மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கோவிட்-19 தொடர்பான தகவல்களை வெளிப்படுத்திய ரெபேக்கா ஜோன்ஸின் கணக்கை ட்விட்டர் நிறுத்தியது. புளோரிடா தரவுகள்துறை விஞ்ஞானிக்கு எதிரான திறந்த தணிக்கை செயல், மே 2020 இல் முதன்முதலில் முக்கியத்துவம் பெற்றது. அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குட்பட்டவர்களையும், இறப்பு எண்ணிக்கையையும் குடியரசுக் கட்சி ஆளுநர் ரான் டிசாண்டிஸின் நிர்வாகத்தின் கோரிக்கையின் பேரில் மாநிலத்தின் பதிவேட்டில் மாற்ற மறுத்தார்.
டிசான்டிஸ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரால் ஊக்குவிக்கப்பட்டதும், பிரிட்டிஷ் மருத்துவ இதழான BMJ யால் "சமூக கொலை" என்று அழைக்கப்பட்ட சமூக நோய் எதிர்ப்பு சக்தியின் கொலைக் கொள்கையை ஜோன்ஸ் மிகவும் வெளிப்படையான மற்றும் நேரடியாக எதிர்த்தவர்களில் ஒருவராவார். அமெரிக்காவில் மட்டும் 610,000 க்கும் அதிகமானவர்களையும், சர்வதேச அளவில் 3.7 மில்லியனுக்கும் அதிகமானவர்களையும் கொன்ற ஒரு தொற்றுநோய்க்கு மத்தியில், பள்ளி மீண்டும் திறப்பதற்கும், அவ்வாறு செய்வதன் மூலம் ஏற்படும் அபாயங்களுக்கும் எதிராக அவர் தொடர்ந்து பேசியுள்ளார்.
ட்விட்டரின் முடிவைப் பற்றி டிசாண்டிஸின் அலுவலகம் மகிழ்ச்சி அடைந்துள்ளது. ஜோன்ஸை "கோவிட் -19 தவறான தகவலின் டைபாய்டு மேரி ... அவரது அவதூறான சதி கோட்பாடுகளுடன்" என்று அழைத்தது. ஆளுநரின் உதவியாளர்களில் ஒருவரான மாட் டிக்சன் இந்த முடிவை “நீண்டகாலத்திற்கு முன்னரே செய்திருக்கவேண்டியது” என்று அழைத்தார்.
டிசாண்டிஸுடன் Yahoo! போன்ற பிற வெளியீடுகளும் இணைந்தது. அது ஜோன்ஸ் ஒரு "மோசடி கோவிட் தகவல்களை வெளிப்படுத்தியவர்" என்று அழைத்தது. க்ளென் கிரீன்வால்ட் போன்ற போலி இடதுசாரி நபர்கள் ஜோன்ஸ் இடம் "மோசடியின் துர்நாற்றம்" இருப்பதாக அறிவித்து, தன்னை பின்தொடர்பவர்களிடமிருந்து பணத்தை மோசடி செய்ய அவரது ட்விட்டர் கணக்ககை பயன்படுத்தினார் என்ற வலதுசாரி National Review இனால் வெளியிடப்பட்ட ஒரு கதையை விளம்பரப்படுத்தினார்.
ஜோன்ஸின் கூற்றுப்படி, தனது கணக்கை நிறுத்தியதற்கான ட்விட்டரின் பாசாங்கு காரணம் என்னவென்றால், Miami Herald பத்திரிகையில் "புளோரிடா சுகாதாரத் துறையில் திரைக்குப் பின்னால் ரெபேக்கா ஜோன்ஸ் என்ன கண்டார்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை 50 முறை அவர் வெளியிட்டதாக கூறுகின்றது. உடனடி தொழில்நுட்பக் காரணம் எதுவாக இருந்தாலும், அடிப்படைக் காரணம் என்னவென்றால், டிசாண்டிஸ், ட்விட்டர் மற்றும் முழு அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபனமும் தகவல்களை வெளிப்படுத்தியவருக்கு எதிரான டிசாண்டிஸின் வலதுசாரி தாக்குதல்களின் நியாயமான மற்றும் துல்லியமான பதிவைக் காட்டும் தகவல்களைப் பகிர்வதை எதிர்க்கின்றன.
குறிப்பாக, கேள்விக்குரிய Herald கட்டுரையில், கடந்த ஜூலை மாதம் அவர் தாக்கல் செய்த தகவல்களை வெளிப்படுத்திய புகார் தொடர்பாக ஜோன்ஸ் மற்றும் புளோரிடா மாநிலம் சம்பந்தப்பட்ட சட்டப் மோதலைப் பற்றிய புதிய தகவல்கள் உள்ளன. அந்த நேரத்தில், டிசாண்டிஸ் தன்னை "கீழ்ப்படியாததற்காக" நீக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால் இது ஜோன்ஸ் தனது புகாரில் கூறியது போல், "தரவு மற்றும் விஞ்ஞானத்தை புறக்கணித்த தவறான மற்றும் அரசியல்ரீதியாக நோக்கம்கொண்ட கட்டுக்கதைகளின்" ஒரு பகுதியாக இருக்கின்றது.
