பிய ஒன்றிய விதிகளின் கீழ், அரசுகளின் பட்ஜெட் பற்றாக்குறையை ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3%க்கு குறைவாக வைத்திருக்க வேண்டும். இது கோவிட் -19 பெருந்தொற்றின்போது இடைநிறுத்தப்பட்டது, பின்னர் உக்ரேனில் போர் வெடித்ததைத் தொடர்ந்து 2024 வரை நீட்டிக்கப்பட்டது. இன்று, பிரஸ்ஸல்ஸ், பாதுகாப்பு செலவினங்களுக்கான விதிவிலக்குகளுடன், அடுத்த ஆண்டு குறைந்தபட்சம் 45 பில்லியன் யூரோக்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குறைக்க வேண்டும் என்று கோருகிறது.

புலம்பெயர்ந்தவர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களுக்கும் மாட்ரிட் தலைமை தாங்கும். இந்த மாத தொடக்கத்தில் இடம்பெயர்வு அங்கீகரிப்பு மற்றும் புகலிடம் தொடர்பான அதன் கடுமையான ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் இறுதி செய்யும். அதன் விதிமுறைகளின்படி, ஐரோப்பிய ஒன்றியம் அகதிகளுக்கான புகலிட உரிமையை திறம்பட கைவிட்டுள்ளது. எதிர்காலத்தில், அகதிகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்புற எல்லைகளில் உள்ள தடுப்பு முகாம்களில் அடைக்கப்படுவார்கள், அவர்களின் புகலிடக் கோரிக்கைகள் துரிதப்படுத்தப்பட்ட நடைமுறையில் முடிவு செய்யப்படும், பின்னர் கிட்டத்தட்ட அனைத்து மூன்றாம் நாடுகளுக்கும் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்.

இந்த மிருகத்தனமான கொள்கையை செயல்படுத்த தயாராக இருப்பதாக சான்செஸ் ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு, PSOE-பொடமோஸ் அரசாங்கம் 61 புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகை கேனரி தீவுகளில் மூழ்கடித்து 37 பேரைக் கொன்றது. அத்தோடு, 750 அகதிகளுடன் இருந்த ஒரு மீன்பிடி படகை கிரேக்க கடலோர காவல்படை கவிழ்த்த சில வாரங்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தப் படகிலிருந்து 104 பேர் மட்டுமே உயிருடன் மீட்டகப்பட்டனர்.

Loading