எவ்வாறாயினும், Herald இன் கூற்றுப்படி, “சுகாதாரத்துறை தலைவர்களிடமிருந்து வந்த பிரமாணப் பத்திரங்கள் ஜோன்ஸ் தொடர்ந்து நிராகரித்த கூற்றான தரவுகள் பொதுமக்களுக்கு கிடைப்பதிலிருந்து அகற்றும்படி கூறப்பட்டதை ஒப்புக்கொள்கின்றன.” மேலும், புளோரிடா சுகாதாரத் துறை பொது சுகாதார அதிகாரிகள், ஜோன்ஸ் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர்கள் குழு உட்பட, “மீண்டும் திறக்கும் திட்டத்திற்கான புதிய தரவை உருவாக்க” பணிக்கப்பட்டிருந்தாலும், அவற்றின் தரவு “டிசாண்டிஸுக்கு பரிந்துரைகளில் ஒருபோதும் இணைக்கப்படவில்லை. சுகாதார துணை செயலாளர் ஷமரியல் ராபர்சன் தமது திணைக்களம் எந்தவொரு பரிந்துரையும் செய்யவில்லை என்று மறுத்தார்.
மேலும், Herald பின்வருமாறு குறிப்பிட்டது. “இரகசியம் என்பது ஒரு கொள்கை. தொற்றுநோயைப் பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்று ஊழியர்களிடம் கூறப்பட்டது”. "மருத்துவ மனைகளில், மாநில சிறைச்சாலைகள் மற்றும் பள்ளிகளில் இறப்பு மற்றும் தொற்றுநோய்கள் பற்றிய தகவல்கள்" வேண்டுமென்றே மறைக்கப்பட்டதுடன், மற்றும் "முன்னர் பகிரங்கப்படுத்தப்பட்ட முக்கியமான தகவல்கள் கோவிட்-19 இறப்புகளின் மருத்துவ பரிசோதகர் கணக்குகளிலிருந்து திருத்தியமைக்கப்பட்டன".
Herald தொடர்ந்தது, "Herald பேட்டி கண்ட பொது சுகாதாரத்துறை ஊழியர் ஒரு "உயர்-அரசியல்மயமாக்கப்பட்ட" தகவல்தொடர்பு துறையை பற்றி விவரித்தனர். இது பெரும்பாலும் வாஷிங்டனில் இருந்து வரும் கட்டுக்கதைகளுடன் பொருத்த முயற்சிப்பதாகத் தெரிகிறது."
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், புளோரிடாவை "மிகவும் அளவிடப்பட்ட, சிந்தனைமிக்க மற்றும் தரவு சார்ந்த வழியில்" மீண்டும் திறப்பதற்கான அவரது உத்தி முற்றிலும் தவறானது என்று டிசாண்டிஸ் கூறுகிறார். பள்ளிகள் மற்றும் பணியிடங்களை மீண்டும் திறப்பது பாதுகாப்பற்றது என்று அவர் அறிந்திருந்தார் அல்லது ஆளுநருக்கு நம்பத்தகுந்த ஒரு தரவுகளை வழங்குமாறு அவரது ஆலோசகர்களால் உண்மையான தரவைச் சொல்லவில்லை. எந்த வகையிலும், புளோரிடாவில் 37,000 இறப்புகள் மட்டுமே இருக்கின்றது என்ற முக்கிய காரணங்களுடன் தனது கொள்கைகளுடன் டிசாண்டிஸ் நிர்வாகம் முன்னேறியது.
இதற்கு நேர்மாறாக, தொற்றுநோயின் ஆபத்துக்களுக்கு உண்மையான விஞ்ஞான அடிப்படையிலான அணுகுமுறைகளின் சில குரல்களில் ரெபேக்கா ஜோன்ஸ் ஒருவராவார். பள்ளிகள் மற்றும் பணியிடங்களை பாதுகாப்பற்ற முறையில் மீண்டும் திறப்பதை அவர் தொடர்ந்து எதிர்த்தார், மேலும் புளோரிடா கொரோனா வைரஸ் தரவை தனது புளோரிடா கோவிட் நடவடிக்கை தகவல்பதிவு மூலம் பொது மக்களுக்கு அணுகுவதற்காக புவியியலாளர் மற்றும் தரவு விஞ்ஞான நிபுணராக தனது பயிற்சியைப் பயன்படுத்தினார்.
அவரது முயற்சிகளுக்காக, அவர் அரசாங்கத்தின் தொடர்ச்சியான தண்டனை நடவடிக்கைகளை எதிர்கொண்டார். கடந்த டிசம்பரில், புளோரிடா சுகாதாரத் துறை ஜோன்ஸ் தங்களது செய்தியிடல் முறையை ஊடுருவியதாகவும், “மேலும் 17,000 பேர் இறப்பதற்கு அறிவிக்குமாறும், இது தவறு என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் இதன் ஒரு பகுதியாக இருக்க வேண்டியதில்லை. வீரர்களாக இருங்கள். தாமதமாகிவிட முன் பேசுங்கள்.” என்று சுகாதார அதிகாரிகளை வலியுறுத்தி ஒரு உள்ளறிக்கையை அனுப்பியதாகவும் குற்றம் சாட்டியது.”